தீதும் நன்றும் பிறர் தர வாரா

தீதும் நன்றும் பிறர் தர வாரா 


தீதும் நன்றும் பிறர் தர வாரா"

எங்கேயோ கேட்டக் குரல்.

எப்போதோ படித்த வரி.

பத்தோடு பதினொன்று

அத்தோடு இது ஒன்று என

விட்ட வரி.

ஆனால் முதல் வரி மட்டும்

உலகம் முழுவதும் சுற்றிக்

கொண்டிருக்கிறது.

ஐநா சபை வாயிலில் நின்று

அனைவரையும் வரவேற்கிறது.


தமிழின் பெருமையே அந்த ஒற்றை வரியில்தான்

அடங்கி இருக்கிறது என்று உரத்தக் குரலில்

கூறிக் கொண்டிருக்கிறோம்.

முதல் வரி என்பதால் அதை

உறுதியாகப் பற்றிக் கொண்டோமா?


அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும்

எவ்வளவு கனமான மதிப்புமிக்க கருத்தைச்

சுமந்து நிற்கிறது என்பது அடுத்தடுத்த

வரிகளை வாசிக்கும்போது புரியும்.


நான் எந்தப் பாடலைச்

சொல்கிறேன் என்பது உங்களுக்குப்

இப்போது புரிந்திருக்கும்.

கணியன் பூங்குன்றனாரின் 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்று தொடங்கும் பாடலைப்பற்றித்தான்

நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.


பாடலை முழுவதுமாக வாசித்துப்

 பாருங்கள். எவ்வளவு கருத்தாழமிக்கப்

பாடல் இது. ஒவ்வொரு வரியும்

உயிரோட்டம் மிக்க உலக உண்மைகளை

உரக்கச் சொல்லி வருவது.

காலத்தால் அழியாத கருத்தோவியங்களைச்

சுமந்து நிற்பது.


பாடல் இதோ


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ;

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதெனின மகிழ்ந்தன்றும் இலமே ;முனிவின்

இன்னாதென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானது

கல் பொருது மிரங்கு மல்லற்  பேரியாற்று

 நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

 முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

 காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

 பெரியோரை வியத்தலும் இலமே,

 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !

                           

                                புறநானூறு : 192


என்பது பாடல்.


முதல் வரி யாதும் ஊரே

யாவரும் கேளிர் 

அனைவரும் அறிந்த  ஒரு வரி.


எல்லா ஊரும் எமது ஊர்தான்.

எல்லா மக்களும் எமது உறவுகள்தான்

என்ற சீரிய கருத்தைத் தாங்கி வரும் வரி.

நம் உள்ளத்தோடு கலந்த வரி.

தமிழரின் பண்பை தலைமுறைக்குக் கடத்தும் வரி.

சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட

வைத்த வரி.

மாற்றுக் கருத்து இல்லை.


தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்பது இரண்டாவது வரி.

இதுதான் இக்கட்டுரைக்கான மையப்பொருள்.


தீயதோ நல்லதோ எதுவானாலும் பிறர் தந்து

நமக்கு வருபவை அல்ல.


எவ்வளவு அருமையான கருத்து பாருங்கள்!...

நல்லது வந்தால் நான்...நான் 

என்னால்தான் இவை எல்லாம் நிகழ்ந்தது

என்று ஆயிரம் முறை சொல்லி சொல்லிப்

பெருமிதம் கொள்வோம்.


ஒரு தீயது நடந்து விட்டால் ....

அவ்வளவுதான்....

எதிராளியை நோக்கி

முதல் ஆளாக கை நீட்டி குற்றப்படுத்தத்

தவறமாட்டோம். உன்னால்தான்....

உன்னால்தான்

இப்படி எல்லாம் நிகழ்ந்துவிட்டது என்று

அது மறக்கும்வரை குற்றப்படுத்திப்

பேசிக் கொண்டே இருப்போம்.

இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கு அல்ல. 

அது மனித  இயல்பு.

