அறனோக்கி ஆற்றுங்கொல் வையம்....
அறனோக்கி ஆற்றுங்கொல் வையம்.....
"அறனோக்கி ஆற்றுங்கொல் வையம் புறனோக்கி
புன்சொல் உரைப்பான் பொறை"
குறள் : 189
அறம்- நல்வினை
நோக்கி - கருதி
ஆற்றுங்கொல் - தாங்குகிறதோ
வையம் -உலகம்
புறன் - புறத்தே
நோக்கி - பார்த்து
புன்சொல்- இழிவான பேச்சு
உரைப்பான் - சொல்லுபவன்
பொறை -தாங்குதல்,சுமத்தல்
ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி
இழிவாகப் பேசுபவனை இந்த நிலமானது
தாங்கிக் கொள்வது என்பது
இவனையும் சுமப்பது எனக்கு அறம்
என்று கருதியோ?
விளக்கம் :
முன்னொன்று பேசி புறமொன்று பேசும்
இழிவான செயல் சிலரிடம் இருக்கும்.
அதனை அவர்கள் தவறாகக் கருதுவதே இல்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய இழிவானச் செயல்
என்பதை இந்தக் குறள் கூறுகிறது பாருங்கள்.
ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி
அவதூறாகப் பேசுதல் இழிவு.
அறத்திற்குப் புறம்பான செயல்.
இப்படி ஒருவன் அறத்திற்குப்
புறம்பான செயலைச்
செய்கிறான். அவனையும் இந்த
உலகம் தாங்கிக் கொள்கிறது என்றால்
அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
சற்று சிந்திக்க வேண்டிய செயல்தான்.
இந்தப் பூமியானது அகழ்வாரையும்
தாங்கும் பொறுமை கொண்டது.
அந்த அறம் தான் நிலமானது புறங்கூறும்
இழிச்செயலைச் செய்வோரையும்
தாங்கி நிற்கச் செய்கிறதோ?
கோள் சொல்லுதல் அதாவது புறங்கூறுதல்
இழிச்செயல். கொடுஞ்செயல்.
இந்த இழிச்செயல் செய்பவரையும்
அறம் என்று நினைத்து நிலம் தாங்கிக்
கொண்டிருக்கிறது.
இவன் பூமிக்கு வெறும் பாரமாகத்தான்
இருக்கிறான். வேறென்ன நன்மை
இவனால் பூமிக்கு நிகழ்ந்துவிடப் போகிறது.?
புறங்கூறும் பாதகச்செயல் புரிபவனின்
உடல் பாரத்தையும் பூமி
பொறுத்துக் கொண்டு சுமந்து நிற்பது
அறம் கருதியதால் அன்றி வேறென்னவாக
இருக்கமுடியும்?
என்று வினா எழுப்புகிறார் வள்ளுவர்.
எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளுதல்
நிலத்தின் இயல்பு.
அந்த அறப்பண்புதான் புறங்கூறுபவனையும்
சுமக்க வைத்துக்கொண்டிருக்கிறது போலும்
என்ற ஐயத்தை எழுப்பி நிற்கிறது இந்தக் குறள்.
English couplet :
" 'Tis charity I ween, that makes the earth sustain their load
Who neighbours absence watching tales slender tell aboard"
Explanation :
The world through charity supports the weight of those
who reproach others observing their absence.
Transliteration :
"Arannokki aatrungol vaiyam purannokkip
Punsol uraippaan porai"
Comments
Post a Comment