காளமேகத்தின் கணக்கு
காளமேகத்தின் காலக்கணக்கு
"இறைவனை தொழுவதற்கு உகந்த
நேரம் எது? "என்று பாலன் தன்
தன் நண்பர் மதிவண்ணனிடம் கேட்டார்.
"அதிகாலை நேரம் அதுதான் இறைவனைத்
தொழுவதற்கு உகந்த நேரம் "என்று
பதிலளித்தார் நண்பர்.
"அமைதியான அந்தக் காலைப் பொழுதில்தான்
மனதை ஒருமுகப்படுத்தி
பிராத்தனையில் ஈடுபட
முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும்
இல்லாத அமைதியானச் சூழல்
பிராத்தனைக்கு ஏற்ற நேரம்தான்.
ஆனால் என்னால் அது முடிவதில்லையே"
என்றார் பாலன்.
"நீர் சொல்லுவதும் சரிதான்.
வேலை வேலை என்று சதா
கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு
ஓடுகிறோம். கடவுளைத் தொழ நேரம்
கிடைப்பதே அரிதாக இருக்கிறது"
புலம்பினார் மதிவண்ணன்.
இன்றைய அவசர உலகில் எதற்குமே நேரம் கிடைப்பதில்லை.
ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லி
ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
இறைவனைத் தொழுவதற்கு
கால நேரம் எதற்கு?
எந்த நேரத்திலும் தொழலாம்.
எங்கும் தொழலாம்.
கிடக்கிற நேரத்தில்
இருக்கிற இடத்திலிருந்து தொழலாம்.
ஆனால் எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.
அதற்கான இடமுண்டு.
சரியான நேரமும் உண்டு என்று
நம்புகின்றனர்.அவர்கள் நம்பிக்கை
சரியானதா?
அதனால் இன்று இதற்குகான
ஒரு தீர்வு கண்டே
ஆக வேண்டும் என்று மனம் விரும்பியது.
யாரிடம் போனால் இதற்குத் தீர்வு
கிடைக்கும் ?
ஔவையிடம் போனால் சரியான தீர்வைப் சொல்வார்.
ஆனால் எப்போதும் ஔவையின் பின்னால் போய் நிற்பது சரியல்ல.
சற்று மாற்றி யோசி என்றது மனம்.
மாற்றித் தான் யோசிப்போமே என்று
நினைத்தபோது
மனம் காளமேகம் பக்கம் போய் திரும்பியது.
மனம் சொல்லிவிட்டால் மறுப்பேது?
காளமேகத்தின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள
நேரே காளமேகத்தின் முன்னால் போய் நின்றேன்.
" ஐயா, தாங்கள் சொல்லுங்கள் .இறைவனைத்
தொழுவதற்கு உகந்த காலம் எது?"
என்று நேரடியாகவே கேள்வியை முன்
வைத்தேன்.
" காலம் எது என்பது இருக்கட்டும்.
முதலாவது உங்களுக்குக் கணக்குத் தெரியுமா?" என்று
திருப்பிக் கேட்டார் காளமேகம்.
இது என்ன புதுக்கேள்வியாக இருக்கிறது
"கணக்கா....
எனக்கா....
கணக்கு எதற்கு?" என்றேன் .
" கணக்கு என்றதும் ஏன் இந்த பதற்றம்?"
பயப்படாதே . ஒரு சிறிய கணக்குத்தான்.
நான் சொல்லும் அந்தக்
கணக்குத் தெரிந்தால்தான்
இறைவனைத் தேடும் காலம் எது
என்பதை நீ அறிந்து கொள்ளமுடியும்."
என்றார்.
"சொல்லுங்கள். தெரிகிறதா இல்லையா
கணக்கைக் கேட்டதும் முடிவு செய்கிறேன்"
என்றேன்.
"முக்காலுக்கு ஏகாமுன்
முன்நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு
அஞ்சாமுன் -விக்கி
இருமாமுன் மாகாணிக்கு
ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது"
பாடலாகவே பாடி
கணக்கை என் முன்னர் வைத்து
"விடை காண் "என்றார்.
"இது என்ன முக்கால் அரைக்கால்
நரைக்கால் என்று ஒரே குழப்பமாக
இருக்கிறதே!"
"பொருள் புரியவில்லை என்று நேரடியாகவே கேட்கலாமே. அதற்கு எதற்கு
ஒற்றைக்காலில் நிற்கிறீர்?" என்று சிரித்தார்
"புரியம்படியாக விளக்குங்கள் "என்றேன்.
முக்காலுக்கு ஏகாமுன் - என்றால்...
முதுமை காரணமாக மூன்று காலால் நடப்பதற்கு முன்
அதாவது கால்கள் வலுவிழந்து கோல்
ஊன்றி நடப்பதற்கு முன்னர் இறைவனைத்
தேட வேண்டும்.
முன் நரையில் வீழாமுன் - என்றால்...
