சொல்லத் துடித்த கண்கள்

 சொல்லத் துடித்த கண்கள் 


அதே கண்கள்.
கடந்த ஒரு வார காலமாக
என் தூக்கத்தைக் கெடுத்த
அதே கண்கள்.
இதைத்தானே கடந்த ஒரு
வாரகாலமாக நான் தேடிக் கொண்டிருந்தேன்.
இவ்வளவு சீக்கிரமாக பார்க்க
நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை.
பார்த்த அந்தக் கணத்தில் தடுமாறிப்
போனேன்.தலைகுப்புற 
விழுந்தது போல் இருந்தது.
 முன்னும் பின்னுமாக
 கால்கள்  பின்ன ஆரம்பித்தன.

அதற்குமேல் என்னால் நடக்க முடியவில்லை.
ஏன் இந்தத் தடுமாற்றம்?
 அந்தக் கண்கள் என்னோடு
 அப்படி என்னதான்  பேசியன?

நெஞ்சுக்குழிக்குள் ஏதோ ஒன்று
உருளுவது போல இருந்தது.

மறுபடியும் மறுபடியும் 
பார்க்க வேண்டும். என்ன பேச
நினைக்கிறாய்?
என்று கேட்க வேண்டும்.

அவள் கண்களில் தெரிந்த கெஞ்சல்.
ஏதோ சொல்ல நினைத்த துடிப்பு .

என்னைச் சுற்றிச் சுற்றி
சூறாவளியாய் சுழற்றி 
சுழற்றி அடித்தது.

ஒரு ஐந்து வினாடி பார்வை.
 அந்தக் கண்களுக்குள்
இருந்த ஏதோ ஒன்று
என்னை அதற்கு மேல் போகவிடாமல்
கட்டிப் போட்டுவிட்டது.
கண நேரக்
காட்சி வந்து வந்து கண்ணாமூச்சி காட்டி மறைந்து போனது ஏன் ?

மறுபடியும் அந்தக் கண்களைக்
காண மாட்டோமா என்ற ஏக்கம்.
துடியாய்த் துடித்துக்
கொண்டிருந்தேன்.

நேருக்கு நேராக  பார்க்க வேண்டும்..
நின்று பேச வேண்டும்  என
மனம் தவித்தாலும் என்னால்
அதற்கு மேல் அங்கு
நிற்க முடியவில்லை.
யாரும் பார்த்துவிட்டால்...
அதற்குமேல் வேறு
வினையே வேண்டாம்.
அங்கேயும் இங்கேயும்
பார்த்தேன்.
நல்ல வேளை யாரும் 
பார்க்கமில்லை..

உடம்பெல்லாம் வியர்த்துக் கொண்டு
வந்தது.
என்னது இது?...இப்படி வியர்த்துக்
கொண்டு வருகிறது.
நான் என்ன தப்பு பண்ணினேன்?
எனக்குள் ஏன் இந்த கலக்கமும்
நடுக்கமும்.
சொல்லத் தெரியவில்லை.
எப்படியோ சமாளித்துக் கொண்டு
அந்த இடத்தைவிட்டு கடந்து  வந்துவிட்டேன்.

கடந்து வந்துவிட்டேனே தவிர
நினைவுகளை அங்கேயே விட்டுவிட்டு வர முடியவில்லை.அந்தக் கண்களை 
கையோடு கொண்டு வந்துவிட்டேன்.

அப்படி எனக்கும் அவளுக்கும் 
என்ன பூர்வ ஜென்ம
பந்தம்?

கல்லூரி செல்லும் வழியில்
எதேச்சையாக நடந்த சந்திப்பு.
 ஒரு வழியாக கல்லூரிக்கு வந்து
 சேர்ந்துவிட்டேன்.
 
  ஒரு பாட வேளைகூட என்னால் பாடம் 
 கவனிக்க முடியவில்லை.
 ஒரு வாரகால தவம். இதற்காகத்
 தானே காத்திருந்தாய்...

