புத்தாண்டு தீர்மானம்
புத்தாண்டு தீர்மானம்
புத்தாண்டு பிறந்தாகிவிட்டது.
புதுப்புதுச் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் புத்தாண்டில் என்ன செய்யலாம்
என்னென்ன மாற்றங்களை
நடைமுறைப்படுத்தலாம்
என்னென்ன வாங்கலாம்
எவ்வெவற்றைத் தவிர்க்கலாம்
இப்படி ஆயிரத்தெட்டு சிந்தனைகள் குறுகுமறுக்காக ஓடிக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் புத்தாண்டு தீர்மானமாக
ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமே
என்ற எண்ணமும் முளைத்து முன் வந்து நின்று விடை கேட்டு நிற்கிறது.
கடந்த ஆண்டு எடுத்த தீர்மானம் நாலு நாட்கள் நடைமுறைப்படுத்தபட்டு
நட்டாற்றில் விடப்பட்டது.
அதற்குள் இந்த ஆண்டு தீர்மானமா என்று
கேட்கத் தோன்றும்.
இது ஆண்டாண்டு நடப்பதுதான்.
இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கல்ல.
கடந்த ஆண்டில்
கெட்டப்பழக்கத்தைக் கைவிட்டு விடுவேன்
நல்லது செய்வேன்.
கோபப்பட மாட்டேன்.
நன்றாகப் படிப்பேன்.
பெற்றோரிடம் எதிர்த்துப் பேச மாட்டேன்.
அதிகமாக டீ குடிக்க மாட்டேன்.
அதிக நேரம் தூங்க மாட்டேன்
யாரிடமும் சண்டையிட மாட்டேன்.
ஒழுங்காக நடைப்பயிற்சி மேற்கொள்வேன்.
உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்வேன்.
இப்படி ஆளாளுக்கு
அவரவர் வயதுக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப தீர்மானம் எடுத்திருப்பீர்கள்.
ஆனால் எத்தனைநாள் கடைப்பிடித்தோம் என்பது கேள்விக்குறி.
அதற்காக இந்த ஆண்டு சும்மா இருக்க முடியுமா?
இதோ புத்தாண்டு வரவேற்புக்காக
அனைவரும் வாசலில்
காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வாருங்கள் மனம் நிறைய மகிழ்ச்சியைப்
சுமந்துகொண்டு முன்வரிசையில்
வந்து நிற்போம்.
தயக்கமா?
வரவேற்பில்
முன் வரிசையில் நிற்கவிடாதபடி
தடுத்து பின்னால் நின்று
பதுங்கிப் பதுங்கி
எட்டிப்பார்த்துக் கொண்டு
நிற்க வைத்தது எது?
புத்தாண்டு வந்தால் என்ன?
வராமல் போனால்
என்ன என்று ஒரு சலனமும்
இல்லாமல் எல்லா நாளையும் போல்தான்
இதுவும் ஒரு நாள். மற்றபடி எதிர்பார்ப்பதற்கு
இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?
இந்த ஆண்டாவது நம்மைக்
கண்டு கொள்ளுமா?
என்று பதின்ம வயதினரின்
எதிர்பார்ப்பும்
பரபரப்பும் கலந்த மனநிலையில்
நின்று கொண்டிருக்கிறீர்களா?
இப்படி மாறுபட்ட மனநிலையில்
ஆளுக்கொரு எதிர்பார்ப்போடு
நின்று
கொண்டிருக்கிறோம்.
எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகம்
இருக்கக்கூடாது.
அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தால்
நமது எதிர்பார்ப்புப் பொய்த்துப் போகும்போது
மனம் ஏற்க மறுக்கும்.
ஏன்...ஏன்....எனக்கு மட்டும் ஏன் இப்படி?
என்ற கேள்வி எழுப்ப வைக்கும்.
புரியாமல் புலம்ப வைக்கும்.
புரிதலில்லாப் பல கேள்விகளை முன்
வைக்கும்.
வேறு என்னதான் செய்ய வேண்டும்
என்று கேள்வி எழுகிறதல்லவா?
எந்தவொரு எதிர்பார்ப்பும் வேண்டாம்.
பெரிய தீர்மானம் எதுவும் எடுக்க வேண்டாம்.ஏதோ நம்மால் இயன்ற ஒரு சிறிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். உங்களைச் சுற்றி ஒரு மகிழ்ச்சி அலை வீசுவதை உணர்வீர்கள்.
என்ன தீர்மானம் என்று கேட்கிறீர்களா?
