நிறைகுடம் நீர் தளும்பல் இல்

        நிறைகுடம் நீர் தளும்பல் இல்


பழமொழிகள் படித்தவர்க்கும் பாமரர்க்கும்
வழிகாட்டவல்ல சான்றோர் பெருமக்களின்
அனுபவமொழிகள்.

உலகம் எப்படிப்பட்டது என்ற உண்மையை
நம் முன் வைத்து கவனமாக நடை பயிலுங்கள்
என்று அறிவுரை தந்து நிற்பவை.
ஒவ்வொரு பழமொழியும் ஒரு அருமையான
வாழ்வியல் உண்மையைச் சொல்லித் தந்து
கடந்து போகும்.

"பழமொழியில் உமி கிடையாது "
என்பார்கள்.
அதாவது எந்தப் பழமொழியும்
 பயனற்ற வெற்றுச் சொற்களால்
புனையப்பட்டது அல்ல.
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவாகவே
என்பார் தொல்காப்பியர்.
அது நூறு விழுக்காடு உண்மை
என்பதை உரக்கச் சொல்லிச் செல்வது
பழமொழிகள்.


"நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப "

என்று முதுமொழிக்கும் தனி இலக்கணம்
சொல்லித் தருகிறது
தொல்காப்பியம்.

முதுமொழி கூர்மையும் நுட்பமான உலக
நடைமுறை உண்மையும் கொண்டதாக 
இருக்கும்.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பண்பு முதுமொழிக்கு உண்டு.
குறித்த பொருள் ஒன்றனையே 
வரையறுத்து உரைக்கும் தன்மை 
முதுமொழியின்  சிறப்புகளில் ஒன்று.

எப்போதுமே அறிவுடையவர்கள் பெரிதாக
அலட்டிக் கொள்வதில்லை.
அமைதியாக காத்திருப்பர்.
பேசும் வாய்ப்பும் சூழலும் இருந்தாலொழிய
அதிகம் பேசமாட்டார்கள்.
வளவளவென்ற பேச்சினை
அறிவுடையோரிடம் காண்பது அரிது.

இப்போது அறிவுடையவர்கள்
எப்படி இருப்பர் என்பதை ஔவை 
கூறுகிறார் கேளுங்கள்.


"அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு "

என்று  அழகான
தடாகமும் துள்ளும் மீனும்
கொத்திச் செல்ல காத்திருக்கும்
கொக்குமென ஒரு காட்சியை
நம் முன் வைத்து சொல்ல வந்தக்
கருத்தை மனதில் பதியும்படி
சொல்லியிருக்கிறார் ஔவை.
தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒருவர் அடக்கமாக இருக்கிறார் 
என்பதற்காக அவரை அலட்சியமாக 
எண்ணிவிட வேண்டாம்.
நீர் பாயும் தலைமடைப் பகுதிகளில் 
கொக்குவாடி இருப்பதுபோலதான்
 இருக்கும். 
அது எதற்காக ?
எதுவரை இந்த வாட்டம் ? 

பெரிய மீன் வந்ததும் அப்படியே கொத்தி
தூக்கிச் சென்றுவிட வேண்டும் என்ற
வேட்கையில்தான் இந்த வாட்டம்.
ஐயோ...பாவம் கொக்கு என்று
நினைத்துவிட வேண்டாம்.

இப்படித்தான் அறிவுடையவர்களும் அடங்கி
அமைதியாக இருப்பர்.
அவர்களின் அமைதியைக்
குறைவாக மதிப்பீடு செய்துவிட
வேண்டாம்.
அவர்களை எளிதில் வென்று விடலாம் 
என்று சாமானியமாக எடை 
போட்டுவிடாதீர்கள்.
அவர்களுடைய அமைதிக்குப் பின்னால்
ஒரு பெரிய நோக்கம் இருக்கும்.
அதனை எளிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம் என்கிறார் ஔவை.
எவ்வளவு அருமையான உண்மை!

இப்போது பழமொழிக்கு வருவோம்.

"நிறைகுடம் தளும்பாது,
குறைகுடம் கூத்தாடும் "
என்று ஒரு பழமொழி உண்டு.


"கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
 நிறைகுடம் நீர் தளும்பல் இல்"
 
என்கிறது பழமொழி நானூறு.

கற்றவர்களின் அடக்கத்தின் பின்னால்
மறைந்திருக்கும் ஆற்றல்கள் அரைகுறை
அறிவாளிகளுக்குப் புரியாது.
அதனால் தாம் மட்டுமே அறிவாளி
என்பதுபோல தமக்குத் தாமே
புகழ்ந்து கொள்வர்.
,தான் ஒரு அறிவாளி என
எல்லோரையும் நம்ப வைக்க வேண்டும்
என்பதற்காக மெனக்கெடுவர். 
நமக்குநாமே விளம்பரம் வைத்துக்
கொள்வது குறைகுடம்
கூத்தாடுவது போன்றது.

