எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

  எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

உலகிலுள்ள உயிர்கள் யாவும்
ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன.

ஒன்றின்மீது இன்னொன்றுக்கு
எதிர்பார்ப்பு இருக்கும்.

மரம் செடிகொடிகள் எல்லாம்
வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
அந்த எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டால்...
சில்லென்று பூத்து தமது
மகிழ்ச்சியை வெளிக்காட்டுகின்றன.

எதிர்பார்ப்பு நடைபெறாமல்
 ஏமாற்றமாகிப்போனால்...
அப்படியே கூம்பி வாடி வதங்கிப்
போய்விடுகின்றன.

எதிர்பார்ப்பு இல்லாமல் எதுவுமே
நடைபெறுவதில்லை.

பிள்ளைகளுக்குப் பெற்றோர்மீது
எதிர்பார்ப்பு.
பெற்றோருக்குப் பிள்ளைகள்மீது
எதிர்பார்ப்பு.
கணவனுக்கு மனைவிமீது
எதிர்பார்ப்பு.
மனைவிக்கு கணவன்மீது
எதிர்பார்ப்பு.
மாணவருக்கு ஆசிரியர்மீது
எதிர்பார்ப்பு.
ஆசிரியருக்கு மாணவர்மீது
எதிர்பார்ப்பு.
செடிகளுக்கு வான்மீது
எதிர்பார்ப்பு.
வானுக்கு செடிகளின்மீது
எதிர்பார்ப்பு.
தொழிலாளிக்கு முதலாளிமீது
எதிர்பார்ப்பு.
முதலாளிக்குத் தொழிலாளிமீது
 எதிர்பார்ப்பு.

இப்படி ஒரு எதிர்பார்ப்போடுதான்
உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஏழை விவசாயி ஒருவர்
நாள்தோறும் கீழ்வானத்தையே
பார்த்துக் கொண்டிருந்தார்.

" தாத்தா...கிழக்கு திசையில்
என்னத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறீங்க?"
என்றான் பேரன்

"நான் என்னத்த எதிர்பார்க்கப்
போறேன். மழையைத்தான் எதிர்பார்த்து
இருக்கிறேன் "என்றார் தாத்தா

மழைதான் விவசாயியின் எதிர்பார்ப்பு.

பெற்றோர்களால் பிள்ளைகளின்
எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும்
 ஈடு செய்துவிட முடியாது.
அந்த நேரங்களில் தான் வார்த்தை
மோதல்கள் வெடிக்கின்றன.
அதன் உச்ச கட்டமாக 
 ஏன் பெற்றாய்...
என்ற கேள்வி முந்தி வந்து விழுகிறது.

படித்து முடித்துவிட்டால் நல்ல
வேலை வேண்டும் என்ற
எதிர்பார்ப்பு.
வேலை  கிடைக்காவிட்டால்....
ஏமாற்றம்.
தண்டச்சோறு என்ற பட்டம்
தந்து நாளும் நாலு வார்த்தையாவது
மனதைக் குத்திக் கிழிக்கும்படியாக
வந்து விழும்.
சாப்பிட மனம் இருக்காது.
உள்ளுக்குள் ஊமையாக
அழுதுகொண்டே நாலுவாய்
அள்ளிப்போடும்போது அப்பா
வந்துவிடுவார்.
தின்னுறதுல மட்டும் குறைச்சல்
கிடையாது என்று சொல்லி
முறைப்பார்.
அப்போது ஏன்தான் படித்தேனோ
என்ற விரக்தி வந்து 
நெஞ்சைப் பிடுங்கி கொல்லாமல்
கொல்லும்.
விரக்தியின் விளிம்பிற்கே சென்று
சிலர் தற்கொலைக்குக் கூட
தள்ளப்படுகின்றனர்.

அடுத்து திருமண பந்தம்.
இதில் கணவனுக்கு மனைவி
மேல் ஒரு எதிர்பார்ப்பு.
அந்த எதிர்பார்ப்பில் எங்கோ ஒரு
கீறல் விழும்போதுதான் அது
மணமுறிவுவரை கொண்டு செல்கிறது.

