இடும்பைக்கு இடும்பை இயலுடம்பு

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பு



"காயமே இது பொய்யடா

காற்றடைத்தப் பையடா "

என்றார்  ஒரு சித்தர்.


ஆனால் ,

காயமே இது மெய்யடா

அதில் கண்ணும் கருத்தும் வைய்யடா"

என்று விளையாட்டு பண்ணிக்கொண்டிருக்கிறோம்.


இந்த உடம்பு பொய்.

இது மெய்யென்று நினைத்து அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

உடம்பில் நிரப்பி வைக்கப்பட்ட காற்று இனி நான் உனக்குச் சொந்தமில்லை என்று வெளியேறிவிட்டால்....

மறுகணமே நம் பெயர் மாறிப் போகும்.

பிணம் என்று மறுபெயர் சூட்டி

மூலையில் வைத்துவிடுவர்.

வருவோர் போவோர் எல்லாம் பிணத்தை

எப்போது எடுக்கப் போறீங்க என்று

கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.


பூத்த பூ வாடி கீழே விழுந்து மாய்ந்து போவது போல இந்த உடம்பும் மாய்ந்து போவது உறுதி.


வீசிய காற்று மறுபடியும் நம்மை வந்து

தொடாது என்பதை நம்புகிற நாம்

இந்த வாழ்வு நிரந்தரமற்றது என்பதை நம்ப மறுத்து விடுகிறோம்.


அதனால்தான் அழகை ஆராதிக்கிறோம்.

நான் ,எனது என்று ஒரு சுயநல வட்டத்திற்குள் நின்று ஆடுகிறோம்.

ஆட்டம் போடுகிறோம்.


"நெருநல்  உளனொருவன் இன்று இல்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு"

என்றார் வள்ளுவர்.


ஆம். நேற்று இருந்தவர் இன்று உயிரோடு இல்லை. யாருக்கும் இந்த உலகம் 

சொந்தமில்லை.

வசந்த காலம் முடிந்து

இலையுதிர் காலத்தில் இலைகள் மரத்திற்கும் எனக்கும் இனி சொந்தமில்லை என்று நீங்குவதுபோல இந்த உலகை விட்டு நீங்கிவிட வேண்டிய காலம் வரும்.


அதனால் இருக்கும் வரை நல்லது செய்யுங்கள் என்று பெரியோர்கள்

சொல்லித் தருகின்றனர். இதைத்தான் ஔவையும்,



இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே

இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு"

                        நல்வழி பாடல் - 3

என்று கூறுகிறார்.

"நிலையில்லாத இந்த உடம்பு.

அதனை மெய் என்று நம்பி அதற்கு அனைத்தும் செய்கிறாய், மெய் என்று 

நீ நம்பும் உடல்  பொய் என்பதை உணர்ந்து

கொள்.காலம் விரைவில் கடந்து போய்விடும் ..அதனால் விரைந்து காலம் தாழ்த்தாமல் வறியவர்க்கு உதவி செய்து நற்பலனை பெற்றுக்கொள். ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்பவரை

வரவேற்பதற்காக மேலுலக கதவு

திறந்து வைக்கப்பட்டிற்கும்." என்கிறார் ஔவை.

இம்மையில் நன்மை செய்தால் 

மறுமையில் மகிழ்ச்சி உண்டு.

வீடுபேறு அடைய வேண்டுமானால்

நல்லது செய்க.

'கண்டவர் விண்டிலர் 
விண்டவர்  கண்டிலர்."

எனினும் பெரும்பாலான மக்களுக்கு
மோட்சம் என்ற மேலுலகு ஒன்று உண்டு 
என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த நம்பிக்கை இருப்பதால்தான் ஔவை வீடுபேறு அடைய வேண்டுமானால் நல்லது செய்க என்கிறார்.

அருமையான கருத்துள்ள பாடல் இல்லையா?

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பு 



கருத்துகள்

Popular Posts