தமிழ்ப் போட்டி

                      தமிழ்ப் போட்டி 


காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் 

தங்கள் குட்டிகள் படிப்பதற்காக ஒரு

பள்ளியை ஆரம்பித்தன.

பள்ளி ஆசிரியராக 

கரடி அண்ணா நியமிக்கப்பட்டார்.

ஒரு நாள் பள்ளியை மேற்பார்வையிட வந்த

காட்டு ராசா சிங்கம் மாணவர்களுக்கு

ஒரு போட்டி  வைக்கும்படி ஆசிரியரிடம் 

கேட்டுக் கொண்டார்.

ஆசிரியரும் மாணவர்களின் தமிழ் அறிவு

எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக

போட்டி ஒன்று நடத்துவது என்று

தீர்மானித்தார்.

ஆலமரம் போட்டி நடைபெறும் இடமாக 

அறிவிக்கப்பட்டது.

பதினொரு மணிக்கு எல்லா விலங்குகளும்

ஆலமரத்தடியில் வந்து கூடும்படி அறிவிக்கப்பட்டது.

அதன்படி  எல்லா விலங்குகளும் 

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே 

ஆலமரத்தடியில் வந்து நின்றன

சிங்கத்தின் தலைமையில் போட்டி தொடங்கியது.

ஆசிரியர்  போட்டியை நடத்துவதற்குத் தயாராக

வந்து நின்றார்.

முதலாவது   போட்டியின் விதிமுறைகளைத் 

தெரிவித்தார் ஆசிரியர்.

 விடை தெரிந்தவர்கள் கையை உயர்த்த வேண்டும்.

முதலாவது கையை உயர்த்துபவருக்கு

முதல் வாய்ப்பளிக்கப்படும்.

யாரும் முணுமுணுக்கவோ கையசைப்பின்

மூலமோ பிறருக்கு உதவுதல் கூடாது.

அப்படி உதவினால் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு

கேள்வி மாற்றி கேட்கப்படும்.

இடத்தில் நின்றபடியே பதில் சொல்லக் கூடாது.

 முன்னால் வந்து நின்று பதில் சொல்ல வேண்டும் 

என்று விதிமுறைகளைக் கூறினார் ஆசிரியர்.

இப்போது முதலாவது கேள்வி கேட்கப்பட்டது.


 " உயிர் எழுத்துகள் எத்தனை? "கேட்டார் ஆசிரியர்.

அனைவரும் கையை உயர்த்தினர்.

முதலாவது வாய்ப்பு முயலுக்கு வழங்கப்பட்டது.

பன்னிரண்டு " பட்டென்று

 சொல்லிவிட்டு இடத்தில் போய் அமர்ந்து

 கொண்டது முயல்.

சரியான விடை...வாழ்த்துகிறேன் என்ற ஆசிரியர்,

 "உயிர் எழுத்துகள் யாவை?" என்று

இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

கையைத் தூக்கியபடியே வந்த குரங்கு

   "அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ ஔ ."..சொல்லிவிட்டு

 ஓடிப்போய் மரத்தில் தலை கீழாக

 தொங்கியது .

 " ஐயைய்யோ....தப்பு தப்பு. "..ஒட்டு மொத்தமாக 

அத்தனை  விலங்குகளும் கத்தின.

" தவறு...   அடுத்தவர் முயற்சி செய்யலாம் "

என்றார் ஆசிரியர்.

குட்டிக்கரணம் போட்டபடி ஓடி வந்த குட்டி எலி

"அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ "

என்று சரியாக சொல்லி இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.
"  சரியான விடை...பாராட்டுகிறேன் எலியாரே   "என்ற ஆசிரியர்,

குரங்கு எந்த எழுத்தை சொல்லாமல் விட்டது

என்று கூறமுடியுமா? என்று கேட்டார்.

   ' ' என்று அனைவரும் சேர்ந்து

கத்தினர்.

அமைதி...அமைதி...

மூன்றாவது கேள்வி இதோ கவனமாக கேளுங்கள்.

" மெய் எழுத்துகள் எத்தனை ? அவை யாவை?"  

என்று ஒட்டு மொத்தமாக  இரண்டு 

கேள்விகளையும் ஒரே கேள்வியாக  

கேட்டு வைத்தார் ஆசிரியர்.

