நற்றிணை நடத்திய நாடகம்

நற்றிணை நடத்திய நாடகம் 

உலகமே ஒரு நாடக மேடை.

நாம் அனைவரும்  ஆளுக்கொரு கதாப் பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம்.


யாரும் ஆட்டி வைக்கலாமேயே இயல்பாக

நாடகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மனிதர்களுக்கு மட்டும்தான் நடிக்கத் தெரியுமா?

ஏன் எங்களால் கூடாதா?

நாங்களும் நடிப்போம்ல்ல...

என்ற சொல்கிறார்கள் இந்த நடிகர்கள்.


யாரிந்த நடிகர்கள்?

நடிகர்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஒரு சில வரிகள் .



நகைச்சுவை உணர்வு உள்ள 

ஒருவரால் மட்டுமே 

தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக

வைத்துக்கொள்ள முடியும்.


"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்"

என்பார் வள்ளுவர்.


நகைச்சுவை உணர்வு இல்லாதவர்க்கு

இவ்வுலகம் பகலும் இரவுபோல்தான்

ஒளியற்றதாக இருக்கும் .அதாவது அவர்கள்

வாழ்க்கையில் ஒருநாளும்  மகிழ்ச்சி இருக்காதாம்.


நகைச்சுவை உணர்வு இல்லாதது அவ்வளவு

கொடுமையானதா?


நகைச்சுவைக்கு நம் வாழ்வையே புரட்டிப்

போடும் வல்லமை உண்டு.


காந்தியடிகள் சிறந்த நகைச்சுவை

உணர்வு கொண்டவர்.

அதனால்தான்" நகைச்சுவை உணர்வு

மட்டும் எனக்குள் இல்லை என்றால்

எப்பொழுதோ நான் 

என் வாழ்க்கையை இழந்திருப்பேன்"

என்று கடினமான தருணங்களைக்

கடக்க உதவியது தன்னில்

இருக்கும் நகைச்சுவை உணர்வுதான்

என்று பதிவு செய்திருப்பார் காந்தியடிகள்.


நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்

மட்டுமே கடினமான சூழல்களையும்

எளிதாகக் கடந்து போகமுடியும் .

இந்த நாடகத்தையும் நகைச்சுவை உணர்வோடு பாருங்கள்.



நற்றிணையில் ஓர் அழகிய நகைச்சுவைக் காட்சி நாடகமாக நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அகத்திணைப் பாடல்தான்.

அந்தப் பாடலையும் நகைச்சுவை 

கலந்து நாடகமாக நம்முன்னர் தந்தப் பெருமை

அம்மூவனார் என்ற புலவருக்கு உண்டு.


அவர் எழுதிய அந்தப் பாடல் உங்களுக்காக.

"பொங்கு திரைபொருத வார்மணல் அடைக்கரைப்

புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி

கிளைசெத்து மொய்த்த தும்பி  பழஞ்செத்துப்

பல்கா லலவன் கொண்ட கோட் கூர்ந்து

கொள்ளா நரம்பின்  இமிரும் பூசல்

இரைதேர் நரை யெய்தி விடுக்குந்

துறைகெழு மாந்தை அன்ன இவள்நலம்

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய

உழையிற் போகா தளிப்பினும் சிறிய

ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ மகிழ்ந்தோர்

கட்களி செருக்கத் தன்ன

 காமம்கொல்லிவள் கண்பசந் ததுவே!"

                    -  நற்றிணை

                       பாடல் எண்-.  35


பாடல் விளக்கம்

கடலலையானது பொங்கும் நுரையை அள்ளி வந்து

கடற்கரையில் உள்ள

நாவல் மரத்தில் முட்டி,

மோதி விளையாடுகிறது.

நாவல் மரத்தில் பழுத்துக் கிடக்கும்

நாவல் பழங்கள் காம்பு இற்று

கீழே விழுகின்றன.

கீழே விழுந்த நாவற்பழங்கள்

 மரத்தைச் சுற்றி கருநிற

வண்டுகள் போலச்  சிதறிக் கிடக்கின்றன.


