தீபத் திருநாள்

 தீபத் திருநாள் 

தீபாவளி என்றாலே தீபத் திருநாள் என்பது

யாவரும் அறிந்த ஒன்று.

அது கொண்டாடப்படுவதின் வரலாற்றைச்

சற்று திரும்பிப் பார்த்தால் பிரமிப்பாக

இருக்கும்.


கொண்டாட்டங்கள் மனதிற்கு மகிழ்ச்சி

அளிப்பவையாக இருக்கும்.


ஏதோ ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டுவிட்டோம்.

மனது குதுகலிக்கிறது.

அப்பாடா...என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு

வெளிவருகிறது.

யாரிடமாவது சொல்லி மகிழ வேண்டும்

என்று கண்கள் யார் யாரை எல்லாமோ தேடுகிறது.

அந்த மகிழ்ச்சிப் பரிமாற்றத்திற்கான வடிகால்

தான் விழாக்களும் கொண்டாட்டங்களும்.


ஓடி ...ஓடி ஓயாது உழைத்த உடம்பு

சற்று  ஓய்வு கேட்கிறது.

ஓய்வு என்றால் அப்படியே ஓய்ந்து

கிடப்பதற்கல்ல...

உறவுகளோடு நட்புகளோடு கூடி குதுகலிப்பதற்கு...

அந்த குதுகலத்தைக் கொண்டாடும் நாள்

திருவிழாக்கள்.


அந்த திருவிழாக்களின் பின்னணியில்

ஏதோ ஒரு வரலாறு புதைந்திருக்கும்.

அவை நெகிழ்ச்சியான உண்மை சம்பவங்களை

கொண்டனவாக  இருக்கும்.


கதைகள் என்பதால் நடந்திருக்குமோ

 நடந்திருக்காதோ

என்ற ஐயப்பாடு எழலாம்.


எல்லா கதைகளிலும் நம்பும்படியான

ஒரு நிகழ்வு சொல்லப்படுவதால் அதைப்

பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்

அனைவரிடமும் உண்டு.


நம் முன்னோர்கள்  எதையுமே காரணமில்லாமல்

செய்துவிடுவதில்லை என்பதற்கு இவை

நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.


இப்படித்தான் தீபாவளி திருநாளில்

விளக்கு ஏற்றப்படுவதற்கும் ஒரு கதை உள்ளது.


ஹிமா என்று ஒரு மன்னர் இருந்தார்.

அவனுடைய ஒரே மகனுக்கு மிக இளம்

வயதிலேயே திருமணம் முடித்து வைத்து

அழகு பார்த்தார் மன்னர்.

ஆனால் அரண்மனை சோதிடர் இளவரசனுக்கு

திருமணம் ஆன நாலாவது நாள் பாம்பு கடித்து

இறப்பு நிகழும் என்று சொல்லிவிட்டார்.

மன்னர் அதிர்ந்து போனார்.

ஆசை ஆசையாக வளர்த்த மகன்.

தனக்குப் பிறகு நாட்டை ஆளப் போகும்

மன்னன்.அவனுக்கு இப்படி ஒரு சிக்கலா?


கூடாது.கூடாது.

என் மகனுக்கு எதுவும் நடக்கக்கூடாது.


மன்னனுக்கு எப்படியாவது தன் மகனைக்

காப்பாற்றிவிட வேண்டும் என்று ஆசை.

ஆனால் எப்படி என்பதுதான் தெரியவில்லை.

மகனை எதுவும் ... அதாவது எந்தத் துர்சக்தியும்

அண்டவிடாமல் காவல் காத்து

கொள்ளவேண்டும் என்பதில் 

கவனமாக இருந்தார்.


இளம் மனைவிக்க இந்தச் செய்தி தெரிய வருகிறது.

பதறிப்போகிறாள்.. எப்படியும் தன் கணவனை 

எமனிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டும்

என்று துடியாய்த் துடிக்கிறாள்.

