தேடிச் சோறு நிதந் தின்று

தேடிச் சோறு நிதந் தின்று....

வயிற்றுக்காகத்தானே இந்தப்பாடு
என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எண்சாண் உடம்பில் ஒரு சாண்
வயிறே பிரதானம் என்று
சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டிருக்கிறோம்.

அதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
வாழ்க்கை என்றால் எப்படி 
இருக்க வேண்டும்?
 பிறந்தோம்...இருந்தோம்...
வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாது.
எந்தக் கவலையும் இல்லா வாழ்க்கை 
வாழணும் .

கவலை இல்லா வாழ்க்கை
வாழ வேண்டும் என்று ஆசைதான்.
ஆனால் இவை எல்லாம் நடக்குமா?


நல்வினையோ தீவினையோ எல்லாம்
இறைவன் செயல்.
நல்வினை எல்லாம் இறைவன் செயல்.
தீவினையுமா...?
தீவினையும் அவன் செயல்
என்றால்
சற்று நெருடலாக இருக்கிறதே
என்று கேட்கத் தோன்றும்.

அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க
என்னதான் வழி?

ஒன்றும் செய்யமுடியாது.
அதுவும் இறைவன் கையில்தான் இருக்கிறது.

இறைவனிடம் முரட்டுக் பக்தன்
பிடிவாதம் பிடிப்பதுபோல பிடிவாதமாகக்
கேட்டால் கண்டிப்பாக இறைவன் கேட்ட வரம்
அருளுவார் .நன்மை வேண்டும் என்று
விடாப்பிடியாக கேட்டால் நன்மை
கிடைக்கும்.

இது இறை நம்பிக்கை உள்ள
அனைவரும் ஒத்துக்கொள்ளும் 
உண்மை.
நடந்ததா... ? நடக்கவில்லையா ...?என்பது
அவரவர்க்குத்தான் தெரியும்.

இந்த நம்பிக்கை எல்லா காலங்களிலும்
எல்லா தரப்பு மனிதர்களிடமும்
இருந்திருக்கிறது.

இதற்கு இலக்கியங்களில் பல 
முன்னுதாரணங்கள்
உண்டு.
பாரதி மட்டும் விதிவிலக்கா என்ன?

அவருக்கு இறைவனிடம் மென்மையாகப்
பேசவும் தெரியும். முரட்டுப் பிடிவாதம் 
பிடித்து வரம் கேட்கவும் தெரியும்.

அப்படி பாரதி இறைவனிடம் வரம் கேட்டப்
பாடல்கள் பல உண்டு.
 இதோ உங்களுக்காக ஒருசில வரிகள்.


"தேடிச் சோறுநிதந் தின்று- பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி  மனம்
 வாடித் துன்பமிக உழன்று -பிறர் 
 வாடப் பல செயல்கள் செய்து -நரை 
 கூடிக் கிழப்பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல 
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை
நேரே இன்றெனுக்குத் தருவாய்- என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்  - இனி
என்னைப் புதிய வுயிராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் "

 -  பாரதி

இரண்டு மூன்றுமுறை படிக்கத் தூண்டும்
வரிகள்.
படிக்கும்போதே பாரதியின் எழுச்சி
கொண்ட உணர்வு நமக்குள் ஏதோ ஒரு 
மாற்றத்தைக் கொடுப்பதை உணர
வைத்த வரிகள்.

பாரதிக்குத்தான் தன் மீது எவ்வளவு 
பெரிய தன்னம்பிக்கை!

முதல் எட்டு வரிகளை மறுபடியும்
வாசித்து விட்டு மறுபடியும்
கட்டுரைக்கு வருவோம்.

நித்தம் நித்தம் வேளாவேளைக்குச் சாப்பிட்டு 
வயிற்றை வளர்ப்பதா வாழ்க்கை?

இல்லை அல்லவா?

அப்படியானால் வேறு என்னதான் 
வாழ்க்கை என்கிறீர்கள்?

கதைபேசி காலத்தை
வீணிலே கழிப்பதா?

வீணாய்க் கழிப்பது 
எப்படி நல்ல வாழ்க்கையாக முடியும்?

அப்புறம்....

நாமும் துன்பத்தில் இருந்து பிறரையும்
துன்பப்பட வைப்பதா வாழ்க்கை?

யார் சொன்னது?

அதுவும் இல்லை என்றால் வாழ்க்கை
என்பதுதான் என்ன?

இப்படியே சாதாரணமாக வாழ்ந்து
கிழப்பருவம் எய்தி சாவதுதான் வாழ்க்கையா?

இப்படி கேட்பது யார்?
பாரதியார் தான் இறைவனிடம் இப்படி
அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கிறார்.

அப்படிக் கேட்பதோடு விட்டு விட்டாரா?
அடுத்த வரி என்னை நீ என்னவென்று நினைத்தாய்?
என்று முரட்டுத்தனமான கேள்வியை
முன் வைத்து பிடிவாதமாக
பதில் வேண்டும் என்கிறார்.


 ஒரு சாதாரண மனிதனைப் போல்
வாழ்ந்து சாவேன் என்று நினைத்தாயோ?
மாட்டேன் என்கிறார்.

பாரதியின் மன உறுதி, நம்பிக்கை
எல்லாம் புரிகிறது.

வேறு என்னதான்  வேண்டுமாம்?

வரம் வேண்டுமாம்.....வரம்.
அதுவும் எப்படிப்பட்ட வரம் வேண்டும் என்று 
கேட்கிறார் பாருங்கள்?

சாதாரண மனிதனாக வாழ்ந்து
என் வாழ்க்கை முடிந்து போகக் கூடாது.
முன்னோர் செய்த தீவினைகள் எதுவும்
என்னை வந்து சாராதிருக்க வேண்டும்.
என்னைப் புதிய மனிதனாக மாற்றிவிடு.
புதியவனாக மாற்றிவிட்டால்
மட்டும் போதாது.

மனம் கவலையற்றதாக இருக்கச்செய்.

ஏன்?எதற்கு? 
என்று கேட்கிறாயா?
கவலையற்ற மனிதனுக்குக் தான் அறிவு
வேலை செய்யும்.அறிவு
வேலை செய்தால்தான்
மனதில் தெளிவு பிறக்கும்.
மனதில் தெளிவு பிறந்தால்தான்
மகிழ்ச்சி மனதில் குடிகொள்ளும்.

அப்போதுதான் ஓர் உயிர்ப்புள்ள வாழ்க்கை 
வாழமுடியும். 

அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கான
வரம் கொடு என்று
பிடிவாதமாகக்
கேட்கிறார் பாரதி.

எவ்வளவு உயிர்த்துடிப்புள்ள 
பாடல் வரிகள்!!

நல்லதோர் வீணை செய்தே அதை
நலம்கெட புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி என்னை
சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ? இந்த மாநிலம்
பயனும் வாழ்வதற்கே?"











.


  


Comments

Popular Posts