மனங்களைக் கொள்ளையடியுங்கள்.


 மனங்களைக் கொள்ளையடியுங்கள்


 கொள்ளையடிக்க வேண்டுமா?

இது என்ன புதுக்கதையாக இருக்கிறது.?

 மொகலாய மன்னர்கள் கோவில்களில் 

கொள்ளையடித்துச் சென்றார்கள் என்று படித்திருக்கிறோம். 

முகமூடிக் கொள்ளையர்கள் கடைகளில் 

கன்னக்கோலிட்டு திருடிச் சென்றதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.

 லாரி லாரியாக மணல் கொள்ளை 

நடைபெற்று வருவதாக வாசித்திருக்கிறோம்.

 இது என்ன புதுக்கொள்ளை?

மனக்கொள்ளையா?

வேண்டவே வேண்டாமப்பா.

கொள்ளை என்ற சொல்லைக் 

கேட்டாலே எனக்கு அப்படி ஒரு அலர்ஜி.

விடுங்கடா     சாமி....."என்று அலர 

வேண்டும் போல் தோன்றுகிறதா?


இதுக்குப்போய் அலட்டிக்கலாமா? என்று 

எனக்குப் பாடவேண்டும் போல் தோன்றுகிறது. 

கொள்ளை என்றாலே ஏதோ தீண்டத் தகாத 

ஒரு சொல் என்று ஏன் ஓடி 

ஒளியப் பார்க்கிறீர்கள்? 

நீங்கள்  இதுவரை கொள்ளையடித்ததே இல்லையா?

அட...போங்கங்க ...உங்கள் வாழ்நாளில் 

பாதி நாளை வீணாக கழித்து விட்டீர்கள்

 என்று உங்களுக்காகப்  பரிதாப்படுகிறேன்.

  உங்கள் பரிதாபம் யாருக்கு வேணும்? 

விசயத்துக்கு வாங்க .... என்ற உங்கள் 

விசமத்தனமான  எண்ணம்  புரிகிறது.

வந்துவிட்டேன்...வந்துவிட்டேன்.

விசயத்தைச் சொல்லிப்போகத்தானே

வந்திருக்கிறேன்.


பெற்றோர் மீது உங்களுக்குக் 

கொள்ளைப் பிரியம் இருந்ததில்லையா?

 பொக்கைவாய் திறந்து 

மழலைகள் சிந்தும்  சிரிப்பில் உங்கள் 

மனம் கொள்ளைப் போனதில்லையா?

 பனி படர்ந்த  புல்வெளியைக் கண்டு மனம்

கொள்ளை மகிழ்வு கண்டதில்லையா?

திருநெல்வேலி அல்வா என்றால் 

எனக்கு கொள்ளை பிரியம் என்று  

நாக்கில் எச்சில் ஊற... ஊற..  

பேசியதில்லையா?

 இப்படி வண்டி வண்டியாய் கொள்ளையை 

மனதில் வைத்து கொண்டு கொள்ளைக்கும் 

எனக்கும் சம்பந்தமே இல்லை 

என்பது போல் விலகி ஓடுகிறீர்கள்.

யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?

 கொள்ளை நம் கூடப் பிறந்த குணம்ங்க...

 கொள்ளையையும் நம்மையும் 

எந்த சக்தியாலும் பிரித்துவிடமுடியாது.

 எது எப்படியோ நீங்களும் நானும் 

கொள்ளையர்கள்தான்... கொள்ளையர்கள்தான்...

கொள்ளையர்கள்தான்....

இதை உரக்கச்  சொல்லுவேன்.

குரல் உயர்த்திச்சொல்லிவேன்.

கூரை மீது ஏறி நின்று

சொல்லுவேன்.

அசராமல் சொல்லுவேன்.

அனைவரையும் அழைத்துச் சொல்லுவேன்.

போதுமா?

இப்போதாவது நீங்கள் கொள்ளையர்கள் என்பதை 

ஒத்துக் கொள்கிறீர்களா?

மறுத்தால் நீங்கள் அடித்த கொள்ளையே 

உங்கள் முன் வந்து நின்று

சாட்சி சொல்லும்.


பயமாக இருக்குது இல்ல...

அப்படியானால் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் 

ஆக வேண்டும்.


எது எப்படியோ எங்களைக்

கொள்ளையர்களாக்க வேண்டும் 

என்று முடிவு பண்ணி விட்டீர்கள்.