மனைவிக்கு கணவன்மீது
அதிகப்படியான எதிர்பார்ப்பு.
இப்படி வாழ வேண்டும் .
அப்படி வாழ வேண்டும் என்று
வானத்தில் மாளிகை கட்டி 
கற்பனையிலேயே கூடாரம் கட்டி
ஆயிரம் கனவோடு
அடியெடுத்து வைக்கிறார்.அது
இல்லை என்று ஆகும்போது
வாழ்க்கை போராட்ட களமாக
மாறிவிடுகிறது.பிரிவில்
கொண்டு வந்து விடுகிறது.
அல்லது தற்கொலைக்குத்
தள்ளிவிடுகிறது.

வயதான காலத்தில் பெற்றோருக்குப்
 பிள்ளைகள் மீது ஒரு எதிர்பார்ப்பு.
தங்களை கூடவே வைத்துக்
காப்பாற்ற வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றனர். 
குறைந்தபட்சம் தங்களை ஒரு
மனுஷனாகவாவது நடத்த
வேண்டும். பேச வேண்டும்.
தங்கள் கருத்துக்களையும்
கேட்க வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றனர்.
அந்த எதிர்பார்ப்பு பொய்யாகிப் 
போகும்போது
புலம்பலுக்கு உள்ளாகின்றனர்.மனநல
பாதிப்படையும் நிலைக்குத்
தள்ளப்படுகின்றனர்.

இப்படி ஒருத்தருக்கு இன்னொருத்தர்
மீது எதிர்பார்ப்பு இருந்து
கொண்டேதான் இருக்கும்.

ஆனால் இந்த எதிர்பார்ப்பு எப்போது
ஏமாற்றமாக மடைமாற்றம்
செய்யப்படுகிறது?

மிஞ்சி போகும்போது
துஞ்ச மறுக்கிறது மனம்.
துவண்டு போய்
மூலையில் உட்கார வைத்து
விடுகிறது.

ஒருவர்மீது அதிதீவிர நம்பிக்கை 
வைத்து விட்டோம்.
அதனால் அவரிடமிருந்து எதிர்பார்ப்பும்
அதிகமாகிறது.

ஊதியம் கிடைக்கும் என்ற 
எதிர்பார்ப்பில்தான்
வேலை நடைபெறுகிறது.
ஊதியம் கிடைக்காது  என்று தெரிந்தால்
யாருமே எந்த வேலையும் செய்ய முன்வர
மாட்டார்கள்.

அந்தக் காலத்தில் புலவர்கள் 
மன்னர்களைப்
புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் செல்வர்.
மன்னர் எதுவுமே கொடுக்கமாட்டார் 
என்றால்
யார் பாடுவார்?
மன்னரிடம் சென்று பாடினால்
பரிசில் பெற்று வளமாக வாழலாம்
என்ற எதிர்பார்ப்பு எல்லா புலவர்களிடமும்
இருக்கும்.

இப்படித்தான் ஒரு மன்னனிடம் ஏதாவது
கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு ஒரு 
புலவர் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்.
தனது முழு திறமையையும் காட்ட எண்ணி
இரவு முழுவதும் தூங்காமல் எதுகை 
மோனை நயத்தோடு மன்னனைப் புகழ்ந்து
அழகான பாடல் ஒன்று எழுதிக் 
கொண்டு சென்றார்.

பாடலைக் கேட்டதும்
மன்னனுக்கு மிக்க மகிழ்ச்சி.
நாள்தோறும் யாராவது வந்து
புகழ்ந்து கொண்டிருந்தால் யார்தான்
வேண்டாம் என்பார்கள்.
பாடல் வாசித்தாயிற்று. இப்போது
பரிசிலளிக்க வேண்டிய நேரம்.
மன்னனோ மகா கஞ்சன்.
பொருள்  கொடுக்க
மனமில்லாமல் தட்டிக் கழிக்க நினைத்தான்.