யாரும் தான் தவறு செய்ததாக ஒத்துக்கொள்வதேயில்லை.


ஆனால் கணியன் பூங்குன்றனார் என்ன 

சொல்கிறார் பாருங்கள்.


நமக்கு ஒரு நல்லது நடந்தால்

அதற்குக் காரணம் நாம்தானாம்.

அதே போல ஒரு தீங்கு வந்து விட்டாலும்

அதற்கும் நாம் மட்டும்தான் காரணமாம்.


இரண்டுக்கும் நாம்தான் காரணமா?

அது எப்படி சாத்தியமாகும் ?....ஏற்க மனம் மறுக்கிறதல்லவா!


நன்மைக்குப் பொறுப்பேற்க தயாராக

இருக்கும் நாம் 

தீமைக்கு யார் காரணம் என்ற கேள்வி

எழும்போது ...நானல்ல....நானல்ல ...என்று

கையை உதறிவிட்டு ஓட ஆரம்பித்துவிடுவோம்.


யாராவது என்னால்தான் துன்பம்

வந்தது என்று ஒத்துக் கொள்வார்களா.?...

ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள்.

உங்களை யார் ஒத்துக்கொள்ள

கேட்டது? 

நீங்கள் ஒத்துக்கொள்வீர்களோ மாட்டீர்களோ அது உங்கள் பிரச்சினை இல்லை.


 நீங்கள் ஒத்துக்கொண்டு தான்

ஆக வேண்டும் என்று உரக்கச் சொல்கிறார். உறுதியாகச் சொல்கிறார் 

உச்சந்தலையில் அடித்துச் சொல்கிறார் கணியன் பூங்குன்றனார்.


எதுவுமே நம்மை மீறி நடப்பதில்லை.


நல்லது செய்தால் நன்மை நிகழும்.

தீமை செய்தால் தீயதுதான் நிகழும்.


தினை விதைத்தவன் தினைஅறுப்பான்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். 

இதுதானே உண்மை.


முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்.

என்று சொல்வதில்லையா?


ஒரு செயலின் விளைவு நம்மை நிழல் போல

தொடர்ந்து வருவதுதானே உண்மை.


நாம் விதைக்கிற விதைதான் பெரிய 

விருட்சமாக பின்நாளில் 

வளர்ந்து நிற்கும்.

எதை விதைக்கிறோமோ அதுதான்

முளைக்கும்.விருட்சாமாக கண் முன்னால் வளர்ந்து நிற்கும்.


நாம் கண்ணாடி முன் நின்று என்ன 

செய்கிறோமோ அதுதான் நமக்குக்

காட்டப்படும்.

வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான்.

நாம் செய்தவை நமக்குத் திருப்பிக்

காட்டப்படும்.


நாம் நல்லது செய்து கொண்டே இருந்தால்

நன்மை நடந்தே தீரும்.


அதுபோல தீயவை செய்து கொண்டே இருந்தால்

தீமை  மட்டுமே வந்து சேரும்.


இதுதான் பூங்குன்றனார் 

எழுதி வைத்துள்ள தீர்ப்பு.


தீதும் நன்றும் பிறர் தர வாரா 

எங்கிருந்தோ யாரிடமிருந்தோ தீமை வந்து

நம்மைத் தாக்கிவிட்டது என்ற தவறான எண்ணத்தை இன்றோடு கைவிட்டு விடுங்கள் என்று ஆணித்தரமாகக்

சொல்லிவிட்டார்.


அத்தோடு பூங்குன்றனார் நம்மை

விட்டுவிடவில்லை.

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

என்று இந்த இரண்டாவது வரியோடு சேர்த்து 

மூன்றாவது வரியையும் முடிச்சு

போட்டு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

அதனால் இரண்டாவது வரியோடு

கடந்து சென்றுவிட முடியாது.


அது என்ன நோதலும் தணிதலும் அவற்றோரன்ன...


அது என்ன அவற்றோரன்ன ?