"பேசும் சொற்களில் கவனம்
எடுத்துக் கொள்வேன் "என்பது இந்த ஆண்டு தீர்மானமாக இருக்கட்டும்.
சொற்களைக் கவனமாகக் கையாண்டால்
எந்த வித பிரச்சினைகளும் எழாது.
நாம் பேசும் சொற்கள்தான் இந்த சமூகத்தில் நமக்கு உரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் .
நாம் மதிக்கப்படுவதற்கும் அவமரியாதை செய்யப்படுவதற்கும் காரணம் நாம் பேச தேர்ந்தெடுக்கும் சொற்கள்.
"ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும் "
இந்தப் புத்தாண்டு நம் வாயின் வார்த்தையிலிருந்து
தொடங்கட்டும்.
அதுவே நமது புத்தாண்டு
தீர்மானமாகவும் இருந்திடட்டும்.
இந்தப் புத்தாண்டு வார்த்தைகளால்
வாழ வைத்த ஆண்டாக அமையட்டும்.
சொற்கள் உயிருள்ளவை என்ற கருத்தில்
நம் அனைவருக்கும் உடன்பாடு உண்டு.
அந்த நம்பிக்கையோடு
நம்பிக்கை தரும் சொற்களைக் கையிலேந்தி இந்தப் புத்தாண்டை
வாழ்த்தி வரவேற்று நிற்போம்.
வாழ்த்து புத்தாண்டுக்கு அல்ல.
நம்மோடு உடன் பயணிப்பவர்களுக்கு
நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தி
வாழ்த்து சொல்லுவோம்.
நமது வாழ்த்தே நமக்கும்
நம்மோடு இருப்பவர்களுக்கும்
வரமாக அமைந்திடட்டும்.
நீங்கள் யார் என்பதை உலகம்
அறிந்துகொள்ளட்டும்.
சொல் என்பது இரண்டே எழுத்துக்கள்
கொண்ட
ஒற்றைச் சொல்லாக இருக்கலாம். அந்த
ஒற்றைச் சொல் உயிரோட்டமிக்கது.
உணர்வுமிக்கது. உங்களோடு
உரையாடி மகிழ வைப்பது.
மரியாதையைப் பெற்றுத் தருவது.
தேர்ந்தெடுத்தச் சொற்களால்
வாழ்த்துவோம். பேசுவோம்.மிகுதியாக அல்ல.
மிகைபட அல்ல. இயல்பாக...
இனிமையாக ....எளிதாக...
நீங்கள் பேசும் பேச்சு கட்டமைக்கப்பட்டிடட்டும்.
அது உங்கள் மீதான மரியாதையைக்
கட்டமைக்கும்.
வெல்லும் சொல்லாக நீங்கள் பேசும்
சொற்கள் இருக்கட்டும்.
உள்ளங்களைக் கொள்ளை
கொள்ளட்டும்.
உறவுப்பாலம்
உறுதியாக கட்டி எழுப்பப்பட
உதவுவதாக இருக்கட்டும்.
நட்பை நழுவவிடாத
நற்பண்பு பொதிந்ததாக இருக்கட்டும்.
நம்பினோர்க்கு
தண்நிழல் தரு தண்மையைத்
தந்திடட்டும்.
தேறுதலற்றவர்களுக்கு
ஆறுதலாக அமைந்திடட்டும்.
ஒவ்வொரு முடிவும்
புதிய துவக்கத்திற்கான அடையாளம்.
இந்த பழைய ஆண்டின் முடிவு
ஒரு புதிய நம்பிக்கையின் தொடக்கம்.
அந்த நம்பிக்கை கொடுப்பதாக உங்கள்
சொற்கள் இருக்கட்டும்.
வாருங்கள் நம்பிக்கை என்னும்
விளக்கைக் கையில் ஏந்தியவர்களாக
நல்ல சொற்களை உள்ளத்தில் நிரப்பி வைத்துக்கொண்டு புத்தாண்டை வாழ்த்தி வரவேற்போம்.
நல்ல சொற்களால் நன்னடை பயிலும்
ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திடட்டும்.
சொல்லால் வாழ்வின் சுவை கூட்டித் தரும்
நல்லாண்டாக
இந்தப் புத்தாண்டு அமைய
வாழ்த்துகள்.
நல்வாழ்த்துகள்
நவில்கின்றேன்
நட்பின் மீது கொண்ட
நம்பிக்கையோடு
நன்றி கலந்த
நல்லுள்ளத்தோடு
நல்லுள்ளங்களுக்கு
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Comments
Post a Comment