வேண்டாம் என்றாலும் விடவாப்போகிறீர்கள்.?

என்று  சலித்துக்கொள்ள வேண்டாம்.

நல்ல கொள்ளையைப் பற்றிதானே பேசுகிறேன்.

கொள்ளையை நீங்கள் வேறு ஒருபெயரில் 

நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். 

அவ்வளவுதான்.


நா..ங்..க..ள்.கொள்ளை நடத்திக் 

கொண்டிருக்கிறோமா?மறுபடியும் மறுபடியும் 

கொள்ளை கொள்ளைஎன்று சொல்லி

எங்களைக் கடுப்பேத்தாதீங்க..

நாங்க கொள்ளை என்று சொன்னதே

வேறு பொருளில்...

அதைப் புரியாமல் ....

பதுசு புதுசா ரீல் விடுகிறீர்கள்?

என்று சாட் வேண்டும் போல் தோணுமே!


நான் எதுக்குப்பா ரீல் விடப்போகிறேன்.?

நான் சொல்வதெல்லாம் உண்மை.

உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நீங்கள் அடித்தக் கொள்ளைக்குப்பெயர்

என்ன தெரியுமா?

அலாதி .

அலாதி எப்படி கொள்ளையாகும் 

என்று சண்டைக்கு வந்துவிடாதீர்கள்.

அம்மா மீது அலாதி பிரியம்

இல்லையா?

குழந்தைகளிடம் கொஞ்சுவதற்கு அலாதி ஆசை 

இருந்ததில்லையா?

ஐஸ்கிரீம் என்றால் எனக்கு 

அலாதி ஆசை உண்டு 

 என்று சொல்லிச் சொல்லி 

தின்றதில்லையா?

பெரிய பெரிய படிப்பெல்லாம்

படிக்க அலாதி ஆசை இல்லையா?


ஓஹோ....இந்த அலாதியா?

அதே அலாதித்தான்.

இந்த அலாதியைச் சொல்வதற்குதான் 

இத்தனை அகராதியா?"                           

என்ற உங்களின்   முணுமுணுப்பு

கேட்கத்தான் செய்கிறது.

இப்போது கொள்ளையும்,அலாதியும்

மிகுந்த,அதிகப்படியான போன்ற 

பொருளில்தான் சொல்கிறோம்என்பது 

புரிந்ததல்லவா?

எல்லா செயலிலும் நன்மையும் 

உண்டு. தீமையும் உண்டு.

ஏன் நோய் நுண்ணுயிரிகளில்கூட 

நன்மை செய்பவையும் உண்டு. 

 தீமை செய்பவையும் உண்டு 

என்று நாம் படித்ததில்லையா?

 அதுபோல் தான் கொள்ளையிலும்

 நன்மையும் உண்டு.

தீமையும் உண்டு.

தீமையைத் தூக்கி ஓரமாக வையுங்கள்.

நன்மைதரும் கொள்ளைப்பக்கம் 

கவனத்தைத் திருப்புங்கள்.


 வாருங்கள் .கொள்ளையை வீட்டிலிருந்தே 

தொடங்குவோம்.

 எல்லாவற்றிற்கும் தொடக்கப்புள்ளி  

வீடாகத்தான் இருக்கும். 

இருக்கவும் வேண்டும்.

முதலாவது நீங்கள் கொள்ளையடிக்கப்

போவது உங்கள் அம்மாவைத்தான்.


அம்மா மனதைக் கொள்ளையடிக்க வேண்டுமா?


  வேண்டாமடா சாமி...நான் இந்த

 விளையாட்டுக்கு வரல.அம்மாவிடம்

நெருங்கினால் அவ்வளவுதான்.

 வேறு எதாவது நடக்கிற காரியமாக கூறுங்கள்.

 இதெல்லாம் முடிகிற காரியமா?

அம்மாவிடம் நல்ல பிள்ளை என்று 

பெயரெடுத்துவிட வேண்டும் என்று 

நானும் படாதபாடுபடுகிறேன்.  

ஒன்றும் வேலைக்கு ஆகமாட்டேன் என்கிறது.

அம்மா மனதை மட்டும் கொள்ளையடித்துவிட

முடியவே முடியாது

என்ற உங்களின் நினைப்பு என் 

காதுகளில் விழாமலில்லை.


