கன்னா பின்னா
கன்னா பின்னா
எனக்கொரு ஆசை.
எப்படியாவது கவிதை எழுதி
அரசரிமிருந்து பரிசு
வாங்கிவிட வேண்டும்.
அதனை நாலு பேரிடம் காட்டி
எனக்கும் கவிதை எழுத வரும்
என்று சொல்லி
பெருமைப்பட வேண்டும்.
அனைவரும் மெச்ச வேண்டும்.
நாலு காசு சம்பாதிக்க வேண்டும்.
ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா?
தமிழில் நாலு நல்ல சொற்கள்
சரியாக எழுதத் தெரியாத எனக்கு
கவிதை எழுத ஆசை வரலாமா?
கூடாது....கூடாது
எனக்கு வரக் கூடவே கூடாது.
"கூடாது ...கூடாது என்று குந்தி இருந்துவிட்டால்
எல்லாம் முடிந்துவிடுமா?
நாளைய சோற்றுக்கே வழியில்லையே...
உனக்கெல்லாம் குடும்பம் எதற்கு?
குந்திக் தின்ன நாலு காசு
தேடி வைத்திருக்கிறீரா?
இல்லை... தோட்டம் துறவு என்று
வாங்கித்தான் போட்டுருக்கிறீரா?
நாளையப் பாட்டுக்கு உலை வைக்க
ஆழாக்கு அரிசி இல்லை.
புலவன் புலவன் என்று சொல்லி விட்டுத்
திரிந்தால் போதாது.
எங்கேயாவது போய் பாடி
வயித்துப் பாட்டுக்கு ஏதாவது
கிடைக்குமா என்று பாரும்."
நேற்று மனைவி திட்டியது
மறுபடியும் மறுபடியும் தீட்டிய
கூராயுதமாக நெஞ்சில் வந்து
தைத்துப் போனது.
"எல்லோரும் பாடிப் பரிசுகளை
அள்ளி வரும்போது எனக்கு மட்டும் அரசரிடமிருந்து பரிசுப்
பொருட்கள் வாங்கி வர வேண்டும்
என்ற ஆசை இருக்காதா என்ன?"
இப்படி ஏதேதோ நினைவுகளோடு
கவிதை எழுதும் கனவோடு
கண்ணிமைக்க மறந்து
கற்பனையைத் தேடி
ஓடிக்கொண்டிருந்தான் ஒரு மனிதன்.
தேடினான்... தேடினான்.
தேடிக்கொண்டே இருந்தான்.
பலநாட்கள் தேடியும் முதல் வரி கூட
எழுத முடியாமல் எங்கெங்கோ முட்டிக்கொண்டு நின்றது.
வார்த்தைகளின் வறட்சி.
நின்ற இடத்திலேயே நிற்க வைத்து
வேடிக்கை காட்டியது.
எவ்வளவுதான் முயன்றாலும்
சரியான சொற்கள்
கிடைக்காத தடுமாற்றம்.
சோர்வாக வீட்டிற்கு வந்து
சேர்ந்தான்.
மனைவியோ"வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்காமல் ஆறு, கடல்,காடு,கழனி என்று சுற்றித் திரிந்தால் தானே கவிதை வரும். இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.கவிதை தானே வரும்'' என்று
கணவன் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை விரும்பாமல் வெளியில் துரத்த ஆரம்பித்தாள்.
இப்போதுதான் கணவன் மனதில் ஏதோ ஒன்று தைக்க ஆரம்பித்தது .
உள்ளுக்குள் உற்சாகம் .
அவள் சொல்வதிலும் உண்மை
இருக்கத்தான் செய்கிறது.
வெளியில் சென்று இயற்கையைப் பார்த்தால்
அதன் எழிலை கண்டு
இதயத்தில் வார்த்தைகள் தானாய் வரும் .
கவிதை எழுதிவிடலாம்.
என்னால் கூடும்.
என்னால் கவிதை எழுதக்கூடும்.
கவிதை எழுதுவேன்.
அந்தக் கவிதையை மன்னனிடம் காட்டி பரிசு வாங்கி வருவேன் என்று நம்பிக்கையோடு வீட்டைவிட்டு
வெளியேறினான்.
கையில் சில ஏடுகளையும், எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு
கால் போன போக்கில் நடந்தான்.
ஒரு தெரு கூட கடந்திருக்க மாட்டான்.
அதற்குள் தெரு முடிவில் ஒரு வீடு கட்டுவதற்காக
மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பதைப்
பார்த்தான்.
அங்கு ,சிறுவர் சிறுமியர்
சிறு வீடுகட்டி
விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனையும் சிறுமியையும்
அருகருகே உட்காரவைத்து
இலை, பூ, தழைகளாலான மாலைகளை இருவர்க்கும் அணிவித்து
ஒரு திருமணத்தையே
நடத்திக் கொண்டிருந்தனர்.
