சவாலே சமாளி
சவாலே சமாளி
"இருட்டு வீட்டுல குருட்டு எருமை என்ன செய்யுது?" குரல் கொடுத்தபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் புவனா.
"ஒண்ணுமில்லையே....."உதட்டைப் பிதுக்கி கையை விரித்தாள் மாலதி.
"என் அப்பன் குதுலுக்குள்ள
இல்ல என்கிற மாதிரி இல்ல இருக்கு...
நம்ப முடியலிய....ஏதோ ஒண்ணு இருக்கு ....வாயைக் காட்டு....வாயைக்காட்டு...."விடாமல் கேள்வி கேட்டுத் துரத்தினாள் புவனா.
"காவோலையில என்னதோ ஓடுன மாதிரி சடசடன்னு பேசிகிட்டே இருக்க ....பூ மலர்ந்து
கெட்டது. வாய் விரிஞ்சு கெட்டது
ஞாபகம் வச்சுக்கோ..."
"வாய்க்குள்ள ஏதோ இருக்கு அதுதான் வாயைத் திறக்க மாட்டேங்கிற...ஒண்ணுமில்லன்னா வாயை நல்லா திறக்க வேண்டியதுதானே,"
"இவ பெரிய டிடக்டிவ் ...கண்டு பிடிச்சுருவா முசல் பிடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தால் தெரியாது "
" முசல் பிடிக்கிறேனா ...இல்லையா என்பது புடிச்ச பிறகு அல்லவா தெரியும்."
"எடுக்குறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு"
என்கிற மாதிரி பேச்செல்லாம்
பெருசாத்தான் இருக்கு."
"இன்று எப்படியும் கையும் களவுமாகபிடித்து அம்மா முன் நிறுத்தணும் ..."பயங்கரமாக வலை விரித்துப் பிடிக்கும் திட்டம் ஒன்று புவனாவின் மனதில் உருவாகிக்கொண்டிருந்தது.
ஒரு ஐந்து நிமிடம் கூட
புவனாவால் இருப்பு கொள்ள முடியவில்லை.மறுபடியும்
சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடிப்பதுபோல தண்ணீர் பானையைத் திறந்தாள்.
"ஏய்...இப்ப நீ எதுக்கு இங்க வந்த....நான் என்னசெய்றேன் என்று அத்தம் பார்க்கதானே வந்த..."
"இந்த அத்தம் ...சுத்தம் பாக்குற வேலை எல்லாம் உன்னுடையது. நான் தண்ணீர் குடிக்கத்தான் வந்தேன்.உன்னை மாதிரி திருட்டுப் புத்தி எல்லாம் எனக்கு கிடையாது."
"யாருடி திருடி...யாருடி திருடி...
தான் திருடி பிறரை நம்ப மாட்டா...
சும்மா ஓவரா அலப்பற பண்ணாத"
"நான் அலப்பற பண்ணுறேன்.நீ அலப்பாம காரியத்தை முடிக்கிறியோ?"
"ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு.
அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி...
என்பதுபோல இவகிட்ட போயி
மாட்டிகிட்டன..." முணுமுணுத்தாள் மாலதி.
"அங்க என்ன முணு முணுப்பு.
பூனை கருவாட்டு சட்டியைச் சுத்துன மாதிரி அடுப்பங்கறையிலேயே சுத்திகிட்டு நிற்குற...வெளியில் வர வேண்டியதுதானே..."
" அறிந்தறிந்து செய்த பாவத்தை
அழுதழுதுதான் தொலைக்கணும்.
உங்கிட்ட வந்து மாட்டுனேன் பாரு...."
"மாட்டுனா மவள...இன்றைக்கு
செமையா மாட்டுனா..."
.
"போ...போ... எருமை வாங்கும்
முன்னே நெய் விலை கூறாதே"
"உனக்கு மட்டும்தான் பழமொழி தெரியும்
என்று சொல்லாத.ஒரு பொய்யை மறைக்க
ஒன்பது பொய் சொல்ல வேண்டியிருக்கும்.
அம்மா வந்த பின்னர் அல்லவா
உன் வண்டவாளம் தண்டவாளம் ஏற போவது
தெரியும்."
.
"என்ன செய்ய.?....இந்தப் புவனா ஒரு கேள்விக்குறியா இல்ல இருக்குறா....
கடைந்த மோருல குடைந்து
வெண்ணெய் எடுக்க அலையுறா..."
இப்போது புவனாவிடமிருந்து
எந்த அனக்கமும் இல்லை.மெதுவாக நாற்காலியை எடுத்துபோட்டு அதற்குமேல் ஒரு பலகையை எடுத்து வைத்து ஆட்டிப் பார்த்தாள்.ஆடாததுபோல் இருந்தது.
"கருமத்தை பார்க்கிறவன் கட்டத்தைப்
பாரான் " என்பது மாதிரி இப்போது
எப்படியாவது மேலே ஏறணும்.
ஒற்றைக்காலை எடுத்து நாற்காலிமேல்
வைத்தாள். கால் ஏறி கையை நீட்டுவதற்குள்,",என்ன...எட்டாக் கனிக்கு
கொட்டாவி விடுற மாதிரி இருக்கு.
பார்த்து....பார்த்து கீழே விழுந்திடப் போகுற...."என்று குரல் கொடுத்தபடி பின்னால் வந்து நின்று சிரித்தாள் புவனா.
