தந்தை தாய்ப் பேண்
தந்தை தாய்ப் பேண்
தந்தை தாய்ப் பேண் "
அனைவருக்கும் பிடித்தமான
ஆத்தி சூடி பாடல் வரிகள்.
அடிக்கடி பலர் வாய்களில் வந்து போகும்
வரிகள்.
பெற்றோரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்
வரிகள்.
பெற்றோரைப் பேணி பாதுகாத்துக் கொள் என்று
வேறு யாராவது நினைவுபடுத்த வேண்டுமா
என்ன?
"மறந்தால்தானே நினைப்பதற்கு..
உன்னை நெஞ்சிலேயே வைத்திருக்கிறேன் "
என்று காதலியிடம் வசனம் பேசுவான் காதலன்.
ஆமாங்க...மறந்தால்தானே நினைவூட்டல் வேண்டும்.
நாம்தான் பெற்றோரை மறக்கவில்லையே...
பிறகு எதற்கு இந்த நினைவூட்டல் என்கிறீர்களா....
மறந்தவர்களுக்கு ...நினைவூட்டல் தேவை இல்லையா...
அதனால் தான் தந்தை தாய்ப் பேண்
என்று நினைவூட்டிக்
கொண்டே இருக்கிறார் ஔவை.
வயது முதிர்ந்தாலே பெற்றோர் பிள்ளைகளுக்குச்
சுமையாகிப் போகின்றனர்.
காய்ந்த ஓலை விழும்போது பச்சை ஓலை சிரித்ததாம்.
அதற்கு காய்ந்த ஓலை நாளை நாளைத்தான்
என்றதாம்.
அந்த நாளை நாளைத்தான் என்ற தொடரின் பொருள்
என்ன ?
நாளைக்கு உனக்கும் இதே நிலைதான்
என்பதுதான்.
ஆனால் பெரும்பாலானோர் இதை உணர்வதே இல்லை.
முதுமை வராமல் என்றும் இளமையாய்
யாரும் இருந்துவிடப் போவதில்லை.
நாளைக்காக பொருள் சேர்த்து
வைப்பதற்காகதான் இந்த ஓட்டம்.
நமது செயல்கள் எல்லாம் நாளைய
நலன் கருதியே இருக்கும்.
நமது எண்ணங்கள்
நாளைய தினத்தைக் குறித்த
கவலையும் அக்கறையும் கொண்டதாகவே
ஓடிக்கொண்டிருக்கும்.
நாளைக்கு நமக்கும் முதுமை வந்து
முடக்கிப் போடும் என்ற எண்ணம்
மட்டும் பெரும்பாலோருக்கு வரவே வராது.
அப்படிப்பட்ட எண்ணம் வந்திருந்தால்
இப்படிப்பட்ட நினைவூட்டலுக்குத் தேவையே
இருந்திருக்காது.
தனக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால்
போதும்.
தூக்கி வைத்துக் கொண்டாடுவர்.
பார்த்துப் பார்த்து வளர்ப்பர்.
விதவிதமான ஆடைகள் போட்டு
அலங்கரித்துப் பார்ப்பர்.
இதையேதானே உனக்கும் சிறுபிள்ளையாக
இருக்கும்போது உன் பெற்றோர் செய்திருப்பர்.
பிள்ளைகளை அழகுபடுத்திப் பார்த்தநாம்
பெற்றோரை அழகுபடுத்திப் பார்த்தோமா ?
பிள்ளைகளை ஊட்டி ஊட்டி வளர்க்கும் நாம்
நம் பெற்றோருக்கு என்றாவது ஊட்டி விட்டாமா?
ஆசைப்பட்ட பண்டத்தை எல்லாம் நேரம் காலம்
பாராமல் ஓடிப்போய் பிள்ளைகளுக்கு
வாங்கி வந்து் கொடுக்கிறோம்.
குறைந்த பட்சம் உங்களுக்கு ஏதாவது
தின்ன ஆசை இருக்கிறதா?
என்றாவது பெற்றோரிடம் கேட்டோமா?
என் பிள்ளைகள் வளர்கிற வயசு.
அவர்கள் வயதானவர்கள் அவர்களுக்கு எதுக்கு
இவைகளெல்லாம்...
உடம்பில்வேறு ஆயிரத்து எட்டு நோய்கள்.
கண்டதையும் தின்று படுத்துகிட்டா யார்
பார்க்கிறது...என்ற கேள்விவேறு....
வயதானால் பெரியவர்களும் குழந்தைகள்தான்.
என்றாவதுஎன் பெற்றோரை அழகுபடுத்திப்
பார்க்க வேண்டும் என்று
நினைத்ததுண்டா...
