பழிக்கக்கூடாதவை

பழிக்கக்கூடாதவை


தாயைப் பழிக்கக் கூடாது.

 மதத்தைப் பழிக்கக் கூடாது.

 உடலமைப்பைப் பழிக்கக் கூடாது.


இந்த  மூன்று

விழுமியங்களையும் கடைபிடித்து

வந்தால் தனிப்பட்ட வாழ்விலும்

பொதுவாழ்விலும் எந்தவிதச் சிக்கலும்

ஏற்படாது. நாடும் அமைதியாக

சென்று கொண்டிருக்கும்.


முதலாவது தாயைப் பழிக்கக்கூடாது


தாயைப் பழித்தால்...

என்ன நடக்கும் என்பதை நீங்கள்

பள்ளிப் பருவத்திலிருந்தே கண்டு

வந்திருப்பீர்கள்.

இரண்டு மாணவர்கள் சண்டைப்

போடுகிறார்கள்.

ஒருவன் வெறியோடு  மற்றவன் மேல் கையைப் போடுகிறான்.

என்ன சண்டை என்று கூப்பிட்டு விசாரித்தால்

அம்மாவைப் பழித்துப் பேசிவிட்டான்.

அதனால்தான் அடித்தேன் என்பான்.

பெரும்பான்மையான நேரங்களில்

சாதாரணமாகத் தொடங்கிய சண்டை

உக்கிரமாவதற்குக் காரணம் அம்மாவைப்

பழித்தும் பேசியதாலேயே இருக்கும்.

அவரவர்க்கு அவரவர் அம்மா பெரிது.

அதனால் தன் தாயை யாரும் 

பழித்துப் பேச அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த உலகத்திலேயே ஒருவரால் அதிகம்

நேசிக்கப்படும் ஒரு நபர் ஒருவர்

உண்டு என்றால் அவர் அம்மாதான்.

அம்மாவை எதற்காகவும் எந்த இடத்திலும்

விட்டுக்கொடுக்க மனம் வராது.

இந்தப் பாசம் தாயை யாராவது

பழித்து விட்டால் பொங்கி எழும்.

புலம்பித் தள்ளும். அடிதடியில்

இறங்கும். ஆக்ரோசப்பட வைக்கும்.

அதனால் எக்காரணம் கொண்டும்

பிறர் தாயைப் பழித்துப் பேசாதிருங்கள்.


இரண்டாவது பிறர் மதத்தைப்

பழிக்கக்கூடாது:


பிறர் மதத்தைப் பழித்தால்....

என்ன நடக்கும் என்பதை நாம் இன்று

கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


பிறப்பு யார் கையிலும் இல்லை.

நான் இன்னார் வீட்டில்தான் பிறப்பேன்

என்று யாரும் கேட்டு வாங்கி வர முடியாது.

இந்த மதத்தினர் வீட்டில்தான் பிறப்போம்

என்பதும் யாருக்கும் தெரியாது.

ஆனால் பிறந்த பின்னர் எந்த

மதத்தைத் சார்ந்தவர்கள் வீட்டில்

பிறக்கிறோமோ அந்த வீட்டினர் மதம்தான்

நம் மதம்.

அப்படியே அந்த மதம் சார்பாகவே வளர்க்கப்

படுவோம் .அதனால் தான் தாயின்மீது

இருக்கும் அன்பும் ஈடுபாடும் நெருக்கமும்

மரியாதையும் 

தாய் மதத்தின் மீதும் இருக்கும்.

இது இயல்பு. அவரவர்க்கு அவரவர் மதம்

உயர்வானது.

நமக்கு இருக்கும் பற்றும் பக்தியும்

அவர்களுக்கும் அவர்கள் மதம்மீதும்

மத வழிபாட்டு நம்பிக்கை மீதும் இருக்கும்.

அதனால் யாரும் யாருடைய 

மத சம்பந்தமான

விமர்சனமோ அவமரியாதையோ 

செய்வதை யாராலும்

ஏற்றுக்கொள்ள முடியாது.


