திருவள்ளுவர் எழுதிய நான்குவரி பாடல்
திருவள்ளுவர் எழுதிய நான்குவரி பாடல்
திருவள்ளுவர் என்றதும் நம் கண்முன்
வந்து நிற்பது ஒன்றை முக்கால் அடி
கொண்ட திருக்குறள் என்பது
நம் அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை.
ஏழு சொற்கள் கொண்டது.
எந்த இடத்திலும் குறள் வெண்பாவுக்கான
இலக்கண மரபை உடைக்காத
சொல்லாட்சித் திறன்.
பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட
வரிகள். அதிகார அமைப்பிலும் பகுப்பிலும்
ஓர் ஒழுங்கு கடைபிடிக்கப்பட்ட அமைப்பு.
இப்படி வரம்புமீறாக் கவி படைத்துத் தந்த
வள்ளுவர் தன் இலக்கண வரம்பைத்
தாண்டி நாலுவரிகளில் ஒரு பாடல்
எழுதி வைத்துள்ளார்.
திருவள்ளுவர் நாலுவரியில் பாடல்
எழுதியுள்ளாரா? ஆச்சரியமாக
இருக்கிறதல்லவா!
அந்த நாலு வரியும் யாருக்காக
எழுதப்பட்டது என அறிந்தால்....
அதிர்ந்து போவீர்கள்.
தன் காதல் மனைவி வாசுகிக்காக
எழுதிய பாடல்தான் நான்கு வரிகள்
கொண்டது.
வள்ளுவர் தன் மனைவி வாசுகி
இறந்ததும் மனம் உடைந்து போனார்.
நேற்றுவரை பார்த்து பார்த்து
சமைத்துத் தந்தவள்.
ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாதவள்.
தூங்கும்வரை தூங்காமல் இருந்து,
கண் விழிக்கும் முன்னர் முன் வந்து
நின்று பணிவிடை செய்தவள்.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது
எதுவும் இல்லை என்று பேச வைத்தவள்.
"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் "
என்று கொண்டாட வைத்தவள்.
"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மை யுண்டாகப் பெறின் "
என்று பெருமைபட வைத்தவள்.
மீளாத் துயில் கொண்டாள்.
வள்ளுவரை மீளாத் துயரில்
தள்ளி விட்டாள்.
கண்முன்னே கட்டியவள்
கடைசிவரை காத்திருக்க மனமில்லாது
சென்று விட்டாள்.
காலனுக்குத் தெரியுமா இந்தக் காவிய
நாயகியைப் பிரிந்து எப்படி
இந்த நாயகனால் வாழ முடியும் என்று...?
காலனுக்கு நாட்கணக்குப் பார்க்கத்
தெரியும். வாழ்க்கைக் கணக்குத்
தெரிந்திருக்க ஞாயமில்லை.
அன்பு உள்ளங்களை அழ வைத்து
பார்ப்பதில் ஆனந்தம் கொள்பவன்
நாட்காட்டியில் நாட்களைக் கிழிப்பதுபோல்
கிழித்தெறிந்து வாசுகியின்
நாட்கணக்கை முடித்துவிட்டான்.
நாநலம் பாடிய நம் ஐயனை
சொல்லாடாது சற்று நேரம்
அப்படியே அமர வைத்துவிட்டான்.
எத்தனை மணி நேரம் இத்துணைக்காய்
இப்படியே இருப்பது?
தன் மன வலியை வார்த்தைகளாக
கொட்டினார்.
"இத்தனை நாள் நான் பேச
நீ கேட்டுக்கொண்டிருந்தாயே....
இதோ இறுதியாக இன்னொரு முறை
பேசுகிறேன் .கேள் வாசுகி...கேள்"
என்று பேச நினைத்தார்.
வார்த்தைகள் வர மறுத்தன.
தொண்டை வறண்டு போனது போல
இருந்தது.
வலிய இழுத்து வந்து வார்த்தைகளைக்
கொட்டினார்.சோகத்தில் பிறந்த கவியில்
அடிக்கணக்கு பார்க்க முடியுமா ?
இதுவரை ஒன்றே முக்கால் அடியில்
நின்றவர் இன்று நான்கு அடியில்
ஒரு பாடல் பாடி நம்மையும்
கண்ணீர்விட வைத்துவிட்டார்.
"அடியிற்கினியவளே அன்புடையவளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாநாலடி பிடல்ய் - இனிதா ( அ)ய்
என் தூங்கும் என்கண் இரவு "
என்று தன் கவலையைக் கவியில்
கொட்டி வைத்தார்.
"அடியவனாகிய எனக்கு இனியவளே !
அன்பின் திரு உருவே!
என் சொல்லுக்கு மாற்றேதும்
கூறாத பாவாய் !
என் கால் வருடி என்னை
உறங்க வைத்து,
நான் உறங்கிய பின் உறங்கி
அதிகாலை நான் எழும்பும் முன்னர்
எழும்பும் பேதைப் பெண்ணே!
என் கண்கள் இனிதாக இனி
இரவினில் எப்படி தூங்கும்?
நீ இல்லாததால் எனக்கு இனிமையான
இரவுகள் இனி இருக்கப் போவதில்லை..."என்று மனம்
நொந்து பாடியிருக்கிறார்.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு "
என்ற வள்ளுவரா
இப்படி கண் கலங்கி நிற்கிறார்?
நேற்று உயிரோடு இருந்தவர் இன்று இல்லை.
அப்படிப்பட்ட பெருமை கொண்டதுதான் இவ்வுலகு
என்று உலகை எல்லாம் தேற்றிய
வள்ளுவர் பாடிய பாடலா இது ?
ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது
இல்லையா?
"தாயோடு அறுசுவை போம்
தந்தையொடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம்போம்
ஆயவாழ்வு
உற்றாருடன் போம்
உடன்பிறப்பால் தோள்வலி போம்
பொற்றாலி யோடெவையும் போம்"
என்ற பாடலில்
யார் யாரோடு எவைஎவை எல்லாம்
போகும் என்று பட்டியலிட்ட
ஔவை இறுதியாக மனைவியோடு
எல்லாமே போயே போகும் என்று சொன்னாரே!
அது இதற்காகத்தானோ?
அது எவ்வளவு பெரிய உண்மை பாருங்கள்.
வாசுகியின் பிரிவு
வள்ளுவரைக் கலங்க வைத்தது.
குறள் வரம்பை மீற வைத்தது.
அடிக்கணக்குப் பாராது
பாடல் எழுத வைத்தது.
ஈரடி நாலடியாய் நீண்டு போனது.
நம்மையெல்லாம் நாவாடாது
உறைய வைத்தது.
உள்ளுக்குள் ஊமையாய்ப்
புலம்ப வைத்தது.
அன்பிற்குரியவர்களின் பிரிவை
யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும் ?
திருவள்ளுவர் மட்டும் விதிவிலக்கா என்ன?
"பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் - இனிதாய்
என் தூங்கும் என்கண் இரவு "
படிக்கும்போதே கண் கலக்குது இல்ல....
Comments
Post a Comment