இன்றும் பிள்ளைகளைப் படிக்க வைத்து,
நிலபுலனை விற்று வேலை வாங்கிக் கொடுத்து
திருமணம் செய்து வைத்துவிட்டு,
அரைக்கிலோ திராட்சைப்பழம் வாங்கி வந்து
தரமாட்டானா....தன்னை மாதத்திற்கு ஒரு நாளாவது
வந்து பார்க்க வரமாட்டானா என ஏங்கும் பெற்றோர்
எத்தனை எத்தனைபேர்?
லட்சக் கணக்கில் செலவு செய்து
படிக்க வைத்துவிட்டு கையில்
ஒரு காசு இல்லாமல் ...மாசாமாசம்
ஒரு ஆயிரம் ரூபாயாவது அனுப்பு தம்பி
என்று பெற்ற பிள்ளையிடம் கெஞ்சும்
பெற்றோர் எத்தனை எத்தனைபேர் ?
குளிராக இருக்கிறது. போர்த்திக்க ஒரு கம்பளிப் போர்வை
வாங்கித் தரமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு
மேலாடையை இழுத்துப் போர்த்தி முடங்கிக்
கிடக்கும் பெற்றோர்
எத்தனை எத்தனைபேர் ?
இவற்றை எல்லாம் பார்த்ததால்தான்
ஔவை தந்தை தாய்ப் பேண் என்று
நமக்கு நினைவூட்டுகிறாரோ?
ஒரு காட்டில் ஒரு நாவல் மரம் நின்றது.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறுவன் அந்த நாவல்
மரத்தின்கீழ் வந்து விளையாடிவிட்டுச் செல்வான்.
சிறுவனைப் பார்ப்பதற்கு மரத்திற்கு மகிழ்ச்சியாக
இருக்கும்.
ஒருநாள் திடீரென்று அந்தச் சிறுவன் வரவில்லை.
பொழுது சாயும்வரை ஆவலோடு காத்திருந்த
மரத்திற்கு ஏமாற்றமாய் போய்விட்டது.
மறுநாள் அந்தச் சிறுவன் வந்தான்.
ஆனால் என்றும்போல் மனதில் உற்சாகம் இல்லை.
"ஏன் தம்பி கவலையாக இருக்கிறாய்?"
என்று கேட்டது மரம்.
"தீபாவளி வந்துவிட்டது. எல்லோருடைய
கைகளிலும் துப்பாக்கி இருக்கிறது
என்னிடம் மட்டும் ஒன்றுமே இல்லை. பிறகு
எப்படி மகிழ்ச்சியாக இருப்பது எனக் கேட்டான்?"
சிறுவன்.
"ப்பூ....இதுக்குப் போய் வருத்தப்படலாமா....
நான் பழங்களைத் தருகிறேன்.
நீ விற்று அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து
உனக்கு வேண்டிய துப்பாக்கியை வாங்கிக் கொள்"
என்றது மரம்.
மரம் பழங்களை உதிர்த்துவிட
சிறுவனும் மகிழ்ச்சியோடு பழங்களை
பொறுக்கி விற்று துப்பாக்கி வாங்கி
மற்ற சிறுவர்களைப்போல மகிழ்ந்தான்.
மகிழ்ச்சியில் சிறுவனுக்கு மரத்தைப்
பற்றிய நினைப்பே இல்லை.
பல ஆண்டுகளுக்குப் பின்னர்
மறுபடியும் வாலிபனாக
மரத்தின்கீழ் வந்து அமர்ந்தான்.
"தம்பி நீ நெடுநெடுவென்று வளர்ந்து விட்டாய்.
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது"
என்றது மரம்.
" வளர்ந்து என்ன பண்ண...நாலுபேர்
மதிக்கும்படி இல்லையே "என்றான் வாலிபன்.
" தம்பி இப்போது உனக்கு என்ன பிரச்சனை"
என்று கேட்டது மரம்.
"இப்போது நான் கல்லூரி செல்கிறேன்.
எல்லா மாணவர்களும் கல்லூரிக்கு
அழகழகான ஆடை அணிந்து
வருகிறார்கள். நல்ல ஆடைகூட
இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை "சலித்துக்
கொண்டான் வாலிபன்.
அதற்கு தன்னால் எப்படி உதவ முடியும்?
யோசித்தது மரம்.
" நல்ல ஆடைகள் வேண்டும் அவ்வளவுதானே!
உன் கவலை. விட்டுவிடு.
என் மரக் கொம்புகளை வெட்டி
விற்று அதில் கிடைக்கும் பணத்தில்
நல்ல ஆடைகள் வாங்கிக்கொள் "என்றது மரம்.
வாலிபனும் நல்லது என்பது போல
மரக்கொம்புகளை வெட்டி விற்று
நல்ல ஆடைகள் வாங்கிக் கொண்டான்.
ஆனால் மறுபடியும் நான்கு ஆண்டுகள்
கழித்து அதே கவலை
தோய்ந்த முகத்தோடு மரத்தின்
அருகில் வந்து அமர்ந்தான்.
இத்தனை கவலை ஒரு போதும்
அவன் முகத்தில் பார்த்ததில்லை.
