மியாவாக்கி காடுகள்



மியாவாக்கி காடுகள்
             

பள்ளியில் செய்தி வாசிக்கும் நேரம்.
தான் குறித்து வைத்திருந்த நான்கைந்து
தலைப்புச் செய்திகளை கடகடவென்று
வாசித்துவிட்டு தன் இடத்தில் போய்
இருந்து கொண்டான் செய்தி வாசித்த மாணவன்.


ஆசிரியருக்குப்  பயந்து செய்தியைக்
கவனிப்பதுபோல  அனைத்து மாணவர்களும்
இருந்து  கொண்டிருந்தனர் .

எனக்கு எப்போதுமே செய்தியில் அதிக
ஈடுபாடு உண்டு.
அதனால் கவனமாக
செய்தி வாசிக்கும்போது கேட்பேன்.
இன்று செய்தி வாசித்த மாணவன்
பெரிய நகரங்களில் மியாவாக்கி காடு வளர்ப்பு 
திட்டத்தைச் செயல்படுத்த 
முதல்வர் ஒப்புதல் வழங்கினார்
என்று ஒரு செய்தியையும் வாசித்தான்.


மியாவாக்கி காடுகளாக?
புதுமையாக இருக்கிறதே!
அது என்ன மியாவாக்கி காடுகள்?

சதுப்பு நிலக் காடுகள், பசுமைமாறாக் காடுகள்,
இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள் 
படித்திருக்கிறோம்.
இந்த மியாவாக்கி காடுகளைப் பற்றி 
கேள்விப்பட்டதாக என் நினைவில் இல்லை.
ஒருவிதமான குழப்பமான மனநிலையில் 
இருந்தேன்.


"ஆசிரியரிடம் கேட்கலாமா?
வேண்டாம். இதுகூட தெரியாதா? 
இப்போ இதைத் தெரிந்து என்ன 
செய்யப்போற? காடு வளர்க்கப் போகிறாயா? என்று
திட்டிவிட்டால்....எல்லா மாணவர்கள் மத்தியிலும்
அவமானமாகிப் போகுமே....வேண்டாம்.
பேசாமல் விட்டுவிடு."
மனசாட்சி முந்தி வந்து முட்டுக்கட்டைப்
போட்டு நின்றது.

முதல் பாடவேளை எப்படியோ முக்கி முனங்கி
அடக்கிக்கொண்டு இருந்து விட்டேன்.
ஆனால் தொடர்ந்து என்னால் அப்படி
இருக்க முடியவில்லை. 
அதைப்பற்றி தெரிந்தே ஆக வேண்டும்
என்ற உந்து சக்தி ஒன்று உள்ளிருந்து
உறுத்திக்கொண்டே இருந்தது.

பெயர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக
மனதிற்குள் மந்திரம் உச்சரிப்பது போல
மியாவாக்கி காடுகள்...மியாவாக்கி
காடுகள் என்று ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை
மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.


இரண்டாவது பாடவேளைக்கான 
ஆசிரியர் வந்தார். என் நல்ல நேரம்.
சுற்றுச்சூழியலில் மரங்களின் பங்கு
என்பதைப்பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்தார்
ஆசிரியர்.

இப்போது ஏதோ ஒரு துணிவை 
வரவழைத்துக்கொண்டு "சார் "
என்று எழும்பி நின்றேன்.
"பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது
யாரும் வெளியில் போகக்கூடாது உட்கார்."
 என்ன? யாது ? என்று கேட்காமலேயே
 உட்காரச் சொன்னார் .
 
அனைத்து மாணவர்களும் கொல்லென்று
சிரிந்துவிட்டனர்.

"இல்லை சார்..".என்று என் பேச்சைத்
தொடர்ந்தேன்.

"ஏன்...அவசரமா? சரி போயிட்டு வா...."
என்று அனுமதி வழங்கினார் ஆசிரியர்.

"இல்லை சார்..."என்றேன் மறுபடியும்.

"என்ன இல்லை சார்...சொல். என்ன வேணும்?
என்றபடி என்முகத்தைப்
பார்த்தார்  ஆசிரியர்.

"மியாவாக்கி காடுகள் ...."என்றேன்.

இப்போது ஆசிரியர் என்னை 
ஏற இறக்கப் பார்த்தார்.