 பிறர் நம் மதத்தை பழிக்கும் போது

நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா?

அதே போன்றுதான் பிறராலும் அவர்கள்

மதத்தை நாம் பழிக்கும் போது ஏற்றுக்கொள்ள

முடியாது.

இந்த அடிப்படை உண்மையை புரிந்து

கொண்டு பிறருடைய மதத்திற்கும்

அவர்களுடைய  உணர்வுக்கும் மதிப்பளித்தாலே

நாட்டில் மதக்கலவரமே நடக்காது.

பிற மதத்தை ஒரு போதும் பழிக்கக்கூடாது.

இதனை ஓர் அடிப்படை விழுமியமாகவே

பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்.

பள்ளிப் பருவத்தில் கற்பிக்கப் பட்டவற்றைதான்

நாம் உண்மை என்று நம்புவோம்.



மூன்றாவது பிறர் உடலமைப்பைப்

 பழிக்குக் கூடாது.:


 உடலமைப்பைப் பழித்து விட்டால்.....

அநியாயத்துக்கக் கோபம் வரும்.

உடலமைப்போ கலரோ  எதுவும்

நம் கையில் இல்லை.

மதத்தைப் போன்றதுதான் 

உடலும்.யாரும் கேட்டு வாங்கி வந்ததில்லை

இந்த உடம்பு.

இது நம் பரம்பரைக்கு உரியது.

கொஞ்சம் மாற்றித் தாருங்கள் என்றால்

யாரும் மாற்றித் தந்துவிட முடியாது. 

பிறர் உடலமைப்பு, வண்ணம் யாவும்

விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் போது

அவர்கள் மனம் மிகவும்

நொந்து போகும்.

அது ஒரு வன்மத்தை உண்டாக்கும்.

பழி உணர்வைத் தூண்டும்.

பிறர் பலவீனத்தைச் சுட்டிக்காட்டி

அவமானப்படுத்திப் பேசக்கூடாது.

அது நிரந்தரப் பகைமையை ஏற்படுத்தும்.

தக்கத் தருணம் பார்த்துக் திருப்பியடிக்கக்

காத்திருக்கும் . இயலாதபட்சத்தில் 

அவமானபட்டுவிட்டோமே என்று 

தங்களையே மாய்த்துக் கொள்ள வேண்டும்

என்ற விபரீத எண்ணத்தை

அவர்களுக்குள் ஏற்படுத்தி விடும்.

ஆதலால் பிறர் உடலமைப்பைப்பற்றித்
தவறாகப் பேசாதிருங்கள்.


அமைதியான சமூக வாழ்விற்கு

இந்த மூன்றை கண்டிப்பாக

 கடைபிடிக்க வேண்டும்.

நாளைய சமூகம் அமைதியாக இருக்க

இந்த மூன்று விழுமியங்களும்

இளமையிலேயே குழந்தைகள்  மனதில்

விதைக்கப்பட வேண்டும்.


இளமையில் கல்வி பசுமரத்தாணி.

அதனால் இளமையிலேயே 

இந்த விழுமியங்கள் கற்பிக்கப்விட்டால் 

இறுதிக்காலம் வரை பழிக்கக்கூடாதவை

மூன்று...பழிக்கக்கூடாதவை மூன்று

என்று திரும்பத்திரும்ப படித்து மனதில்

பதிய வைத்துக் கொள்வார்கள். 

உணர்வோடு ஒன்றிப் போகும்.

மனதும் உணர்வும் ஒன்றிப்போன

 ஒரு செயலுக்கு எதிராக  எதிர்வினையாற்ற

 மனம் ஒருபோதும்  ஒத்துக் கொள்ளாது.

 

அதனால் நாளைய உலகம் அமைதியாக

சகோதரத்துவ உணர்வோடு வளரும்.


பிறர் தாயைப் பழிக்கக் கூடாது.

பிறர் மதத்தைப் பழிக்கக்கூடாது.

பிறர் உடலமைப்பைப் பழிக்கக்கூடாது.




  

 

Comments