நல்லை அல்லை

நல்லை அல்லை


நிலவைப் பார்த்துப் பாடாத

புலவர்கள் இல்லை.

நிலவின்மீது காதல் கொள்ளாத

கண்கள் இல்லை.


காதலர்கள் கண்களில் முதலில் தெரிவது

நிலலென்னும் அழகு தேவதை தான்.

அதனை மூடி மறைத்து 

,வெட்கப்பட வைத்து,

எட்டிப்பார்க்க வைத்து ,

முன்னூற்று அறுபது பாகையிலும் நின்று

பார்த்துப் பார்த்து

கவிதை எழுதியதை

வாசித்திருக்கிறோம் .


நாமும் அந்த அழகு தேவதையைப்பற்றிய வரிகளை வாசித்து வாசித்து

இலக்கிய இன்பத்தில் திளைத்திருக்கிறோம்.


நிலவு சுடுகிறது என்பார்கள்.

மகிழ்ந்திருக்கிறோம்.

நிலவுகண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறது

என்பார்கள்.

நாமும் கூடவே ஒளிந்து விளையாடியிருப்போம்.


ஆனால் நீ நல்லவளே கிடையாது

என்று சொல்லியிருக்கிறீர்களா?

யாருங்க நிலவைப் பார்த்து நல்லவள் இல்லை என்று சொல்லுவார்?


இங்கு ஒரு பெண்ணே நீ நல்லவள் இல்லை என்கிறாள்.

ஒருவேளை பொறாமையாக இருக்குமோ?

பெண்ணுக்குப் பெண் எதிரியாகி விட்டாளோ?


ஏன் அப்படிச் சொன்னாள்?7

எதற்காக நிலவு அவளுக்கு நல்லவள்

இல்லாதவள் ஆகிவிட்டாள்.

அவளிடமே கேட்டுவிடுவோம் வாருங்கள்.


"கருங்கால் வேங்கை வீயுகு துருகல்

இரும்புலிக் குருளையிற் தோன்றுங் காட்டிடை

எல்லி வருநர் குளவிற்கு

நல்லை யல்லை நெடுவெண் ணிலவே "


                       -குறுந்தொகை


கருங்கால் - கருப்புநிற கால்கள் அதாவது 

                         வேர்கள்

வேங்கை- புலி, வேங்கை மரம்

வீயுகு - முதிர்ந்த மலர்கள் வீழ்ந்து கிடக்க

துருகல்- பெரிய கல் ,பாறை

இரும்புலிக்-கொடிய புலி

தோன்றுங்- தோற்றமளிக்கும்

எல்லி- இரவு

களவிற்கு- களவொழுக்கத்திற்கு

வருநர் - வருகின்ற என்னவர்

நல்லை யல்லை -நல்லது அல்ல

            அதாவது நல்லவள் அல்லள்

நெடு - நீண்ட

வெண்நிலவே -வெண்மையான நிலவே


காட்டு  வழியாக ஒரு காதலன்

தன் காதலியை சந்திக்க வருவதாகச் சொல்லி விட்டுச் சென்றான்.

நேரம் அதிகம் 

ஆகிக் கொண்டே இருக்கிறது.

காதலன் வந்தபாடில்லை.

காதலியின் மனதில் கலக்கம்.

வரும் வழியில் ஏதாவது ஆகிவிடுமோ என்று

அஞ்சுகிறாள்.


இப்போது நிலவு ஒன்று

தன் பால்நிலா ஒளிச் சிந்த 

வானத்தில் பவனி வருகிறது.

நிலவொளியில் காட்சிகள் துல்லியமாகத்

தெரிகின்றன.

எந்தவித அச்சமும் இல்லை என்றல்லவா

அவள் நினைத்திருக்க வேண்டும்.

நீ நல்லவள். என் காதலன் இருளில்

இடர்ப்பட்டு விடக் கூடாது என்று ஒளி சிந்தும்

உனக்கு நன்றி என்றல்லவா இவள்

சொல்லியிருக்க வேண்டும்.


மாறாக நீ நல்லை அல்லை என்கிறாளே

என்ன காரணமாக இருக்கும்?


வேறு ஒன்றுமில்லை.

அவன் வரும் வழியில் கரிய வேர்களை உடைய வேங்கை மரங்கள் நிற்கின்றன.

அவற்றின் அடியில் சிறிய

குன்றுகள் உண்டு. அவற்றின் மீது

 முதிர்ந்த மஞ்சள் நிற பூக்கள்

விழுந்து குவிந்து கிடக்கின்றன.

அது பார்ப்பதற்குக் கொடிய புலி போல

தோற்றமளிக்கும்.

இந்தக் காட்சி அவருக்கு அச்சமூட்டும்.

அதனால் இக்காட்சியை அரங்கேற்றிக் கொண்டு இருக்கும் நீ நல்லவள் அல்லள்

என்கிறாள்.


வரும்வழி பாதுகாப்பில்லாதது.

புலிகள் நடமாட்டம் இருக்கும்.

இந்தக் களவொழுக்கம் வேண்டாம்.

அதனால் விரைந்து திருமணம் செய்துகொள் என்று சொல்ல வேண்டும்.

அதற்கு நீ நல்லை அல்லை என்று யார் மீது

குற்றம் சுமத்துகிறாள் பாருங்கள் .


காலம் தாழ்த்தி வருவதால் அப்படி ஆகிவிடுமோ இப்படி ஆகிவிடுமோ என்ற பரிதவிப்பு.கவலை. புலம்பல்.

அதைக் குன்றின் மீது மஞ்சள்  மலர்கள்

தூவி காட்சிப்படுத்தியவிதம்.

மஞ்சள் மலர்பொதி வேங்கை எப்படியிருக்கும் என்ற தேடல்

யாரப்பா இந்தப் புலவர் என்று தேட வைக்கிறது.

பெயர் அறியப்படவில்லையாம்.

அதனாலென்ன ?

நாங்களே பெயர் தந்து விடுகிறோம் என்று 

நெடுவெண்ணிலவினார்

என்று அழைத்தனராம்.


நெடுவெண்ணிலவு நல்லை அல்லை என்றவருக்கு அந்நிலவே பெயராயிற்று.


நல்லை யல்லை அருமையான வரி.

மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டும்

சொற்கள்.

நல்லை யல்லை









Comments