ஐயோ...ஏதாவது தப்பாக கேட்டுவிட்டோமோ? உள்ளுக்குள்
உதறல் எடுத்தது.

தொடர்ந்து ஆசிரியர் முகத்தைப் பார்க்கத் 
துணிவில்லாமல்  தரையைப் பார்த்தேன்.

"என்ன கேட்டாய்? 
மறுபடியும் ஒருமுறை சொல் "என்றார்
ஆசிரியர்.

"மியாவாக்கி காடுகள்  என்றால் என்ன சார்?"
ஒரு துணிவோடு கேட்டுவிட்டு ஆசிரியர்
முகத்தையே பார்த்தேன்.


"உட்கார் "என்று என்னை அமர வைத்துவிட்டு
"மியாவாக்கி காடுகள் என்றால் என்ன? 
யாருக்காவது தெரியுமா?"
என்று எங்களிடமே அதே கேள்வியைத்
கேட்டார் ஆசிரியர்.

ஆசிரியர் நம்மை எழுப்பி சொல்ல
சொல்லிவிடுவாரோ....என்ற அச்சத்தில்
அனைவரும் தலை குனிந்து உட்கார்ந்திருந்தனர்.

"யாருக்குமே தெரியாதா? 
பரவாயில்லை. கவனியுங்கள்.
நானே சொல்கிறேன் "என்றார் ஆசிரியர்.

அப்போதுதான் பல மாணவர்களுக்கு
நின்றுபோன மூச்சே வந்தது போல் இருந்தது.
நான் உட்பட...

"மியாவாக்கி காடுகள் என்றால் குறைந்த
அளவு நிலத்தில் அதிகப்படியான மரங்களை
வளர்க்கும் ஒருவகையான காடு வளர்ப்புத் திட்டம்.
ஒரு குறுகிய கால அடர் மர வளர்ப்பு திட்டம்
என்றே சொல்ல வேண்டும்"
என்றார்.

"அப்படி என்றால் எங்கேயும் மரம் வளர்க்கலாமா? "
என்றான் சிபி.

"இது பெரும்பாலும் நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டு
வரும் ஒரு திட்டம். பெரு நகரங்களில் மக்கள் தொகை
பெருகிக் கொண்டே செல்கிறது. 
இட நெருக்கடி.
அதிகப்படியான கழிவுநீர் வெளியேற்றம்.
அதனால் காற்று மாசுபட்டுப் போகிறது.
நாம் சுவாசிக்கும் காற்று நச்சுத்தன்மை
கொண்டதாக மாறிக்கொண்டிருக்கிறது.

காடுகள் குறைந்துகொண்டே வருவதால்
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவும் குறைந்து
கொண்டே வருகிறது.
நிலைமை இப்படியே சென்று கொண்டிருந்தால்
ஒருநாள் தண்ணீரை பாட்டில்களில் வாங்கி
பயன்படுத்துவது போல ஆக்ஸிஜன் பாட்டில்கள்
வாங்கி பயன்படுத்தும் சூழலுக்கு நாம்
தள்ளப்பட்டு விடுவோம்.

இதனால் காற்றில் ஆக்ஸிஜன் அளவு பெருக்க
வேண்டும். அதற்கான ஒரே வழி மரங்கள்
வளர்ப்பதுதான்." என்று விரிவான விளக்கம்
தந்தார் ஆசிரியர்.

"சார்...அதுக்கு ஏன் சார் மியாவாக்கி
என்று வாய்க்குள் நுழையாத பெயராக
வைக்க வேண்டும்.?"
என்றான் குமரகுரு.

"ஏன்...உன் பெயரை வச்சுடலாமா? "
கேட்டார் ஆசிரியர்.

"அப்துல் கலாம் என்று வைத்திருக்கலாமே?"
என்றான் ஒரு மாணவன்.

"வைத்திருக்கலாம்....
நம்ம நாட்டுக் காடுகள் என்றால் வைத்திருக்கலாம்.
இது ஜப்பானியர்களின் காடு வளர்ப்பு முறையாயிற்றே..."

"ஜப்பானியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் தான்
முன்னோடிகள் என்றால் காடு வளர்ப்பிலும்
நம்மை முந்திக் கொண்டார்கள் இல்லையா சார்?"
என்றான் சிபி.