 அம்மாவின்  மனதைக் கொள்ளையடிக்கும் 

அழகு மந்திரம் உங்கள் கைவசம் 

இருக்கும்போது ஏனிந்த பிதற்றலும்  பீதியும்?

 
 பேச்சுக்குப் பேச்சு... வாய்க்கு வாய் ...

என்னம்மா .... ஆமம்மா...ஆகட்டும் அம்மா.

.சரி அம்மா ....போயிட்டு வாரேன் அம்மா

 .என்று அம்மா...அம்மா...என்ற சொல்லை

 அம்மாவோடு பேசும்போதெல்லாம் 

கோத்து விடுங்கள்.

 மாட்டேன் என்பதை வந்து

 செய்கிறேன் அம்மா "என்று இதமாகப்பேசி

நகர்ந்து விடுங்கள்.

 மறுப்போ வெறுப்போ ஒரு கொஞ்சலோடு 

 சேர்ந்து வெளிப்படட்டும்.

 இப்போது  உங்கள் அம்மாவின்

மனசு உங்கள் கையில்.

முதல் கொள்ளைக்கான தாரக மந்திரத்தை 

அறிந்து கொண்டீர்களல்லவா?

இவ்வளவும் செய்தால் போதும்

முதல் கொள்ளை வெற்றிகரமாக

நடைபெற்றுவிடும்.

கொள்ளை நடைபெற வாழ்த்துகள்.


 இனி வரிசையாக  கொள்ளையில் 

இறங்கிவிட வேண்டியது தான்.

 பள்ளிப்பருவத்தில் உடன் பயிலும் தோழர்களின்

மனங்களைக் கொள்ளையடிக்கத் தெரிய 

வேண்டும். 

தோழர்களிடமும் கைவரிசையைக்

காட்ட வேண்டுமா?

ஏன் நட்பு வேண்டாமா?

எத்தனை நாள் யாருமே என்னிடம்

நட்பாகப் பழகாமல் விலகி

ஓடிவிடுகிறார்கள் என்று

புலம்புவீர்கள்?

நட்பை சம்பாதிக்க வேண்டாமா?

 இது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. 

கொஞ்சம் கரிசனம் எடுத்துக் கொண்டால்போதும்.

 இதுவும் வெற்றிகரமாக நடைந்தேறிவிடும்.

ஒருநாள் பள்ளிக்கு வரவில்லையென்றால்

உடம்பு சரியில்லையா ? இப்போது எப்படி

இருக்கிறது? என்று கரிசனமாக

 விசாரியுங்கள். நான் ஏதாவது உதவட்டுமா?

என்று வலிய வலிய சென்று பேச்சு கொடுங்கள்.


அடிக்கடி உங்கள் புன்னகையை 

உங்கள் பிரியமான தோழர்கள்

பக்கம் திருப்பிவிடுங்கள்.

 இவை யாவும் உங்களின் நட்பு வட்டத்தைப்

பெருகப் பண்ணும்.

அவர்களின் கவனத்தை உங்கள் பக்கமாகத் திருப்பும்.

இப்படிச் செய்தால் இரண்டாவது

 கொள்ளையும் வெற்றிகரமாக

நடந்து முடிந்துவிடும்.


அடுத்த  கொள்ளை ஆசிரியராக இருக்கட்டும்.

ஆசிரியர் மனதைக்  கொள்ளையடியுங்கள்.

ஐயா ...சாமி  இது மட்டும் கூடவே கூடாது. 

வேறு ஆளைப் பாருங்கள் 

என்று ஓட்டம் பிடிக்கப் பார்ப்பீர்கள்.


  எங்கே ஓடுகிறீர்கள்?

  ப்ளீஸ் ...ஒரு நிமிடம் நின்று கேளுங்கள்!

ஆசிரியர் என்ன உங்களுக்கு ஆகாதவரா ?

  ஆனானப்பட்ட அம்மா மனதையே

 கொள்ளையடித்து விட்டீர்கள்.

ஆசிரியர் மனதையா கொள்ளையடிக்க முடியாது.?

ஆசிரியர்கள் பாவம்ங்க...

எளிதில் அவர்கள் மனதைக் 

கொள்ளையடித்துவிடலாம்.

ஆசிரியர் மனதை மட்டும் கொள்ளையடித்துவிட்டீர்கள்.

நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

சும்மா நிமிர்ந்து நடக்கலாம்.

வெற்றிமீது வெற்றி வந்து

என்னைப் சேரும்.