"இதபாரு....மறுபடியும் மறுபடியும் என்னைக் கோபப்படுத்தப் பார்க்குற...."
"செனப்படாத மவளே செனப்படாத...பொய் சொல்லலாகாது பாப்பா...பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது."நக்கலடித்தாள் புவனா.
"எனக்கு வருகிற ஆத்திரத்துக்குஅப்படியே உன்ன...."ஓடிப்போய் முடியைப் பிடித்து இழுத்தாள் மாலதி.
"பார்த்தியா...பார்த்தியா
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு
சும்மாவா சொல்லி வச்சுருக்காவ
இன்ன பாரு.... நான் சும்மா
இருக்கேன்...கையை எடு...
இல்ல நடக்கதே வேற...."
"என்னசெய்வ...என்ன செய்வ..ஏர் உழுகிறவன் இளப்பமானால்
எருது மச்சான் முறை கொண்டாடும்.
உனக்கு என்னைப் பார்த்தா
இளப்பமாவா தெரியுது?"
"மாலதி ....சின்ன புள்ளன்னு
நினைக்காத...
கடுகு சிறுத்தாலும் காரம்
குறையாது தெரிஞ்சுக்க.
இப்போ கையை எடுக்கப்போறியா இல்லையா .... "
முடியில் இருந்த மாலதியின் கையை இழுத்து விலக்கினாள் புவனா.
"என் மேல கை வச்சுட்ட இல்ல....சும்மா இருந்த புண்ணை சொறிஞ்சுவிட்டுட்டல்ல...ஓடுற நாயின்
வாலைப் புடிச்சுட்டா என்ன
நடக்குமுன்னு தெரியுமுல்ல....
நான் யாருன்னு காட்டுறேன்."
"சொறிஞ்சு கிட்டே கம்முன்னுபோய் உட்காரு.. "
"திருடிக்கு எவ்வளவு திமிரு...
நீள நீளத் தெரியும் மெய்யும்
பொய்யும்....அம்மா வரட்டும் வச்சுக்கிறேன் "
"சொல்லிக்கோ சுரைக்காய்க்குஉப்பில்லைன்னு சொல்லிக்கோ...வேலைய பார்த்துட்டுபோவியா...சும்மா நின்னு முறைச்சுகிட்டு"
இருப்பினும் மனசுக்குள்ளதிக்...திக்..என்று
இருந்தது.
"தெரியாமல் செய்துட்டேன் என்றால் அம்மா கேட்பாங்களா ?ஆடுன காலும் பாடுன வாயும் நிற்காது. அதுபோல திருடுன கை நிற்காது என்று அம்மா ஓயாமல் சொல்லிகிட்டு இருப்பாங்க"
என்று நினைத்தபடி மெதுவாக அடுப்பங்கறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
புவனா இப்போது வேறு ஏதோ சிந்தனையில் இருப்பது போல இருந்தது.
தலையை உள்ளே இழுத்து மறுபடியும்
அந்த டப்பாவைப் பார்த்தாள்...
இப்போது அவளுக்கு துணிந்து நாற்காலியில் ஏற முடியவில்லை.பின்னாலிருந்து நாற்காலியை இழுத்துவிட்டுவிட்டால் ...செய்தாலும் செய்வாள்....ராட்சஷி....ராட்சஷி..." பல்லை நறநறவென்று கடித்தாள்.
"எம்மோ இங்க வந்து பாருங்க....பார்த்தியளா...இங்கஎன்ன நடக்குன்னு...."
குரல் கொடுத்தபடி அம்மாவோடு
வந்து நின்றாள் புவனா.
அம்மா ஒன்றுமே பேசாமல் இரண்டுபேரையும் மாறிமாறி பார்த்தார்.
"எம்மோ இங்க வாங்க.இங்க கிட்ட வந்து பாருங்க.நீங்க இல்லாத நேரத்துல மாலதி என்ன செஞ்சுருக்கா என்றுபாருங்க ....ஏதோ களவெடுத்துருக்கா"கையைப் பிடித்துஇழுத்து வந்து அம்மாவை மாலதிமுன்ஆஜர் படுத்தினாள் புவனா.
"பள்ளிக்கூடத்துக்குப் போகிற நேரத்துல இங்க என்ன செய்யுற"கேட்டார் அம்மா
."சும்மாதான்....."பேச முடியாமல் மாலதி அங்கிருந்து வெளியேற .....
"ஏய்.....பதில் சொல்லிட்டுப் போ.எங்க ஓடுற....பாவாடையைப் பிடித்துஇழுத்தாள் புவனா.
அப்போது பாவாடை செருகல் அவிழ்ந்துவிடஇடுப்பிலிருந்து கீழே விழுந்த அந்தப் பொருளைப் படக்கென்றுகையில் எடுத்து மறைக்கப் போனாள் மாலதி.
அதற்குள் கையைப் பிடித்து அது என்ன என்று பார்த்த புவனா,
"அட...சீ...போ...இந்த
புளியை எடுக்குறதுக்குத்தான் இந்த பில்டப்பா'
என்று சொல்லி சிரித்தாள்.
மாலதியின் முகம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி அஷ்ட கோணலாகி அப்படியே நின்றது..
Comments
Post a Comment