நினைவுகளின் மிச்சம்

நினைவுகளின் மிச்சம் 


வானிலா ஒளி

வரப்பின்மீது விழ

கையில் லாந்தர் ஒளி

காலுக்கு வழிகாட்ட

கால்கடுக்கக்

கடைமடைப் பயணம்

ஓடையில் ஓடும் 

சிறுமீன் கண்கள் 

சிதறும் நிலவொளியில்

மின்னிடும் தாரகையாய்

மிரட்டி அழகூட்ட

வரப்பில் தாண்டி ஓடும்

தவளை கால்கள்

மேல் துள்ளிக் குதிக்க

அச்சத்தில் நான்


கால்கள் இடறி 

கால்வாயில்  விழுந்த

அந்தநாள் நினைவுகள்

மெல்ல வந்து சிரிக்க

நாணத்தால் முகம் கவிழ்ந்தேன்

அவைதான் எத்துணை

இனிய நாட்கள்


சிள்வண்டு சுற்றி 

கண்கள் காணா இடத்திலிருந்து

உள்ளேன் ஐயா என்று

ஒலி எழுப்ப

ஒற்றைப் பறவையின்

சிறகடிப்பு  தன் இருப்பை

அறிவித்து மெல்ல

அச்சமூட்டிச் சிலிர்க்க வைக்க

..

யாருல அங்கே என்

மடையை அடைத்தது

என்ற பக்கத்துத் தோட்டத்து

மாமாவின் குரல்

அப்பப்போ வந்து

ஆள் அனக்கம் இருக்கிறது

அச்சம் தவிர் 

என்று  தைரியம்

கொடுத்துக் காதுக்குக்

கதை சொல்ல

அந்த நாள் நினைவுகள்

கடைமடைக்கு அழைத்துச் சென்று

கண் சிமிட்டிக் 

கவி பாட வைத்தது


முதல்மடை திறந்து

மொத்த தண்ணீரையும்

வரப்பு மவுழ பெருக்கி

மகிழும் முன்னர்

மொத்தமாய் முழுநீரும்

நின்று போக

யாரங்கே என் மடையை

அடைத்தது என்று

லாந்தர்

விளக்கோடு மடை நோக்கி

எங்கள் பங்காளி செல்ல 

உடன் நானும் நடந்தேன்

அங்கே

காத்திருந்ததொரு அதிர்ச்சி

மடைமீது 

யாரவர் கையில்

அரிவாளோடு

அய்யனாரோ ?


அர்த்த ராத்திரியில்

கடைமடையைக் 

காக்க வந்த 

காவல் தெய்வமோ

என ஐயுறும் வண்ணம்

ஆரடியில் ஓர் உருவம்

அங்கே நின்றிருக்க

மிச்சம் உயிரிருந்தால்

நாளை பார்க்கலாம் என

பதுங்கி மறைந்து

நின்றேன்



கால்கள் தந்தியடிக்க

தொடைவரை அதிர்வலை எழும்ப

உள்ளுக்குள் உதறலெடுக்க

ஊமையாய் நின்றிருக்க

எதுக்குல மடைய அடச்சிய

இனி மடையில் மண்ணள்ளிப்போட்டேன் 

வாழத்தடைய போட்டு மறச்சேன்னு

பார்த்தேன் சும்மா இருக்க மாட்டேன் 

நாக்கை பத்திரகாளி மாதிரி 

துருத்திக் காட்ட

வீடு வந்த நாட்கள்

நினைவின் உச்சம்

நிகழ்ந்தவை கடைமடை

காட்டிய கவினுரு 

நினைவுகளின் மிச்சம் !










Comments