உம்மைத்தொகையும் எண்ணும்மையும்

உம்மைத் தொகையும் எண்ணும்மையும் 

எண்ணும்மை

உம்மைக் தொகை இவை இரண்டிற்குமான

வேறுபாடு என்ன?

இரண்டும் ஒன்றுபோல் தானே இருக்கின்றன.

அவற்றை எப்படி கண்டுபிடிப்பது?

என்ற குழப்பம் பள்ளிப் பருவத்தில்

பலருக்கும்  ஏற்படுதல் உண்டு.


அதனால் நாலைந்து எண்ணும்மை சொற்களையும்

உம்மைத்தொகையையும் அப்படியே 

மனப்பாடம் செய்து வைத்து விட்டுத்

தேர்வு எழுதச் செல்வோம்.

அங்கே நாம் படித்ததை விட்டுவிட்டு

வேறு ஒரு சொல் வந்திருக்கும்.

இப்போதுதான் என்ன பதில்

எழுதுவது என்ற ஓர் ஐயம் ஏற்பட்டு

ஏதாவது ஒன்றை எழுதி வைத்துவிட்டு

வந்துவிடுவோம்.

இதற்கு நீங்களும் நானும் விதிவிலக்கல்ல.


சற்று புரிந்து படித்திருந்தால்

ஐயம் எழுவதற்கான

வாய்ப்பே வந்திருக்காது.



தொகை என்றாலே தொக்கி நிற்பது

அதாவது மறைந்து நிற்பது என்று

பொருள்.


உம்மைத் தொகை என்றால் உம் என்ற சொல்

மறைந்து நிற்கும் சொல் 

என்று பொருள்.


எடுத்துக்காட்டாக

தாய்தந்தை

தாய் தந்தை - உம்மைத்தொகை.


தாயும் தந்தையும் என்று

சொல்லும்போது இதில் 

உம்  வெளிப்படையாகத் தெரிகிறது.


இவ்வாறு உம் வெளிப்படையாக

தெரியும்படி எழுதியிருந்தால் அது எண்ணும்மை

எனப்படும்.


தாய் தந்தை -

தாயும் தந்தையும்



ஆனால் தாய்தந்தை என்று எழுதும்போதும்

உம் மறைந்து நின்று

தாயும் தந்தையும் என்ற பொருளைத்தான்

கொடுக்கிறது.


பொருள் மாறாது.

உம் மட்டும் மறைந்தும்

வெளிப்படையாகவும் நின்று

இருவேறு பொருளைக் கொடுக்காமல்

ஒரே பொருளைக் கொடுக்கிறது.


மறைந்து நின்றால் உம்மைக் தொகை.

வெளிப்படையாக தெரிந்தால்

எண்ணும்மை.

எவ்வளவு எளிமையாகப் புரிந்து

கொள்ள முடிகிறது.!


"எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்

எனும் நான்கு அளவையும் உம்மிலது

 அத்தொகை"

 என்பார் நன்னூலார்.


அதாவது உம்மைத்தொகையானது


எண்ணல்

எடுத்தல்

முகத்தல்

நீட்டல் 

என்னும் நான்கினடியாகப்

பிறக்குமாம்.


எடுத்துக்காட்டாக


ஒன்றேகால்-எண்ணல் அளவை உம்மைத்தொகை

தொடியேகஃசு-எடுத்தல் அளவை உம்மைத்தொகை

மரக்கால்படி -முகத்தல் அளவை உம்மைத்தொகை

அடிஅங்குலம்-நீட்டல் அளவை உம்மைத் தொகை


இதனையே 

ஒன்றும் காலும்

தொடியும் கஃசும்

மரக்காலும் படியும் 

அடியும் அங்குலமும்

என்று எழுதினால் அது

எண்ணும்மமையாகிவிடும்.





கபிலபரணர் - உம்மைத் தொகை


கபிலரும்பரணரும்


அண்ணன்தம்பி -உம்மைத்தொகை


அண்ணனும் தம்பியும்


வெற்றிலைபாக்கு - உம்மைத்தொகை 


வெற்றிலையும் பாக்கும்


மேளதாளம் - உம்மைத்தொகை


மேளமும் தாளமும்


மாடுகன்று - உம்மைத்தொகை


மாடும்கன்றும்


சேரசோழர் -உம்மைத்தொகை


சேரரும் சோழரும் 


விண்மண்


விண்ணும் மண்ணும்



உம் என்னும் சொல் வெளிப்படையாக

வந்தால் அது எண்ணும்மை.

உம் என்னும் சொல் மறைந்து வந்தால்

அது உம்மைத்தொகை.

இதனை மட்டும் மனதில் பதிய வைத்துக்

கொள்ளுங்கள்.

இனி எந்தவித ஐயப்பாடும் எழாது.





Comments