பதறிப்போன மரம் என்னப்பா தம்பி
இவ்வளவு சோகமாக இருக்கிறாய்?
என்றது.
"அட..போங்கங்க...ஒரு நாளும்
நிம்மதி இல்லை. என் மனைவி நாளும்
என்னை நச்செரித்தே கொன்றுவிடுவாள் போலிருக்கிறது."
என்றான் விரக்தியோடு.
"அப்படி என்ன நச்செரிக்கிறாள் ?"என்றது மரம்.
"எல்லாரும் நகை நட்டு என்று நல்ல வசதியாக
வாழ்கிறார்களாம். எனக்கு
ஒரு நகை வாங்கிப் போட துப்பில்லையாம்."
என்றான்.
"உனக்கு நகை வாங்க வேண்டும்
அவ்வளவுதானே...விடு...நான்
இருக்கிறேன். என்னை வெட்டி விற்று
அதில் கிடைக்கும் பணத்தில்
நகை வாங்கிக் கொடு " என்றது மரம்.
சரி என்றபடி மரத்தை வெட்டி விற்று மனைவிக்கு
நகை வாங்கிக் கொடுத்தான் .
நான்கைந்து ஆண்டுகளில் மறுபடியும்
அந்த நிலத்துக்கு அருகில் வந்து நின்றான்.
அந்த நிலத்திற்குள் செல்ல விடாமல்
முள்வேலி போட்டு அடைக்கப்பட்டிருந்தது.
வேலி ஓரமாக ஒரு சின்ன மரம் நின்றது.
அதன்கீழ் அப்படியே உட்கார்ந்து விட்டான்.
இப்போதும் அந்த மரம் தன் கிளைகளால்
விசிறிக் கொண்டிருந்தது.
கண்திறந்து பார்த்தான்.
"தம்பி ஏன் சோர்வாக இருக்கிறாய்?"
என்று கேட்டது மரம்.
"ஒன்று மில்லை....என்ன செய்தாலும்
வீட்டிலுள்ளவர்களுக்குத் திருப்தி இல்லை.
எனக்கும் நிம்மதி இல்லை" என்றான்.
"பரவாயில்லை. எனக்கும் உனக்குக் கொடுப்பதற்கு
ஒன்றுமில்லை. ஏதோ இந்த வேலியோரம்
இருந்த வேரினால் மறுபடியும்
உயிரோடு இருக்கிறேன்.
என் நிழலில் இளைப்பாற இடம்
தருவதைத் தவிர கொடுப்பதற்கு
என்னிடம் ஒன்றுமே இல்லை"
என்றதாம் மரம்.
இப்படித்தாங்க பெற்றோரிடமிருந்த
அத்தனை வளங்களையும் பிடுங்கிச்
சென்றுவிட்டு அவர்களை நிராதரவாய்
விட்டுவிடுவோம்.
இறுதியில் அம்மா மடியில் இளைப்பாறவாவது
இடம் கிடைக்காதா என ஏங்குவோம்.
எது இருந்தும் நிம்மதி இல்லை. ஒன்று கிடைத்தால்
இன்னொன்றின்மீது ஆசை. ஆசையால் நிம்மதியைத்
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு இதுவரை பாதுகாப்பளித்து வந்த
பெற்றோரைத் தொலைத்து விடுகிறோம்.
நமது மகிழ்ச்சியைத் தவிர நம்மைச் சுற்றி
இருக்கிறவர்கள் மகிழ்ச்சி கண்ணுக்குத்
தெரிவதில்லை.
பெரும்பாலும் தன்பிள்ளை தன்மனைவி
என்பதற்காக தனக்கு உயிர் தந்த தாய்தந்தை
நலனைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
என்றாவது ஒருநாள் துன்பம் வரும் நேரத்தில்தான்
தொலைத்தவர்கள் நினைவுக்குவர அவர்களை நாடி
ஓடுகிறோம்.
ஆறுதல் தரமாட்டார்களா என ஏங்குகிறோம்.
இதுதாங்க இந்த மரம் நமக்கு சொல்லித் தந்த மரம்.
மொட்டையாய்ப் போனாலும் வெட்டையில்
நின்றாலும் நமக்காகவே வாழ்ந்து நம் நலனுக்காக
தம்மை இழந்து இறுதியில் யாராவது
ஒரு வாய் சோறு தரமாட்டார்களா என ஏங்கும்
நிலைக்கு பெற்றோரை விட்டுவிடாதீர்கள்.
அவர்களைப் பேணிப் பாதுகாத்துக்
கொள்ளுங்கள் என்று நினைவூட்டுகிறார்
ஔவை.
உன் தாய் தகப்பனை நன்றாகப்
பாருடா என்று யாரும்
நினைவூட்ட வேண்டுமா என்ன?
"தந்தை தாய்ப் பேண்"
Comments
Post a Comment