அந்த அவற்றோரன்ன என்று

கணியன் பூங்குன்றனார் சொல்ல வந்தது எது என்ற கேள்வி விடாமல் துரத்துகிறதல்லவா!


அதுதாங்க தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்கறு சொன்னேனல்லவா?

அதனைப் போன்று நோதலும் தணிதலும்

பிறர் தர வராவாம்.


அப்படியானால்...நோய்க்கும்

காரணம் நாம் தான் என்கிறாரா?


அதேதான்....ஒரு நோய் வருகிறது என்றால்

அதற்குக் காரணமும் நாம்தானாம்.

அது வராமல் தடுப்பதும் நம் கையில்தான்

உள்ளது. அது தணிந்து போவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதும் நம் கையில்தான் உள்ளது.


நோய் வருவதற்கு நாம் காரணமா?

ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையே!

என்று புலம்புகிறீர்களா?


வேறு யாராக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?.

நீங்களேதான்..நீங்கள் மட்டும்தான்.


.மன்னிக்கவும்...நாம்தான்....நாம் மட்டுமேதான்...

என்னையும் சேர்த்துக் கொண்டேனல்லவா!


யாரும் விடுபட்டுப் போகவில்லையே..


நமது உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை,

சுற்றச்சூழல் பராமரிப்பு, ஒழுக்கம் என்று நமது

நடைமுறைகள்தான் நம் உடல் நலத்தைத்

தீர்மானிக்கின்றன.


நம்மையும் நம் சுற்றுச் சூழலையும் பராமரிக்கும்

பெரும் பொறுப்பு நம் கையில்தான்

இருக்கிறது என்பதை உணர்ந்து

செயல்பட்டாலே பெரும்பாலான நோய்கள்

வராது.


நோய்கள் வரக் காரணம் சுகாதாரக்கேடு, 

தவறான உணவு பழக்க வழக்கங்கள் 

என்று சுகாதார அமைப்புகள் பலமுறை

நம்மை எச்சரிக்கின்றன.

கேட்டோமா?


அப்படியானால் நோய்வரக் 

காரணம் என்ன  என்பது இப்போது

புரிந்திருக்கும்.



அவனிடமிருந்து வந்தது .

அந்த நாட்டிலிருந்து வந்தது.

இந்த நாட்டிலிருந்து வந்தது 

என்று அங்கேயும் இங்கேயும் ...

கைக்காட்டி குற்றப்படுத்திக் கொண்டே

இருப்பதில் அர்த்தமில்லை.


அதை எப்படி தணிப்பது என்பதைப் பற்றி

யோசிக்க வேண்டும்.


வருமுன் காப்போம் என்று சொல்லிக் 

கொள்கிறோம். 

வரும் வரை வாசலைத் திறந்து

வைத்து வரவேற்றுவிட்டு அதன்பின்னர்

மூடி முக்காடிட்டு அமர்ந்து என்ன பயன் ?



நீ தானே நோய்க்கு இடம் கொடுத்தாய்..

அப்படியானால்

அதிலிருந்து விடுபடும் வழியும்

உன் கையில்தான் இருக்கிறது .

வந்ததற்கும் ...

வந்து கொண்டிருப்பதற்கும்...

வரப் போவதற்கும்...


எல்லாவற்றுக்கும் காரண கர்த்தா

நாம் மட்டுமே!



இன்று நடந்து கொண்டிருக்கிற நாடகங்களுக்கு

நமது கதாப் பாத்திரத்தை வைத்தே

நாடகத்தை நடத்திக் காட்டிவிட்டார்

பூங்குன்றனார்.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா 

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"


 அடேங்கப்பா....

 யாரப்பா இந்தப் பூங்குன்றனார்.?

 வியப்பாக இருக்கிறதல்லவா!

 


யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன....


எவ்வளவு அருமையான வரிகள்!

காலத்தை வென்ற வரிகள்.

இன்றைய சூழலுக்கு உகந்த வரிகள்.

உள்ளி உள்ளி உவந்த வரிகள்.

என் நெஞ்சை நெகிழ வைத்த வரிகள்!









 











Comments