நந்திவர்மன் மாண்ட கதை

நந்தி வர்மன் மாண்ட கதை

நாம் வாழ்கிற வாழ்வு அறம் சார்ந்ததாக

 இருக்க வேண்டும்.

 

இந்த ஆசை எல்லோருக்கும் உண்டு.

ஆனால் அனைவரும் அப்படி ஒரு

வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

அறம் சார்ந்த வாழ்வு என்பது

எல்லோராலும் சாத்தியப்படக் கூடியதா?

எல்லா இடங்களிலும்

எல்லா நேரங்களிலும்

எல்லோராலும் பின்பற்ற முடிகிறதா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.


முதலாவது அறம் என்றால் என்ன 

என்று பார்ப்போம்.


 மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும்

 என்று தனக்கென வகுத்துக்கொண்ட

 ஒழுக்கநெறியே அறம் எனப்படும்


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற"

என்பார் வள்ளுவர்.


மனத்தில் எந்தவிதமான குற்றமும்

இல்லாமல் இருத்தலே அறம்.

உள்ளத்தில் அன்பில்லாது செய்யப்படும்

எந்த தர்மமும் அறம்  எனப்பட மாட்டாது.


எண்ணம், சொல், செயல் மூன்றும்

தூய்மையாக இருந்து செய்யப்படும்

செயல்தான்  அறமாகக் கொள்ளப்படும்.


இந்ந அறத்தைத் தவிர இன்னொரு

அறமும் இலக்கியத்தில் சொல்லப்படுவதை

அறிந்திருக்கலாம்.


அறம் பாடுதல் என்ற

ஒரு சொல் கேள்விப்பட்டிருப்போம்.


இந்த அறம் பாடுதல் மேலே கூறப்பட்ட

அறத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.


ஒரு புலவன் தனக்கு அநீதி இழைக்கப்படும்போது

அநீதி இழைத்தவர் அழிய வேண்டும்

 என்று சாபமிட்டுப் பாடுவதுதான் 

 இந்த அறம் வைத்துப் பாடுதல் ஆகும் .

 

சரியாக அதுவும் உண்மையாகச் சொல்லப்படும்

வார்த்தைக்குக் கொல்லும் ஆற்றல்

உண்டு என்ற நம்பிக்கை பழங்காலத்தில்

இருந்திருக்கிறது.


அதன் அடிப்படையில் தோன்றியதே அறம்

பாடும் பாடல்கள் ஆகும்.


அறம் பாடுதலின் மூலம் புகழ்பெற்ற

நூல் ஒன்று உண்டென்றால் அது் 

நந்திக் கலம்பகம்.


அறம்பாடுதல் மூலம் ஒருவரைக் கொல்ல

முடியும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட

நூல் இது.


பாட்டுப் பாடியே மனிதனைக் கொன்றுவிடலாமா? 

என்று  ஐயத்தோடு கேட்போருக்கு

இந்த நந்திக் கலம்பகம் நூல்தான் சாட்சி.


இரண்டாம் நந்திவர்ம பல்லவன்

பற்றிய கதை இது.


நந்தி வர்மனின் மாற்றாந்தாய் மகன்

ஒருவனுக்கு  நந்திவர்மனை அழித்தே தீர

வேண்டும் என்ற தீராப் பழி உணர்வு 

ஏற்பட்டது.

போரில்தான் அவனைக் 

கொல்ல முடியவில்லை.

அறம் பாடியாவது கொன்றுவிட வேண்டும்

என்று ஒரு சபதம் எடுத்துப்  பாடப்பட்டதுதான்

நந்திக் கலம்பகம்.

 மொத்தம் நூறு 

பாடல்கள் பாடப்பட்டன.


பாடல் நல்ல இலக்கிய நயம்

கொண்டதாக இருந்தது.

பாடல்கள் முழுவதுமாக எழுதி முடிப்பதற்குள் 

நந்தி வர்மனைக் கொல்ல வேண்டும்

 என்ற  அவரது தம்பியின் எண்ணம் முற்றிலும்

 காணாமல் போயிற்று.

 

முற்றும் துறந்த முனிவராக மாறிப்போனார்.

தன் அண்ணன் மீது இருந்த கோபமும்

காழ்ப்புணர்ச்சியும் இருந்த இடம்

தெரியாமல் மறைந்து போனது.


துறவு வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக்

கொண்டார்.


அப்படியே  ஊர் ஊராக

சுற்றித் திரிய ஆரம்பித்தார்.


சுற்றித்திரிந்தபோது அண்ணன்மீது

பாடிய பாடல் அறம் வைத்துப் பாடப்பட்டது

என்பதையே மறந்து போய்விட்டார்.

 

ஒருநாள் தெருவழியாக சென்று

கொண்டிருக்கும்போது அண்ணன் மீது

பாடிய அந்தப் பாடலைப் பாடிவிட்டார்.


அந்தப் பாடலைக் கேட்ட ஒருபெண்மணி

அந்த துறவியை அழைத்து மேலும்

சில பாடல்கள் பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.

அவற்றை மனனம் செய்தும் வைத்திருந்தார்


நாட்கள் கடந்தன.

ஒருநாள் அரண்மணை வழியாகச் செல்லும்போது

அந்தப் பெண்.... 

துறவியார் பாடிய பாடலைப்

பாடிக் கொண்டே செல்கிறார்.

உப்பரிகையில் நின்ற மன்னன் காதுகளில்

அந்தப் பாடல் வரிகள் வந்து விழுகின்றன.


ஆஹா...எவ்வளவு அருமையான பாடல்

என்று வியந்து போகிறார் மன்னர்.


பாடல் பாடிய பெண்மணியை அழைத்துவர

கட்டளை  இடுகிறார்.

