தவறவிட்ட தருணங்கள்

தவறவிட்ட தருணங்கள்

மழை பெய்ததும் கலப்பையை எடுத்துச் 
செல்லாத உழவன்....

படிக்கும் காலத்தில் புத்தகத்தை மூடி
வைத்துக் கொண்டு தூங்கும் மாணவன்...

வேலையின்போது சிரத்தை எடுத்துக்
கொள்ளாத ஊழியக்காரன்....

இளமையில் சின்னச்சின்ன குறும்புகளைச்
செய்யத் தவறிய இளைஞன்...

உடலும் உள்ளமும் உறுதியாக
இருக்கும்போது உழைக்கத் தவறிய
மனிதர்கள்....

பணம் புரளும் போது சேமிக்கத்
தவறிய மனிதர்கள்....

உயர் பதவி இருந்தும் உதவி செய்யத்
தவறிய அதிகாரிகள்...

இவர்கள் எல்லாம் கிடைத்த நல்ல தருணத்தைத்
தவற விட்டவர்கள்.
 
 இவர்கள் மட்டுமல்ல...
இன்னும் எத்தனையோ பேர் தமக்குக்
கிடைத்த நல்ல கருத்தைத்
தவறவிட்டிருப்பர்.
 
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் 
ஏதோ ஒன்றைத் தவறவிட்ட தருணம்
கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும்.

அதை நினைத்து நினைத்து
 வருந்தியிருப்போம்.

எல்லாவற்றையும் இழந்தது போன்ற
விரக்தியில் இருந்திருப்போம்.

இனி எனக்கு நல்லதே நடக்காதா
அப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் வாய்க்காதா என
எண்ணி எண்ணி வெதும்பியிருப்போம்.

இளமையில் காதலைச் சொல்ல முடியாமல்
தவறவிட்டுவிட்டு 
இன்றுவரை தவித்துக் கொண்டிருப்பவர்கள்
நிறையபேர் இருப்பர்.
அதற்கான தருணம் வாய்த்திருக்கும்.
இருப்பினும் ஏதோ ஒரு பயம்....ஒருதயக்கம்
உங்கள் காதலைச் சொல்ல விடாமல் 
தடுத்திருக்கும்.
அதனால் உங்கள் காதல் நிறைவேறாமலேயே
நிராசையாய் நின்று போயிருக்கலாம்.

தேர்வுக்குச் சரியாகப் படிக்காமல்
தேர்வு முடிவுகள் வந்ததும் ஐயையோ...இன்னும்
கொஞ்சம் நன்றாகப் படித்திருக்கலாமோ
நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கலாமே...
என்று புலம்பிய தருணங்கள் இல்லாதவர்
ஒருசிலரே இருக்க முடியும்.

நேர்முகத் தேர்வின்போது கேட்கப்பட்ட
கேள்விகளுக்குச் சரியான பதில்
 சொல்லமுடியாமல்
வேலை வாய்ப்பைத் தவறவிட்டிருப்போம்.
வெளியில் வந்த பின்னர்தான் ஆஹா...
இந்தப் பதில்தான் எனக்குத் தெரியுமே...
கொஞ்சம் யோசித்திருக்கலாமோ...
அவசரப்பட்டு தெரியாது என்று சொல்லி
நல்ல தருணத்தை தவற விட்டுவிட்டோமே...பதில்
இப்போது நினைவுக்கு வருகிறது...
நான் ஒரு மடையன் என்று
நமது மண்டையிலேயே குட்டிக்கொண்டு
நம் தவறை நாமே ஒத்துக் கொண்டு
புலம்பியிருக்கலாம்.

நல்ல மழை பெய்திருக்கும்.
விதைகள் தயாராக இருந்திருக்காது.
விதைகள் இருந்தாலும் உழவுக்குக்
கொடுக்க போதுமான பணம் கையிருப்பில்
இருந்திருக்காது.
இவை இரண்டும் கையில் இருந்தாலும்
சரியான பருவத்தில் நாற்று நட
ஆட்கள் கிடைக்காத நிலை. அதனால்
பருவம் தப்பி விவசாயம் செய்து
நல்ல பருவத்தை விட்டுவிட்டோமே 
என்று பக்கத்து வயலைப் 
பார்த்து பார்த்து கண்ணீர்
வெம்பியிருக்கலாம்.

இப்படி எல்லோருடைய வாழ்விலும் ஏதோ
ஒன்றைத் தவற விட்டுவிட்ட நிகழ்வு
நடந்திருக்கலாம்.....நடந்திருக்கும்.

இப்படிப்பட்ட தருணங்கள் என் வாழ்வில்
நிகழவே இல்லை என்று யாரும் 
நிஜத்தை மறைத்து முகமூடி போட்டுக்கொண்டு
அலைய முடியாது.
நீங்கள் மறைத்தாலும் உங்கள்
மனசாட்சி உங்களோடு பேசும்.

