ஹோலியும் ஹோலிகாவும்

    ஹோலியும் ஹோலிகாவும்


தீபாவளி என்றால் பட்டாசு .
 பொங்கல் என்றால் கரும்பு.
 கிறிஸ்துமஸ் என்றால் கேக்.
 ஹோலி என்றால் வண்ணம்.
 இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும்
 ஒரு தனி அடையாளம் உண்டு.
 
பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தானாக
வந்து குடி கொண்டுவிடும்.
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு
விதமான மகிழ்ச்சியைத் தரும்.
எல்லா பண்டிகைகளும் ஏதோ ஒரு சிறப்பைப்
பெறுவதாக இருக்கும். 
ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள சிறப்பு
அது கொண்டாடப்பட்டதன் வரலாறு ஆகியவற்றை
அறியும்போது எந்த ஒரு பண்டிகையும் 
வெறுமனே பொழுது போகாமல்
கொண்டாடப்பட்டதல்ல என்ற உண்மை
புரிய வரும்.
புராண கதைகளாக இருக்கலாம் அல்லது
வரலாற்று உண்மை நிகழ்வுகளாககூட
இருக்கலாம்.
பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி ஒன்றையே 
குறிக்கோளாக கொண்டிருக்கும்.
இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கியது.
அப்பாடா...இனி எந்த அச்சமும் இல்லை.
கொண்டாடுவோம் வாருங்கள் என்று 
அழைப்பு விடுப்பதாகவே இருக்கும்.

 வண்ணங்களின் பண்டிகையான ஹோலி
கொண்டாடப்பட்ட  வரலாறு  சுவாரசியமானது.
பால்குன் மாதத்தில் வரும் முழுநிலவு நாளில்
ஹோலி கொண்டாடப்படுவது வழக்கம்.

ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாள்
நெருப்பு மூட்டி வழிபடுவர்.
அதனைக் ஹோலிகா தகனம் என்று
அழைப்பர்.
யார் இந்த ஹோலிகா ? 
ஏன் இந்த ஹோலிகாவைத் தகனம் 
செய்வதாக சொல்லி
தீ மூட்டுகின்றனர் ? என்று அறிய
வேண்டும்போல் தோன்றுகிறதல்லவா?

இந்த ஹோலிகா கதைதான்  
ஹோலி .
ஹோலிகா  இல்லாமல் ஹோலி
இல்லை.

இரணியன் என்று ஓர் அரக்கன்
இருந்தான். அவன் சிவன்மீது
அளவுகடந்த பக்தி கொண்டவன்.
தன்னைப் போலவே தன் நாட்டில் உள்ள
 அனைவரும் சிவனையே வழிபட
 வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான்.
 அரக்கனான இரணியன் கடும் தவம்
 புரிந்து சிவபெருமானிடம் இருந்து
 சாகாவரமும் வாங்கி வைத்திருந்தான். 

அதாவது தனது மரணம் எப்படி எல்லாம்
நிகழக்கூடாது என்று சிவனிடம் இருந்து
வரம் பெற்றிருந்தான்.

பகல் பொழுதிலும் என் மரணம் 
நிகழக்கூடாது.

இரவு பொழுதிலும் என் மரணம் 
நிகழக்கூடாது.

மனிதனாலும் மரணம் நிகழக்கூடாது.
மிருகத்தாலும் மரணம் நிகழக்கூடாது.

ஆகாயத்திலும் மரணம் நிகழக் கூடாது.
பூமியிலும் மரணம் நிகழக்கூடாது.

வீட்டிற்கு உள்ளேயும் மரணம் நிகழக்கூடாது.
வெளியிலேயும் மரணம் நிகழக்கூடாது.

எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம்
 நிகழக்கூடாது.
 
 இப்படிப் புத்திசாலித்தனமான
ஒரு வரத்தை வாங்கி
 வைத்திருந்தான்.
 வரம் கிடைத்துவிட்டது.
இனி தன்னை யாரும் அழித்துவிட
முடியாது என்ற ஒரு மமதை.
 யாராலும் கொல்ல முடியாது
 என்ற கெக்கலிப்பு.

இவனுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை.
பூமியில் உள்ளவர்கள் எல்லாம் இரணியன்
என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினர்.
இப்போது நான்தான் இறைவன்
என்ற நினைப்பு வந்துவிட்டது.
தன்னையே வணங்கும்படி ஆணையிட்டான்.

இந்த ஆணவப் போக்கிற்கு முற்றுப்புள்ளி
வைப்பது யார் ? 
அனைவருக்கும் இறைவனிடம் முறையிடுவதைத்
தவிர வேறு வழி தெரியவில்லை.
அனைவரும் இறைவனிடம் சென்றனர்.
இறைவா!எங்களை இந்தக் கொடியவனிடமிருந்து
நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்
என்று கண்ணீர் விட்டனர்.

இறைவன் இவன் கொட்டத்தை எப்படியாவது
அடக்கி மக்களைக் காப்பாற்ற வேண்டும்
 என்று நினைத்தார்.