நாவற்பழங்களைப் பார்த்த வண்டுகள்

நம்முடைய இனமான வண்டுகள்தான்

கீழே கிடக்கின்றன என்று மயங்கி

நாவற்பழங்களின்மேல் மொய்த்துக் கிடக்கின்றன.


அந்த வேளையில் அந்தப் பக்கமாக 

ஒரு நண்டு ஒன்று வருகிறது.


நண்டு வண்டினை  நாவற்பழம் என்று

எண்ணி  கல்விப் பிடித்து

விடுகிறது.

நண்டின் பிடியில் அகப்பட்ட

வண்டு விடுபட

முடியாமல் ரீ...ரீயென இசைத்து

திமிறி அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.


இது என்ன  கூச்சல் ?

யாரேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டனரா?

அல்லது வேறு ஏதும் பிரச்சினையா?

என்று பார்ப்பதற்காக நாரை 

ஒன்று அந்தப் பக்கம் வந்து

எட்டிப் பார்க்கிறது. 


வண்டைப்  பிடித்துக் கொண்டிருந்த

நண்டின் கண்கள் நாரையைப் பார்த்துவிடுகிறது.

அவ்வளவுதான்....

நண்டு

தப்பித்தோம் பிழைத்தோம் என்று

வண்டை விட்டுவிட்டு ஓடிச்சென்று

வளைக்குள் மறைந்து போகிறது.


அதைப் பார்த்து மற்ற வண்டுகள் பயந்து போய் யாழ்நரம்பு ஒலிப்பது போல் ஒலி எழுப்புகின்றன.இந்த ஓசையைக் கேட்டதும் அங்கு இரை தேடும் நாரை  நண்டுக்குப் பதிலாக வண்டை ப்பிடிக்க ஓட

வண்டுகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி எல்லாமே தப்பித்துக்கொண்டுள்ளன.

இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறும் அழகிய துறையைக் கொண்டது மாந்தை நகரம்.

தலைவி அந்த மாந்தை நகரம் போல அழகினை உடையவள்.



வள்ளுவர் ,

"களித்தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்

வெளிப்படும் தோறும் இனிது." 


                 -திருக்குறள் 1145


என்பார்.

களிப்பு உண்டாக உண்டாக கள்ளுண்டலை மேலும் மேலும் விரும்புமாறு போல, காமம் அலராகும் தோறும் இனிதாகின்றது என்பது பாடலின் பொருள்.

அலராகும் தோறும் எப்படி அது இனிதாகும்?

இனிக்கத்தான் செய்யும் என்பார்கள் காதலர்கள்.


இதைத்தான் நற்றிணைப் பாடலும்,


"மகிழ்ந்தோர்

கட்களி செருக்கத் தன்ன

 காமம்கொல்லிவள் கண்பசந் ததுவே!"

என்று சொல்லியிருக்கிறது.


கடல் .கடற்கரையைச் சுற்றி

நிற்கும் மரங்கள்.

அவற்றின் கீழ்ச் சிந்திச் சிதறிக் 

கிடக்கும் நாவற்பழங்கள்.

பழங்களைத் தின்ன வரும் வண்டுகள்.

வண்டுகளை கவ்விச் செல்ல

காத்திருக்கும் நண்டுகள்.

நண்டுகளைக் கொத்திச் செல்ல

சுற்றித் திரியும் நாரைகள்.

என்று அன்றாட கடற்கரை 

நிகழ்வை 

அழகிய காட்சி அமைப்பாக

அமைத்து அழகிய  நாடகத்தை  நம்

கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்

மூவனார்.


மயக்கமும் மருட்சியும்

கலந்த ஒரு திகிலான காட்சி.

அடுத்து என்ன காட்சி வரப் போகிறது 

என்ற எதிர்பார்ப்போடு நாடகத்தை நகர்த்திய பாங்கு

 ஒரு திகில் நாடகத்தைக் கண்டு களித்த

உணர்வைக் கொடுக்கிறது.எங்கு என்னதான் நடந்தாலும் 

யார் என்ன பேசினாலும் எங்கள் காதல்

இனிக்கத்தான் செய்கிறது என்று முடித்த பாங்கு அருமை.









Comments