அரியது எது ?
அரியது எது என்ற கேள்விக்கு,
"அரியது கேட்கின் வரி வடிவேலோய்
அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி
பிறத்தல் அரிது
பேடு நீங்கி பிறந்த காலையும் சக
ஞானமும் கல்வி நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்தகாலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது
தானமும் தவமும் தான் செய்வ ராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!"
என்றார் ஔவை.
அருமையானப் பாடல்.
எந்தவித உடற்குறையும் இல்லாமல் வாழ்தல்
அரிதினும் அரிது என்று மனதில் எழுதி வைத்துக் கொண்டோம்.
நமக்கு அப்படி ஒரு குறையில்லா உடலைத் தந்தமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம்.
அப்படிச் சொல்லித் தந்த ஔவை
கூடவே ஞானம், கல்வி நயந்து பெற்றிருந்தாலும்
தானம் தவம் செய்தல் அரிது என்று
அரிதானவற்றை வரிசைப் படுத்திச் சொல்லித் தந்தார்.
அருமையாக விளக்கமாக ஒன்றோடு ஒன்றை ஒப்புமைப்படுத்தி
எல்லாமே அரிதானவைதான் என்று
நம்மை ஒத்துக்கொள்ள வைத்தார்.
ஒப்புமை வாக்குமூலம் கொடுக்க
வைத்தார்.
இப்போது உன்னோடு வாழ்தல்
அரிது என்று வேறு ஒன்றைக்கூறி இது என்ன அரிது என்று சிந்திக்க வைத்துவிட்டார்.
இப்போது நமக்குள் பெருங்குழப்பம்.
யாரோடு வாழ்தல் அரிது?
கேடுகெட்ட மனைவியோடா?
சொல் கேட்காப் பிள்ளைகளோடா?
பெற்றோரோடா.....
யாரோடு வாழ்தல் அரிது?
கேள்விமேல் கேள்வி வந்து
காதைத் துளைக்க
உன்னோடு என்னோடு என்று சொல்லிவிட்டால் ஏதோ அருகில் இருக்கும் ஒருவராகத் தான் இருக்க முடியும்?
யாரந்த நபர்?....கேள்வி மேல் கேள்வி வந்து துரத்த விடை தேடி மறுபடியும் ஔவையிடமே
ஓடினேன்.
அங்கே ஔவை தன் வயிற்றோடு பேசிக் கொண்டிருந்தார்.
மெல்ல ஒட்டுக் கேட்டேன்.
"ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்"
என்றார் சாதாரணமாக.
யாரைப் பார்த்துக் கூறுகிறார்.?
யாருமே அருகில் இருப்பதுபோல
தெரியவில்லையே..வேறு யாரிடம் இப்படி உரக்கப் பேசுகிறார்.?
அதற்குள் மறுபடியும் "இருநாள் ஏலென்றால் ஏலாய்" என்ற கோபமான வரிகள்.
இரண்டு நாளுக்கு எடுத்துக்கொள் என்றால்
அதுவும் செய்வதில்லை..
ஒருநாள் ஒழியென்றால் ஒழியாய்
இருநாள் ஏலென்றால் ஏலாய்
இது என்ன யாரோ சிறு பிள்ளையைக்
கடிந்து கொள்வதுபோல கடிந்து
கொள்கிறார் ...என் குழப்பம் தீருமுன்னே
"ஒருநாளும் என்நோவறியாய் இடும்பை கூர்
வயிறே"
என்று வயிற்றைச் பார்த்து கேட்டுவிட்டார்.
இதுவரை ஔவை பேசியது வயிற்றோடு தானா?
வயிறு அப்படியென்ன துன்பம் தந்தது?
ஒரு நாளைக்குப் சோறு இல்லை.
பட்டினியாக கிடக்க வேண்டியதுதானே!
குய்யோ முறையோ என்று கூப்பாடு.
மறுநாள் நிறைய உணவு கிடைக்கிறது.
இரண்டு நாளைக்குப் சேர்த்து எடுத்துக்கொள் என்றால் போதும் போதும் என்று மறுப்பு.
இருக்கும் போது கொள்வதுமில்லை.
இல்லாதபோது சும்மா இருப்பதுமில்லை.
ஐயோ...ஐயோ...இந்த வயிற்றோடு நான் படும் பாடு இருக்கே...சொல்லி மாளாது.
உன்னோடு வாழ்தல் அரிதுடா சாமி என்ற
புலம்பல்.
எவ்வளவு எதார்த்தமான உண்மை .
அதை எவ்வளவு சுவைபட உணர்வுப்பூர்வமாக
மனதில் தைக்கும் விதமாக
எளிய மொழியில் தந்து
நம்மையும் புலம்ப வைத்துவிட்டார் ஔவை.
பாடல் இதோ உங்களுக்காக..
"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்நோவறியாய் இடும்பை கூர்
என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது "
அருமையான பாடல் இல்லையா?
"ஒருநாளும் என் நோவறியா உன்னோடு
வாழ்தல் அரிது"
அரிது அரிது....ஒருநாளும்
நம் நோவறியாதவரோடு வாழ்தல் அரிது.
நம் நோவறியாதாரோடு எப்படி வாழ முடியும்?
வயிற்றுக்கு மட்டும் இது விதி விலக்காக என்ன!
..
Comments
Post a Comment