உப்புக்கும் புளிக்கும் பாடலா?

உப்புக்கும் புளிக்கும் பாடலா


கூழுக்குப் பாடியவரைத் தெரியும்.

உப்புக்கும் புளிக்கும் பாடியவரைத் தெரியுமா?

உப்புக்கும் புளிக்கும் பாடலா?

ஐயோ பாவம்....


காசில்லாமல் போனால்

கிடைத்ததற்குப் பாடல் பாடி விட்டுப் போக வேண்டியதுதான்.

சேர்ந்தே இருப்பது புலவரும் வறுமையுமல்லவா?

வறுமை இருந்ததால் உப்புக்கும்

புளிக்கும் பாடுவேன் என்கிறார் ஒரு புலவர்.

யார் அந்தப் புலவர்?

புலமை இருக்கும் இடத்தில் வறுமை இருக்கத்தான் செய்யும் 


வயிற்றுக்காகத்தானே இந்தப் பாடும் பாடலும்.

வயிற்றுப்பசி . வாழ்க்கைச் சக்கரம் ஓட வேண்டும்.

அதற்காகத்தான் வள்ளல்களை நாடி ஓடி பாடி

பொருட்களைப் பெற்றனர் புலவர்கள்.


இந்தப் புலவர்மட்டும் உப்புக்கும் 

பாடுவேன்.

கூடவே புளிக்கும் பாடுவேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


கூழாயிருந்தாலும் சற்று உப்பு இருந்தால்தானே குடிக்க முடியும்.

அதனால் அப்படி சொல்லி இருப்பாரோ?

இருக்கலாம்.


சொல்லியவர் யார்?

அறிந்து விடுவோம் வாருங்கள்.


அப்படி என்ன வறுமை?



பாடுபவரிடம்  வறுமை இருக்கும். பாட்டில் ஒருபோதும் வறுமை இருந்ததில்லை.


தன்மானம் இழந்ததில்லை.

நின்னை நினைத்தோ தமிழை ஓதினேன் என்று முகத்திற்கு நேரே கேட்கும் துணிவு உள்ளவர்கள் புலவர்கள்.


ஒருநாள் ஔவை தெருவில் வந்துகொண்டிருகிறார்.

சற்று அசதி.

எங்காவது சற்று அமர்ந்து இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்கிறார்


வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது.

என்ன என்று எட்டிப் பார்க்கிறார்.


அழுகைக்கான காரணத்தைக் கேட்கிறார்.


"தாயே நான் என் செய்வேன்?

என் கணவர் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வேன்? "என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் மறுபடியும் அழுகிறாள்.


"முதலாவது அழுகையை நிறுத்து.

எதற்காக அழுகிறாய்?

காரணத்தைச் சொல்லிவிட்டு அழு.

காரணம் யாது என்று தெரிந்தால் தானே நான் உனக்கு உதவ முடியும் ."என்கிறார் ஔவை.


"என் கணவர் ஆசை ஆசையாக பலாமரம் 

ஒன்று வளர்த்தார். அதனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்."

சொல்லிவிட்டு மறுபடியும் அழுதாள்.


"ஆமாம்...இப்போது அந்த மரத்துக்கு

என்னவாயிற்று?"


"அந்த மரத்தை என் சக்களத்தி

வெட்டி விட்டாள்.

நான் என் கணவருக்கு என்ன பதில் சொல்வேன்." விசும்பி விசும்பி

அழுதாள்.


"பலா மரம் வெட்டப்பட்டதுதான்

உன் பிரச்சினையா?"


"அது வெறுமனே பலா மரம் இல்லை.

என் கணவரின் உயிர் அம்மா.

அவர் அதனைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார்"


"சரி. இன்னொரு பலா மரம் 

வைத்து வளர்"


"நான் இப்போது என் செய்வேன்?

யாரிடம் போய் உதவி கேட்பேன்?

என் கணவர் வந்ததும் என்னைத் தொலைத்துவிட்டு வாரே"

சொல்லி மறுபடியும் அழுகிறாள்.


இவளை என்ன சொல்லித் தேற்றுவது?

ஒன்றும் புரியவில்லை.


சற்று யோசனைக்குப் பின்னர்,


"புரிகிறது....வா...உன் பலா மரம் நின்ற இடத்தைக் காட்டு"

என்றார் ஔவை.


அந்தப் பெண்ணும் 

வீட்டின் பின்புறமாக பலா மரம் நின்ற இடத்திற்கு ஔவையை அழைத்துச் 

சென்றாள்.


பலா மரம் வெட்டுப்பட்டு இரண்டாகக் கிடந்தது.

என்ன செய்வது?

சற்று நேரம் யோசித்த ஔவை

 பலா மரம் முன்னர் நின்று உள்ளம் உருகி ஒரு பாடலைப் பாடினார்.


என்னவொரு ஆச்சரியம்!

பலா மரம் சற்று நேரத்தில் முன்பு போல

நேரே நின்றது.


ஆச்சரியப்பட்டுப் போன அந்தப் பெண்

"யாரம்மா நீங்கள்...

உங்கள் பாடலுக்கு இவ்வளவு ஆற்றலா?

அந்த தெய்வமே என் முன்னர் 

வந்து நின்றது போல இருக்கிறது.