வீரர்கள் அந்தப் பெண்மணியை அழைத்து வந்து

மன்னர் முன் நிறுத்தினர்.


அஞ்சியபடியே மன்னன்முன் 

வந்து நிற்கிறாள் அந்தப் பெண்.


நீ இந்த வழியாகச் செல்லும்போது 

பாடிய பாடல் நீனாகப் பாடியதாக இல்லை வேறு யாராவது பாடியதைப் பாடினாயா? என்று

விசாரிக்கிறார்.

அந்தப் பெண் ஒரு துறவியைக் கை காட்ட

துறவியைக் கொண்டு வந்து மன்னன் முன்

நிறுத்துகின்றனர் வீரர்கள்.


துறவியிடம் "தாங்கள் பாடிய 

பாடலின் இனிமை என்னை மெய்மறக்கச் 

செய்துவிட்டது.

எனக்காக நீங்கள் அந்தப் பாடலை

இன்னொருமுறை பாட வேண்டும்"

என்று கேட்கிறார் மன்னர்.


துறவிக்கோ தர்ம சங்கடமான நிலை."

" மன்னா!

 நான் அந்தப் பாடல்களைப் பாடினால்

 தாங்கள் உயிர் துறக்க நேரிடும்..

 அதனால் வேண்டாம் "என்று 

 பாடலைப் பாட மறுக்கிறார் துறவி.

 

 மன்னனுக்கோ தமிழ்மீது தணியா காதல்.

 அந்தப் பாடல்களை 

 எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்ற

 ஆவல்.

" உயிர் போனாலும் பரவாயில்லை எனக்காக

 நீங்கள் அந்தப் பாடலைப் பாடியே ஆக வேண்டும்"

 என்று வற்புறுத்துகிறார்.

 

வேறு வழியின்றி  துறவியும் பாடலைப் பாட

ஒத்துக் கொள்கிறார்.

ஆனால் ஒரு நிபந்தனை . 

அதற்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும்

என்று சொல்கிறார் .

மன்னரும் நிபந்தனைக்கு

ஒத்துக் கொண்டு பாடல்களைக்

கேட்கத் தயாராகிவிட்டார்.


"மன்னா,நிபந்தனை என்ன என்பதைக் கேளுங்கள்.நூறு பந்தல்கள் பச்சை ஓலையால்

அமையுங்கள்.

நான் ஒவ்வொரு பாடல் பாடும்போதும் 

நீங்கள் ஒரு பந்தலில் இருந்து

அந்தப் பாடலைக் கேட்க வேண்டும் .

அடுத்தப் பாடலுக்கு அடுத்தப் பந்தலுக்குச்

சென்றுவிட வேண்டும் "என்கிறார்.


மன்னரும் சம்மதித்துப் பாடல் கேட்கத்

தயாராக முதல் பந்தலில் போய் அமர்ந்தார்.


பாடல் தொடங்கியது.

பாடல் முடிந்ததும் பந்தல் தீப்பற்றிக்

கொண்டது.


மன்னர் அடுத்தப் பந்தலுக்குச்

தாவிச் சென்று விட்டார்.

இவ்வாறு ஒவ்வொரு பாடலும்

பாடப்பாட ஒவ்வொரு பந்தலும்

எரிந்து போனது. 

இப்படியாக தொண்ணூற்று ஒன்பது

பந்தல்களும் எரிந்து தீர்ந்தன.


கடைசியாக நூறாவது பந்தலில்

மன்னர் பிணம் போல படுத்துக் கொண்டு

பாடலைக் கேட்டார்.


துறவி கண்ணீரோடு கடைசிப்

பாடலைப் பாடினார்.

பந்தல் மொத்தமாக தீப்பற்றிக் கொள்ள

மன்னரும் மாண்டு போகிறார்.


இதுதான் அறம் வைத்துப் பாடிய

பாடலைக் கேட்டதால் நந்தி வர்மனுக்கு

நிகழ்ந்த சோகம்.


அப்படி என்னதான் பாடியிருப்பார்

என்பதைக் கேட்கத் தோன்றுகிறதல்லவா!


இறுதியில்  கதறி அழுதவாறு துறவி பாடிய

பாடல் இதோ :


"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்

கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

செந்தழல் அடைந்ததுன் தேகம்

நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்

நந்தியே நந்தயா பரனே !


"உன் முக அழகினை நிலவு பெற்றுக்

கொண்டது.

உன் புகழ் கடலுக்குள் சென்றுவிட்டது.

உன் வீரம் காட்டில் வாழும் புலிகளிடம்

தஞ்சம் அடைந்து விட்டன.

உன் கரங்கள் கற்பக மரத்திடம் சென்றுவிட்டன.

உன்னிடம் இருந்த திருமகளும் திருமாலிடம்

சென்று விட்டாள்.

நானும் என் வறுமையும் எங்கே செல்வோம் இனி"

என்று அழுது புலம்புகிறார் துறவி.


அறம் வைத்துப் பாடுதலுக்கு இவ்வளவு

சக்தியா?


இப்படி அறம் வைத்துப் பாடுதல் சரியா?

என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.


ஆழ்மனதில் ஏற்படும் காயமே சாபமாக

வெளி வருகிறது.


வலியோர் எளியோர் மீது வலுக்கட்டாயமாக

இழைக்கும் அநீதிக்கு எதிராக 

எளியோரால் எதுவும் செய்ய முடியாத நிலை.

தனது இயலாமையை வார்த்தையால்

வெளிப்படுத்த முயல்வர்.

அதுதான் கடைசியில் சாபமிடுவதற்கும் 

அறம் வைத்துப்

பாடும் நிலைக்கும் கொண்டு செல்கிறது.


இதுதான் நந்திக் கலம்பகம் மூலம்

நாம் அறியும் செய்தி.





Comments