அம்மாவின் நினைவில்

அம்மாவின் நினைவில் 


அரிச்சுவடு கற்றிட

ஆசிரியர் முகம் பார்த்ததில்லை


ஆலோசனை கேட்டிட

ஆலோசகர் வைத்ததில்லை


நெல்லைத் தமிழ் பேசிட

நெட்டுருவு எதுவும் செய்ததில்லை


நிதி மேலாண்மை செய்திட

நெடுங்கணக்கு கற்றதில்லை


ஈசானம் கருத்திருந்தால்

இடிமழை பொழியுமென்று


வானிலை முன்னறிப்பு செய்ய

வானவியல் படித்ததில்லை


மண் பார்த்துபருவம் செய்ய

வேளாண் படிப்புனக்குத் தேவையில்லை


நீர் மேலாண்மை படிக்காமல்

நீர் மேலாண்மை செய்தவளே!


முதலெழுத்துப் படிக்காமல்

முதன்மை அறிவு தந்தவளே!


சட்டம் படிக்காமல் வீட்டில்

சட்டாம் பிள்ளை ஆனவளே!


காவல் தெய்வமாய் எம்மைக்

கண்ணுக்குள் வைத்துக் காத்தவளே!


நீ இருக்கும் வரை 

உன் அருமை தெரியவில்லை...


அந்திவரை வேலை செய்து

அசந்து நீ வரும்போது


உன் அசதி புரியவில்லை 

ஆறுதலாய் என்றும் இருந்ததில்லை


ஒத்தை மனுஷியாய் நீ

ஓடியாடி உழைத்தபோது


உன் வருத்தம் புரியவில்லை

உதவிக்கு வந்ததில்லை


நீ விட்ட இடத்தை என்னால்

எட்டிப் பிடிக்க  முடியவில்லை


அண்ணாந்து பார்த்தாலும்

உன் உயர்வு எனக்கு எட்டவில்லை 


கண்ணுக்கு எட்டிய தூரம் தேடுகிறேன்

கண்ணான உன்னைக் காணவில்லை 


அம்மா எனக்கு வாய்த்தது பெரும்பேறு

 அம்மாவால் கிடைத்தது இந்த நற்பேறு


அம்மாவின் நினைவு மட்டுமே இப்போது

அம்மா உன்னைப் பார்ப்பது எப்போது?


அம்மாவின் நினைவில் நான்!!!

 




 


 

Comments