சிரட்டையில் ஈரமணலைச் சேர்த்து குழிப்பணியாரங்களைச் செய்து மணமக்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். மணமக்களாக இருந்த சிறுவர்கள்
அதனை எடுத்து எடுத்து உண்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த மற்ற சிறுவர்கள் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே! மண்ணுண்ணி மாப்பிள்ளையே!' என்று கேலிக்குரல் எழுப்பி சிரித்துக் கொண்டாடினர்.
கவிதை எழுதச் சென்றவனுக்கு
"மண்ணுண்ணி மாப்பிள்ளையே "என்ற சொற்றொடர் காதில் தேனாய் வந்து விழுந்தது.
"ஆகா! என்ன அருமையான வரிகள்."
உதடுகள் மண்ணுண்ணி மாப்பிள்ளையே என்று உச்சரிக்க ஆரம்பித்தன.
அதையே கவிதைக்கு முதல் வரியாக எழுதி
வைத்துக் கொண்டான்.
இப்போது மனதிற்குள் தன்னால்
கவிதை எழுத முடியும் என்ற
ஒரு தெம்பு வந்துவிட்டது.
தொடர்ந்து சிந்தித்த வண்ணம் ஊரின் எல்லையிலுள்ள சோலையை
வந்தடைந்தான்.
சுற்றும்முற்றும் பார்த்தான்.
அங்கே பழைய கோவில் இருந்தது.
அந்தக் கோயில் வாசலருகே அமர்ந்துகொண்டு அருகில்நிற்கும் மரங்களை அண்ணாந்து பார்த்தான்.
மரத்திலிருந்து காகங்கள் கரைந்து கொண்டிருந்தன.
பக்கத்திலிருந்த தென்னை மரத்திலிருந்து குயில்கள் கூவின.
ஆஹா....அருமை அருமை.
இதனைக் கவிதையின் இரண்டாவது அடியாக எழுதினால் என்ன?
உடனே "கா இறையே, கூ இறையே' என்று எழுதி வைத்துக் கொண்டான்
.அந்நேரத்தில், கோயிலருகே ஒரு பெருச்சாளி ஓடி
கோவிலினுள் சென்று மறைந்து
போனது.
கோவிலின் உள்ளே பெருச்சாளி.
உடனே, "உங்கப்பன் கோயில் பெருச்சாளி' என்று உதடுகள் உச்சரிக்க ஆரம்பித்தன அதையும் கவிதையில் மூன்றாம் வரியாக எழுதிக்கொண்டான்.
அதன்பின் வெகுநேரம் சிந்தித்துச் சிந்தித்துப்
பார்க்கிறான்.
ஊஹூம்.... ஒன்றுமே தோன்றவில்லை.
எப்படி கவிதையை முடிப்பது?
ஒன்றும் புரியவில்லை.
முழுமை பெறாத கவிதையைக்
கையில் எடுத்துக்கொண்டு
வீட்டுக்குப் புறப்பட்டான்.
வழியில் நண்பன் ஒருவன் எதிரே
வந்துகொண்டிருந்தான்.
அவனை நிறுத்தி
நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்
கேளேன் என்றான்.
என்னது...
நீ கவிதை எழுதியிருக்கிறியா?
சும்மா போவியா...என்று நக்கலாக
சிரித்தபடி கடந்து போக நினைத்தான்.
"ஏய்....ஒரு நிமிடம் கேளேன்"
கெஞ்சினான்.
"உன்னால் பெரிய தொல்லையாக இருக்கிறது. கேட்க மாட்டேன் என்றால்
விடவா போகிறாய். சரி சரி..வாசி"
என்றான்.
உற்சாகமாக தன் கவிதையை வாசித்துக் காட்டினான்.
""எப்படி என் கவிதை?'' என்று
கண்களால் கேட்டான்.
""என்ன கவிதை எழுதியிருக்கிறாய்? கன்னா பின்னா மன்னா தென்னா என்று
மன்னன் முன்னால் போய்
இந்தக் கவிதையோடு நிற்கப் போகிறாயா?'"
என்று சொல்லிவிட்டு அவன்
போய்விட்டான்.
"ஆகா! கன்னா பின்னா
மன்னா தென்னா .அருமையாக இருக்கிறதே இதையே நான்காவது அடியாக
சேர்த்துக் கொள்வோம் என்று எழுதி இணைத்துக் கொண்டான்.
. வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் கவிதையைப் படித்துக் காட்டினான். கேட்டவள் முகத்தில் மலர்ச்சி இல்லை. இவ்வளவு எழுதியும் சோழ மன்னனைப் புகழ்ந்து ஒரு வரிகூட எழுதவில்லையே"
என்றாள்.
இருவரும் வெகுநேரம் யோசனை செய்து
கடைசியாக "சோழங்கப் பெருமாளே' என்று இறுதி அடியாகச் சேர்த்தார்கள்.
கவிதை எழுதிய ஓலையைக் கையில் ஏந்தி அரண்மனையை நோக்கி நடந்தான்.