உங்கள் பாடலில் எதுகை மோனை
 நன்றாக இருக்கிறது. ஆனால் பொருளில்
எங்கேயோ குறைபாடு உள்ளதுபோல
உணர்கிறேன்.நாளை
தரமான பாடலாக எழுதி வாருங்கள்
என்று சொல்லி வெறுங்கையோடு திருப்பி 
அனுப்பிவிட்டான்.

வயிற்றுப்பசிக்கு ஏதாவது கொடுப்பார் 
என்று எதிர்பார்த்துச் சென்ற புலவருக்கு
ஏமாற்றமே மிச்சம்.

மறுநாள் இன்னும் பல திருத்தங்கள்
செய்து அதே பாடலை எடுத்துக்
கொண்டுபோய் அரசவையில்
பாடினார் புலவர்.
மன்னர் மனதில் எப்படியாவது
ஏமாற்றி புலவரைத் திருப்பி 
அனுப்பிவிட வேண்டும்
என்ற நினைப்பு. 

இதற்கு முன்னால் இப்படிப்பட்ட
பாடலைக் கேட்டிருக்கிறேன். 
யாரும் பாடாத பொருளில்
புதுமையான பாடல் ஒன்று
எழுதி வாருங்கள் என்று மறுபடியும்
திருப்பி அனுப்பிவிட்டார்.

புலவர் வீட்டில் நாலு நாட்களாக 
அடுப்பு எரியவில்லை. தன் குடும்ப
வறுமையைப் போக்க ஏதாவது கிடைக்குமா
என்ற ஒரு எதிர்பார்ப்போடு வந்த 
புலவருக்கு மிஞ்சியது
மறுபடியும் ஏமாற்றம் மட்டுமே .

சோர்வாக திரும்பிச் சென்று ஒரு
மரத்து நிழலில் உட்கார்ந்திருந்தார் புலவர்.
அப்போது அந்தவழியாக முதியவர்
ஒருவர் வந்தார். சோர்வாக அமர்ந்திருக்கும்
புலவரைப் பார்த்ததும் அவரிடம் 
"தங்கள் சோர்வுக்கான காரணம் என்ன என்று 
நான் தெரிந்து கொள்ளலாமா?"
என்று கேட்டார்.

" என்னங்க...உங்க நாட்டு மன்னர்
எப்படி பாடல் எழுதி கொண்டு கொடுத்தாலும்
நன்றாக இல்லை என்று பரிசில்
கொடுக்க மறுக்கிறார்"என்று
நடந்ததைக் கவலையோடு கூறினார்
புலவர்.

"எங்கே தாங்கள் எழுதி
வந்தப் பாடலைக் கொடுங்கள்" என்று
கேட்டுப் பாடலை வாங்கி
வாசித்துப் பார்த்தார். பாடல் அருமையாக
இருந்தது.

இந்தப் பாடலில்  என்ன குறை கண்டார்?

மன்னர் இந்தப் புலவருக்கு
பொருள் கொடுக்காமல் ஏமாற்றப்
பார்க்கிறார் என்பது புரிந்து
போயிற்று.

" நாளை  இதே இடத்திற்கு வந்து
 காத்திருங்கள் . நான் பொருளோடு
 வருகிறேன் "என்று சொல்லிவிட்டு
 பெரியவர் சென்றுவிட்டார்.
 
 புலவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
 இருந்தாலும் பெரியவர் பொருள்
 கொடுப்பதாக கூறியதால் அதே இடத்தில்
 வந்து காத்திருந்தார்.

மறுநாள் அரண்மனைக் காவலனோடு
ஒரு குதிரையில் வந்து இறங்கினார்
பெரியவர்.
பின்னால் இரண்டு மூன்று குதிரைகளில்
தங்க நாணயங்கள் நிரப்பப்பட்ட
பெட்டிகளோடு வீரர்களும் வந்தனர்.

