திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினம் 


கனியிடை ஏறிய சுளையும்_ முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் _காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும்_ தென்னை

நல்கிய குளிரிள நீரும்

இனியன என்பேன் எனினும்

தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்"

என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.


 அந்தத் தமிழுக்கு மணிமகுடம் சூட்டி

அழகு பார்த்து நம்மைப் 

பெருமிதம் கொள்ள வைத்தவர் திருவள்ளுவர்.


"வான் பொய்த்தாலும் பொய்க்கலாம்.

வள்ளுவரின் வாய்மொழி பொய்க்காது "என

பொய்யாமொழிக்கு மெய்யாய் முன்னுரை

எழுதி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.


அந்தக் கொண்டாட்டம் எந்நாளும்

தொடர வேண்டும்.

எல்லோராலும் அறியப்பட வேண்டும்

என்ற உயரிய நோக்கோடு

தை மாதம் இரண்டாம் நாளைத்

திருவள்ளுவர் நாளாகக்  கொண்டாடி

வருகிறோம்.


ஒன்றே முக்கால் அடியில்  வாழ்வியல்

உண்மைகளை  நம் உள்ளங்களில்

பதிய வைத்தவர். 

 

அறம் ,பொருள் ,இன்பம் என முப்பாலை

முக்கனிச் சுவை கலந்து

எக்காலத்திற்கும் உகந்ததாக்கி

நம்மைத்  தெம்பூட்டி வளர்த்துக்

கொண்டிருப்பவர்.


"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான் புகழ் கொண்ட தமிழ்நாடு "

என்று  தமிழ்நாட்டின் அடையாளமே 

திருவள்ளுவர்தான்

என்று பாரதியால் கொண்டாடப்பட்டவர்.


"ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்

பாயிரத்தினோடு பகர்ந்தற்பின்

போயொருத்தர் வாய் கேட்க நூல் உளவோ?"


என்று உலகியலின் ஒட்டுமொத்த கருத்தையும்

கற்றையாய்த் தன் குறளுக்குள் 

சுருக்கித் தந்ததைப் போன்ற ஒரு

நூல் எங்கும் கண்டீரோ என உலகுக்கே

சவால் விட்டு மார்தட்ட வைத்தவர்.


"அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி

குறுகத் தறித்த குறள்"

படைத்து யாரிந்த குறளார்

என்று அனைவரையும் அண்ணாந்து

பார்க்க வைத்தவர்.


"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"

என்று உறுதியான சொல்லால் 

உலகமே கொண்டாடும் குறள் படைத்தவர் என்ற 

பாராட்டுக்குச் சொந்தக்காரர்.


தன் நூலுக்கே நூல் எழுத வைத்துத்

திருவள்ளுவ மாலையாக மணிமார்பில்

தவழவிட்டு அழகு பார்த்துக்

கொண்டிருப்பவர்.


ஆதி என்ற தாய்க்கும் பகவன் என்ற 

தந்தைக்கும் பிறந்தவர் என்று 

நம்மால் நாளும்  கொண்டாடப்படுபவர்

 அய்யன் வள்ளுவர்.

 

வள்ளுவர் ஒருவரால் வளர்க்கப்பட்டதால்

வள்ளுவர் என்று அழைக்கப் பெற்றாரே தவிர

இயற்பெயர் பற்றி யாருமே முடிவான 

கருத்து ஏதும் கூற முடியாமலேயே வள்ளுவராக

அனைவர் உள்ளங்களிலும் நிரந்தரமாக

குடியிருந்து கொண்டிருப்பவர்.


அரசனின் அந்தரங்க ஆலோசகராய் இருந்த

வள்ளுவருக்கு மார்க்கச்சுராயர் என்ற வேளாளர்

மகள் வாசுகி மனைவியாக  வாய்க்கப் பெற்றிருந்தார்

என்ற வரலாற்று செய்தியோடு நம்

இல்லங்களில் வலம் வந்து கொண்டிருப்பவர்.



நாயனார், தேவர், முதற்பாவலர்,, தெய்வப்புலவர்

நான்முகன், மாதானுபங்கி, செந்நாப்போதார்,

பெருநாவலர் , பொய்யில் புலவர் என்று 

பன்முகம் தாங்கி

பல்வேறு பெயர் சூட்டி உலகம் எல்லாம் 

கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பவர்.



சாதி சமய  வேறுபாடு இல்லாமல்

அனைவருக்கும் பொதுவான கருத்துகளை

எடுத்துரைப்பதால் பொதுமறை என்ற

 பெயரொன்றை ஏற்று

உலகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும்

தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்து

திக்குமுக்காடச் செய்தவர்.