இப்போதே அதன் நினைவுகள் உங்களை
அந்த காலத்திற்கு இழுத்துச் செல்லும்.
சில நினைவுகள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
தவற விட்டு விட்டோமே என்ற எண்ணம்
வரும்போது மட்டும் மனது வலிப்பது இயல்புதான்.
ஆனால் சில நினைவுகள் 
காயத்தை  ஏற்படுத்தி இன்றுவரை
புலம்ப வைத்திருக்கலாம்.

எல்லோருக்கும் எல்லாம் தாம் விரும்பியபடி
கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

ஆமாங்க...ஏதோ ஒன்றை நினைத்தேன். 
ஆனால் நடந்தது வேறு என்ற விரக்தி
பலருக்கு உண்டு.
 கால வெள்ளத்தில் 
என்னென்னவெல்லாமோ காணாமல்
போய்விடுகிறது. இந்த நினைவுகள் மட்டும்
முழுதாக துடைத்துப் போட முடியாதபடி
கூடவே நகர்ந்து வருகிறது.

அதைக் கூடவே கட்டிக்கொண்டு
நகர்வதால் யாருக்கு லாபம்?
கூடுதல் சுமை தான்.....
மனக்கவலைதான் கூடும்.

அதனை அப்படியே ஓர் இடத்தில்
இறக்கி வைத்துவிட்டு
நகர்ந்து விடுவதுதான் புத்திசாலித்தனம்.
ஐயையோ போச்சே...போச்சே என்று
புலம்பிக் கொண்டிருந்தால் இருப்பதையும்
தவறவிட்டு விடுவோம்.

இது நமக்கு மட்டும் நிகழ்ந்துவிடவில்லை.
நம்மைப் போன்று எத்தனையோ லட்சம் பேர் 
நல்ல தருணங்களைத் தவற விட்டவர்கள்தான்
என்ற உண்மையை மனதில் பதிய வைத்துக்
கொண்டாலே போதும்.

தவற விட்ட தருணம் ஒரு நினைவாக
இருந்துவிட்டுப் போகட்டும் தப்பே இல்லை.
அதை ஒரு சுமையாக சுமந்துகொண்டு
அலைவோமானால் வாழ்க்கை முழுவதும்
நிம்மதி இருக்காது.

நிலவில் காலடி வைத்த முதல் மனிதன்
யார் என்ற கேள்வி கேட்டதும்
நீல் ஆம்ஸ்ட்ராங் என்று பட்டென்று
சொல்லிவிடுவோம்.
அவர் முதன்முதலாக நிலவில் காலடி வைத்ததில்
ஒரு சுவாரசியமான கதை உள்ளது.
 ஆம்ஸ்ட்ராங் இணை விமானியாகத்தான்
விண்வெளிக்குச் சென்றாராம்.
தலைமை விமானியாகச் சென்றவர்
எட்வின் கால்வின் என்பவர்.

விண்வெளிக்குச் செல்லும்போது 
முதன்முதலாக தலைமை விமானிதான்
நிலவில் கால் வைக்க வேண்டும் என்று 
அறிவுறுத்தப்பட்டிருந்ததாம்.

அதன்படி விண் ஓடத்திலிருந்து இறங்குவதற்காக
பூமியிலிருந்து பைலட் பஸ்ட் என்ற அறிவிப்பு 
அனுப்பப்பட்டிருக்கிறது.
.அதன்படி எட்வின் கால்வின்தான் முதலில்
நிலவில் இறங்க வேண்டும்.

ஆனால் அவருக்குள் ஏதோ ஒரு தயக்கம்.
நிலவில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம்.
அப்படியே புவி தன்னை
கீழை இழுத்துக்கொண்டுவிட்டால்....
புதை மணல் இருந்து மணலுக்குள் 
புதைந்து போய்விட்டால்....
வெப்பமாக இருந்து வெந்து போய்விட்டால்...
இப்படி பல்வேறு சிந்தனைகள் வந்து
அவரை உடனடியாக செயலாற்ற
அனுமதிக்கவில்லை....
அதனால் எழுந்த அச்சத்தால் ....
தடுமாற்றத்தால்...சற்று தயங்கி
நின்றுவிட்டார்.

அதற்குள் இணை விமானி இறங்கும்படி 
இரண்டாவது தகவல்
அனுப்ப்பட்டது. 
இணை விமானியாகச் சென்ற ஆம்ஸ்ட்ராங்
எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.
அவருக்காக கொடுக்கப்பட்ட நேரத்தைச்
சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
யோசிக்காமல் நிலவில் தன்
காலடி எடுத்து வைத்து வரலாற்றைத்
தன்பக்கமாகத் திருப்பி எழுதிவிட்டார்.