புலவர் சுமக்கும் அளவுக்குத் தங்க
நாணயங்களை அள்ளி ஒரு பொட்டலமாக கட்டி
அவர் கையில் கொடுத்தார் பெரியவர்.
புலவருக்கு என்ன நடக்கிறது
என்பதே புரியவில்லை.
நடப்பது கனவா நனவா தன்னையே
கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.

பெரியவரிடம் "இவ்வளவு தங்க
நாணயங்கள் எப்படி கிடைத்தது ?"என்று
வினவினார்.

"உன்னை ஏமாற்றிய மன்னரை நான்
ஏமாற்றினேன் "என்று சாதாரணமாக
பதிலளித்தார் பெரியவர்.

"புரியவில்லையே...கொஞ்சம் புரியும்படி
சொல்லுங்கள் "என்று கேட்டார் புலவர்.

"ஒரு துறவி வேடமணிந்து அரண்மனைக்குச்
சென்றேன். 
மன்னா! தங்கள் வள்ளல் தன்மையைப்
புகழ்ந்து ஒரு பாடல் எழுதி வந்திருக்கிறேன்.
அருள்கூர்ந்து தாங்கள் கேட்க வேண்டும்
என்றேன்.
மன்னரும் தாராளமாகப் பாடலாம்
என்று அனுமதியளித்தார்.

ஆனால் ஒரு நிபந்தனை.
பாடல் பாடுவதற்கு முன்பாகவே
தாங்கள் என்ன பரிசு கொடுப்பீர்கள்
என்று அறிவித்துவிட்டால்
நான் மகிழ்ச்சியாக பாடுவேன் என்றேன்.

"அதற்கு மன்னர் சம்மதித்தாரா?"

"சம்மதிக்காமலா இவ்வளவு தங்க
நாணயம் கிடைத்திருக்கிறது?"

"எப்படி?"

"பாடலுக்கு எடைக்கு எடை தங்கம்
கொடுக்க வேண்டும் என்றேன்.
மன்னர் வெற்று காகிதமாக
இருக்கும்.
அப்படி என்ன எடை இருக்கப்
போகிறது என்று சம்மதித்தித்துவிட்டார்."

"அப்புறம்..."

"அப்புறம் நீர் எழுதியிருந்த பாடலை மனனம்
பண்ணி வைத்து அப்படியே பாடினேன்.
ஆஹா...ஓஹோ...என்று பாராட்டினார்.
 பாடலுக்கு எடைக்கு எடை தங்க
 நாணயம் கொடுக்கும்படி
ஆணையிட்டார். "

"மனனம் பண்ணி வைத்துப் பாடிய
பாடலை எப்படி எடை போட முடியும்?"

"எனக்கும் அதுதானே வேண்டும்.
 பாடல் இப்போது என் கையில்
 இல்லை.
  பாடலை வீட்டு முற்றத்தில் கிடக்கும்
 ஒரு  கல்லில் எழுதி வைத்திருக்கிறேன்."
என்றேன்.

"நன்றாக இருக்கிறதே....
அப்புறம் என்ன நடந்தது
என்று சொல்லுங்கள்."

"என்னோடு வீரர்களை அனுப்புங்கள்.
பாடலை எடுத்து வருகிறேன்"
 என்றேன்.

"ஐயோ....மன்னன் அசந்து போயிருப்பாரே"

"அசந்து போனாரா? 
அதிர்ந்து போனார்.அப்போது மன்னன்
முகத்தைப் பார்க்க வேண்டுமே...."

"அதெல்லாம் இருக்கட்டும்.
எப்படி இவ்வளவு தங்கத்தை வாங்குனீங்க...
கல்லை தூக்கிக் கொண்டு சென்று
எடை போட்டார்களா ? "

"வேறு வழி. ...கல்லைத் தூக்கிதான்
எடைபோட வேண்டும்.பாடியவர்
துறவியாயிற்றே....
ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால்...
அந்த அச்சம் மன்னன் கண்களில் தெரிந்தது.
எடைக்கு எடை தங்க
நாணயங்கள் தருவதைத் தவிர அவருக்கு
 வேறு வழி தெரியவில்லை."

