நேர்மறை எண்ணத்தை வளர்ப்போம்

  நேர்மறை எண்ணத்தை வளர்ப்போம்


"நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவேஆகிறாய்"என்பார் சுவாமி விவேகானந்தர்.


நாம் பேசும் பேச்சு செயல் யாவும்
நேர்மறையாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் நடப்பவையும் நன்றாகவே நடக்கும்.
    
*     சூழ்நிலை
    
சூழ்நிலை சரியாகவே இல்லை.
நாம் அன்றாடம் காண்பவை யாவும்
ஏறுக்குமாறாக ...தாறுமாறான
நிகழ்வுகளாகவே இருக்கின்றன.
கேட்பவை யாவும் சகிக்க முடியவில்லை.
தரக்குறைவான சொற்கள்.
நம்மைச்சுற்றி நடப்பவை யாவும்
விரும்பத் தகாததாகவும்
தவறானதாகவுமே இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும்
கேட்டுக் கொண்டும் வாழ்கிற நம்மால்
மட்டும் எப்படி நல்லவராக 
இருக்கமுடியும்?"

இந்தக் கேள்வி அனைவர் மனதிலும்
எழலாம்.
இவற்றை எல்லாம் கடந்து நம்மை
நாமாக நிலைநிறுத்திக்  கொள்வதுதானே சிறப்பு.


     *     தாழ்வு மனப்பான்மை வேண்டாம்

தாழ்வு மனப்பான்மையா...
இது மட்டும் வேண்டவே வேண்டாங்க...
அந்தத் தாழ்வு மனப்பான்மை என்னும்
விலங்கை மாட்டிக் கொண்டு முன்பின்
நகர முடியாமல் துவண்டது போதும்.

தாழ்வு மனப்பான்மை என்னும்
சங்கிலியைக் கழற்றி எறியுங்கள்.
மனம் லேசாகிப் போகும்.
வானத்தில் பறப்பது போன்ற ஒரு
உணர்வைத் தரும்.

  நாளை பேச்சுப் போட்டிக்குச் செல்ல வேண்டும்.
முதல்நாள் இரவே கை கால் எல்லாம் உதறல் எடுக்கும்.
நான் நன்றாக பேசுவேனா?.... மாட்டேனோ?.. 
  மனதிற்குள் ஒரு போராட்டம்.
சரியாக பேசவில்லை என்றால்....
எல்லோரும் சிரிப்பார்களே....
இப்படி வீணான பயம்.
இப்படிப்பட்ட மன நிலையில் சென்றால்
நம்மால்  கண்டிப்பாக சரியாக பேச முடியாது.

பள்ளி விடுதியில் உணவுக்குப் பின்னர்
நடைபெறும் பிரார்த்தனை  வேளை.
நாலுவரி பிராத்தனை சொல்ல வேண்டும்
என்று ஆசிரியர் சுமதியிடம்
சொல்லியிருந்தார்.
நானூறு பேருக்கு முன்னால்
பிரார்த்தனை பண்ண வேண்டும்.
ஆறேழு முறை தன் தோழியிடம்
ஒத்திகையும் பார்த்துவிட்டுச்
சென்றாள் சுமதி.
சரியா சொன்னேனா.....
சரியா சொன்னேனா....
தோழியிடம் ஆயிரம் முறை கேள்வி கேட்டு
சரளமாக மனப்பாடம் செய்து ஒப்பித்து
தயார் செய்து வைத்திருந்தாள்.
இறுதியாக அந்த பிராத்தனை வேளையும்
வந்தது.அனைவரும் கண்களை மூடி
உணவின் முன்னால் அமர்ந்திருந்தனர்.

இரண்டு வரிதான் சொல்லி இருப்பாள்.
கெக்கே...புக்கே என்று தானாக சிரித்துவிட்டு
பிராத்தனையை  நிறுத்திவிட்டாள்.