அதை வாங்கிக் தந்த பெருமை 

எல்லாம் ஆசிரியரைச் சேரும் என்று

பாடியபடியே வெற்றிநடை போடலாம்.


நிமிர்ந்து நடக்க  யாருக்குத்தான்  

ஆசை இல்லை. வெற்றி வேண்டாம் 

என்று சொல்வார் எவரும் உளரோ?

ஆசிரியர் மனதையும்அசைத்துப் பார்த்துவிடுவோம்.

ஆசிரியர் மனக்கதவைத் திறக்க வைத்து 

அவர்கள் உள்ளங்களில் குடியிருக்க நிரந்தரக்

குடியுரிமை வாங்கி வைத்து விடுவோம்.

 வாருங்கள். ஆசிரியர் மனதையும்

கொள்ளையடித்து விடுவோம்.


இதுவும் எளிதாக நடந்துவிடக்

கூடிய செயல்தான்.

ஆசிரியர்களிடம்

நம்மால் முடிந்ததைச்  செய்து நம்மை

 முன்னிலைப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

 படிப்பில் மட்டும் முன்னிலைப்படுத்தத்

தெரிந்தால் போதாது.

 உங்களின் பேச்சால்   ஆசிரியரின் மனங்களை 

எளிதில்  கொள்ளையடித்துவிட முடியும்.

ஆசிரியர்கள் விருப்பப்படும்படி நடந்துகொள்ளுங்கள்.

அம்மாவிடம் சொல்லுவதுபோல 

இங்கேயும் எதற்கும்நான்... நான்

என்ன டீச்சர் ...? நான் செய்யட்டுமா டீச்சர்,

 நான் கொண்டு வரட்டுமா டீச்சர்?

என்று முன்னால் போய் நின்று

பாருங்கள். ஆசிரியர் கவனம்

தானாக உங்கள் பக்கம் திரும்பும்.

வகுப்பில் அடிக்கடி உங்கள் பெயர்

உச்சரிக்கப்படும்.

இப்படி நிகழ்ந்துவிட்டால் நீங்கள்

ஆசிரியர் மனதைக் கொள்ளையடித்துவிட்டீர்கள்

என்று உறுதியாக நம்பலாம்.

ஆசிரியர் மனதைக் கொள்ளையடிக்கும்

சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களல்லவா?

வேறு என்னங்க வேண்டும்.

இனி எல்லாமே வெற்றிதாங்க.


அரசியல்வாதியாக வேண்டுமா?

மக்களின் மனங்களைக் கொள்ளையடிக்கத் 

தெரிந்திருக்க வேண்டும்.

நல்ல பேச்சாளராக வேண்டுமா?

பார்வையாளர்களின் மனங்களைக் 

கொள்ளையடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

எழுத்தாளராக வேண்டுமா?

வாசகர்கள் மனதைக் கொள்ளையடிக்கும்

மந்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

நல்ல வியாபாரியாக வேண்டுமா?

வாடிக்கையாளர்கள் மனதைக்

கொள்ளையடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வளவு கொள்ளைகள்  இருக்கிறாதா...?

இது தெரியாமல் இருந்திருக்கிறோமே

என்று வருத்தப்படுகிறீர்கள்தானே?

ஒன்றுக்கும் வருத்தப்படத் தேவையில்லை.

முதலாவது துணிந்து கொள்ளையில்

 இறங்க முடிவு செய்யுங்கள்.

நல்ல காரியத்திற்காகதானே 

கொள்ளை செய்கிறீர்கள்?

தப்பே இல்லை.

எப்போதோ முடிவு பண்ணிவிட்டோம்

என்று நீங்கள் மனக்கணக்குப் 

போட்டுஒரு மர்மப் புன்னகை புரிவது

புரியாமலில்லை.

மனங்களைக் கொள்ளையடிக்க புறப்பட்டாயிற்றா?

களத்தில் இறங்கிக்

கலக்குங்கள்.

நடக்கட்டும்... நடக்கட்டும்.!

உங்கள் கொள்ளையைக்

காண நானும் கொள்ளை ஆவலோடு

காத்திருக்கிறேன்.

கோடிகோடியாக மனக்கொள்ளை

நடைபெற்று

கொள்ளை கொள்ளையான வெற்றிகள் வந்து

குவியட்டும்.!


    

Comments

Post a Comment

Popular Posts