படிப்போம்...படிப்போம்...படித்துக்கொண்டே இருப்போம்
படிப்போம்...படிப்போம்...படித்துக்கொண்டே இருப்போம்
"கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு "
"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் கல்வி "
போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்.
படித்த ஆசிரியரைவிட படிக்கின்ற ஆசிரியர்கள் வேண்டும் என்கின்றனர் கல்வியியலாளர்கள்.
ஆசிரியர்கள் வாயிலிருந்து விழும் ஒவ்வொரு சொல்லும் நாளை விருட்சமாக வளர்ந்து நிற்கும்.
ஆதலால் நாளும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
கற்றவற்றை மாணவர்கள் மத்தியில் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
"அரைமணி நேரம் பாடம் நடத்த இரண்டுமணி நேரமாவது படித்தல் வேண்டும் "என்கின்றனர் கல்வியிலார்.
கூர்தீட்டப்படாத ஆயுதம் துருபிடித்து பயன்படுத்த லாயக்கற்றுப் போய்விடும்.
அது போன்றதுதான் கல்வியும்.
நாளும் புத்தகங்களைப் படித்து நம்மை கூர்தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் படித்தவை மாணவர்களுக்கு பயன்படத் தக்கதாய் இருக்க வேண்டும்.
மடங்கொன்று அறம் பயப்பதாய் இருத்தல்தான் கல்வி .
ரஷ்ய புரட்சிக்குப் பின்னர் லெனின் செஞ்சதுக்கத்திலே உரையாற்றுகிறார்.
" உலக அரங்கில் அமெரிக்காவைவிட ரஷ்யா வல்லரசு நாடாக வேண்டும் .
அதற்காக நாம் ஒவ்வொருவரும் நம் கடமையை செவ்வனே செய்ய வேண்டும் "என உரையாற்றினார் லெனின்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு மாணவன் எழும்பி "அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்" என கேட்கிறான்.
" படியுங்கள் "என்கிறார் லெனின்.
மாணவனுக்கு படியுங்கள் என்றாரே நமக்கு என்ன சொல்லப் போகிறார் என்று அறிய "நாங்கள் என்ன செய்ய வேண்டும் "என்று கேட்டார் ஒரு பெண்.
புன்முறுவலோடு அந்த பெண்ணைப் பார்த்த லெனின்,"படியுங்கள்" என்றார்.
அடுத்து ஒரு பெரியவர் எழும்பி" நாங்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் "என்று கேட்டார்.
அவருக்கும் "படியுங்கள் "என்றே பதிலளித்தார் லெனின்.
அப்படியானால் படிப்பது இளம்பிராயத்தினருக்கு மட்டும் உரியதல்ல.
எல்லா வயதினரும் எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் சாதனையாளர்களின் கருத்து.
தன்னால் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தமைக்கு காரணம் தன் ஆசிரியர் அரிஸ்டாட்டில் மட்டும்தான் என்று பெருமைபட்டுக்கொள்வார் அலெக்சாண்டர்.
ஒருமுறை அரிஸ்டாட்டிலிடம் தங்களைப்போன்ற சிறந்த ஆசிரியர் எனக்கு வாய்க்கப் பெற்றமையால்தான் என்னால் இத்தனை நாடுகளை வெல்ல முடிந்தது.
" உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் .நான் செய்து தருகிறேன் "என்றாராம் அலெக்சாண்டர் .
"ஒரு நூலகம் மட்டும் அமைத்துத் தந்தால் போதும் "என்றாராம் அந்த மாமேதை.
மாமேதைகள் என்று அறியப்பட்டவர்கள் எல்லாம் ஒருபோதும் தாம் படிப்பதை நிறுத்தியதே இல்லை.
அறிஞர் அண்ணாவுக்கு அறுவைசிகிச்சை நடைபெற இருந்த நேரம்.