 கிடைத்த சந்தர்ப்பத்தை
 தவற விட்டு விட்டேனோ?
 பேசியிருக்கலாமே...
 கண்ணாலாவது எதுவும்
 கேட்டிருக்கலாமே....
 முட்டாள்தனமாக நடந்து கொண்டு
 விட்டேனோ? 
போகட்டும். மறுபடியும் கண்ணில் படாமலா போய்விடும் போகிறாள்?
  என்று சாதாரணமாக விட்டுவிட 
 முடியவில்லை.
மாலை வரை காத்திருக்க
வேண்டுமே...

காத்திருத்தலின் வலியை
 முதன்முதலாக
 உணர ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு நொடியும் என்னைத்
தின்று கொண்டிருந்தது.
கொன்று கொண்டிருந்தது.

 சாதாரணமாக வயிற்றுக்குள்தான்
 பிரட்டல் ஏற்படும்.
 தலைக்குள் ஏதோ ஒன்று
 பிரண்டு கொண்டு,
கீழே குப்புற தள்ளி விடுவது போல
இருந்தது.

எப்படியோ மூன்று பாட வேளையை
இதே மனநிலையோடு 
சமாளித்தாயிற்று.
  
 மதிய இடைவேளை. சாப்பிட 
 வந்து அமர்ந்தேன்.
 கைகள் சாப்பாட்டைப் பிசைந்தன.
 நினைவுகள் அந்தக் கண்களைச்
 சுற்றிச் சுற்றியே வந்தன.

" என்ன ஆளு ஒரு மாதிரி
 பையறைந்தது மாதிரி முழிக்குது"
 கிண்டல் ஒலி வந்து என்னை 
 கவனத்தைத் திசை
 திருப்பியது.
 
" ஒன்றுமில்லப்பா...சும்மாதான்
  வயிற்றுக்குச் சரியில்லை.அதனால்
 சாப்பிடணும் என்று தோணலை "என்று
 ஒரு பொய்யைச் சொல்லி வைத்தேன்.

" ஏன்...வீட்டில் ஏதாவது பிரச்சினையா?"

இவர்களிடம் எப்படிச் சொல்வது?
"அதெல்லாம் ஒன்றுமில்லை."
ஒப்புக்குச் சொல்லிவிட்டு,என்னை
தனிமையில் விடுறீங்களா என்று 
கத்த வேண்டும் போல் இருந்தது.

"வேறு ஏதாவது குடிக்கிறியா?"

மறுபடியும் கேள்வி.
"வேண்டாம்" ஒற்றை வார்த்தையில்
பதில் சொல்லி ஒதுங்கிக் கொள்ள நினைத்தேன். அவர்கள் விடுவதாக இல்லை.
  
 "காலையில் என்ன சாப்பிட்டா?"
 கரிசனம் கையைப் பிடித்து 
இழுத்தது.

 " ஒன்றுமில்லை..."
 ஒட்டாமல் பதில் சொன்னேன்.
 
" வெறும் வயிற்றோடாவா வந்தா?...
 வயிற்றுக்குள் ஒன்றும் இல்லை என்றால்
 வயிறு  பிரட்டத்தான்
 செய்யும்.
 ஏதாவது நாலு வாய் தின்னு"
வலிந்து வந்து பேசி நின்றது சற்று
எரிச்சலூட்டினாலும் நிலைமையைப் புரிந்துகொண்டு சமாளித்தேன்.
 
இன்னும் சாப்பிடவில்லை என்றால்
 ஊட்டிவிட்டு விடுவார்களோ என்ற
 பயம்.
படபடவென்று நாலு வாய் 
அள்ளிப் போட்டுவிட்டு
 போதும் என்று எழும்பிவிட்டேன்.
 
" என்ன ஆளு ஒருமாதிரி இருக்கு?
 வேறு ஏதும் என்றால் சொல்லுப்பா...
 வீட்டுக்குப் போகலாமா? வா....
 எனக்கு என்னவோ உனக்கு
 உடம்பு சரியில்லாதது போல்தான் 
 இருக்கிறது" என்றாள் லீலாவதி.
 