உடனடியாகப்  பதில் சொல்ல 

ஒருவரும் முன் வரவில்லை.
" ஏன் ஒருவருக்கும் தெரியாதா? "

கோபமாக கேட்டார் ஆசிரியர்.

எனக்குத் தெரியும்....எனக்குத் தெரியும் என்றபடி

  தந்திரக்கார நரி ஓடி வந்து 

"க ச ட த ப ற வல்லினம்"

"   ய ர ல வ ழ ள இடையினம்"

" ஞ ங ண ந ம ன மெல்லினம் 

ஆக மொத்தம் பதினெட்டு.

 அத்தனைக்கும் மேலே புள்ளி

 வைத்து எழுதுங்கள் .அது தான்

 மெய்யெழுத்து "என்று தந்திரமாக 

பதில் சொல்லிவிட்டு ஓடிபோய் 

அமர்ந்து கொண்டது .

வரிசையாக சொல்ல தெரியாவிட்டாலும்

 சாமர்த்தியமாக பதில் சொல்லி 

அத்தனைபேர் பாராட்டையும் பெற்றுக் 

கொண்டது நரி.

"பதில் சொன்ன விதம்...அதற்கான விளக்கம்

யாவும் புத்திசாலித்தனமாக இருந்தது"

என்று சொல்லி பாராட்டினார் ஆசிரியர்.

அடுத்த கேள்வி இதோ என்ற ஆசிரியர்,

"உயிர்மெய் எழுத்துகள் எத்தனை? "

என்று கேட்டுவிட்டு அனைவர் முகத்தையும்

பார்த்தார்.

தும்பிக்கையை தூக்கியபடியே 

முன்னால் வந்த யானை முப்பது என்று சொல்லி

பெருமையாக நின்றது.

"தவறு" என்றார் ஆசிரியர்.

"எப்படி" என்பது போல அனைவரும் 

ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்து கொண்டனர்.

உயிர் எழுத்து பன்னிரண்டு, 

மெய் எழுத்து பதினெட்டு

இரண்டையும் கூட்டினால் முப்பதுதானே

என்று வாதிட்டது யானை.

தவறு...தவறு..தவறு... வேறு யாராவது? 

என்றார் ஆசிரியர்.

இதுவரை எந்த பதிலும் சொல்லாத 

ஒட்டகச்சிவிங்கி தலையை உயர்த்தியபடி

முன்னால் வந்து, "இருநூற்றுப் பதினாறு "என்றது.

சரியான விடை.ஆனால்

"எப்படி என்று சொல்லத் தெரியுமா? "என்று

ஒட்டகச் சிவிங்கியிடமே கேட்டார்   ஆசிரியர்.

"ம்..ஹூம்..".தலையைஅசைத்தது ஒட்டகச்சிவிங்கி

"   பன்னிரண்டு உயிர் எழுத்தும் 

பதினெட்டு மெய் எழுத்தோடு 

தனித்தனியாக சேர்ந்தால் 

மொத்தம் இருநூற்றுப் பதினாறு 

உயிர்மெய் எழுத்துகள் கிடைக்கும் "

என்று ஆசிரியரே விளக்கம் அளித்தார். 


இப்போது இறுதியான கேள்வி.

"வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்

கொள்ளுங்கள். "என்ற ஆசிரியர்,

"தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?"

என்று கேட்டார்.

அத்தனை விலங்குகளும் மொத்தமாய் 

முன்னே ஓடி வந்தன.

"இதுவரை பதிலளிக்காத புலிக்குட்டிக்குத்தான் 

இந்த வாய்ப்பு தரப்படுகிறது "என்றார் ஆசிரியர்.

புலிக்குட்டி யாராவது உதவ மாட்டார்களா?

என்று அனைவர் முகத்தையும் பார்த்தது.


"கொஞ்சம் முயற்சி செய்து பார்த்து

விடையைச் சொல்லலாம். கடைசி கேள்வி 

என்பதால் கூடுதலாக ஐந்து நிமிடங்கள் 

தரப்படுகிறது. நினைவுபடுத்தி பதில்

சொல் "என்றார் ஆசிரியர்.

புலிக்குட்டி பன்னிரண்டு, முப்பது, இருநூற்று

பதினாறு என்று மனக்கணக்குப் போட்டுப்

பார்த்தது.

"ஆ...ஞாபகம் வந்து விட்டது

இருநூற்று நாற்பத்தாறு"

என்று  கூறிவிட்டு பெருமையாக 

இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.