தன்கையில் வைத்திருந்த புத்தகத்தைப் படித்து முடிக்காததால் அறுவை சிகிச்சையையே மறுநாளைக்கு மாற்றி வைக்கச் சொன்னாராம் அண்ணா.
நம் எல்லோருக்கும் பகத்சிங்கை ஒரு விடுதலைப் போராட்ட வீரராகத்தான் தெரியும்.
தூக்குக்கயிற்றை முத்தமிடும்வரை படித்துக் கொண்டிருந்தவர் பகத்சிங்.
தூக்கிலிடும் நாள்வரை லெனின் எழுதிய புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாராம்.
விடியற்காலை தூக்கிலிடுவதற்காக ஜெயிலர் போய் பகத்சிங்கை எழுப்ப செல்கிறார்.
அங்கே பகத்சிங் கையில் லெனின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்.
"ஐயா, கொஞ்சம் நில்லுங்கள் .நான் இந்த புத்தகத்தின் கடைசி வரிகளைப் படித்துவிட்டு வருகிறேன் "என்று தன் கடைசி நிமிடங்களிலும் எக்ஸ்யூஸ் கேட்டாராம் பகத்சிங்.
"தூக்குமேடை போகும்வரை உன்னால் எப்படி இப்படி வாசித்துக் கொண்டே இருக்க முடிகிறது "என்று கேட்டு வியந்தாராம் ஜெயிலர்.
வாசிப்பின்மீது கொண்ட ஆவல்தான் பலரின் வாழ்க்கை மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
எப்படி ஒரு நல்ல பேச்சாளர் அத்தனை பார்வையாளர்களையும் தன் பேச்சால் கட்டிப்போடுகிறாரோ அப்படி ஒரு ஈர்ப்பு புத்தகங்களுக்கும் உண்டு.
டால்ஸ்டாய் எழுதிய புத்தகம்தான் சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை ஒரு மகாத்மா காந்தியாக நமக்குத் தந்தது.
மகாத்மாவின் சத்திய சோதனைதான் ஒரு மார்ட்டின் லூதரை உருவாக்கியதாக அவரே கூறியுள்ளார்.
எற்றர்னல் வெலாசிட்டி என்ற புத்தகம்தான் அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியாக வருவதற்கு காரணமாக அமைந்ததாம்.
தலை தாழ்த்திப் பிடித்தாலும் மேல் நோக்கிதான் எரியும் தன்மை கொண்டது தீ.
அது போன்றதுதான் படித்தலும்.
புத்தகங்கள் முன்னால் எத்தனை மணி நேரமும் தலை குனிந்திருக்கலாம்.
தப்பே இல்லை. அது நம்மை தலைநிமிர வைக்கும்.
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.
" பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது" என்றார் காந்தியடிகள்.
"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் "என்கிறது உலக நீதி.
கற்றல் பிறப்புமுதல் இறப்புவரை நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் கற்றதும் பெற்றதும் கைமண்ணளவு மட்டுமே.
இன்னும் கற்க வேண்டியவை ஏராளம் ஏராளம்.
தாராளமாய்க் கொட்டிக் கிடக்கிறது தமிழ் பொக்கிஷங்கள்.
நல்லதோர் வீணை செய்து நலங்கெட புழுதியில் வீசலாமா?
நல்ல நல்ல புத்தகங்கள் வாசிக்கப்படாமல் கிடக்கலாமா?
" படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல் "என்றார் பிளேட்டோ.
" நான் இறந்த பின்னர் என் உடல் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்.
என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள் "என்றாராம் ஜவகர்லால் நேரு.
சாதனையாளர்கள் அனைவரும் தம் மூச்சுக்காற்று நிற்கும்வரை தம் படிப்பை நிறுத்தியதே இல்லை.
நாமும் படிப்போம்..படிப்போம்...படித்துக் கொண்டே இருப்போம்.
It encourages my attitude of reading veryuch.
ReplyDelete