அப்பாவும் மகனும்

அப்பாவும் மகனும் 


"நான் கேட்டுகிட்டே இருக்கிறேன்.
நீ பதிலே சொல்ல மாட்டேங்குற..."
உரக்கக் கத்தினார் அம்மா.

திரும்பிப் பார்த்துப் சிரித்தான் 
பார்த்திபன். இந்த அம்மாவே
இப்படித்தான்.
திடீரென்று இப்படித்தான் 
உரக்கக் கத்துவாங்க.
அம்மாவை எப்படி ஆப் பண்ண
வேண்டும் என்று பார்த்திபனுக்குத்
தெரியும்.
அதனால்தான் இந்த நமட்டுச்
சிரிப்பு.

"இது என்ன சிரிப்பு....?
நான் கேட்பது உனக்குச் சிரிப்பா
இருக்கு இல்ல..."
கோபமாகக் கேட்டார் அம்மா.

வாயைப் பொத்திக்கொண்டு
 சிரித்தபடி திரும்பி
நின்று கொண்டான் பார்த்திபன்.

"திரும்பி நின்னுகிட்டா.....
கேட்கமாட்டேனா?
இப்போ நீ என்னதான் சொல்லப் போற?"
தோளைப் பிடித்து உலுக்கித்
திருப்பியபடி கேட்டார் அம்மா.

"உனக்கு இப்போ என்ன வேணுங்குற...?"

ஒரு பத்து பவுனு நகை
வேணுங்கிறேன்.

"அட ....எங்க அம்மாவுக்குக்கூட
ஜோக் அடிக்க தெரியுது பாருங்க"

"உன்னை அடிக்காம வளர்த்துட்டேன் பாரு.
நீ இதுவும் சொல்லுவா இதுக்கு மேலேயும்
சொல்லுவா."

"வாங்க...வாங்க அடியுங்க...
நல்ல அடியுங்கள்...
உங்க கை வலிக்கும் வரை அடியுங்க..."

"பேச்சை மாத்தாத....
கேட்ட கேள்விக்கு இன்னும் பதில்
வரல..."


"அப்பா காலையிலேயே கேட்டாங்காங்க
இல்ல ..".அதற்குப் பதில் வேணும்.

"அதுதான் காலையிலேயே முடிந்து போன
விசயம். அதை மறுபடியும் 
எதற்கு கிளறுற..."


"நான் கிளறுறேனா? 
உன் அப்பா இப்போ வந்து உன்
மவன் என்ன சொன்னான் என்று
கேட்பாறே..அதற்கு நான் என்ன பதில்
சொல்லுவேன்.?"

"பதில் சொல்லாத...."

"என்னைப் பார்த்தா உனக்கு எப்படித்
தெரியுது?"

"என் அம்மா மாதிரி தெரியுது.."

"இதுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை..."
சொல்லிவிட்டு சிரித்துவிட்டார் அம்மா.


"இப்போதுதான் என் அம்மா மாதிரி
இருக்கிறா....."

"ஏய் ....பேச்சை மாத்தாத....
இப்போ பிடிச்சிருக்கா பிடிக்கலியா?
இரண்டுல ஒண்ணு சொல்லிட்டுப் போ."

"பிடிக்கல..பிடிக்கல...பிடிக்கல...
போதுமா?"

"அதுதான் ஏன் என்கிறேன்?"

"ஏன்.... எதுக்கு ...என்கிறது எல்லாம்
சொல்லிட்டு இருக்க முடியாது.
பிடிக்கல என்றால் விடுங்களாம்."

"அப்போ அப்பாவுக்கு......"

"அப்பாவுக்குப் பிடிச்சிருக்கா என்பதை
அப்பாட்டதான் கேட்கணும்."

"நக்கலு...."


"நக்கலுமில்ல...பிக்கலுமில்ல"

"சரியா பதில் சொல்லிட்டுப் போடா."

"சொல்லமுடியாதுன்னா 
சொல்லாம விட்டுருங்களாம்.
பிறகு எதற்கு அப்பாவுக்குப்
பதில் சொல்லிட்டுப்போ அப்பாவுக்குப்
பதில் பதில் சொல்லிட்டுப்போ என்று
என் உயிரை வாங்குறீங்க."

"இதுதான் உன் பதிலா?

"நீங்க என்ன லுசா...
தமிழில்தான  சொல்லுறேன்.
அப்பவுமா புரியல.."

"புரியலப்பா...நான் படிக்காதவ.
நீ சொல்லுவதெல்லாம் எனக்கு புரியுமா?
நான் லூசுதான்...."
முந்தானையால்  கண்களைக் கசக்கிக்
கொண்டார் அம்மா.

"இப்போ நான் என் சொல்லிட்டேன்னு
அழுறீங்க...."
அதே முந்தானையால் அம்மாவின்
கண்ணீரைத் துடைத்து விட்டான்
பார்த்திபன்.

அதற்குள் அப்பா வந்துவிட...
"என்ன தாயுக்கும் மகனுக்கும் இடையில
ஓடிட்டு இருக்கு...?"என்று கேட்டபடியே அப்பா
வீட்டிற்குள் வந்தார்.

"ஒன்றுமில்லை..."என்று சுதாகரித்தபடி
பதிலளித்தார் அம்மா.

"ஒன்றுமில்லாததுக்கா கண்ணைக்
கசக்கிட்டு நின்ற.."

"கண்ணுல தூசி விழுந்துட்டு...
அதுதான் உறுத்திக்கிட்டே இருக்கு"

"நான் நம்பணும்..."

"நீங்கள் என்றைக்கும் தான்
நான் சொன்னதை நம்புனீங்க...."

"நம்பாமதான முப்பது வருசமா
குடித்தனம் பண்ணுறேன்"

இப்போ என்ன வேணும் உங்களுக்கு?

"உன் மகன் என்ன
சொன்னான்னு தெரியணும்?"

"ஏன்...?..உங்க முன்னால் தானே
நிற்கிறான் . என்ன சொல்றா
என்று கேட்க வேண்டியதுதானே!"

"எங்களுக்குக் கேட்கத் தெரியும்?
எடக்கு மடக்கா பேசாத போ...."
என்றபடி பார்த்திபனைப் பார்த்து,
"ஏய்...அம்மா சொன்னாளா?"
என்று கேட்டார் அப்பா.

அப்பாவின் வார்த்தைகளைக்
காதிலேயே வாங்கிக் கொள்ளாதவனாக,
"அம்மா...நான் போயிட்டு வாறேன்...
சிரித்தபடியே நழுவினான்

"அப்பாவுக்கும் பதில் சொல்லிட்டுப் போ..."
என்றார் அம்மா.

அப்பாவுக்குத்தானே...
"போயிட்டு வாறேன்....."
என்று சொல்லியபடி
வெளியேறினான்.


"என்னடி அவன் அப்படி
சொல்லிட்டுப் போறான்..."

"வேறு எப்படிச் சொல்லணும்னு
நினைக்கிறீங்க...."

"கொஞ்சமாவது மரியாதை
இருக்கா?
அதுக்கு நின்று பதில் சொல்லிட்டுப்
போக வேண்டியதுதான..."

"அவனாச்சி நீங்களாச்சி
உங்க கண்ணாமூச்சு
விளையாட்டுக்குள்ள 
என்னை இழுக்காதுங்க"
கையெடுத்துக் கும்பிட்டபடி
வீட்டுக்குள் சென்றார் அம்மா.









Comments

Popular Posts