நிறைய கற்றவர்கள் அதாவது மிகுந்த 
அறிவுடையவர்கள் அமைதியாக இருப்பர்.
எனக்கு இவ்வளவு தெரியும். நான்
இவற்றை எல்லாம் செய்திருக்கிறேன்
என்ற தற்பெருமை ஒருபோதும் இருக்காது.
அதனால்தான் நிறைகுடம் தளும்பாது 
என்று கூறுவர்.

ஒரு குடத்தில் குறைவாக நீரை ஊற்றி
தூக்கி வாருங்கள். நிறைய அலம்பி
வெளியில் சிந்தும். அது போலதான் 
கொஞ்சம் தெரிந்தால் போதும். 
எனக்கு எல்லாம் தெரியும்...எனக்கு எல்லாம்
தெரியும் என்று தம்பட்டம் அடித்துக்
கொள்ளும் கூட்டம் ஒன்று உண்டு.

அரைகுறை அறிவு எப்போதுமே ஆபத்தானது.

 நல்ல அறிவுள்ள ஒருவன் அடக்கமாக இருப்பான். 
 எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ள மாட்டான்
 என்பதற்கு புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த
 நியூட்டனை எடுத்துக்காட்டாக கூறலாம்.
 புவியின் இயக்கம் சரிவர நடைபெற,
 மேலே வீசப்படும்
 பொருள் புவியை நோக்கி ஈர்க்கப்பட,
 கோள்கள் அதனதன் பாதையில் இயங்க
 ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது  என்பதைக்
  கண்டுபிடித்து உலகுக்கு தெரிவித்த
  பெருமை நியூட்டனையே சாரும்.
      
 சர் ஐசக் நியூட்டன்  இங்கிலாந்து 
  நாட்டின் உயரிய விருதான
 சர் பட்டம் பெற்ற பெருமைமிகு 
அறிவியலாளர் ஆவார்.
அவ்வளவு உயரிய விருதுக்குத் தகுதி வாய்ந்த
 தகைமையாளர்  மனதில் தான் சாதித்து
 விட்டேன் என்ற பெருமை ஒருபோதும்
 இருந்ததில்லை.
 
 எப்போதும் எளிமையாகவே பேசுவார்.
 அவருடைய கண்டுபிடிப்புகளைப் பற்றி
 யாராவது பெருமையாக கூறினால்
 நான் ஒன்றும் பெரிதாக 
சாதித்துவிடவில்லையே என்று 
அடக்கமாகப் பதிலளிப்பார்.
  
 கடற்கரையில் விளையாடும் ஒன்றும் 
அறியாத ஒரு சிறுவனைப் போன்ற
மனநிலை உள்ளவனாகவே இப்போதும்
இருக்கிறேன்.  நான்
எப்போதும்  கற்றுக் கொள்ளும்
மனநிலையில் உள்ள சிறுவனாகத்தான்
இருக்கிறேன்.

கூழாங்கற்களையும் சிப்பிகளையும் 
எடுத்து அவற்றுள் எது சிறப்பானது 
என தேர்வு செய்யும் சாதாரண 
நிலையில்தான் 
நான் இன்றும் உள்ளேன் .

 உண்மை என்னும் பெருங்கடல் என்முன் 
விரிந்து கிடக்கிறது. 
இந்த உலகில் கண்டுபிடிக்கப்படாதவை 
எவ்வளவோ உள்ளன.
நான் கண்டுபிடித்ததைக் காட்டிலும் 
 கண்டுபிடிக்கப்பட வேண்டியவை
 எண்ணிலடங்காதவை.
 
 நான் கண்டுபிடித்தது
ஒரு சிறு துளிதான் .
நான் என்ன பெரிதாக சாதித்துவிட்டேன்
என்பார். 

ஒரு காணாமல் போன குண்டூசியைக்
கண்டுபிடித்துவிட்டாலே இரண்டு கைகளையும்
தூக்கி நான் கண்டுபித்துவிட்டேன்....
நான் கண்டுபிடித்துவிட்டேன்
என்று கத்துவோம்.இவ்வளவு பெரிய
கண்டுபிடிப்புக்குப் பின்னரும்
எவ்வளவு தன்னடக்கமான
பேச்சு  பாருங்கள்!

இதைத்தான் நிறைகுடம் தளும்பாது 
என்பார்களோ?
      
 
   

Comments

Popular Posts