அம்மாவும் நானும்

அம்மாவும் நானும்


அம்மா...!
இந்தச் சொல்தான் எத்துணை இனிமை!

முதலும் முடிவுமாய் நம்மோடு
பயணமாகும் இந்தச் சொல்லை
எத்தனை நாள் எத்தனை இடங்களில் 
உச்சரித்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?

ஓராயிராம் முறை....

இல்லை....இல்லை .
ஒரு கோடி முறை....

ம்கூம்....

எண்ண முடியாத நாட்கள்?

அதுவும் இல்லை.
 ஒருநாளும் இல்லை.
அம்மா என்று ஒருநாளும்
நான் அழைத்ததில்லை.

என்ன ...அம்மா என்று அழைத்ததில்லையா?
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!
இங்கே அம்மா என்று அழைக்காத
ஓர் உயிருள்ளதே.....
அம்மா.....அம்மா....
நீ சுமந்த பிள்ளை.....
பொய் சொல்கிற கிள்ளை
என்று புலம்பணும்போல் இருக்கிறதல்லவா!

நான் ஏங்க பொய் சொல்லணும்?
நான் ஒருமுறைகூட அம்மா
என்று கூப்பிட்டதில்லை.

" ஏன்?
அம்மா என்றால் உங்களுக்குப்
பிடிக்காதா என்பீர்கள்?"

"அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? "

'அம்மா என்று கூப்பிட்டதில்லை என்கிறீர்கள்.
 பிடிக்கும் என்கிறீர்கள்....
 ஒரே குழப்பமாக இருக்கிறது. தலையைப் பிய்த்துக்கொண்டு
ஓடிவிடலாம் போல இருக்கிறது."
 என்று ஓட நினைக்கிறீர்களல்லவா!

அட...எங்க போறீங்க...
நின்று நான் சொல்ல வந்ததைக்
கேட்டு விட்டுப் போங்க .

எம்மோ..!எம்மோ....என்று  மூச்சுக்கு மூச்சு
பேச்சுக்குப் பேச்சு ....சொல்லும் நான்
அம்மா என்று ஒருபோதும் அழைத்ததில்லை .
எனக்கு எல்லாமே என் எம்மோ தாங்க.

"எம்மோ வா "என்று ஒருமையில்
அழைப்பேன்.

அம்மாவை ஒருமையில் அழைப்பது
மரியாதைக் குறைவு என்று பள்ளியில்
ஆசிரியர் சொல்லித் தந்தபோது 
அதை ஏற்க என் மனம் மறுத்தது.

அம்மாவை ஒருமையில் அழைப்பதில்தான்
ஒரு நெருக்கம் இருக்கிறது என்று வாதிடுவேன்.

நீங்க வாங்க...போங்க...என்றால் அம்மா
அந்நியப்பட்டுப் போவது போன்ற
 நினைப்பு....அப்படி ஒரு நம்பிக்கை.

அண்ணன் கல்லூரியில் படித்துவிட்டு
விடுமுறையில் ஊர் திரும்பி வந்ததும்
அம்மா வாங்க.....உங்களுக்கு என்ன வேணும்?
என்று கேட்டான்.

அப்படியே  அசந்து போய் நின்றேன்.
எம்மோ மினுக்குறான்ம்மோ....
மினுக்குறான்....மினுக்குறான்....
சென்னைக்குச் போயிட்டு வந்ததும்
எப்படி மினுக்குறான் பாரு.....
என்று  அம்மாவை ....இல்லை இல்லை என் எம்மோவை மரியாதையாக
அழைப்பதை ஒரு குற்றமாகவே பதிவு
பண்ணியிருக்கிறேன்.

அது என்னவோ தெரியலைங்க...
எம்மோ... அந்த ஒற்றை வார்த்தையில்
அப்படியே கரைந்து போவேங்க.

எம்மோ ....எம்மோ....எத்தனை முறை 
அழைத்தாலும்
ஐயோ....என்ன சொல்ல ?
எப்படி சொல்ல.....?
அந்த உணர்வை வெளிப்படுத்த
முடியாத இன்றைய சூழலில்
மனதுக்குள்ளேயே என் எம்மோவோடு பேசி...புலம்பி....கோபப்பட்டு.....
சண்டைப்போட்டு.. மடியில் புரண்டு 
என் எல்லா உணர்வுகளுக்கும் வடிகால் தேடிக் கொள்கிறேன்.

எம்மோ...எம்மோ...ஏளா...
அப்படியே அந்தச் சொல்லில் நான்
தொலைந்து போவேங்க.

எம்மோ எதுக்கு வரல?

எம்மோ தாயேன்....?
எத்தனைமுறை
கேட்கிறேன். ஒரு பத்து ரூபாய் தாயேன்
கேட்டுக் கேட்டுக் கெஞ்சிய நாட்கள்....


எம்மோ நான் பள்ளிக்கூடம் 
போயிட்டு வரும்போது எனக்கு
ஓமப்பொடி வாங்க பைசா தரணும்.
சொல்லி புட்டேன்...சொல்லிப்புட்டேன்....
எம்மோ மறந்துடாத....மறந்துடாத
கறாராகப் பேசிய
நாட்கள்......

எம்மோ...எம்மோ
இன்றுவரை என்னோடு என்
எம்மோ என் நினைவில் மட்டுமே!

நான் மட்டுமல்ல... ஒவ்வொருவரும்
அம்மாவை அழைப்பதற்கு என்றே
ஒரு செல்லப்பெயர் வைத்திருப்போம்.

அந்த வார்த்தையில் அழைத்தால் தான்
மனதுக்கு நிறைவாக இருக்கும்.

அந்த நினைவு....அந்தநாள்...
அந்த ஸ்பரிசம்....அந்தச் சிணுங்கல்...
அந்தக் கோபம்....அந்தச் சண்டை

அப்பப்பா அம்மாவுக்கும் எனக்கும் இடையில்
என்னென்னவெல்லாம் நடந்திருக்கிறது.
என்னைப்போலவே உங்களுக்கும்
அம்மாவோடு சிணுங்கல்...கொஞ்சல்...
கோபம்.....சண்டை ...கெஞ்சல் என்று
என்னனென்னவெல்லாமோ நடந்திருக்கும்.

அந்த ஒற்றை உயிரோடு
நமக்குள்ள உணர்வுப்பூர்வமான
பிணைப்புதாங்க
நம்மில் பலரை இன்றுவரை கீழே 
விழாதபடி தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

இன்று நினைத்தாலும் அந்தக் கோபமும்
சண்டையும் சிணுங்கலும்
என்னை சிலிர்க்க வைக்கிறது.
சிரிக்க வைக்கிறது.
சிந்திக்க வைக்கிறது.
அதுதாங்க அம்மா....இல்லை இல்லை என்
எம்மோ.

எம்மோ உன் நினைவுதான்
எத்தனை இன்பம்.
சும்மா நான் போட்டிட்ட
சண்டைகள் பொய் பிம்பம்
வைக்கோலால் நீ அடித்த அடி
வலித்தது கொஞ்சம்
அன்பில் உன்னிடம் இல்லை
ஒருபோதும் கஞ்சம்.
எம்மோவுக்கும் எனக்கும்
 இருப்பது வார்த்தையால்
 சொல்ல முடியாததொரு பச்சம்
 விஞ்சும் அன்பால்
 கொஞ்சும் எம்மோவின் நினைவால்
 வாழ்கிறது என் நெஞ்சம்.



அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!
 
 
 






Comments

Popular Posts