இந்த இரணியனுக்கு பிரகலாதன்
 என்ற அருமையான ஒரு
மகன் பிறந்தான்.
அவன் நாராயணனின் தீவிர பக்தன்.
எப்போதும் ஹரி நாமத்தையே உச்சரித்துக்
கொண்டே இருப்பான்.
ஊரே தான் சொல்பவரையும்
தன்னையும் வணங்கும்போது
இந்தப் பிரகலாதனுக்கு எவ்வளவு திமிர்!
நறநறவென்று பற்களைக் கடித்தான்.

தான் பெற்ற பிள்ளை மட்டும் 
தனக்கு எதிராக
நாராயணனை வழிபடுவதை இரணியனால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சொல்லி சொல்லி பார்த்தான்.
மிரட்டிப்பார்த்தான். கண்களை உருட்டிப்
பார்த்தான். எதற்கும்
பிரகலாதன்  அஞ்சுவதாகத் தெரியவில்லை.
பிள்ளை என்றும் பாராது பல தொல்லைகளைக்
கொடுத்துப் பார்த்தான்.

யானை காலில் இட்டு கொல்ல முயற்சி
மேற்கொண்டான்.
ஆனால் பிரகலாதனிடம் இரணியனின்
அராஜகம் எடுபடாமல் போயிற்று.

இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது...
என்ன செய்வது?
 தன் சகோதரி ஹோலிகாவோடு
சேர்ந்து  ஒரு சதித்திட்டம்
தீட்டினான்.. இதன்படி பிரகலாதனை தீயிட்டு
கொழுத்தி கொன்றுவிட வேண்டும் என்று
இருவரும் முடிவு செய்தனர்.

ஹோலிகா நெருப்பு தன் மேலாடையைத்
தீண்டாத வரம்
பெற்றிருந்தாள்.இப்போது வரம்
பெற்று வாங்கி வந்த மேலாடையை
போர்த்திக்கொண்டால் நெருப்பு
 தன்னைத் தீண்டாது
இந்த நெருப்பை வைத்தே ஒரு
விளையாட்டுக் காட்டுலாம்
என்று நினைத்தாள்.

நான் நெருப்பும் பற்றிக் கொள்ளாத
 என் மேலாடையைப் போர்த்திக் கொள்கிறேன்.
பிரகலாதனை என் மடியில் இருக்க 
வைப்பது போல் இருத்துங்கள்
நீங்கள் தீயைக் கொழுத்தி விடுங்கள்.
நான் தீப்பற்றாத மேலாடை அணிந்திருப்தால்
தீ என்னைத் தீண்ட முடியாது.
பிரகலாதன் தீயில் கருகிய மாண்டு போவான்
இதுதான் பிரகலாதனைக் கொல்லும்
ஒரே வழி என்று அண்ணனுக்கு
பெற்ற பிள்ளையைக் கொல்ல வழி
சொல்லிக் கொடுத்தாள் கொடுமைக்கார
ஹோலிகா.

அண்ணனும் ஒத்துக் கொண்டான்.

அதனால் ஹோலிகா 
மடியில் பிரகலாதனை வைத்து
தீ வைத்துக் கொளுத்திக் கொல்ல
 முடிவு செய்தனர்.

அதன்படி ஹோலிகா மடியில்
 பிரகலாதன் இருக்கப்பட்டான்.
இப்போது தீ பற்ற வைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஹோலிகா மீது போர்த்தப்பட்டிருந்த
மேலாடை பிரகலாதனை
மூடிவிட ஹோலிகா  மேலாடையை
இழந்துவிட்டாள்.
 தீ ஹோலிகா  மீது பற்றிக் கொண்டது.
பிரகலாதன் காப்பாற்றப்பட்டான் .
ஹோலிகா தீயில் கருகி 
மாண்டு போனாள்.

அதாவது தீய சக்தி அழிக்கப்பட்டுவிட்டது.

இதுதான் ஹோலி பண்டிகைக்கான
வரலாறு.

அதனால்தான் ஹோலிக்கு முதல்நாள் இரவு
ஹோலிகா தகனம் என்று தீயிட்டுக் கொழுத்துவது
ஒரு சடங்காகவே இன்றும்
 நடைபெற்று வருகிறது.
 
தீமை அழிந்த நாள்தான் ஹோலி பண்டிகை.

இந்த நாளில் ஒருவர்மீது ஒருவர்
வண்ணப்பொடிகளைத்தூவி தங்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
அதனால்தான் ஹோலி வண்ணங்களின் 
பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

ஹோலிகா அழிவைக்  கொண்டாடும்
நாள் ஹோலி.

தீயவை அழிந்து
 நன்மை நடைபெறட்டும்.

அனைவருக்கும்
 இனிய ஹோலி நல்வாழ்த்துகள்!















Comments

  1. சூப்பர் 🙏 நல்ல அருமையான தகவல்.நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular Posts