நாகாக்க


நாகாக்க 


காக்க ....காக்க...நாவைக் காக்க..

அதென்ன நாவைக் காக்க...

 நாவைக் காக்க முப்பத்து இரண்டு

 காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?

 இன்னும் வேறு எத்தனை காவலாளிகள் 

 போட்டு காக்க வேண்டும்?


"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

  என்கிறார் வள்ளுவர்.


எதைக் காக்காவிட்டாலும் நாவைக் 

மட்டுமாவது காத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி காத்துக் கொள்ளாதிருந்தால்

தவறான சொற்களைப் பயன்படுத்திவிட்டு

துன்பப்பட நேரிடும்.


 வள்ளுவரின் வாய்மொழியை மதியாமல்  

 வாங்கிக் கட்டிக் கொண்ட

 கதைகள் பல உண்டு.

ஓர் ஊரில்  ஒரு  கழுதையும் 

ஒரு நரியும் நண்பர்களாக இருந்து வந்தன. 


கழுதை பகல் முழுவதும் பொதி சுமக்கும்.

 இரவு வந்ததும் தன் நண்பன் நரியோடு 

 சேர்ந்து வெள்ளரித் தோட்டத்தில் புகுந்து 

 வெள்ளரிக்காய்களைத் திருடித் தின்னும்.

 

 ஒருநாள் இரவு திருட செல்லும்போது

கழுதை தன்னைப் பற்றி நரியிடம் 

பெருமையாகப் பேசிக் கொண்டே வந்தது.


" நான் நன்றாக பாடுவேன்...கேளேன்..."

என்றது கழுதை.


"நீ வாயைத் திறந்தாலே கொடூரமாக இருக்கும். 

 நீ பாடப் போறியா? "

 கிண்டலடித்தது  நரி.

 

"  நான் நன்றாக பாடுவேன்....ஒருமுறை கேளேன்...

ப்ளீஸ்..".மறுபடியும்...மறுபடியும் கெஞ்சியது கழுதை.


" திருடுகிறவன் தும்மல் வந்தால் 

கூட தும்ம கூடாது....தெரியுமில்லையா?.."


" தெரியும்..களவு செய்கிறவன் 

தூங்க கூடாது அதுவும் தெரியும்."

என்றது கழுதை.


" எல்லாம் தெரிந்து வைத்துவிட்டு

 எந்தத் தைரியத்தில் நீ பாடுகிறேன்... 

 பாடுகிறேன் என்கிறாய்?" என்றது நரி.

 

"  ஒருமுறை கேளேன்...."

 வாயைத் திறந்து பாடுவதில் குறியாக 

 இருந்த கழுதை எப்படியாவது பாடிவிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது.

  

  "சரி பாடு...  உன் ஆசையை ஏன்

  கெடுப்பானேன். ? நான் காவலாளி வருகிறாரா என்று பார்த்துக் கொள்கிறேன். 

  நீ  முதலாவது வெள்ளரிக்காய்களைப் 

   பறித்துவிட்டு வா . வெளியில் வந்து

  அப்புறம் பாடு."

  என்று கழுதைக்குப் பாட அனுமதி

   அளித்தது நரி.

   கழுதை வயலுக்குள் புகுந்து வயிறு புடைக்க வெள்ளரிக்காய்களைப் பறித்துத்

  தின்றது.

  

வயிறு நிறைந்ததும் 

பாட ஆசை வந்துவிட்டது.

வயலில் நின்றபடியே உரக்கக் 

கத்திப் பாடியது கழுதை.


கழுதையின் சத்தம் கேட்டு ஓடி வந்த 

காவலாளி கழுதையை நையப் புடைத்து விட்டார்.


அடிபட்டு கழுதை வெளியில் ஓடி வந்து

நண்பனைக் தேடியது.

அங்கே நண்பன் இல்லை.

சோகத்தோடு  புலம்பிய படி வீடு வந்து

சேர்ந்தது.


 வாயிருக்கிறது என்று எல்லா 

 இடங்களிலும் திறக்கக் கூடாது

என்பது கழுதைக்கு அப்போது தான் புரிந்தது.

 


 கன்னா பின்னா என்று கண்டதையும் 

 பேசிவிட்டு எத்தனை இடங்களில் 

 நாமும் அவமானப்பட்டுப் போயிருப்போம்.

 

 மண்ணுக்குள் இருக்கும் தவளை சும்மாவே கிடக்காது.

 மண்ணுக்குள் கிடந்து சதா கத்திக் கொண்டிருப்பதால்

 எதிரிகள் எளிதாக தவளை இருக்கும் 

 இடத்தைக் கண்டுபிடித்து

 விழுங்கி விடும்.

எதிரிகளுக்கு தன் இருப்பிடத்தைக்

காட்டிக் கொடுத்தது தவளையின் வாய்.

  இதைத்தான் முன்றுறையரையனார் என்ற புலவர்,

 "நுணலுந்தன் வாயால் கெடும்" என்று கூறுவார்.

      

  துருக்கி நாட்டில் இனிமையான குரல்வளம்  

கொண்ட தாரஸ் எனப்படும் ஒருவகை 

 நாரை இனம் உண்டு.

அவற்றின் குரல் வெகுதூரம்வரை 

 கேட்கக் கூடியதாக இருக்கும்.

அவற்றின் குரலைக்  கேட்டதும் எங்கிருந்தாவது வந்து பருந்து அதனை கொத்திச் சென்று விடுமாம்.


 தமது குரலே தமக்கு ஆபத்தாக 

இருப்பதை உணர்ந்த நாரைகள்

 என்ன செய்வதென்று யோசித்தனவாம்.

   

ஒலி எழுப்புவதுதானே பிரச்சினை.

 பறப்பதற்கு முன்பாக வாய்க்குள் 

 கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டால்.....

வாய் திறக்க முடியாதல்லவா!

 அதனால்  பறக்கும்போது வாய்க்குள்

 கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டு 

 பறக்க ஆரம்பிக்குமாம்.

       


இப்படி பறப்பதால் நாரைகளுக்கு 

குரல் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் 

ஏற்பட்டாலும் அவற்றால் வாய் திறக்க முடியாதாம்.

    

பயண நேரங்களில் தங்களைக் காத்துக்கொள்ள 

தாரஸ் நாரைகள் இந்த உத்தியைத்தான் 

பயன்படுத்துமாம்.இதனால் நாரைகளின் உயிரானது

எதிரிகளிடம் இருந்து காக்கப்படுகிறது.

    

 நாரைகளுக்கு மட்டுமல்ல.

 பல நேரங்களில் நமக்கும் இந்தக்

கட்டுப்பாடு தேவைப்படுகிறது.

    

  "  தன் வாயையும் தன் நாவையும் 

  காக்கிறவன் தன் ஆத்துமாவை 

  இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்" 

  என்கிறது பைபிள்.

      

 பேசுவதற்குமுன் யோசிக்க வேண்டும்.

 யோசிப்பதை எல்லாம் பேசிவிடக் கூடாது.

        

அதிக காலம் சிறை வைக்கப்பட வேண்டிய ஒரு பொருள் உண்டென்றால் அது நாவு மட்டும்தான்.

        

நாவைப் காப்போம். 

தாரஸ் பறவைகளைப்போல விவேகமாய் இருப்போம்.நம்மைப் பிறர் சிறைபிடிக்க 

இடங்கொடாதிருப்போம்.

  

        

Comments