 எல்லோரும் கைத்தட்டினார்கள்.

" தவறு "என்றார் ஆசிரியர்.

 "எப்படி..." என்பதுபோல அனைத்து 

விலங்குகளும் கரடியைப் பார்த்தன.

"ஒரு எழுத்தை விட்டுவிட்டீர்களே"

என்றார் ஆசிரியர்.

"எனக்குத் தெரியும்...எனக்குத் தெரியும்..

"ஃ" "என்றது நரி.


"அஃகா...?".என்றபடி வாயைப் 

பிளந்தன அத்தனை விலங்குகளும்.

"நான் ஃ என்பதை எழுத்தாகவே 

நினைக்கவில்லை"

என்றது ஒட்டகச்சிவிங்கி.

தமிழ் எழுத்துகள் இருநூற்று நாற்பத்து ஏழு

என்று சொல்லி ஒட்டுமொத்த 

மாணவர்களின்

பாராட்டையும் பெற்றது நரி.

அஃதோடு போட்டியும் நிறைவு

 பெற்றது என்றார் ஆசிரியர்.

 வெற்றியைக் கொண்டாட  போட்டியில் 

கலந்து கொண்ட   அனைவருக்கும்

சிங்கத்தோடு சிற்றுலா  செல்ல ஏற்பாடு 

செய்யப்பட்டது.

சிங்கத்தின் தலைமையில் அனைத்து

விலங்குகளும் அச்சமின்றி காட்டில்

சுற்றித் திரிந்தன.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று

காடே மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனது.

"உரக்கப் பாடுங்க_ நீங்க

உரக்கப் பாடுங்க

உயிரெழுத்து பன்னிரண்டு

உரக்கப் பாடுங்க.....நீங்க

உரக்கப் பாடுங்க.


ஆடிப் பாடுங்க- நீங்க

ஆடிப் பாடுங்க

மெய்யெழுத்து பதினெட்டு

ஆடிப் பாடுங்க....நீங்க

ஆடிப் பாடுங்க.


துள்ளிப் பாடுங்க - நீங்க

துள்ளிப்  பாடுங்க

உயிர்மெய் எழுத்து 

இருநூற்றுப் பதினாறு

துள்ளிப்  பாடுங்க - நீங்க

துள்ளிப் பாடுங்க


ஓதிப் பாடுங்க - காதில்

ஓதிப் பாடுங்க

ஆயுத எழுத்து ஒன்றுஎன்று

 ஓதிப் பாடுங்க- நீங்க

ஓதிப் பாடுங்க.


 பாடி ஆடுங்க - நீங்க

பாடி  ஆடுங்க

தமிழ் எழுத்துகள்

இருநூற்று நாற்பத்து ஏழு...என்று

பாடி ஆடுங்க  - மகிழ்ந்து

பாடி  ஆடுங்க.

என்று விலங்குகள் உரக்கப் பாடி

ஆடிய ஆட்டம் கண்கொள்ளாக்

காட்சியாக இருந்தது.



     

Comments

  1. தமிழ் எழுத்துக்களை மிகச்சிறப்பாக கதை கூறி பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.உங்கள்
      விமர்சனத்தை
      எதிர்பார்க்கிறேன்.

      Delete
  2. தமிழ்ப்போட்டி விலங்குகளுக்கிடையே நடைப்பெற்றது, சிறப்பம்சம் கொண்ட அருமையான சிறுகதை.🌺🌺🌺

    ReplyDelete
  3. நனி நன்று👏👏👏👏👌

    ReplyDelete
    Replies
    1. நன்றி.தொடர்ந்து
      வாசியுங்கள்.

      Delete
  4. super story selvabai TR students will remain the concept

    ReplyDelete
    Replies
    1. சித்ரா உங்களிடமிருந்தவெகு நாளாக
      விமர்சனத்தை
      எதிர்பார்த்தேன்.
      மிக்க மகிழ்ச்சி.
      தொடர்ந்து கூகுள்
      தேடலில் எனது
      கட்டுரைகள்
      கிடைக்கும்.
      வாசித்து
      விமர்சனம்
      எழுதுங்கள்.
      வாழ்த்தி
      வரவேற்கிறேன்.

      Delete
    2. TR I am just learning to reply for in Google platform but u know I am a big fan of u I really enjoy all the poems u are writing in super TRgroup.u are really gifted person

      Delete
    3. Super👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

      Delete

Post a Comment

Popular Posts