ஒரு க்ளூ கொடுக்க முடியுமா?

                        செய்தி சொல்லும் சேதி -8


                               ஒரு   க்ளூகொடுக்க முடியுமா?
                                      
"அக்கா அக்கா ....
ஒரு க்ளூ கொடுங்கக்கா....ப்ளீஸ்
ஒரு க்ளு கொடுத்தால் உடனே
கண்டு பிடிச்சுருவேன்"

"இதுவரை நான்கு க்ளூ
கொடுத்தாயிற்று....
இதற்கு மேலும் என்னால் க்ளூ
கொடுக்க முடியாது.
தெரியாது என்றால் தெரியாது
என்று சொல்லேன். இதற்குபோய்
ஒரு க்ளூ கொடு...ஒன்பது க்ளூ கொடு
என்று கெஞ்சுறா....?"

"கொஞ்சம் புரியும்படி  க்ளூ
கொடுத்தால் சட்டென்று பதில்
சொல்லிருவேன்."

"தெளிவாக சொல்லணும் என்றால்
விடுகதைக்கான விடையை 
நேரடியாக நானே சொல்லி விடலாமே
இதற்குப் போய் க்ளூவா?
இப்படி க்ளூ கொடுங்கள் க்ளூ கொடுங்கள்
என்று கேட்கிறியே.
க்ளூ என்றால் என்ன?என்று
தெரியுமா ?"


"க்ளூ என்றால்  துப்பு கொடுத்தல்
என்று பொருள்.
வேண்டுமென்றால் கூகுளில் தேடிப்பார்த்து
நான் சொல்வது சரியா? தவறா? என்று
சரி பார்த்துக் கொள்ளுங்கள்."

" நீ கூகுளில் பார்த்து விட்டாய் அல்லவா?
 அப்படியானால் சரியாகத்தான் இருக்கும்."
 
"இப்போதாவது  க்ளூ கொடுப்பீங்களா
இல்லையா?"

"க்ளூ என்ன கையிலா இருக்கிறது
உடனடியாக கொடுப்பதற்கு?"
 

"என்ன சொல்றீங்க.....
எனக்கு ஒன்றுமே  புரியவில்லை."

"உண்மையைத்தான் சொல்கிறேன்.
துப்பை எல்லாம் என்னால்
கையில் தூக்கிக் கொடுக்க முடியாது.
வேண்டுமென்றால் நீயே போய்
கடையில் வாங்கிக்கொள்."

"என்னது க்ளூவைக் கடையில்
வாங்கணுமா?
அப்படியானால் உங்களுக்கு
க்ளூ கொடுக்கத் தெரியாதா?"

"க்ளூ  நன்றாகவே கொடுப்பேன்.
அதற்கு முன்னால் நான் ஒரு
கதை கூறுகிறேன்.கேள்."


"க்ளூவுக்காக ஒரு கதையா?
சரி சொல்லுங்கள் .அதிலிருந்தாவது
ஏதாவது க்ளூ கிடைக்கிறதா
என்று பார்ப்போம்.  "


"கிரேக்க நாட்டில் ஒரு மன்னர்
இருந்தார். அவருக்கு ஒரு ஆண்மகன்
பிறந்தான். ஆசையோடு ஓடிப்போய்
மகனைப் பார்த்தார் மன்னர்.
பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போய் 
நின்றுவிட்டார். "

"ஏன்? என்னாயிற்று?"

"அவன் உடல்தான் மனித உடலாக இருந்தது.
தலை ஒரு காளையைப் போல் இருந்தது."

"அட பாவமே....
அரக்கனைப் போல் இருந்தானா?"

"ஆமாம். உருவம்தான் அரக்கனைப்
போல் இருந்ததென்றால் வளர வளர 
அவன் குணமும் அரக்கனைப் போலவே
மாறிக் கொண்டு வந்தது.
அவனால்  நாட்டு மக்களுக்கு
பெரிய தொல்லை ஏற்பட்டது."

"அப்புறம்...."

"அப்புறம் என்ன ? 
நாட்டு மக்களுக்கு மகனால் தொல்லை.
இப்படியே விட்டு வைத்தால்
தனக்கு பெரிய சிக்கலாகி விடும் என்று
நினைத்தார் மன்னர்."

"அதனால் அரக்கனை  மன்னர் கொன்று
விட்டாரா?"