தலை வலிப்பது போல இருக்கிறது என்று
 ஒரு பொய்யைச் மறைக்க ஒன்பது
 பொய்யைச் அடுக்கிக் கொண்டே போனேன்.
 தலைவலி மாத்திரையையும் 
 தண்ணீரையும் ஒரு கை நீட்டியது.
 
 இப்போது என்னால் மறுக்க முடியவில்லை.
 மறுத்தால் மறுபடியும் மோகினிப்பிசாசு
 அது இது  என்று கிண்டலடித்து 
 விடுவார்களோ என்று ஒரு அச்சம்.
 
ஒன்றும் சொல்லாமல்
 மாத்திரையை விழுங்கிக்
 கொண்டேன்.

சற்றுநேரத்தில் வகுப்பிற்குள்
சென்றோம்.

நல்லவேளை" ஆசிரியர் வரவில்லை.
பிரீ பீரியட் "என்று பியூன் வந்து
சொல்லி விட்டுப் போனார்.

எனக்கு உடனே வீட்டுக்குப் போக வேண்டும்
போல் இருந்தது. 
ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையம் வந்தால் உனக்காகவே காத்திருக்கிறேன் என்பதுபோல எங்கள் ஊர் பேருந்து
உறுமிக் கொண்டு நின்றது.

ஒருவழியாக பேருந்தைப் பிடித்து
ஊர் வந்து சேர்ந்தேன்.

அந்த வீட்டுப் பக்கம் வந்ததும் 
கண்கள் அந்தக் கண்களைத் தேடி 
ஆலாய்ப் பறந்தன.

வாசலைப் பார்த்தேன்.
வாசலில் அவளது பாட்டி
நந்தி போல் நின்று கொண்டிருந்தார்.

நான் பார்ப்பதைப் பார்ப்பதும்
"கண்ணுல கொள்ளிக் கட்டைய
வைக்க....ஊரு கண்ணுதான்
பட்டுச்சோ....உலகக் கண்ணுதான்
பட்டுச்சோ....இப்படி நம்ம வீட்டுக்குன்னு
வந்து விடிஞ்சுருக்கே" என்று
ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்.

விருட்டென்று பார்த்தும்
பார்க்காததுபோல் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அம்மாவிடம் கேட்டுவிடலாமா?

...உனக்கு என்ன அவ்வளவு
அக்கறை என்று கேட்டுவிட்டால்...?

மெதுவாக தங்கை நந்தினியின்
போனேன்!

"அந்த முக்கு வீட்டுல..".என்று
தொடங்குமுன்னே...

"முக்கு வீட்டுக் கதை 
நமக்கு எதுக்கு? பேசாம
உன் கதையைப் பார்த்துட்டுப்போ....
அம்மா கேட்டாங்கன்னா
படிக்கச் போறீயளா....
ஊர் சுத்தப் போறீயளா 
என்று ஆடிபிடுவாவ பாத்துக்க"
என்று சொல்லி என் 
வாயைக்குப் பூட்டு
போட்டுவிட்டாள்.

எனக்கு மண்டையைப் பிய்த்துக்
கொள்ளணும் போல் இருந்தது.
ஏன் இவர்கள் எல்லாம் இப்படி
இருக்கிறார்கள்?....
என் வீட்டிலும் இப்படியா?

எல்லாரும் சுயநலக்காரர்கள்தான்.

என்னால் அப்படி சும்மா இருக்க 
முடியவில்லை.

மறுபடியும் அந்தக் கண்களைப் பார்த்துப்
பேச வேண்டும் ?

ஏன் இப்படிச் செய்தாய்?
ஏன் இப்படிச் செய்தாய்? 
என்று கேட்க வேண்டும்?
கேட்டு அழ வேண்டும் 
போல் இருந்தது.

ஆனால் எப்படிப் பார்ப்பது?
இனி அவள் எப்படி வெளியில்
வருவாள்?