இதற்காக தான் என்ன செய்யவும் தயாரானாள்.

பாம்பால்தானே தன் கணவனுக்கு மரணம்

நேரிடும் என்று சோதிடர் கூறுகிறார்.

பாம்பை வீட்டுக்குள் வரவிடாமல்

தடுத்துவிட்டால்....?


மனதிற்குள் ஒரு தந்திரம் ஒளிக்கீற்றாக

வந்து நிற்கிறது.

ஆம்....அப்படி செய்தால் என்ன...?

உடனே தந்திரத் திட்டத்தைச் செயல்படுத்த

முனைந்தாள்.


தீயைக் கண்டால் பாம்பு கிட்ட அண்டாது

என நினைத்தாள்.

அதனால் வீடு முழுவதும் தீபத்தை ஏற்றி

வைத்தாள்.

அதோடு மட்டுமல்லாமல் வீட்டின் வாசலில்

தங்க வைர வைடூரிய நகைகள் 

மற்றும் விலை உயர்ந்த கற்கள் யாவற்றையும்

கொட்டி வைத்தால் கண்கள் கூசி பாம்பு

அதற்குமேல் நகர்ந்து விடாது என நினைத்தாள்.


அதன்படி வீட்டு வாசலில் 

வைர வைடூரிய கற்களைக் கொட்டி வைத்தாள்.

இப்போது கண்கள் கூசும் அளவுக்கு 

அரண்மனை முழுவதும் ஜொலி ஜொலித்தது.


அந்த நேரத்தில் எமன் பாம்பு வடிவம் எடுத்து

அரண்மனைக்குள் வருகிறான்.

அரண்மனை வாசல் வரை வந்தவனுக்கு

அதற்கு மேல் அரண்மனைக்குள் செல்ல 

முடியவில்லை. அரண்மனையின் ஒளி  கண்களில்

பட்டு கண்கள் கூசியதால் நகரமுடியாமல்

அப்படியே பாம்பு நின்றுவிட்டது.

அந்த நேரத்தில் இளவரசி 

தன் கணவனுக்காக இறைவனிடம்

மெய் உருகப் பாடிக் கொண்டிருக்கிறாள்.


கண் தெரியாத நிலையிலும் பாம்பு

பாடலைக் கேட்டு மெய் மறந்து

அங்கேயே நின்றுவிட்டது.


அதற்குள் பொழுது விடிந்து ஐந்தாம் நாள்

வந்து விட்டது.

இளவரசன் உயிரும் காப்பாற்றப்பட்டு விட்டது.


தனது தந்திரத்தால் தன் கணவன்

உயிரைக் காப்பாற்றியதால் அந்த நாளைத்

தந்திராஸ் என்று பெண்கள் தீபங்கள்

ஏற்றி இன்றும் கொண்டாடி வருகின்றனர்.


தன் கணவன் நெடுநாள் வாழ வேண்டும்

என்பதற்காக எமனை வழிபடும் நாள்

தந்திராஸ்.


 தங்கள் கணவன் நீண்ட நாள் வாழ

 வேண்டும் என்பதற்காக தீபம் ஏற்றி

 எமனுக்குப் பூஜை செய்வதுதான் தீபாவளிக்கு

 இரண்டு நாட்கள் முன்பாக இன்றும்

 நடைபெறும் விளக்கேற்றும்  விழாவாகும்.

 

தீபம் ஏற்றுவதில் இப்படி ஒரு தந்திரமா?

மலைப்பாக இருக்கிறதல்லவா.?

நம் பெண்கள் நினைத்தால் நினைத்ததை 

அடையாமல் விடமாட்டார்கள் என்பதற்கு 

இதுவும் நல்ல சான்றாக உள்ளது.


தந்திரமோ ...மந்திரமோ... 

நோக்கம் நல்லதாக இருந்தால் போதும்.

நல்லது நடக்கும்.

இதுதான் தந்திராஸ் மூலம்

நாம் கற்றுக்கொண்ட பாடம்.







 






Comments