"அதெப்படி முடியும்?
ஆயிரம்தான் இருந்தாலும் பெற்ற
பிள்ளையாயிற்றே.....
அதனால் அவனை வெளியில் வரமுடியாத
ஒரு பாதாள அறையில்
அடைத்து வைத்தார்.
அந்த அறைக்குள் போனவர்கள்
எவரும் திரும்பி வரமுடியாது. அவ்வளவு
சிக்கலான பாதை உள்ள அறை அது."


"அப்புறம் அவன் பட்டினியாகவே
செத்திருப்பானே?"

"அதுதான் இல்லை. அறைக்குள் அடைத்து
வைத்தாரே தவிர அவனை மன்னர்
முற்றிலுமாக வெறுக்கவில்லை.
அவன் சாப்பிடுவதற்காக ஏதேன் நகரத்திலிருந்து
நாளும் ஏழு ஆண்களையும் ஏழு பெண்களையும்
அனுப்பி வைத்தார் ."

"இதெல்லாம் ரொம்ப அநியாயமாக
இருக்கு  இல்ல..."

"அநியாயம் தான் அதனால்தான் 
அந்த அரக்கனைஅழிக்க 
 தீசஸ் என்ற இளைஞன்
முன்வந்தான்.
இந்த தீசஸ் யார் என்றால்
அந்த அரக்கனுடைய
தங்கையின் காதலன்தான் இந்த
தீசஸ் "

"அட பாவமே....இதென்ன 
புதுக்கதையாக இருக்கிறது?
தன் அண்ணனைக் கொல்ல
தன் காதலனே செல்ல ஒரு தங்கை 
சம்மதித்தாளா?
இதென்ன கொடுமை?"

"..காதல் கண்ணை 
மறைக்குமல்லவா?
இப்போது அவள் கண்ணில்
தெரிவதெல்லாம் அவள் காதலன்
மட்டுமே!
அதனால் அரக்கனைக் கொன்றுவிட்டு
காதலன் பத்திரமாக வந்து
சேர வேண்டுமே என்ற கரிசனம்
மட்டுமே அவளுக்குள்  இருந்தது.
திரும்பி வருவதற்கு வழி
தெரிய வேண்டுமே. அதனால்
காதலன் கையில் ஒரு க்ளூ 
கொடுத்துவிட நினைத்தாள்."

"க்ளூ கொடுத்தாளா ?
என்ன க்ளூ?....என்ன க்ளூ?."
 
"நூல்கண்டு கொடுத்தாள் .
கையில் ஒரு நூல்கண்டை
கொடுத்து போகும் வழியில் எல்லாம் அந்த
நூல்கண்டிருந்து நூலை விட்டுக்கொண்டே
செல்லும்படி கூறினாள்."

"ஓ....நல்ல ஐடியா ? 
வரும்போது நூலைப் பிடித்துக்கொண்டே
வந்துவிடலாம் இல்லையா?"

"அப்படியேதான் நடந்தது.
சென்றான். அரக்கனை கொன்றான்.
நூலைப் பிடித்துக்கொண்டே 
வெற்றியோடு திரும்பி வந்து சேர்ந்தான்."

 "இங்கே நூல்கண்டு க்ளூவாகிப் போனது
இல்லையா? "

"சரியாக  க்ளூவைக் கண்டுபிடித்துவிட்டாயே...
அப்படியானால் க்ளூ என்ற சொல்லுக்கான
பொருள் என்ன என்று 
இப்போது சொல்லு பார்ப்போம்."

"அதுதான் முன்னமே சொன்னேனே...
க்ளூ என்றால் துப்பு கொடுத்தல் என்று..."

"ஆங்கிலத்தில் க்ளூ என்ற
சொல்லுக்கான பொருள்  என்ன  தெரியுமா?"

"ம்....ம்... தெரியலியே..."

"க்ளூ என்றால் நூல்கண்டு
என்று பொருள்.
 காதலி நூல்கண்டை ஏன்
கையில் கொடுத்து அனுப்பினாள் 
என்பது இப்போது புரிகிறதல்லவா!"

"க்ளூ என்றால் நூல்கண்டா?
எனக்கும் ஒரு க்ளூ  தருகிறீர்களா?"

" க்ளூ தருவது இருக்கட்டும்.இனி  க்ளூவுக்கான 
பொருள் காலத்துக்கும் மறக்குமா என்ன ?
க்ளூவின் பொருளும் மறக்காது.
க்ளூ பிறந்த கதையும் மறக்காது."
 
இதுதான் இன்றைய செய்தி 
சொல்லும் சேதி.

வரட்டா....

Comments

  1. Really superb... admired on your way of teaching... nandri

    ReplyDelete

Post a Comment

Popular Posts