நிலவில் காலடி பதித்த முதல் மனிதன் என்று
உலக வரலாற்றில் தனக்கான நிரந்தர 
இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

எட்வின் கால்வின் தனக்கு கொடுக்கப்பட்ட
நல்ல தருணத்தை தவற விட்டுவிட்டார்.
கிடைத்த நல்ல தருணத்தைத் தவற 
விட்டுவிட்டோமே என்று எத்தனையோ முறை 
எண்ணி எண்ணி வருந்தியிருப்பார்.
தனது பிரயாசம் எல்லாம் ஒரு சின்ன
தடுமாற்றத்தால் தலைகீழாக மாறிவிட்டதே....
எண்ணி எண்ணி மனம் வெதும்பியிருப்பார்.
காலம் தவறிய பின்னர் புலம்புவதில்
என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது.?

எல்லாப் பருவத்தினரிடையேயும் 
இப்படி தவற விட்ட தருணங்கள் கண்டிப்பாக
நடைபெற்றிருக்கும்.

ஆண்டாண்டு அழுது புரண்டாலும் 
மாண்டவர் திரும்ப வருவதில்லை. அதுபோல
தவற விட்ட தருணங்களும் மறுபடியும் 
 நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் மறுபடியும்
மறுபடியும் நமக்கு வாய்க்காது. 
கிடைத்தபோதே அதனைச்
சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் 
புத்திசாலிகள்.

ஆனால் எல்லாராலும் இது சாத்தியப்படாது.
காரணம் அந்த நேரத்தில் இருக்கும் மனநிலை,
முதிர்ச்சியின்மை ,
சிக்கல்களைக் கையாளும் திறன் இல்லாமை ,
பொருளாதாரச் சிக்கல்கள், கைதூக்கிவிட
சரியான ஆள் இல்லாமை என்று பல காரணங்கள்
நம்மை சரியானப் பாதையைத்
தேர்ந்தெடுக்கவிடாமல் தடுத்திருக்கும்.
செயல்படவிடாமல் முடக்கிப் போட்டிருக்கும்.

இன்று நினைத்தாலும் நல்ல வாய்ப்பை
நழுவ விட்டிருக்கின்றோமே என்று தோன்றும்.
பெரும்பாலான வாய்ப்புகள் கைவிட்டுப் போவதற்குக்
காரணம் துணிச்சல் இல்லாமையாககூட
இருக்கலாம்.

முதிர்ச்சி இல்லாத காலத்தில எதைத் தேர்வு
செய்வது என்று பக்குவம் இல்லாமல் தவறு நிகழ்வது
இயல்பு.
அதில் கிடைத்த பாடத்தை எடுத்துக்கொண்டு
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட வேண்டும்.
அதுதான் புத்திசாலித்தனம்.
அதிலேயே நின்றுவிடுவோமானால் ஒருகட்டத்தில்
மனநிலை பாதிக்கப்பட்டுவிடும்.

கடலில் தூக்கிப் போடப்பட்டவன் கட்டுமரம்
வரும் தன்னைக் காப்பாற்ற என்று நினைத்தால்
கடலில் மூழ்கி சாக வேண்டியதுதான்.
கையில் சிறு கட்டை அகப்பட்டாலும் அதனைப்
பிடித்து வெளியில் வர முயல்பவன்தான்
புத்திசாலி.

அந்தத் தருணத்தில் நமக்கு எது வாய்ப்பாக
அமைகிறதோ அதனைப் பயன்படுத்தத்
தெரிந்திருக்க வேண்டும்.

களத்தில் இறங்கி விளையாடும் அனைவருக்கும்
வெற்றிக் கோப்பை கிடைப்பதில்லை.
வெற்றிக் கோப்பையை மயிலிழையில்
தவறவிட்டவர் பலர் உண்டு.
இழந்த பின்னர் அப்படி செய்திருக்கலாமோ ....
இப்படி செய்திருக்கலாமோ ...என்று நம்மைப் போன்று
புலம்பியிருப்பர்.
மறுபடி கிடைக்கும் சந்தர்ப்பத்தைத் தனக்குச்
சாதகமாக்கி கோப்பையைத் தனதாக்கிக்
கொள்வதில்லையா?

கிடைத்த தருணங்களைத் தவறவிட்டுவிட்டோமே
என்று முதற்படியிலேயே நின்று 
முனங்கிக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை.

தவறவிட்ட தருணங்களை நினைத்து
தடுமாறுவதிலும் பயனில்லை.

பேருந்தைத் தவற விட்டுவிட்டோம்.
அடுத்தப் பேருந்தைப் பிடித்துக் கொண்டு
நாம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குச்
செல்லவில்லையா?

அதுபோன்றுதான் தவற விட்ட தருணங்களையே 
எண்ணிப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

நாம் செல்லவேண்டிய இலக்கை அடைய
கிடைத்த வாய்ப்பைச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

வாய்ப்பு மற்றொரு வடிவில் இன்னொருமுறை
நம்முன் வராமலா போய்விடும்?




Comments

Popular Posts