தங்களுக்கு தந்துவிட  இந்த ஏழையிடம் 

யாதுமில்லையே....

என்ன செய்வேன்?யாது செய்வேன்?

கைமாறாக என்ன தந்து வழியனுப்புவேன்"

என்று புலம்பியபடியே  வீட்டிற்குள் ஓடினாள்.


வீட்டிலுள்ள பானைகள் ஒவ்வொன்றாகத் துழாவிப் பார்த்தாள்.

ஒன்றும் கிடைக்கவில்லை.

கடைசியாக ஒரு பானையில் சிறிது

தினை கிடந்தது.


இந்தத் தினையை எப்படிக் கொடுப்பது?

சற்று தயங்கினாள்.

வேறு வழியில்லை. என்ன செய்வது

என்று அதையே ஒரு பொட்டலமாகக் கட்டி எடுத்து வந்தாள்.



" தாயே! இதோ நான்கு ஆழாக்கு தினை இருக்கிறது அதனை பெற்றுக் கொள்ளுங்கள் "என்று

பொட்டலத்தை ஔவை கையில் கொடுத்தாள்.


'மகிழ்ச்சி 'என்றபடி தினையைப் பெற்றுக்கொண்ட ஔவை அங்கிருந்து விடைபெற்று

சோழன் அரண்மனைக்குச்  சென்றார்.


அங்கே அரசவையில் மன்னன். கூடவே கம்பரும் இருக்கிறார்.


கம்பருக்கும் ஔவைக்கும் 

ஒருபோதும் ஒத்துப் போகாது.

ஔவையைப் பார்த்ததும் கம்பர் எடக்குமடக்காகப் பேசி மடக்க நினைத்தார்.


எப்போதுமே கூழுக்குப் பாடும் கூனக் கிழவி

இன்று எதற்குப் பாட வந்திருக்கிறாளோ

என்ற கிண்டல் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது..


ஔவை கையில் ஒரு பொட்டலம்.

என்னவாக இருக்கும் ?

கம்பருக்கு

இன்று ஔவை கையில் என்ன வைத்திருக்கிறார்  என்பதை அறிந்து அதை வைத்துக் கிண்டலடிக்க வேண்டும் 

 என்று ஒரு ஆசை.


அந்த நேரத்தில் சோழ மன்னனும் "ஔவையே! தாங்கள்

கையில் வைத்திருக்கும் பொருள் என்னவோ? "என்று கேட்டுவிட்டார்.


ஔவை என்ன சொல்லப் போகிறார்

என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் கம்பர்.


"ஏற்கெனவே கூழுக்கும் பாடுபவள் என்று பேசுவார். பாடி தினை பெற்று வந்தேன்

என்றால்.....

கூழிலிருந்து தினைக்கு மாறிவிட்டீரோ என்று கேட்டாலும் கேட்பார்.

அவரை இதற்குமேல் பேச விடக் கூடாது.  அதற்கு ஒரே வழி பாடலை சற்று மாற்றி விடுவோம் "என்று நினைத்தார் ஔவை.


"ஒரு குறமகள் வீட்டு பலா தழைக்கப் பாடல் பாடினேன்.

பலா மரம் தழைத்தது.

பாசமுடன் குறமகள் தந்த

தினை இந்த பொட்டலத்தில் இருக்கிறது.

என்ன ...கூழுக்குப் பாடியவள்

இன்று தினைக்கும் பாடிவிட்டு வந்திருக்கிறாள் என்று நினைக்கிறீர்களா?"


"சோழா கேள்!

 நான் மன்னனிடம் இருந்து

பரிசில் பெறுவதற்காக மட்டும் பாடும் குறுகிய எண்ணம் உடையவள் அல்லள்.


யார் என்ன தருவார் என்ற எதிர்பார்ப்போடு கவிதை பாடுபவளும் அல்லள்.

 உப்புக்கும் பாடுவேன்.

அன்போடு புளியைத் தந்தாலும்

அதனையும் ஏற்றுக்கொள்ளும்

மனப்பக்குவம் எனக்கு உண்டு  "

என்றபடி கம்பரைப் பார்த்தார்.

கம்பருக்கு என்ன சொல்வதென்று

தெரியவில்லை.

அமைதியாக இருந்தார்.


ஔவையே உப்புக்கும் புளிக்கும் பாடுவேன் என்று சொல்லி விட்டாரா?

உண்மையாகக் தான் இருக்கும்.

வாருங்கள். ஔவை என்னதான் 

சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.


இதோ பாடல் உங்களுக்காக..



"கூழைப் பலா தழைக்கப் பாட குறமகளும்

மூழாக்குழக்குத் தினை தந்தாள்

சோழா கேள்

உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை

ஒப்பிக்கும் எந்தன் உள்ளம்"


"உப்புக்கும் பாடும்.

புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் என் மனம்.

இன்று தினைக்காகப் பாடி 

ஒரு பலா மரத்தையே தழைக்க வைத்துவிட்டு வந்திருக்கிறது என் பாடல்"

பெருமிதம் பொங்க ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டுக் கம்பியைப் பார்த்தார் ஔவை.


இனி கூழுக்குப் பாடிய கூனக்கிழவி என்று

கம்பர் சொல்வாரா என்ன?





Comments