முன் நெற்றியில் நரைமுடி தெரிவதற்கு
முன்பாக இறைவனைத் தேட வேண்டும்.
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன்-என்றால்...
காலன் வருவதைக் கண்டு அஞ்சி நடுங்கும்
வயோதிகம் வரும்முன் இறைவனைத்
தேட வேண்டும்.
விக்கி இருமாமுன் - என்றால்...
விக்கல் வந்து இருமி
துன்பப்படுவதற்குமுன்
இறைவனைத் தேட வேண்டும்.
மாகாணிக்கு ஏகாமுன் - என்றால்...
மயானத்திற்குச் செல்லும் நாள்
வருவதற்கு முன் இறைவனைத் தேட
வேண்டும்.
கச்சி ஒருமாவின் - என்றால்...
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு மாமரத்தின்
கீழரை - என்றால்...
கீழே அமர்ந்திருப்பவரை
இன்று ஓது - என்றால்...
இன்றே வணங்கு
என்பது இப்பாடலின் பொருளாகும் என்றார்.
"கம்பு ஊன்றி நடக்கும் காலம் வருமுன்,
தலைமுடி நரைத்து முதுமை வரும்முன்,
ஐயோ காலன் வந்து அழைத்துச்
சென்றுவிடுவானோ என்று அஞ்சி
நடுங்கும் காலம் வருமுன்,
விக்கல் வந்து இழுக்கும் காலம்
வருமுன்,மயானம் செல்லும் காலத்திற்கு
முன் இறைவனைத் தேடு.
இறைவனைத் தேடுவதற்கு கால நேரம்
பார்க்காதே. முதுமை வந்தபின் இறைவனைத்
தேடலாம் என்று இருந்துவிடாதே.
கால், கை எல்லாம் நன்றாக இருக்கும்போதே
இறைவனைத் தேடுவாயாக என்கிறீர்கள்
இல்லையா?" என்று மொத்தமாக நான்
புரிந்துகொண்டதை அவர் முன்னர் ஒப்பித்தேன்.
"சரியாக புரிந்து கொண்டீர்" என்றார்.
"ஆமாம்...இறைவனைத் தேட
கால நேரம் பார்க்கக்கூடாதுதான். ஆனால்
இதில் என்ன கணக்கு இருக்கிறது?" என்றேன்
"முக்கால் = 3/4
அரை = 1/ 2
கால் = 1/4
அரைக்கால் = 1/8
இருமா = 1/ 10
மாகாணி = 1 /16 ( வீசம்)
ஒருமா = 1/ 20
கீழரை = 1/640
என்று எட்டு பின்ன எண்கள் பின்னப்பட்டிருப்பது
தெரியவில்லையா?" என்றார்.
"இதுதான் எண்ணலங்காரமா?
அதுவும் பின்னங்களை நிரல்பட
இறங்கு வரிசையில் அமைத்து
கவி படைத்த தங்கள் புலமையை என்னவென்பது?"
பாராட்டிவிட்டுக் கடந்து வர நினைத்தேன்.
"சிலேடை தெரியவில்லையா?" என்று கேட்டு அங்கேயே நிறுத்தினார்.
"சிலேடைக் கவியின் பாடலில்
சிலேடை இல்லாமலா?"என்றேன்.
"சிலேடையில் நேரடியாகவே இருபொருள்
தரும் சொல்லான இருமா என்பதை
எழுதி செம்மொழிச் சிலேடையைப் புகுத்தி
இருபொருளையும் புரிந்து கொள்ள வைத்தியிருக்கிறேன் "என்றார்.
" அறிந்தேன்" என்றேன்.
"தனித்து நிற்கும்போது ஒரு
பொருளும் பிரித்துப் படிக்கும்போது
இன்னொரு பொருளும் தரும் பிரிமொழிச்
சிலேடையை அக்கால் அரைக்கால்
கண்டு அஞ்சாமல் என்ற சொற்றொடரில்
எழுதி கவியை அழகுபடுத்தியிருக்கிறேன்.
பாடலைப் படித்து கணக்கோடு இலக்கணத்தையும் அறிந்து கொண்டிருப்பாய் என்று
நினைகிகிறேன்"
என்று கூறிவிட்டு கடந்து போய்விட்டார்.
இறைவனைத் தொழுவதற்கு உகந்த காலம்
எது என கேட்க...
காலத்தோடு கணிதத்தையும் கவின்மிகு
இலக்கண நெறியோடு சொல்லித் தரும்
பாங்கு கவி காளமேகத்தைத் தவிர வேறு
யாருக்கு வரும் ?
நான் மட்டும் பாராட்டினால் போதுமா?
நீங்கள் பாராட்டாமல் இருந்தால் எப்படி?
"முக்காலுக்கு ஏகாமுன்
முன்நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு
அஞ்சாமுன் -விக்கி
இருமாமுன் மாகாணிக்கு
ஏகாமுன்..... "
இறைவனைத் தேடு.
Comments
Post a Comment