பிரார்த்தனையில் இருந்த மாணவர்கள்
எல்லோரும் கண்களைத் திறந்து என்ன ...
என்பது போல் சுமதியையே பார்த்தனர்
இப்போது சுமதிக்கு அவமானம் பிடுங்கித்
தின்றது.
எண்ணூறு கண்களும் ஏளனமாகப்
பார்ப்பது போல் இருந்தது.

தோழியிடம் ஒப்பித்தவை நினைவுக்கு வர
  தானாக சிரிப்பு வந்து தான் இயலாதவள்
  என்று தன்னையே காட்டிக்
கொடுத்துவிட்டாள்.
நாலுபேர் மத்தியில் என்னால் எப்படி
பிராத்தனை முடியும் என்று தன்னைத்தானே
தாழ்வாக எண்ணிக் கொண்டதால்
வந்ததுதான் இந்த அவமானம்.

என்னால்...முடியாது....என்னால் முடியாது...
எதற்கு எடுத்தாலும் என்னால் முடியாது....
உங்களால் முடியாது என்றால் வேறு
யாரால் முடியும் ?
நீங்கள் முடியாது என்று விட்டுப் போன
வேலையை யாரோ ஒருவர் செய்து
முடித்துவிட்டாரே.....
அவரால் மட்டும் எப்படி முடிந்தது?

இந்தக் கேள்வியை எப்போதாவது கேட்டதுண்டா?
கேளுங்கள்...உங்கள் மனசாட்சியே உங்களுக்குப்
பதிலளிக்கும்.
' முடியாது 'என்ற சொல்லையே தூக்கி வீசுங்கள்.
' முடியும் ' என்ற ஒற்றைச் சொல் மட்டும்
உங்களோடு கூட்டு வைத்துக் கொள்ளட்டும்.
    

* நிகழ்காலத்தில் வாழ வேண்டும் :

கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது.
உண்மைதான்.
அதற்காக கடந்தகால கசப்பான நிகழ்வுகளை
நம்மோடு தூக்கிச் சுமக்க வேண்டும்
என்பதில்லை.
அவற்றை இறக்கி வைத்துவிடுங்கள்.
அவற்றையும் தூக்கிக் கொண்டுதான்
இந்த ஓட்டத்தில் பங்குபெறுவேன் என்றால்
நிச்சயமாக இந்த ஓட்டத்தில்
உங்களால் வெற்றி
பெறமுடியாது.
  
நமது மனது எப்போதும் நிகழ்காலத்தைச்
சுற்றிச் சுற்றியே வரும்....வரவேண்டும்...
சிந்தனைகள் நிகழ்காலம் சார்ந்ததாகவே
இருந்தால் மட்டுமே இனிமையான
பயணத்தை மேற்கொள்ள முடியும்.

நாளை...நாளை என்பது நீர்த்துப்
போனதாகவே இருக்கும்.

பல்லி....பல்லி என்று நண்பர் கத்துகிறார்
என்று வைத்துக் கொள்வோம்.
அடுத்த நொடி ஐயோ...அம்மா...
எங்கே பல்லி....எங்கே பல்லி...
என்று துணியைத் தூக்கிப்
பிடித்துக் கொண்டு நங்கு நங்கென்று குதிக்க
ஆரம்பித்து விடுவோம் இல்லையா ?

  நேற்று  இந்த இடத்தில் பல்லி
  இருந்தது என்று சொன்னால்...
  அங்கேயும் இங்கேயும் திரும்பிப் பார்த்துவிட்டு
  பல்லி இப்போது இல்லை என்பதை உறுதி
  செய்துகொண்ட பின்னர் அமைதியாக
  அப்படியே அமர்ந்துவிடுவோம்.
 
  நாளை பல்லி வரும்  என்று சொன்னால்....
  நாளைதானே ....
  வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் .
அப்படியா.....என்ற ஒற்றைச் சொல்லை
உதிர்த்துவிட்டுப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்
போய்க்கொண்டே இருப்போம்.

