உதய சூரியனே...

என் உறக்கம் கலைத்த

உதய சூரியனே

கண்விழித்ததும் காட்சியில்

கண்டது நின்திருமுகமே !


உன் முகம் விழித்ததால்

மலர்ந்தன  மலர்முகமே

செவ்வானம் பார்த்து

சிரித்தன முல்லைவனமே! 



தூங்கி இருந்த பனித்துளியை

வாங்க வந்த திரள்கதிரே

வான் பறவை கான் பறந்து

 கானம்பாடி மகிழ்வது நின்திறமே!

 


கீழ்வானில் செவ்வண்ணம் பூசி

சிவக்க வைத்து சிலிக்க வைத்தது

 நின்கைத் தூரிகை காட்டும்

 ஒளி வண்ண மாயஜாலமே!



இருட்டை விரட்டும் துறட்டை  எடுத்து

வெளிச்சம் போட்டு பகலெனும்

வெளிச்சத் திரையிட்டு நிற்கும்

உலகின் உயிர்க்கவசம் நீயே!


கீழ்வானில் பிறந்து உச்சம் தொட்டு 

என்நிழல்  உன்நிழல் மறைத்து

 தாழ வந்து தொடுவானில் மறைந்து

 சொல்லும் தத்துவம் பற்பலவே!


வாழ்வில் வசந்தம் உன்னாலே

உயிரும் உறவும்   உன்பிறப்பின் பின்னாலே

உலகம் மகிழும் உன்பெயர் கேட்டாலே

ஓட்டமும் நடையும் தீராது  சொல்லாலே



கருத்துகள்

Popular Posts