பாவிகள் என்ன நடந்தது..
என்று படிப்பை நிறுத்தி இப்படிச் செய்தீர்கள்?
காலையில் பூத்தப் பூவை
மாலை வரைகூட மலர்ந்திருக்க 
விடாமல் கசக்கிக் போட்டது யார்?
இப்படி கேள்வி கேட்கும் இடத்தில்
நானில்லை.

ஒன்றுமே புரியவில்லை....
அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம்
மறுபடியும் அந்தக் கண்கள் என்னோடு
பேசாதா என்ற ஏக்கம் இருந்தது?

ஆனால்..ஒருவாரமாக என் கண்களில்
படாமல் கண்ணாமூச்சி காட்டினாள் அவள்.

இன்று....கதவிடுக்கில் அதே கண்கள்.

கதவு சற்று அதிகமாகவே விலகியிருந்தது.

ஓரளவுக்கு அவளை என்னால் பார்க்க
முடிந்தது...
இன்று கேட்டேவிட வேண்டும்...
ஒரு துணிச்சலோடு கால்கள்
அவள் வீட்டை நோக்கி நடந்தன.

வீட்டில் ஒருவரும் இல்லை
என்று நினைக்கிறேன். நான் வருவதைப்
பார்த்ததும் கதவை முழுவதுமாகத் திறந்து
வாசலில் வந்து நின்றாள்.

மெதுவாகப் புன்னகைத்தேன்.

பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகையில் ஏதோ 
ஒரு சோகம் இருந்தது.

ஏன் என்னைக் கண்டதும் மறைந்து
கொள்கிறாய்...?
என்று கேட்க  நினைத்தேன்.

ஆனால்....அவள் கண்களில் 
இருந்த ஏதோ ஒன்று
அதைக் கேட்கவிடாமல் தடுத்தது...

ஏதாவது பேசுவாள் என்று 
இரண்டு நிமிடம் அவள் 
முகத்தையே பார்த்துக்
கொண்டு நின்றேன்.

அவள் கண்களால் இப்போது
கண்ணீரை மட்டுமே பதிலாகத்
தர முடிந்தது.

ஏன் அழுகிறாய் என்று கண்ணீரைத்
துடைத்துவிட ஆசை....

அதற்குள் மெதுவாக சேலையால் கண்ணீரைத் 
துடைத்துக் கொண்டாள்.

அப்போது சேலை சற்று விலகி கழுத்தில்
கிடந்த மஞ்சள் கயிறு வெளியில்
தெரிந்தது. 

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

திருமணம் செய்து கொண்டாளா?
ஏனிந்த அவசரம்...காணாமல் போன ஒரு வார காலத்திற்குள் என்ன நடந்தது?

ஒரு கணம்.....இதற்காகவா இத்தனை தவம்!
அப்படியே அதிர்ந்து போய் நின்றேன்.

ஏன் இப்படிச் செய்தாய்?

தோளைப் பிடித்து உலுக்கிக் கேட்க
வேண்டும்போல் இருந்தது.

என்ன கோலம் இது?
அவசரப்பட்டுவிட்டாயே....தமிழ்
உள்ளுக்குள் ஒப்பாரி வைத்தேன்.
வார்த்தைகள் வெளிவர மறுத்தன.

கடைசியாக....
யாரவன்...கேட்டுவிட நினைத்தேன்.

ப்ளீஸ் கெஞ்சியது...அதே கண்கள்.

அவளுக்கு என்ன நடந்தது?
ஏனிந்த அவசரக் கோலம்?

சொல்லத் துடித்த கண்களுக்குத்
தடையிட்டு முன்னால் 
வந்து நின்றது ஓர் உருவம்.
உடனே திரும்பி வீட்டிற்குள்
சென்று மறைந்து போனாள். 

எனக்குப்  புரியாப் புதிராக நிற்கிறாள்
என் தமிழ்.
என் தமிழின் கண்கள் மறுபடியும் 
என்னோடு பேசுமா?
கழுத்தில் விழுந்த முடிச்சுக்கான காரணம்
அவிழுமா?
 காத்திருக்கிறேன்.















 
 




Comments

Popular Posts