தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்

தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்



வாழ்க்கையின் ஓட்டமே செல்வத்தை

நோக்கியதாகவே இருக்கும்.

எனக்குப் பணமே வேண்டாம்

என்று சொன்னால் 

நீ இந்த உலகில் இருக்க

தகுதியற்றவன் ஆகிறாய்.

இதை நான் சொல்லவில்லை. 

வள்ளுவர் சொல்கிறார்.

பொருளில்லார்க்கு இவ்வுலகம்

இல்லை.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை

என்று வள்ளுவர் ஆணித்தரமாகச்

சொல்லிவிட்டார்.


வள்ளுவரே சொல்லிவிட்டார் .

அப்படியானால் பொருளைத் தேடித்தான் 

ஆக வேண்டும்.


இல்லானை இல்லாளும் வேண்டாள் 

ஈன்றெடுத்தத் தாய் வேண்டாள்

....

என்று சொல்லிவிட்டார் ஔவை.


தாயைக்கூட தள்ளி நிற்க வைத்துவிடும்

வல்லமை பெற்றதா பொருள்?


இப்படி ஒரு கலக்கம்.


அப்படியானால் வேண்டும் வேண்டும் பொருள்

வேண்டும் என்று மனம் பொருள் பின்னால்

ஓட்டம் பிடிக்கும்.


பொருள் இருந்தால்தான்

 இன்பத்தை அடைய

முடியும்.

விரும்பியதைப் பெற முடியும்.

விரும்பியதை அடைந்துவிட்டால்

இன்பம் இல்லம் வந்து சேரும்.

இல்லத்தில் இருப்பவர்களும்

நம்மைத் கொண்டாடுவர்.


பொருளும் இன்பமும் இருந்தால்

சிறப்புக்கு ஏது குறை?

போகுமிடமெல்லாம் சிறப்பு.

இத்தோடு மனம் போதும் 

என்று நின்றுவிடுமா?


புகழ் வேண்டும் ஐயா புகழ்....



அதற்காகத்தான் இத்தனை

முட்டல்களும் மோதல்களும் ,

போட்டியும் பொறாமையும்,

நீயா நானா என்ற

முறைப்பும் முணுமுணுப்பும்.



 செல்வம்,இன்பம், சிறப்பு ,புகழ்

யாவும் இருக்கிற ஒருவரை

அவருக்கென்ன

ராசா மாதிரி வாழ்கிறார் என்று

பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு

விடுவோம். அவரை மாதிரியான

வாழ்க்கை அமைய வேண்டும்

என்று ஆசைப்படுவோம். 

அதுபோல  நாமும் உயர வேண்டும்

அல்லும் பகலும் அயராது

உழைப்போம்.

ஆனால் எல்லோராலும் முடிகிறதா?

இல்லையே இதற்குக் காரணம் 

என்ன?


பலமுறை நாம் வருந்தியதுண்டு.

என்ன செய்ய... என்ன செய்ய

கையைப் பிசைந்து நின்றவர்கள் உண்டு.

தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும்

கிடைப்பதுதான் கிடைக்கும்.


அப்படியானால் இவை எல்லாவற்றையும்

பெறுவது எப்படி?

ஒரு சிலரால் மட்டும் இவை எல்லாவற்றையும்

பெற்றுக்கொள்ள முடிகிறது.


 நானும் முட்டிமோதி முனங்கிப் பார்க்கிறேன்.

 இறுதிவரை முனங்கல்தான் மிச்சம்

என்று முனங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு

அதற்கு ஒரு வழி இருக்கிறது.

அதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

இத்தனை முட்டல்களுக்கும்

முனங்கல்களுக்கும் தேவையிருக்காது

என்கிறார் ஒருவர்.


என்ன வழி?...என்ன வழி?

சொல்லுங்கள்.....சொல்லுங்கள் என்று

அறிந்துகொள்ள ஆர்வமாக

இருப்பீர்கள்.


வாருங்கள் அந்த வழி என்ன என்பதைப்பற்றி

 விவேக சிந்தாமணி கூறுவதைக் கேளுங்கள்.


இதோ பாடல் உங்களுக்காக


"திருவும் இன்பமும் சிறப்பும் புகழும் மற்று

ஒருவர் ஆக்கவும் நீக்கலும் உளவோ?

மருவும் புண்ணிய மாந்தர்க்கு அவையெலாம்

தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்"


          -  சீவக சிந்தாமணி



செல்வத்தையும் இன்பத்தையும்

சிறப்பையும் புகழையும் நம்மால்

ஆக்க முடியாது.

அது வந்து சேருங்காலத்தில் வேண்டாம்

என்று ஒதுக்கிவிடவும் முடியாது.


மனிதனுக்கு தருமம் செய்தால்

இவை எல்லாம் வந்து

சேரும்.

தருமச் சிந்தனை இல்லையா?

அவை யாவும் வந்த வழி தெரியாமல்

தாமே அழிந்து போய்விடுமாம்.


அதாவது தருமம்தான் ஒருவனை 

புகழையும் அடையும் நிலைக்குக்

கொண்டு சேர்க்கும்.

அது இல்லாதிருந்தால் இருப்பதுபோல்

இருந்து இல்லாததாகிவிடும்.


தருமம் செய்யுங்கள். மற்ற

செல்வங்களையும் புகழையும்

தேடிச் செல்ல வேண்டியதில்லை.

அவை யாவும் தானாக உங்களை வந்தடையும்.

ஆகையால். தருமம் செய்யுங்கள்.


அருமையான கருத்தாழமிக்கப் பாடல்.


தருமம் தலை காக்கும்.

தக்க சமயத்தில் பொன் ,பொருள்,

புகழ் என அத்தனையையும் அள்ளிக்கொடுக்கும்.


நல்ல கருத்து இல்லையா?

இனி எதற்கு தாமதம்?

இதோ இப்போதே

தர்மம் செயது செல்வம், சிறப்பு,புகழ் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள்.








கருத்துகள்

Popular Posts