போதும் பொழுதும்

போதும் பொழுதும் 


சில சொற்களை எழுதும்போது

நாம் சரியான சொல்லைத் தான்

கையாளுகிறமா என்ற ஐயப்பாடு எழுதல்

இயல்பு.

அதற்குக் காரணம் ஒரே பொருளில் இருவேறு சொற்களைக் கையாள்வதால் 

ஏற்படும் குழப்பமாக இருக்கலாம்.



எடுத்துக்காட்டாக 

'போது 'பொழுது'ஆகிய இரண்டு

சொற்களையும் பயன்படுத்தும்போது

சில நேரங்களில் குழப்பம் 

ஏற்படுவது உண்டு."

போது என்று எழுத வைண்டுமா?

பொழுது என்று எழுத வேண்டுமா?

எது சரி?

எது தவறு?

இப்படிச் சர்ச்சைகள் மனதிற்குள் 

எழுந்த நாட்கள் உண்டு.

 

பொழுதின் சுருங்கிய வடிவம்தான் போது

என்று வாதிடுவர் ஒரு சிலர்.

ஆனால் போதிய சான்றுகள் தரப்படாததால்

இன்றுவரை நாம் எழுதும்போது

குழப்பத்திலேயே ஏதாவது ஒன்றை 

எழுதி வைத்திருப்போம்.



போது என்றால் மலரும் பருவத்தில்

இருக்கும் மலர்.


போது என்பதன் பொருள்

செவ்வி

காலம்

தக்கசமயம்

வாழ்நாள்

பொழுது

என்று பல பொருளில் கையாளப்பட்டு

வருதலைக் காணலாம்.


போது என்பது பெயர்ச்சொல்லாக வரும்போது

மலர் என்ற பொருளில் வருகிறது.


"இங்கே வரும்போது "என்ற சொல்லில்

'போது' என்ற சொல் 

 தக்கசமயத்தில் என்ற பொருளில்

கையாளப்படும்.


"வாழும்போது" என்று எழுதினால்

வாழ்கின்ற காலத்தில் 

 என்று பொருள்படும்

 என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

 

 

இரண்டாவதாக பொழுது என்பதைப்பற்றி

அறிந்து கொள்வோம் வாருங்கள்.



1.சூரியன்


2.வேளை ( சிறுபொழுது

பெரும்பொழுது என்ற பொருளைக்

குறிப்பதற்காக வரும்.)


3.நேரம்

4.காலம்

5.கணம் 

6.தக்க சமயம் 

7..வாழ்நாள்


ஆகிய பொருள்களில் பொழுது பயன்படுத்தப்படும்.

.

பொழுது என்பது பெயர்ச்சொல்லாகப்

பயன்படுத்தும்பொழுது சூரியன்

என்ற பொருளில் வரும்.


பொழுது என்பது சிறுபொழுது

பெரும்பொழுது என்பதையும் குறிக்கும்.

இங்கே பொழுது என்பது காலத்தைக்

குறிப்பிட வந்துள்ளது.



சிறுபொழுது ஆறு வகைப்படும்.

அவையாவன:


வைகறை

(விடியற்காலை 2 மணி முதல்

6 மணி வரை)


காலை


(6 மணி முதல் 10 மணி வரை)


நண்பகல்


(10 மணி முதல் 2 மணி வரை)


எற்பாடு


(2 மணி முதல் 6 மணி வரை)


மாலை


(6 மணி முதல் 10 மணி வரை)



யாமம்


(10 மணி முதல் 2 மணி வரை)




பெரும்பொழுது ஆறு வகைப்படும்.

அவையாவன:


இளவேனில்

(சித்திரை,வைகாசி)


முதுவேனில்

(ஆனி,ஆடி)


கார்

(ஆவணி, புரட்டாசி)


கூதிர்

(ஐப்பசி, கார்த்திகை)


முன்பனி

(மார்கழி,தை)


பின்பனி

(மாசி,பங்குனி)



போழ்தல் என்றால் வெட்டுதல் ,நீக்குதல்

என்றும்

 பொருள் கொள்ளப்படும்.

இருளை நீக்கி தோன்றுவது பொழுது.

அதனடியாகப் பிறந்ததால் 

பொழுது என்ற சொல்

சூரியன் என்ற பொருளில்

 வருகிறது  என்பதை அறியலாம்.


எடுத்துக்காட்டாக 

பொழுது புலர்ந்தது

பொழுது சாய்ந்தது 

போன்ற சொற்றொடர்களைக் கூற முடியும்.


நேரத்தைக் குறிப்பிடுவதற்காகப்

பொழுது என்ற சொல்லைப்  

பயன்படுத்தும்பொழுது


அந்திப்பொழுது

அதிகாலைப் பொழுது

என்று எழுதலாம்.



முடிவாக 

போது என்பதும்

பொழுது  என்பதும்

பெயர்ச்சொல்லாக  கையாளப்பட்டு வரும்

இடங்களில் போது என்பது மலரையும்

பொழுது என்பது சூரியனையும்

குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது

என்பதை நினைவில் கொள்க.


 பிற இடங்களில்

எல்லாம் போதும் பொழுதும் ஏறத்தாழ ஒரே பொருளில்தான் 

அதாவது காலம் நேரம் இவற்றை உணர்த்தும்படியாகவே கையாளப்பட்டு

வந்திருக்கிறது என்பது பல சொற்றொடர்களை வாசிக்கும்போது

புரியும்.


நடக்கும்பொழுது  கல்லில் இடறிவிட்டேன்.

படிக்கும்பொழுது கண்டுபிடித்தேன்.

வரும்போது பார்த்தேன்.

வரும்பொழுது பார்த்தேன்.

நடக்கும்போது வீழ்ந்துவிட்டேன்.



எனவே 

படிக்கும்பொழுது

படிக்கும்போது

என்று இரண்டு வழிகளிலும்

 எழுதும்போது வேளை /நேரம்

என்ற பொருளில் எழுதப்படுவதால்

 அவை தவறாகக் கருதப்பட

 மாட்டாது.

 

புலர்காலைப் பொழுதில்

எழுதும்போது

மனதில் தோன்றிய

கட்டுரை இது.



Comments