நம் செயல்கள் நிகழ்காலம் சார்ந்ததாகவே
  இருக்கட்டும். அப்போதுதான் செயல்
  வேகமாக நடைபெறும்.

பொறுப்பு வேண்டும்

  " ஒன்றே செய் ;
  நன்றே செய் ;
  நன்றும் இன்றே செய்."

ஆம்...எதுவானாலும் நீங்கள்தான் செய்ய
வேண்டும்.

படிப்பா...இதோ இப்போதே ...
படித்து முடித்துவிடுவேன்.

வேலையா..இப்போவே.  ...
செய்து முடித்த பின்னர்தான் மறுவேலை....

உதவி செய்ய வேண்டுமா ?...
இதோ ஒரு நொடியில்  வருகிறேன்.

இப்படி கொடுக்கப்பட்டப் பொறுப்புகளை
எல்லாம் உடனடியாக செய்து
முடிக்க வேண்டும் என்ற மனநிலையை
வளர்த்துக் கொள்ள  வேண்டும்.

  " தன் கையே தனக்கு உதவி "
 
  எந்த வேலையையும் நாமே செய்யும்போதுதான்
  குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியும்.
  அண்ணன் செய்வான்...
  தம்பி செய்வான் ...என்றால் ஒரு நாளும்
  செய்து முடிக்க முடியாது.
நாமே செய்யும் போது தான்
நன்றாக செய்து முடித்தேன் என்ற
திருப்தியும் கிடைக்கும்.

எப்போது பொறுப்பை நீங்கள் கையில்
எடுத்தீர்களோ செயல் கண்டிப்பாக
நடந்துவிடும்.
நல்லபடியாகவே நடந்து முடியும் என்பதை
உறுதியாக நம்பலாம்.
    
*    நேர்மறை பேச்சு:

பலசரக்கு   கடையில் போய் "வற்றல் வேண்டும் "
என்று கேட்கிறோம்.
கடைக்காரரிடம் வற்றல் இல்லை.
ஆனால் அவர் வற்றல் இல்லை என்று சொல்லி
நம்மை திருப்பி அனுப்ப நினைக்க மாட்டார்.
ஏதாவது ஒரு பொருளை வாங்க வைத்துவிட
வேண்டும் என்று நினைப்பார்.
அதனால்,
"மல்லி இருக்கிறது.
சீரகம் இருக்கிறது .
கடுகு இருக்கிறது" என்று
வரிசையாக இருக்கும் பொருட்களின்
பெயர்களைப் பட்டியலிடுவார்.

அது அவரது வியாபார தந்திரம்.

எது கேட்டோமோ அது அவரிடம் இல்லை .
  'இல்லை' என்ற சொல்லுக்குப் பதிலாக
  'இருக்கிறது' என்று நேர்மறையாகப்
பேசி வியாபாரம் செய்யும் உத்தி
வியாபாரிகளுக்கு உண்டு.

கணக்கா....கணக்குக்கும் எனக்கும்
ஆகவே ஆகாது.

ஆங்கிலமா..அதைப்பற்றி என்னிடம்
பேசவே பேசாதீங்க ...
எனக்கும் ஆங்கிலத்துக்கும் ரொம்ப தூரம்.

வரலாறா...  ரொம்ப ரொம்ப போரு....
அதைப்போய் எவன் படிப்பான்?

இப்படிப்பட்ட எதிர்மறையாகப்  பேசுவதைத்
தூக்கி வீசிவிட்டு நேர்மறை
சிந்தனைக்கு மாறுங்கள்.

ஆவதும்...ஆகாமல் போவதும் நம்
கையில் தான் உள்ளது.
குப்புற விழ...
எழும்பி நிற்க...
நிமிர்ந்து நடக்க....
என்று அத்தனை கலைகளும் நம்
கையில் உள்ளது.

பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
நேர்மறையாக இருக்கட்டும்.
கன்னியாகுமரியில் நின்று கொண்டு
இந்தியா இங்குதான் முடிவடைகிறது
என்று கூறினால் அது எதிர்மறை சிந்தனை.