இத்தகைய பெருந்தகைக்கு உரிய நாள்

உகந்த நாள்.அதுதான் திருவள்ளுவர் நாள்

என்பதை எண்ணுகையில் உள்ளத்தில்

பெருமிதம் மேலோங்குகிறது.


வள்ளுவரைப் பற்றிப் பேசும் நாளாக

இந்தநாள் அமைந்தது உண்மையிலேயே

பெரும் மகிழ்ச்சிக்கு உரியது.


வள்ளுவர் ஆண்டு பற்றி பல்வேறு

சர்ச்சைகள் உண்டு.


வள்ளுவர் ஆண்டு பற்றிய

ஆராய்ச்சி இன்றுவரை 

தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 

முப்பத்து ஒரு ஆண்டுகளுக்கு

முன்னரே திருவள்ளுவர் ஆண்டு 

தொடங்கப்பட்டது என்பது வரலாற்று

ஆசிரியர்களின் கணிப்பு.

அது தமிழுக்கும் தமிழருக்கும்

கிடைத்த நல்லதொரு  சிறப்பு.


இந்த உண்மையை மறைமலை அடிகள் 

ஆராய்ந்து உலகுக்குத் தெரிவித்தார் என்பதில்

என்றுமே  எனக்கு உண்டு வியப்பு!


1921ஆம் ஆண்டு இதனை வெளியிட்ட

மறைமலை அடிகள்

இதற்காக  நூற்றுக்கும் மேற்பட்ட 

ஆதாரங்களைக் கொடுத்துள்ளதால்

அறிஞர் பெருமக்கள் மனதில் ஏற்பட்டது

திருவள்ளுவர் ஆண்டு 

உருவாக்க வேண்டும் என்பது 

பற்றிய நினைப்பு.


 திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட நடப்பு

 ஆங்கில ஆண்டோடு 31ஆண்டுகளைக்

 கூட்டினால் எளிதாக நினைவில் வைத்துக்

 கொள்ளலாம் என்பது மறைமலை அடிகள்

 நமக்குச் சொல்லித் தந்தார் ஒரு கணக்கு.

 

 தைப்பொங்கலை 

தமிழர் திருநாள் என்று கொண்டாடி 

மகிழ்வதுதான் தமிழரின் விருப்பு.


அதனால் அந்த நாளை திருவள்ளுவர் ஆண்டின்

முதல் நாளாகக் கணக்கிட வேண்டும் 

 என்ற

கோரிக்கை  அரசு முன் வைக்கப்பட்டது.

அதனை ஏற்று திருவள்ளுவர் ஆண்டு

தொடங்கி அதனை அரசு விழாவாக

அறிவித்த  பெருமை கலைஞர் 

தலைமையினான கழக

அரசுக்கு உண்டு .

 

தை மாதம் முதல்நாள் திருவள்ளுவர் 

ஆண்டின் முதல்நாள். அன்றைய தினம்

தமிழர் திருநாளாம் பொங்கல் உலகெங்கும்

உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.


இரண்டாம்நாள் திருவள்ளுவர் நாள்

கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் உலகுக்கே பாடம் சொல்லித் தந்த

திருவள்ளுவருக்கான நாள்

என்பது மட்டுமல்ல.

ஒவ்வொரு தமிழருக்குமான நாள்.


தமிழினத்தை ஒன்றிணைக்கும் நாள்.

தமிழர்  ஒவ்வொருவரையும் பெருமிதம் 

கொள்ள வைக்கும் நாள்.


"தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா" என

நம்மைத் தலை நிமிர வைத்த நாள்.


முப்பால் படைத்தோனை

மலைப்பால் மகிழ்ச்சிப் பாலூற்றிக்

கொண்டாடும் நாள்.


இன்று பிறக்கும் இந்த

வள்ளுவன் ஆண்டில் 

வையகம் தழைத்திட

பிணி நீக்கி 

பேருவகை  வந்திட

இறைவன் அருள்

இல்லத்தில்  தங்கிட

இருகரம் கூப்பி வாழ்த்துகிறேன்.

 

குறளோடும்

குறள் கூறும் விழுமியங்களோடும்

நாளும் நடை பயில்வோம்.

திருவள்ளுவரின் வழித்தோன்றல் 

நாம் என்பதை உலகெங்கும்

பறைசாற்றுவோம்.


வாழ்க தமிழ்!  

ஓங்குக வள்ளுவர் புகழ் !


அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின

நல்வாழ்த்துகள் !









Comments