அச்சம் தவிர்
அச்சம் தவிர்
"அறஞ்செய விரும்பு "என்று தனது
ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார்
ஔவை.
பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை
"அச்சம் தவிர் "என்று
தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார்.
அத்தோடு விட்டு விட்டாரா?
அடுத்த வரி
"ஆண்மை தவறேல்"
அதாவது மன வலிமையை இழக்காதே!
நம்பிக்கை தரும் வரி இல்லையா?
அதைத்தொடர்ந்து மூன்றாவதாக
"இளைத்தல் இகழ்ச்சி"
என்கிறார்.
அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக்
கூடாது.அது இகழ்வடையக்
காரணமாக அமைந்துவிடும்.
என்று தட்டி எழுப்பிக் கொண்டே
வருகிறார்.
இதுதான் பாரதியின் பாடல்களில்
இருக்கும் மந்திரமும் தந்திரமும்.
பாரதியின் பாடல்கள் என்றாலே
ஒரு இளமையின் துள்ளலும்
உயிரோட்டமான உணர்வும்
உணர்ச்சியூட்டலும்
கொண்டதாகவே இருக்கும்.
எதற்கும் அஞ்சா
துணிச்சலை வளர்த்தெடுக்க
உரமூட்டும் கருத்துக்கள்
அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும்.
நம்மைத் தட்டி எழுப்புவதாக இருக்கும்.
இலக்கண வரம்புக்கு உட்படாமல்
புதுக்கவிதைக்குப் பாதை அமைத்துத்
தந்தவராயிற்றே!
யாருக்கு அஞ்ச வேண்டும்?
எதற்கு அஞ்ச வேண்டும்?
என்று துணிச்சலோடு சொல்ல
வந்த கருத்தினை அள்ளி வீசியவர்.
"அச்சம் தவிர் "என்று
சொல்லும்போதே அதில் ஒரு
கண்டிப்பும் கரிசனமும் இருப்பதை
நம்மால் உணர முடியும்.
எதற்கப்பா அஞ்சி நிற்கிறாய்?
துணிந்து முன்னே வா.
எதற்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை
என்று கரம் பிடித்து இழுப்பது போல்
இருக்கும்.
இதுதாங்க பாரதி.
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே !
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து
நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே!
துச்சமாக எண்ணி நம்மைத்
தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே!
...... ......
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே!
என்று ஓங்கி உச்சந்தலையில்
அறைந்ததுபோல் அச்சம் என்னடா
அச்சம்... என்று சொன்னவரல்லவா பாரதி.!
எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை ஊட்டும்
வரிகளைத் தந்த நம்பிக்கை
நாயகன் பாரதி.!
பாரதியின் பாடல்களுக்குள்
ஏதோ ஒரு சக்தி ஒளிந்திருக்கும்.
நம் உறக்கத்தைக் கலைக்கும்.
உறங்கவிடாமல் தட்டி எழுப்பும்.
அந்தத் தட்டி எழுப்புதலோடு
புதிய ஆத்திசூடியின் முதல் வரியை
முத்தாய்ப்பாய்
"அச்சம் தவிர்."
என்று வைத்துள்ளார்.
ஏன் அச்சம் கூடாது?
அஞ்சினால் என்ன ஆகும்?
"நெஞ்சு பொறுக்குதில்லையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்...
அஞ்சி அஞ்சி சாவார் -இவர்
அஞ்சாத பொருளில்லை
அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்
அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார்....."
என்று உன்னை அச்சப்படுத்த
ஆயிரம் பேர் கங்கணம் கட்டிக்
திரிவர். ஆனால் நீ
எதற்கும் அஞ்சாதே
என்று சொல்லித் தந்தவர் பாரதி.
உளி தன்மீது விழுந்துவிடுமோ என்று
அச்சப்பட்டு ஒதுங்கி இருந்தால்
கல் சிலையாக முடியுமா?இல்லை
சிற்பமாகத்தான் ஆக முடியுமா?
உலையிலிட்டு உருக்கி
உருக்குலைத்து விடுவார்களோ
என்ற அச்சத்தால்
உலோகம் மண்ணுக்குள்ளேயே மறைந்து
இருந்துகொண்டால்
ஆயுதமாக முடியுமா?
நல்ல அலங்கார ஆபரணமாகத்தான்
மாற முடியுமா?
பறந்தால் வீழ்ந்து விடுவேனோ
என்ற அச்சம் பறவைகளிடம்
வந்து ஒட்டிக் கொண்டால்
காடெல்லாம் இரையிருந்தாலும்
இரைப்பையை நிறைக்கத்தான் முடியுமா?
எழுந்து பறக்கத்தான் முடியுமா?
பாறை குறுக்கே வந்து
நிற்கிறது .என்னால் எப்படி
பாறையோடு முட்டிமோத முடியும்?
என்று பம்மி நின்று கொண்டிருந்தால்
அருவியால் வீழத்தான் முடியுமா?
ஆறாக நடைபோடத்தான் முடியுமா?
அச்சமில்லா பயணம்தான்
நம்மை அடுத்த கட்டத்திற்கு
நகர்த்திக்கொண்டு செல்லும்.
வீழ்ந்து விடுவேனோ என்ற
அச்சம் இருந்தால் குழந்தையால்
முதல் அடிகூட எடுத்து
வைக்க முடியாது.
அம்மா தூக்குவார்கள்.
அப்பா தூக்குவார்கள் ....என்று
முயற்சி செய்யாமல் அங்கேயே
நின்று கொண்டிருக்கும்.
தண்ணீரில் இறங்க
அச்சப்பட்டால் எப்படி நீச்சல் பழகுவது?
வாகனம் ஓட்டினால் விபத்து
ஏற்பட்டுவிடும்
என்று அஞ்சிக் கொண்டே இருந்தால்
காலத்திற்கும் வாகனம் ஓட்டிப்
பழக முடியாதல்லவா!
தோற்றுவிடுவோமோ என்ற அச்சம்
மனதில் குடி கொண்டு விட்டால்
எப்போதுதான் வெற்றிக்கனியை
ருசிப்பது?
துணிந்து செயலில் இறங்கினால்தானே
வெற்றி கிடைக்கும்.
இவை எல்லாவற்றையும் மனதில்
வைத்துத்தான்
தன்னம்பிக்கையோடு நம்மை
அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல
"அச்சம் தவிர்"
என்கிறார் பாரதி.
உன் முன்னேற்றத்திற்கான முதல்
தடையே உனக்குள் குடிகொண்டிருக்கும்
அச்சம்தான்.
அந்த அச்சத்தைத் தூக்கி
வெளியே வீசு.
அடுத்து நடப்பவை எல்லாம்
நல்லதாகவே நடக்கும்.
"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா...."
என்ற பாடலின் மூலம்
நாம் யார்?
நமது திறன் எது?
என்று நம்மையே நமக்கு
அடையாளம் காட்டியவர் கண்ணதாசன்.
அச்சம் தவிர்ப்போம்.
தடைகளைத் தகர்ப்போம்.
தன்னம்பிக்கையோடு முன் செல்வோம்!
Comments
Post a Comment