பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்


நாள் :28.01.2026


எங்கும் புகழ் மணக்கும் பங்களாச்சுரண்டை ஊரு

வஞ்சமில் ராஜையா தங்கமணி  இணையர் சேர்வலாறு

கொஞ்சி மகிழப் பிறந்த இச்சிற்றாறு

நெஞ்சம் மகிழ  ஓதினர் ஞானசௌந்தர்யா எனும் நற்பேரு!


அச்சங்குன்றம்  பாலோடு கலந்த இச்சிற்றாறு

இன்பமாய்ப் பிள்ளை மூவர் தந்த  கூட்டுத் தேனாறு

புன்னகையாள்  தமிழாசிரியை உள்ளம் என்றும் பதினாறு 

விழியுயர்த்திப் பார்க்க வைத்தது இவரின் ஒழுகலாறு!



மேரிசார்ஜென்ற் பள்ளியில் பாய்ந்த தமிழ்ப்பொய்கையாறு

மாணவர் உள்ளங்களை அள்ளுவதில் மணிமுத்தாறு

கற்பித்தலில் இவருக்கு  உண்டு தனிப்பேரு 

கற்றோர் கொண்டாடும் 

பெரும்பேறு வாய்த்த தாமிரபரணியாறு



மூவேழு ஆண்டு ஆசிரியப் பணி என்பது சிறியவரலாறு

மூவாத் தமிழ்க் கற்பித்தலில் ஓடும் தீஞ்சுவைப் பாலாறு

ஓராறு பொழுது போதாது இவரொரு 

அன்புப்பேராறு

சீராறு நற்சுவையாறு இவருக்கு நிகர்யாரு?


கள்ளமில்லாப் பேச்சு என்றும் குளிரிளநீராறு 

உள்ள வோட்டமோ தெளிந்த தெண்ணீராறு

அள்ளும்மடையெனப் பேச்சில் இருக்கும்  சுவையாறு

அமைதிக்கான நோபல் பரிசுக்குப் 

பரிந்துரை இவர் பேரு



பருவம் வந்ததும் ஓய்வென்பதை உரைத்ததாரு?

எப்பருவத்திலும் கற்றல்தானே கல்வியின் சிறப்புக்கூறு

கற்பவரும் கற்றவரும் கொண்டாடும் உன்னதப்பேறு

பொன்னிற பூந்தாது தூவி  வாழ்த்தும் நெடியவரலாறு !



எஞ்சிய காலங்கள் மகிழ்ச்சித் தேனாறு

விஞ்சிய வளங்கள் குவிக்கட்டும் நல்லாறு 

மிஞ்சி உழைத்தது போதும் கொஞ்சம் இளைப்பாறு

கொஞ்சி மகிழ்ந்தளித்தோம் உமக்கு மதிப்பெண்  நூற்றுக்கு நூறு!

Comments