எங்கே நிற்கிறேன்

எங்கே நிற்கிறேன் 


2024 ஆம் ஆண்டின்

கடைசி வாரத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஓடிய கால்கள்

சற்றே ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கின்றன.


நான் எங்கே நிற்கிறேன்?


எனக்குள் எழுந்த இந்தக் கேள்வி

உங்களுக்குள்ளும் எழுந்திருக்கும்.

எல்லோருக்குள்ளும் நான் எங்கே

நிற்கிறேன் என்பதுதான் இன்று முதன்மை கேள்வியாக முன் வந்து விடை கேட்டு நிற்கும்.


எங்கே நிற்கிறேன் என்றால்....

ஒரே வார்த்தையில் விடை கூறிவிட

முடியுமா?


கடந்து வந்த பாதை

 கண்முன் விரிகிறது.

காட்சிகளாக வந்து கை குலுக்கி

வாழ்த்தி நிற்கிறது.


நானா...நானா இங்கே நிற்கிறேன்.

நினைத்தாலே இனிக்கும் 

நிகழ்வுகள் நெஞ்சைத் திக்குமுக்காட 

வைக்கின்றன.

உடன் பயணித்த நல்ல மனிதர்கள்

மறக்க முடியாத நல்ல நினைவுகளோடு

இங்கே வந்து நிற்கிறேன்.

மகிழ்ச்சி.

இப்படித்தான் அனைவர் மனநிலையும்

இருக்குமா?


மாறுபட்ட  சூழ்நிலைகள்

வேறுவேறு மனநிலையில்

இருக்கும் மனிதர்களோடு நடந்த

பயணம் ,

வசதி வாய்ப்புகள்,

பணம் என்று எத்தனையோ

காரணிகள் கடந்து வந்த பாதையில் குறுக்கே வந்து கோடு போட்டு 

வைத்திருந்திருக்கும்.


அதனால் சிலர் கடந்துவந்த

பாதையும் கடக்க எடுத்துக்கொண்ட

முயற்சியும்  கரடு முரடாக

இருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்..


இப்படி நாம் ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு திசையை நோக்கிய

பயணம்.

கடைசியில் வந்து நிற்கும் இடமும் ஒரே இடமாக இருக்காது.

தர வரிசைப் பட்டியலில் 

நமக்கான இடமும் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக இருக்கும்.


பயணித்த பாதையை ஒருமுறை

திரும்பிப் பார்ப்போம்.


எதையோ தேடுகிறேன்.

ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.

சமவெளியில் நேராக ஓடி வந்திருந்தால்

கொஞ்ச தூரமாவது தெரிந்திருக்கும்.

அப்படியானால் நான் சமவெளி வழியாக வரவில்லையா?


எத்தனை இடறலான பாதைகள்?


எத்தனை இடங்களில் வளைந்து

நெளிந்து ,முட்டி மோதி , வீழ்ந்து எழுந்து ஓடும் காட்டாற்று  நீராக ஓட்டம்.



இடையிடையே கற்பாறை நடுவில்

நின்று  கடக்க விடாமல் 

கால்கள் தடுமாற்றம்.

தடுமாற்றத்தைத் தவிர்க்க

தடம் மாற்றிப்  போனால்

அங்கங்கே நெருஞ்சி முட்கள் நின்று

அச்சுறுத்த ...

நெருஞ்சி முள் காலில்  குத்தி

விடாதபடி பார்த்துக் கால் வைக்கிறேன்

என்று சப்பாத்திக் கள்ளி மீது

கால் வைக்க....

இப்படி கலங்க வைத்த

நிகழ்வுகள் எத்தனை! எத்தனை!

ஆனாலும்

எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் 

வந்து கொண்டாட வைத்து

என்னை பின் தங்கி விடாமல்

முன்னேற வைத்தது.

குதுகலமாக தோளில் 

கை போட்டு கூடவே 

அழைத்து வந்து இங்கே வந்து

நிறுத்தியிருக்கிறது.


என்னோடு இந்த ஆண்டைத் தொடங்கியவர்கள் எத்தனைபேர்

இப்போது நான் வந்து நிற்கும்

இந்த இடத்திற்கு வந்து சேர்த்திருக்கிறார்கள்.?

அன்பானவர்களோடு கடைசிவரை கை கோத்து நடக்கும் வாய்ப்பைத் தவறவிட்டு

கலங்கிய  உள்ளத்தோடுதான்

இந்த இடத்தில்  வந்து

நின்று கொண்டிருக்கிறேன் 

என்று கண்ணீரோடு 

நிற்போர் சிலர்.


காய்ந்த மரத்தின் மீது கல்லடிபடுவது போல்

எத்தனை கல்லடிகள் சொல்லடிகள்.

.

ஆனாலும் பட்ட எந்த வேதனைகளும்

வீண் போகவில்லை.


எதிர்பாராத மகிழ்ச்சி.

நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சி.


எப்படி வந்திருந்தாலும்

இந்த இடத்தில் நிற்பதற்கான 

வாய்ப்பை வழங்கிய

இறைவனுக்கு

இப்போது நன்றி சொல்லியே

ஆக வேண்டும்.


நன்றி சொல்ல வேண்டிய இன்னும் எத்தனையோ பேர் நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்மோடு இருந்திருக்கலாம்.

அவர்கள் இல்லாமல் என்னால் இந்த

இடத்தை அடைந்திருக்க முடியாது

என்று நம்பும் மனிதர்களுக்கு

கண்டிப்பாக நன்றி சொல்லிவிடுங்கள்.


மகிழ்ச்சியோடு

கலக்கத்தோடு 

நிம்மதியோடு

தவிப்போடு

கண்ணீரோடு

எப்படி இருந்தாலும் இந்த ஆண்டின் 

கடைசி நாளில் நின்று கொண்டிருக்கிறேன்.


நமக்கு வழங்கப்பட்ட

தர வரிசைப் பட்டியலில்

நமக்கான இடம்

உயர்வு தாழ்வு 

ஏற்ற இறக்கம் கொண்டதாக

 இருக்கலாம்.


ஆனால்  கடந்த ஆண்டைவிட

இந்த ஆண்டு 

ஒப்பீட்டளவில் உயர்ந்திருக்கிறோமா?

தாழ்ந்திருக்கிறோமா?

என் நினைத்துப் பார்ப்போம்.


உயர்ந்திருந்தால் மகிழ்ச்சி.

தாழ்ந்திருந்தால் முயற்சி தேவை

என்ற மனநிலையோடு இந்த ஆண்டைக்

கடந்து செல்வோம்.



நேற்றைய பயணத்தில் கற்ற பாடங்களை

வழித்துணைக்கு எடுத்துக்கொண்டு 

புத்தாண்டில் புதுப் பயணம் 

இனிதாக நல்வழியில் அமையட்டும்


மகிழ்ச்சியோடு

நாளைய ஓட்டம் மகிழ்ச்சியாக 

தொடங்க வாழ்த்துகள்.




















Comments