கடல் பக்கம் பார்த்துக் கொண்டு நின்றால்
இந்தியா அங்குதான் முடிவடையும்.

மாறாக நிலத்தைப் பார்த்து திரும்பி நின்று
கொண்டு சொல்லிப் பாருங்கள்.

இந்தியா கன்னியாக்குமரியில்
இருந்துதான் தொடங்குகிறது
என்றுதான் சொல்லமுடியும்.
இதுதான் நேர்மறை சிந்தனை.

முடிவில் இருந்து அல்ல.
  தொடக்கத்திலிருந்து நமது
  சிந்தனை உதயமாகட்டும்.
    
*    உயர்வான எண்ணம்:

" உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
  தள்ளினும் தள்ளாமை நன்று"
  என்றார் வள்ளுவர் .

 
  நம் எண்ணம் எப்போதும் உயர்வானதாகவே
  இருக்கட்டும்.
 
  "நீங்கள் பலவீனமாவர்கள் என்று
   எண்ணிக் கொண்டிருந்தால் 
   பலமற்றவர்களாகவே ஆகிவிடுவீர்கள்.
  பலம் பொருந்தியவர்கள் என்று
  எண்ணினால் பலமுடையவர்கள் ஆகிவிடுவீர்கள்."
  என்றார் விவேகானந்தர்.
 

  நம்மை பலமுடையவர்களாக்குவதும்
  பலவீனர்களாக்குவதும் நம் எண்ணங்களே.
 
 
*    கானகம் சொல்லித் தரும்  பாடம்:

  எறும்பு என்னை மிதித்து விடுவார்களே
  ஒதுங்கி ஒதுங்கிப் போனால் எப்படி
  இரை தேட முடியும்?
 
  புலி கொன்றுவிடுமே என்று நினைத்துக்
  கொண்டே இருந்தால்  மான்களால்  காட்டில்
  துள்ளிக் குதித்து விளையாட  முடியுமா?
 
  என் தேனடையை எடுத்துச்சென்றுவிடுவார்களே
  நாங்கள் மெனக்கெட்டு பூவுக்குப் பூ பறந்து
  சென்று எதற்குத்  தேனை
  சேமித்து வைக்க வேண்டும்?
  என்ற நினைப்பு இருந்திருந்தால் தேனீக்களால்
  தேனடைகளில் தேனை சேமித்துதான் வைக்க
  மனம் வருமா ?
 
  எல்லாம் நன்றாய் நடக்கும் என்ற ஒரு
  நம்பிக்கையில்தான் விலங்குகள்
  தமது அன்றாட செயல்களில் ஈடுபடுகின்றன.
  விலங்குகளுக்கே அந்த நம்பிக்கை
  இருக்கும்போது ஆறறிவுள்ள
  நமக்கு இருக்க வேண்டியது
  அவசியம் இல்லையா ?
 
*நல்ல நம்பிக்கை:

    " எது நடந்ததுவோ அது நன்றாகவே
    நடந்தது.
    எது  நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது .
    எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்." 
    

இதற்குமுன் இதைச்செய்ததே இல்லை
என்பதற்குப் பதிலாக புதிதாக ஒரு
விசயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள
  வாய்ப்பு கிடைத்துள்ளது.
  அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக்
  கொள்வேன் என்று  புதிய கோணத்தில்
  நமது சிந்தனை செல்லட்டும்.
  நேர்மறை சிந்தனையோடு
  பயணத்தைத் தொடங்குவோம்.
  பயணம் இனிமையானதாகவே இருக்கும்
  என்று நம்புவோம்.
  எல்லா நாளும் இனிய நாளாகவே அமையும்.
 
     👍               👍             👍                  👍               👍           👍          👍
     
    
      

Comments

  1. ஊக்கம் ஊட்டும் தூண்டுகோலாக இருந்தது இந்தப்பதிவு.மிக அருமை.

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular Posts