மருவு இனிய சுற்றமும் வான் பொருளும்

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் 


"வா என்றால் வராது 

போ என்றால் போகாது"


இது போலவே மாறுபட்ட பொருளில் 

பாடல் ஒன்று  என்

கண்ணில் பட்டது.

பாடலின்  வரிகள் என்னை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது.

" ஆம்போது அவளோடு ஆகும்

போம்போது அவளோடு போம்"

அதுதான் அந்த வரி.


வந்தவளே

போனவளாக  ஆகும்போது என் செய்வது?

எப்படி அழைத்து வருவது?

யாரைத் தூது அனுப்புவது?

தூதுபோக

துணையாக அழைத்துவர 

எவருமில்லை.

வேறு வழியின்றி 

வழியெல்லாம் விழியாய்

மணித்துளிகளை விரயமாக்கி

காத்துக் கிடக்கிறேன் 

விழி பூத்துப் போனது

விண்மீனும் கண் சிமிட்டி

வீண் கதைப்பேசி

கடந்து போனது.

காது கொடுத்துக் கேட்க

ஆளில்லை

கருணை மனு ஒன்று

கையிலேந்தி நிற்கிறேன்.

சட்டென்று ஒரு சலசலப்பு

விருட்டென்று என் கையிலிருந்த மனுவைப் பறித்துப்

பட்டென்று பறந்து போனது

எட்டும்  தூரத்தில் உள்ள

ஒரு தடுப்பில் தட்டி

படத்துக் கிடந்தது

தொட்டுவிட எண்ணி

எட்டிக் கை வைத்தேன்

கட்டிப்பிடித்தது ஒரு கை

தட்டிப் பறிக்க வந்தவர் எவரோ?

தடுமாறும் வேளையில் 

தடையிட 

முட்டுக்கட்டையிட

முந்தி வந்து நிற்பவர் எவரோ ?

ஓரக்கண்ணால் பார்த்தேன்

நாவல் மரத்தின்கீழ் நின்று

சுட்டகனி கேட்ட

சுடரொளியாள் மெல்லச் சிரித்தாள்.


தக்க சமயமிது

உரியவர் வந்துவிட்டார்

உறுதியாய் போனவளை

அழைத்து  வர தக்க உரை

தருவார்.

புது நம்பிக்கை பிறந்தது

 கருணை மனுவின்

முதற் பக்கத்தில் இருந்த

முதற் கேள்வியை வாசித்தேன்.


"ஆம்போது அவளோடு ஆகும்"

என்றீர்களே  அந்த அவள் யார்?"

என்ற என் முதல் கேள்வியை

முன் வைத்தேன்.


"செல்வம் அதாவது திருமகள்.

அவளைத்தான் 

ஆம்போது அவளோடு ஆகும் 

என்றேன் "என்றார்.


செல்வம் இருந்தால்தானே சுற்றம்

சுற்றி சுற்றி வரும்.

உன் தோற்றத்தில் ஒரு 

பொலிவு  வந்து சேரும்.

மிடுக்கு இருக்கும்.

 மினுமினுப்பு கூடும்.

உயர் குலத்தவர் என்று

உலகமே கொண்டாடும்."


"ஓ....ஆமாம் .....ஆமாம்.

ஆகும் ....ஆகும்

அவள் இருந்தால்தான் 

எல்லாம் ஆகும். ஒத்துக் கொள்கிறேன்"

என்று அவர் கருத்தோடு

ஒத்துப் போனேன்.


"போம்போது அவளோடு போம் என்றீர்களே 

அது எப்படி?

இதற்கும் விளக்கம் தேவை"

என்ற கருணை மனுவின் இரண்டாம்

பக்கத்தில் இருந்த என்  கேள்வியைத்

திருப்பிக் காட்டினேன்.


கேள்வியைப் படித்த அவர்,


திருமகள் போய்விட்டால் 

திருவும் திரும்பிப் போய்விடும்.

திரு போனால் 

அவள் பின்னாலேயே

சுற்றமும் அற்ற குளத்து

அறுநீர்ப் பறவைபோல

பறந்துவிடுவர்.

முகத்தில் கவலை வந்து

அப்பிக் கொள்ளும்.

களையிழந்து போவோம்.

 நடை தளர்ந்து போகும்.

 குலப் பெருமை

 குன்றிப் போகும்.

  வாழ்ந்து கெட்டக் குடும்பம்

 என்ற வார்த்தை வந்து

 ஒட்டிக் கொள்ளும்" 

இன்னும் விளக்கம் தேவையா

என்பதுபோல என்னைப் பார்த்தார்.


திருமகளுக்கு இத்தனை பெருமையா?

வாயடைத்து  நின்றேன்.

வார்த்தை இழந்து தவித்தேன்.


வந்தால் வரும் .

போனால் போகும்.

இதைச் செல்வதற்குத் தான்

இத்தனை விளக்கமா?

கேட்டுவிட ஆசை.

கேட்காமலே

 ஊமையாய் நின்றிருந்தேன்.


"வேறு ஏதேனும் வேண்டுமா?

வாய்பேச மறுத்து நிற்கிறாயே?" என்று

என்னை மேலும் உசுப்பிவிட்டார்.


"வழக்கமாக பாடுவீர்களே

பாடல் எங்கே ?என்றேன்...."


"பாடலைக் கேட்கத்தான்

இந்தத் தயக்கமா?

பாடுகிறேன் கேள்" என்று

பாடியபடியே கடந்து சென்றார்.


பாடல் உங்களுக்காக...

 

"மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல

உருவும் உயர் குலமும் எல்லாம் -திரு மடந்தை

ஆம்போது  அவளோடு ஆகும்;அவள் பிரிந்து

போம்போது அவளோடு போம்"


  மூதுரை  பாடல் : 29


அசந்து போய் நின்றேன்.

 ஆகட்டும் ......ஆகட்டும் என்று 

தலையாட்டிய படி  விடை

கொடுத்தேன்.


பாடலும் பொருளும் மட்டும் இன்றுவரை விடைபெற

மறுத்து என்னுள் தர்க்கம் செய்து

கொண்டிருக்கிறது.

உண்மையை 

உலக எதார்த்தத்தை 

அழகாக உள்ளம்

ஏற்கும்படி சொல்லியிருக்கிறார் இல்லையா?

Comments