"ஆமாம். ஜப்பானைச் சேர்ந்த  தாவரவியலாளர்
அகிரா மியாவாக்கி என்பவர் கண்டுபிடித்த 
மரம் வளர்ப்பு முறை இது என்பதால்
இத்தகைய முறையில் வளர்க்கப்படும் காடுகள்
மியாவாக்கி காடுகள் என்று அழைக்கப்படுகின்றன"
என்றார் ஆசிரியர்.


"மியாவாக்கியைப் பற்றி வேறு ஏதாவது 
சந்தேகம் இருக்கிறதா....?
இருந்தால் தயங்காமல் கேட்கலாம் "என்றார்
ஆசிரியர்.

"குறைந்த இடத்தில் அதிக மரங்கள் வளர்த்தால்
எப்படி சார் கிளைகள் வளரும்? "என்று கேட்டாள்
சுமதி.

"கிளைகள் பக்கவாட்டில் வளர்வதற்கு
இடமில்லாமல் தாமும் சூரிய வெளிச்சத்தில் இருந்து
உணவு தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில்
எங்கு இடம்கிடைக்கிறதோ அந்த இடம் வழியாக
தங்கள் கிளைகளை உயரமாக வளரச் செய்யும்.
அதனால்தான் அடர்காடுகளில் உள்ள மரங்கள்
பக்கவாட்டில் வளராமல் உயரமாக வளர்கின்றன."
என்று மரங்கள் உயரமாக வளர்வதற்கான
காரணத்தை விளக்கினார் ஆசிரியர்.


"இனி நகரத்திலும் பறவைகளைக் பார்க்கலாம்
இல்லையா சார் ?"என்றான் 
பறவை ஆர்வலனான குமார்.

"ஓ... தாராளமாக...
பறவைகளுக்கான வசிப்பிடங்களை
நாம் அபகரித்துக் கொண்டால் அவை
எங்கே கூடுகட்டி வாழும்?
பல்லுயிர் பெருக்கம் எப்படி
நடைபெறும் ?


உயரும் வெப்பநிலை குறைய வேண்டும்.
மழைப்பொழிவு மிகுதியாக இருக்க வேண்டும்.
நிலத்தடிநீர் மட்டம் உயர வேண்டும்.
காற்றில் ஆக்ஸிஜன் அளவு கூட வேண்டும்
இவை யாவற்றையும் மனதில் கொண்டு
உருவாக்கப்படுவது தான் இவ்வகையான
காடுகள்." என்று மறுபடியும் தெரிவாக 
புரிய வைத்தார் ஆசிரியர்.

"நன்றி சார். "
 என்றேன் நான்.

"மரம் வளர்ப்போம் 
வளம் சேர்ப்போம்"
என்பது பழைய மொழி.
மியாவாக்கி காடுகளை வளர்ப்போம்
உயிர்களைக் காப்போம் "
என்பது புது மொழி .
என்று உரக்கக் குரல் கொடுத்தான் மதியழகன்.

"யாரு இந்தப் புதுக்கவிஞன் ?"
என்றார் ஆசிரியர்.

நாணிக்கோணி எழும்பி நின்றான்
மதியழகன்.

"மதியழகனுக்கு ஒரு கைத்தட்டல்
கொடுங்கள் .அருமை...அருமை"
பாராட்டினார் ஆசிரியர் .

அனைவரின் கரவொலியோடு
அடுத்தப் பாடவேளைக்கான மணியொலியும்
சேர்ந்து கொண்டது.

மியாவாக்கி காடுகள்
பற்றிய சிந்தனையோடு இரண்டாம்
பாடவேளை இனிதே முடிந்தது.

இன்றைய செய்தி எங்களுக்கு மிகுந்த
பயனுள்ளதாக இருந்தது.

உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருந்தால்
மறவாமல் தகவல் அனுப்புங்கள்.


நாளை இன்னொரு செய்தியுடன் வருகிறேன்.

வரட்டா.....











Comments

  1. புதுமையான செய்தியை பதிவிட்டு செய்தி சொல்லும் களத்தை மேலும் வலுவூட்டியது மிக அருமை.

    ReplyDelete
  2. Creative topic news, interestingly explained by the teacher added comments to this writing.

    ReplyDelete

Post a Comment

Popular Posts