எனக்கு கிடைக்கும்
எனக்கு கிடைக்கும்.
எனக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும்.மகிழ்ச்சியில் கால்கள் துள்ளல் போட்டன.
வாயில் காவலரிடம் தன்னை ஒரு புலவன்
என்று பெரூமையாக அறிமுகம்
செய்து கொண்டான்.
புதிய கவிஞனின் வருகையை வாயில் காவலன் அரசனுக்குத் தெரிவிக்க அரசனிடமிருந்து அழைப்பும் வந்தது.
அவையில் கம்பர் முதலான புலவர்
பெருமக்கள் பலர் இருந்தனர். புதிய கவிஞரை வரவேற்ற அரசன், கவிதையை வாசிக்குமாறு கூறினான்.
புலவரும் கவிதையை
உற்சாகமாக வாசித்துவிட்டு
நிமிர்ந்து பார்த்தார்.
பாடலைக் கேட்டதும் அவையில் இருந்த
அனைவரும் சிரித்து விட்டனர்.
கம்பர் மட்டும் அமைதியாக இருந்தார்.
கம்பரை நோக்கிய மன்னன், ""கம்பரே! தங்களுக்கு இந்தப் பாடல் புரிகிறதா?'' என்று கேட்டான்.
புதிதாகக் கவிதை எழுதியவரின் முயற்சியைப் பாராட்ட எண்ணிய கம்பர்,
நன்றாகப் புரிகிறது .
அருமையான பொருள் பொதிந்த பாடல் என்றார்.
என்ன....பொருள் பொதிந்தப் பாடலா? அனைவரும் ஒரே குரலில்
வியப்போடு கேட்டனர்.
ஆமாம் ...பாடலில் நல்ல பொருள் இருக்கிறது என்று கம்பர் மறுபடியும் திருப்பிச் சொன்னார்.
கன்னா பின்னா மன்னா தென்னா என்று எழுதிய பாடல் அருமையான பொருளுடையதா?
எங்களுக்குப் புரியவில்லையே என்று புலவரைப் பார்த்தனர்.
புலவருக்கு என்ன சொல்வது எப்படி சொல்லி நிலைமையைச்
சமாளிப்பது என்று தெரியவில்லை.
புலவரின் நிலைமையைப் புரிந்துகொண்ட கம்பர் அக்கவிதைக்கான பொருளை தாமே விளக்கினார்.
கண்ணன், மண்ணை உண்டபோது அசோதை (யசோதை) வாயைத் திறந்து காட்டுமாறு கேட்க, "உலகமே கண்ணனது வாயில் தெரிந்தது' என்பது புராணக்கதை. "அந்தக் கண்ணனாகிய திருமாலைப்போல மக்களைக் காப்பவன் அரசன்' என்ற பொருளில்தான் மண்ணுண்ணி மாப்பிள்ளையே என்று முதல்வரியில்
புலவர் எழுதியிருக்கிறார்.
"கா இறையே' என்பது சோலைகளுக்குத் தலைவன்; "கூ இறையே' என்பது நிலவுலகுக்குத் தலைவன் என்று பொருள்படும்.
"உங்கப்பன் கோயில் பெருச்சாளி' என்றால், "உங்கள் தந்தை இந்த அரண்மனையில் இருந்து ஆண்ட பெரிய சிங்கம் போன்றவர். நீயும் சிங்கக்குட்டி போன்றவர்.
எல்லா வரிகளுக்கும் பொருள் சொல்லிவிட்டு இறுதியில் கன்னாபின்னாவுக்கு வந்தார் கம்பர்.
கன்னா பின்னாவுக்கு என்ன சொல்ல போகிறார் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கன்னா என்றால் கொடுப்பதில் கர்ணனைப் போன்றவனே!
பின்னா என்றால் கர்ணனுக்குப் பின்னால் பிறந்த நீதி வழுவாத தர்மன் போன்றவனே!
தென்னா மன்னா என்றால் தென்னாட்டை ஆளும் மன்னனே!
என்பது பாடலின் பொருள் என்று கூறி அனைவரையும் அசர வைத்தார் கம்பர். அனைவரும் இந்தப் பாடலுக்கு இப்படியொரு பொருளா ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயினர்.
மன்னனுக்கு வஞ்சமில்லாமில் தன்னை கன்னா பின்னா என்று பாராட்டி எழுதிய புலமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
பாராட்டி ஏராளமான பொருளைப்
பரிசாகக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
கன்னா பின்னா இப்போது கவிதையாகிப் போனது.
பாடல் இதோ உங்களுக்காக
""மண்ணுண்ணி மாப்பிள்ளையே
மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
கா விறையே கூ விறையே!
உங்கப்பன் கோயில் பெருச்சாளி,
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமாளே''
இனி யாரையாவது கன்னாபின்னாவென்று திட்டி விடாதீர்கள்.
Comments
Post a Comment