இலக்கியம்

இலக்கியம் 


தாலசைத்துத் 

தமிழ்ப்பாலூட்டி

தாலாட்டிப் பாராட்டி

முதல் இலக்கியம் முன்மொழிந்து

 பாட்டன் பாட்டி  உறவுமுறை 

 உணர்வினில் ஏற்றி 

தமிழ்ப் பாலூட்டிய

தாய்க்குத் தலை வணக்கம்!

          

சீரமைச் செவிக்கின்பத்

தேனருந்த வந்திருக்கும்

 தமிழ்ச்  சொந்தங்களுக்கு

கோடானு கோடி வணக்கம்

        

மலையைப் பெயர்த்து

 மடிப்பைக்குள் வைக்க நினைப்பதுபோல

 காற்றைப் பிடித்து

கைப்பைக்குள் அடைக்க

விரும்பும் சிறுவன் போல

வான் நிலவை நீள்கயிற்றால்

இழுத்திட அலையும்

 குரங்கினம் போல

அலைகடலைச் சிற்றலகால்

அள்ளி வற்றிட முனையும் 

புள்ளினம்போல

இலக்கியப் பெருங்கடல் முன்னர்

பேராசை கொண்டு நிற்கின்றேன்

வெற்றுச் சொற்களோடு

விளையாட்டில்  முந்திட முயல்கின்றேன்

          

 

காதல் காதலரோடு மட்டும்

கைகோத்துக் கண் சிமிட்டும்

ஆன்மீகம்  ஆன்மீகவாதிகளின்

 தனியுடைமை எனத்

 தனித்து நடை போட்டிடும்

 நட்பு வட்டம் போட்டு

  சுற்றி சுற்றி  வந்து

கும்மாளம் இட்டிடும்


 உழைப்பு தான்மட்டும் உயர்வென்று

 ஒற்றை மரமாய்த்

 தள்ளியே தன்னந்தனியாய்

நின்றிருக்கும் 


    

காதல் ஆன்மீகம் நட்பு உழைப்பு

அத்தனையையும் ஒட்டுமொத்த 

குத்தகைக்கு எடுத்து

ஒன்பான் சுவையூட்டி

எண்பான் கலை புனைந்து


 எழில் மிகு கருவாய்

 பொருள் மிகு திருவாய்

பொய் புனை கவியாய்

மெய்தரு  பொருளாய்

இருள் அகற்றும் ஒளியாய்

இனிமையின் ஊற்றாய்

தத்துவக் கடலாய்

நேற்றைய நினைவாய்

நாளைய கனவாய்

இன்றைய நனவாய்

என்றென்றும் உறவாய்

இயல்பாய் கலையாய்

இருக்கும் உலகாய்

கற்பனைத் தேராய்

கவின் மிகு காடாய் 

காட்சியில் தொலைந்திட வைத்து

கண் முன் விரிவது இலக்கியம்

 இலக்கியம் மனதினைக்  

கட்டியே இழுக்கும்

உணர்வினைச் சுண்டியே எழுப்பும்!

 

சொற்போரைச் சுவைப்போராக்கி

கவிப்போர் தொடுத்து 

சுவைப்போரை மலைப்போராக்கி

காப்போர் அவையில்

கலைப்போர் படைப்போர்

ஔவையும் கம்பனும் நிகழ்த்திய 

இலக்கிய வரலாற்றுப்போர்

படிப்போர் நினைவில்

என்றென்றும் நிகழ்த்திடும்

இலக்கிய  இன்பப்போர்


நேற்றைய புதினமும்

இன்றைய கதைகளும்

நாளைய தலைமுறையோடும் கொஞ்சும்

நற்றமிழ் இலக்கியமாய் விஞ்சி

நடை போடும்


படைப்பிலக்கிய உச்ச நட்சத்திரம்

கம்பனின் படைப்பில்

கடைகோடி பாத்திரமும்

 விடைபெற மறுக்கும்

 மறுபடி மறுபடி எனைப் படி என

வருந்தியே அழைக்கும்

இடையிடை எப்படி 

இப்படியென 

 வியப்பிட வைக்கும்

  

அறத்துப்பால் பருகிய இனிப்பால்

 பொருட்பால் மீது கொண்ட ஈர்ப்பால்

காதல்பால் விழுந்தின்ப சுவைப்பால்

அய்யன் வள்ளுவன் 

மீதுள்ள மலைப்பால்

மனம் தொலைப்பால் 

கவிப்பால்

அருந்தத் தந்தது இலக்கியம்!


பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

பேசுமே தமிழரின் வரலாறு

காதலும் வீரமும் கைகோத்து

 கலகலவென ஓடி நிற்கும் 

தமிழ்த் தேனாறு


பாமரத் தமிழ் பேசும் 

பாட்டியின் உதடுகள்

 சாமானியனின் தமிழுக்கு

 வீசிடும் சாமரம்

நாட்டுப்புற இலக்கியப் 

பயிலரங்கில்

 தாலாட்டுக்கு உண்டு  முதலிடம்


பிள்ளைத்தமிழின் பிறப்பிடம்

இலக்கியப் பாசறையின் உறைவிடம்


 கண்ணததாசனும் வாலிப கவிஞரும்

 இரவினில் எம்மோடு கொஞ்சும்

 பாரதியும் பாரதிதாசனும் 

படித்திடும்போது

பாபரனின் மீசையும் 

முறுக்கியே நிற்கும்

இதுதான் இலக்கியம்  என

இயம்பியே நிற்கும்!


காணும் பொருள் யாவும்

கவிக்குள் மட்டுமே அடக்கம் முடமாகிப்போன சிந்தையை

முட்டி இழுக்கும் 

கவித்துவமாகி

கரம் பிடித்து நடப்பது

 இலக்கியம்


கடல் கடந்து மொழிகடந்து

மொழிமாற்றுப் படைப்பினையும் 

இலக்கியமாய் எம் 

இதயம் ஏற்கும்


நவில்தோறும் 

நூல் நயம் இயம்பி

பயில்தோறும்

பல்பொருள் உரைத்து

அறவுரை தந்து 

பண்பினை ஊட்டி

புறம்தரு புகழ் பாடி 

காலக் கண்ணாடியாய்

காப்பியம் படைத்து

 காலம் கடந்தும் 

 கதை பேசி நிற்பது இலக்கியம்


உரையிடையிட்ட 

பாட்டுடைச் செய்யுளும்

பேச்சும் வீச்சும் எம்முள் அடக்கம்


பொதிகைத் தென்றல் போல

நதியில் நாணல் போல

மடியில் மகவைப் போல

கொடியில் மலர் போல

பன்னருங் காலமாய் 

நன்னரு பொருள் தந்து

எண்ணறு இயம் கவர்ந்து

இன்றும் இளமையாய் 

இருப்பது இலக்கியம்


சிந்தனைக் கூடமாய்

செதுக்கிய சிற்பமாய்

செப்பமுறு நடை பயின்று

செப்பிச் செல்வது இலக்கியம்


செவிக்கு உணவூட்டி

பிணிக்கு மருந்தூட்டி

கணினிக்கும் தீனியூட்டி

கண்டவற்றிற்கு 

எல்லாம் மொழியூட்டி

காணாதவற்றிற்குப் 

பொய்யூட்டி

கவிதை எனும் பெயர் சூட்டி

கண்முன் வந்து

சிரித்து நிற்பது இலக்கியம்


இலக்கியமில்லா பேச்சில் 

சுவை இருந்ததில்லை

சுவையில்லா பேச்சினை

பேச்சென்று சொல்வாரும் இல்லை!

அணியாய் அணியம் செய்து

 சொல்லுக்கு அழகூட்டுவது 

இலக்கியம்


கற்றையாய் எழுதாமல்

ஒற்றை வரியில் 

உணர்வினை சொல்லும்

உள்ளங்களை அள்ளும்

புதுக்கவிதைகள்

காலத்தின் கட்டாயம்

தந்ததொரு இலக்கிய வடிவம்



வாழ்வே ஓர் இலக்கியம்

நுகர்ந்து பார் 

அதன் உண்மை புரியும்




நன்றி !வணக்கம்!































      




Comments