"நன்றாக ஏமாற்றினீர்கள்.. போங்கள்.
இருந்தாலும் ஏமாற்றுவது தப்பில்லையா?"

" மன்னன் உங்களை ஏமாற்ற நினைத்தார்.
நான் மன்னரை ஏமாற்றி விட்டேன்.
இதிலென்ன தவறு இருக்கிறது"
சாதாரணமாகப் பேசினார் பெரியவர்.

எதிர்ப்பார்த்து வந்தவர்களை 
ஏமாளிகளாக நினைத்து
ஏமாற்ற நினைத்தால் நாமும்
ஏதோ ஒரு இடத்தில் ஏமாந்து
போகும் சூழல் வந்தே தீரும்.

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே....

அந்த இருட்டுக்கும்
பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும்
கேட்கின்ற காதிருக்கும்....

சொல்லாமல்
கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை
எடுத்துரைக்கும்....

என்று பாடியபடியே கடந்து போனார்
பெரியவர்.

எல்லோரையும் எல்லா
நேரங்களிலும் ஏமாற்றிவிட முடியாது.
நம்மையும் ஏமாற்ற இதுபோன்றதொரு 
புத்திசாலி வந்து நிற்பார்.

 கடைசிவரை ஏமாளிகளாக
இருப்பது தவறு.
 அதனால்தான்  ஏமாற்றுகிறவர் காட்டில்
 அடைமழை பெய்து கொண்டே 
 இருக்கிறது.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இன்றுவரை
பணத்தைப் பறிகொடுத்து
 காவல் நிலையங்களில்
கண்ணீர் மல்க நிற்போரைப் 
எத்தனை காலம்தான்
பார்த்துக் கொண்டிருப்பது.?

அயல்நாட்டில் வேலை என்று தாலி
தடயத்தை விற்றுக் கொடுத்துவிட்டு
ஏமாற்றப்பட்ட வாலிபர்கள் 
எத்தனை எத்தனைபேர்!

 எல்லா ஏமாற்றங்களும் ஏதோ ஒரு பெரிய
 எதிர்பார்ப்பால் நடந்ததாகவே இருக்கும்.

பெரும்பாலான ஏமாற்று வேலைகள்
 நாம் அறிந்தவர்கள் மற்றும் 
உறவுகளால் மட்டுமே அரங்கேறியிருக்கும்.

முன்பின் அறியாதவர்களிடம் 
ஏமாறுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஏதோ ஒரு இடத்தில் மட்டுமே நடை
பெற்றுவதுண்டு.

ஒருமுறை ஏமாற்றப்பட்டுவிட்டால்
அந்த ஒரு விசயத்தில் மட்டும் நாம்
ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்று
கவனமாக இருப்போம்.

ஆனால் அதே ஆளிடம் வேறொரு
விசயத்தில் ஏமாந்து போவோம்.
இதுதான் மனித இயல்பு.

ஏமாற்றுவது தவறு. அதுபோல
ஏமாற்றுவது அதைவிட பெரும் தவறு .
என்றுதான் சொல்வேன்.
நமது பலவீனங்களைத் தெரிந்தவர்களால்
மட்டுமே நம்மை ஏமாற்ற முடியும்.

யார்மீதும் அதிகப்படியான எதிர்பார்ப்பு
இருக்கக் கூடாது.
அதிகப்படியான எதிர்பார்ப்பு 
 இல்லாதிருந்தால் மட்டுமே நாம்
நிம்மதியாக வாழலாம்.

நிம்மதியாக வாழ வேண்டுமா?
அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்.





Comments

  1. நொடிப்பொழுதில் அனைத்தையும் அடைய நினைப்பவர்கள் தான் அதிகப்படியாக ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். தன்னம்பிக்கை பதிவு மிக அருமை.

    ReplyDelete
  2. Your article on self-confidence was very good and interesting. Realistic. God bless you Selvabai.

    ReplyDelete
  3. புலவர் கதை மிக அருமை.

    ReplyDelete
  4. மிக அருமையான கதை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts