பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை


செல்லடுவு அந்த வட்டாரத்தில் பிரபலமான   பெண்.
    எந்த ஊரில் திருவிழா என்றாலும் டாண் என்று 
    முதல் ஆளாக வந்து நிற்பாள்.
     திருவிழா என்றாலே வீட்டுக்கு வீடு 
     செல்லடுவு வந்தாளா? செல்லடுவு வந்தாளா? 
     என்ற கேள்விதான் அடிக்கடி கேட்கும்.
     
    " செல்லடுவுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா?... 
    செல்லடுவுக்கு காப்பி கொடுத்தீர்களா? "
    கேட்ட பின்னர்தான் எல்லா வீட்டிலும் உள்ள 
    ஆண்களும் சாப்பிடவே உட்காருவர்.
    
    அந்த அளவுக்கு அனைவர் மனதிலும் 
    இடம் பிடித்திருந்தார் செல்லடுவு.
    வீட்டுக்கு வீடு ஓடி ஓடி வேலை செய்வாள்.
    ஒரு வீட்டுல வேலை செய்தாயிற்றே 
    சற்று ஓய்வெடுப்போம் என்று 
    ஒருபோதும் நினைப்பதில்லை.
    
    "கீழத்தெரு அண்ணன் வீட்டில் கூப்பிட்டாகள...
    .வடக்குத் தெரு சித்தி வந்து ஒரு எட்டு 
    பார்த்துட்டுப் போ என்று சொன்னாகள.."
    இப்படி ஒரு வீட்டுக்கு இல்லை என்றால் 
    இன்னொரு வீட்டிற்கு என்று கால்களில் 
    சக்கரத்தைக் கட்டிக் கொண்டு
     ஓடிக் கொண்டே இருப்பாள்.
     
         யார் இந்த செல்லடுவு? 
         வீடு வாசல் இல்லாதவளா?
         இல்ல...தனக்கென்று குடும்பம் கோத்திரம் 
         இல்லாதவளா? இப்படி வீடுவீடா நாயா 
         வேலை பார்த்துவிட்டு அலையுறா...
         என்றுதான் கேட்கத் தோன்றும்.
         
         ஆமாம்...இன்று செல்லடுவுக்கு என்று நாதி இல்லதான்.
    ஒற்றைகட்டை. கொடுக்கிற வேலையைச் 
    செய்துவிட்டு கிடைக்கிற திண்ணையில் 
    படுத்து தூங்கி விடுவாள்.
    
    ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்
    அவள் இருந்த இருப்பு என்ன? பவுசு என்ன?
   பெரிய வீட்டுப் பிள்ளை என்பதால் 
   அப்படி ஒரு மரியாதை. தெருவில் 
   நடந்து பார்க்க முடியாது.
   
   சற்று வசதியான  குடும்பம். 
   வீட்டிற்கு ஒரே பெண் இந்த செல்லடுவு.
  ஒத்த பொண்ணு என்றதும் 
  பொத்திப்பொத்தி வைத்து வளர்த்தார் பரமசிவம்.
  
   ஒருவகையில் சொல்ல வேண்டுமென்றால் 
   வீட்டில் இருக்கும் வரைக்கும் 
   துப்புன இடத்துக்கு மண் அள்ளிப் போட்டதில்லை.
  சாப்பிட்ட தட்டு கூட கழுவியது இல்லை.
  
  பார்த்துப்பார்த்து வளர்த்த பொண்ணு.
    இப்படி கரிசனமாக வளர்த்த பொண்ணுக்கு 
    உரிய காலத்துல மாப்பிள்ளை தேடினார் பரமசிவம்.
    ஊருல கேட்காத மாப்பிள்ளை இல்லை.
    உள்ளூர் மாப்பிள்ளையும் உள்ளங்கைச் சிரங்கும்
    ஒன்று என்று தட்டிக் கழித்து விடுவார்.
    
     உள்ளூரில் கொடுக்க பரமசிவத்திற்கு மனம் இல்லை.
   " உள்ளூரில் எவனும் தனக்கு தோதுவா இல்ல "
     என்பது பரமசிவத்தின் கணிப்பு. 
     
      அப்போதுதான் ஓடக்கரையில் இருந்து
       ஒரு மாப்பிள்ளை வீட்டு 
   துப்பு  வந்தது.
   போய்ப் பார்த்தார். 
   பார்த்ததும் மாப்பிள்ளை வீட்டாரைப் 
   பிடித்து போயிற்று.
   
  பையன் மும்பையில் சொந்த தொழில் 
  செய்கிறான். கை நிறைய சம்பாத்தியம்.
  மும்பையில் சொந்த வீடு வாங்கி வைத்திருக்கிறான்
   என்று தரகர் சொன்னதும் பரமசிவத்திற்கு 
   வேறு எதைப்பற்றியும் நினைப்பு வரவேயில்லை.
   
  பையனும் பார்ப்பதற்கு வாட்டசாட்டமா இருக்கிறான்
  .ஊரிலும் சொத்துபத்து உள்ள குடும்பம்.
  பார்க்க போன அன்றைய தினமே 
  கை நனைத்து விட்டு வந்து விட்டார் பரமசிவம்.
 வீட்டிற்கு வந்து விசயத்தைச் சொன்னதுமே
  மனைவி கனகவல்லி காச்..பூச் என்று கத்தினார்.
  
 " ஒத்த பிள்ளைய பெத்து வைச்சுகிட்டு 
 இவ்வளவு தொலைவுல கட்டி கொடுக்கணுமா?"
 என்று  கண்ணீர் விட்டுக் தடுக்கப் பார்த்தார்.
 
"எதற்கு இவ்வளவு அவசரமா 
கையை நனைத்துவிட்டு வந்தீங்க? 
நாலு ஆளுங்க கிட்ட விசாரித்து 
முடிவு எடுத்திருக்கலாமே "என்று தன்
ஆற்றாமையை கொட்டினாள்.

எல்லாம் விசாரிச்சாச்சி.
நல்ல காரியம் பேசும்போது
தடங்கல் போடத....சும்மா கிடப்பியா "
என்று மனைவியின் வாயை அடைத்து விட்டார் பரமசிவம்.

 அதற்கு மேலும் அந்த பிள்ளைப்பூச்சியால் 
 என்ன பேச முடியும்? 
 ஆனாலும் மனசுக்குள்ள "இது சரிப்பட்டு வருமா?" 
 என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டுதான் இருந்தது.
 
 "என் தம்பி மவன் மும்பையில் இருக்காங்க.
 அவனிடம் மாப்பிள்ளை அட்ரசைக் கொடுத்து 
 விசாரிக்க சொல்வோங்க"
 ."மனசு கேட்காமல் திரும்ப திரும்ப விசாரிக்க 
 சொல்லிக் கொண்டே இருந்தார்.
 
"பையன் எல்லாம் தங்கமான பையன் தானாம்.
 நானும் ஓடக்கரையில நாலு பேரு கிட்ட
  விசாரித்துதான் முடிவு எடுத்தேன்."
  
 "இல்லங்க..."என்று கனகவல்லி வாயைத் திறப்பதற்குள்
  "என்ன இல்லங்க ...நொள்ளங்க என்கிறா..."
   இப்போ கலியாணம் முடிக்கணுமா வேண்டாமா? "
   வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல 
   வள்ளென்று விழுந்தார் பரமசிவம்.
   
  இந்த மனுசன் எப்பவுமே இப்படித்தான். 
  தான் ஒரு முடிவு எடுத்துட்டா அதுலேதான் நிற்பார்.
 கனகவல்லி சொன்னது எதையுமே 
 காதில் போட்டுக்கொள்ளவில்லை.
 
 உடனடியாக திருமணத்திற்கு நாளும் குறித்துவிட்டார்.
 திருமணம் தடபுடலாக நடைபெற்றது.
 இருபத்தொரு கிடா வெட்டி ஊரே வியக்கும் வண்ணம் 
 மகளின் திருமணத்தை முடித்து வைத்தார் பரமசிவம்.
 
 திருமணம் முடிந்து ஒரு மாதம் வரை செல்லடுவு 
 வாழ்க்கை இனிமையாகத்தான் 
 ஓடிக் கொண்டிருந்தது.

  மாதம் ஒன்று ஆகியும் மும்பை போக வேண்டும் 
  என்ற எந்த ஒரு நினைப்பும் மாப்பிள்ளையிடம்
   இருப்பதாக தெரியவில்லை.
   
   அப்போதுதான் செல்லடுவு "மும்பைக்கு எப்போங்க போகணும்?" 
   என்று மெதுவாக கேட்டாள்.
   
  " போகலாம். ..போகலாம்  "
  சாதாரணமாக கூறிவிட்டு விருட்டென்று எழும்பி 
  வெளியில் சென்று விட்டான் குமரேசன்.
  
 மும்பைக்கு போகப்போகிறோம் என்று 
 ஆயிரம் கனவுகளை வளர்த்து வைத்திருந்தாள்.

எல்லாம் பொசுக்கென்று முடிந்து 
போனது போல் இருந்தது.

இப்படியே மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

" மாப்பிள்ளை எப்போ மும்பை போகணும் 
என்று சொல்லுகிறார்? "
மகளிடம் கேட்டார் பரமசிவம்.

     "இப்போ இல்லையாம்பா.
     "மூன்று மாதத்திற்கு மேல் மும்பையில் 
     மழை பெய்யுமாம். அப்போ தொழில் சரியாக 
     இருக்காதாம்.அதுதான் மழை முடிந்ததும் 
     போகலாம் என்று சொல்றாங்க அப்பா. "
     அப்பாவியாக சொன்னாள் செல்லடுவு.
     
     ஆனாலும் இரண்டு மூன்று நாளுக்கு 
     ஒருமுறை" எப்ப போணுங்க?" 
     என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
     
   ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு 
   சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழித்து 
   கொண்டே  வந்தான்.
   
  ஒருநாள் தான் மட்டுமே மும்பை போகப்போகிறேன் 
  என்று  திடுதிடுப்பென்று வந்து சொன்னான்.
   அப்படியே அதிர்ந்து போனாள் செல்லடுவு. 
   "நானும் வருகிறேனே" என்றாள் .
   
   "  வீடு பார்த்துவிட்டு வந்து கூட்டிப் போறேன் "
   என்று அதற்கும் ஒரு காரணத்தைச்
   சொல்லி வைத்தான் குமரேசன்.
   
    "சொந்தமாக வீடு இருக்கு என்று
     அப்பா சொன்னாகளே "அப்பாவியாக கேட்டாள்.
     அப்படியே ஒரு முறைமுறைத்தான்.
   அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.
   
   மறுநாளே மும்பை புறப்பட்டுச் சென்றவன் தான்.
    இன்றுவரை திரும்பவில்லை.
    
  எத்தனையோ பேரிடம் விசாரித்துப் பார்த்தார் பரமசிவம்.
   ஆனால் குமரேசனைப் பற்றிய 
   எந்த தகவலும் இல்லை.
   
 மகள் வாழ்க்கையை நினைத்து 
 வருத்தப்பட்டு வருத்தப்பட்டு 
 பரமசிவமும் போய் சேர்ந்துவிட்டார். 
 
 கூடவே நாலு மாதத்திற்குள் 
 மனைவியையும் அழைத்துப் போய்விட்டார்.
 
 உலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட பெண்.
சொத்து சுகம் எங்க கிடக்கிறது 
என்ற விவரம் கூடத் தெரியவில்லை.

 இருக்கிறவரைதான் உறவு. 
 அதன் பின்னர் உறவுகளும் 
 ஏட்டும் தொலைவிலிருந்து எட்டிப் பார்த்தனர்.
 
  ஒத்தப் பிள்ளையா நின்னு 
  பொட்டப் பிள்ளையால என்ன செய்ய முடியும்.?
  
 மழை தண்ணி இல்லாம வெள்ளாமை
  சரியா விளையல. 
  விவசாயத்திற்கும் ஆள் கிடைக்கல.
  
 காடெங்கும் கருவேலம் மரம் வளர்ந்து நின்றது.
 சாப்பாடுக்கே வழியில்லை .
 
 எத்தனை நாளுக்குத்தான் பட்டினி கிடப்பது?
 
 "வீட்டிற்குள்ளே இருந்தால் யார் 
 சோறு கொடுப்பாக? "
 
 நாலு வீட்டில் பத்துப் பாத்திரம் 
 கழுவி வயிற்றைக் கழுவலாம் 
 என்ற முடிவுக்கு வந்தாள்.
 
 வீடுவீடாக வேலைக் கேட்டுப் பார்த்தாள்.
 
 கிராமத்தில் வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதில்லை 
 என்று யாரும் வேலை கொடுக்க முன் வரவில்லை.
 காட்டு வேலையும் செய்து பழக்கமில்லை.
ஒண்ணுமே புரியாமல் மலங்க மலங்க
விழித்துக் கொண்டு வராண்டாவில் படுத்துக் கிடந்தது
தெருவையே பார்த்துக்கொண்டு
கிடைப்பாள்.

வயசான கிழவிகள் எல்லாம் 
என்ன...செல்லமுத்து சாப்பிடலியா
ஒருமாதிரியாக முகம் வாட்டமாக
இருக்க...என்று கேட்டுவிட்டு
அவர்கள் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார்.

 அப்போதுதான் பக்கத்து ஊரில் திருவிழா
 வாரீயாக்கோ என்று பக்கத்துவீட்டு
 பார்வதி மகள் கூப்பிட்டாள்.
 
முதலாவது ஒரு தயக்கத்தோடு 
அவளைப் பார்த்தாள்.
வாக்கோ....பயப்பிடாத...
அந்த ஊருல எல்லாரும் நல்லவுங்கதான்
என்று பத்து வயது பார்வதி இருக்கான்
நற்சான்றிதழ் வழங்கியதும் அவளோடு
ஒரு நம்பிக்கையில் புறப்பட்டுப் போனாள்.

உடம்பெல்லாம் கூசியது.
கால்கள் தள்ளாடின..

கோயிலுல அன்னதானம் போடுவாக
என்றாள் பார்த்து.

  திருவிழாவுக்கு அசலூரில் இருந்தெல்லாம் 
  சொந்த பந்தங்கள் வருவாக.
   அப்போது வீட்டு வேலைக்கு ஆள் 
   தேவைப்படும்.
   உனக்கு வேலைகிடைத்தாலும் கிடைக்கும்
என்று   இப்படி ஒரு நம்பிக்கையூட்டி
அழைத்துச் போனாள் பார்வதி.

அந்த நம்பிக்கையோடு செல்லடுவின் முதற்பயணம்
தொடங்கியது
அவள் நம்பிக்கை வீண் போகவில்லை.

  திருவிழா முடியும் வரை நல்ல வேலை கிடைத்தது.
   வயிறு முட்ட சுவையான சாப்பாடும் கிடைத்தது.
   
   இந்த வேலையும் உபசரிப்பும் 
   செல்லடுவுக்கு பிடித்துப் போயிற்று.
   
   ஒத்த கட்டைக்கு வேறு என்னங்க வேணும்?
   
 அப்படியே தொடங்கிய பயணம். 
 சுற்று வட்டாரத்தில் எங்கு திருவிழா
  என்றாலும் முதல் நாளே ஆஜர் ஆகிவிடுவாள் செல்லடுவு.
  
ஊர் முழுவதும் செல்லடுவின் 
வருகைக்காக  காத்திருக்கும் அளவுக்கு
செல்லடுவு பிரபலம் ஆகிவிட்டார்.

 இன்றுவரை அந்த பயணம் தொடர்கிறது.

இன்றும் பழவூரில் திருவிழா என்று
சொன்னார்கள். அதற்காகத்தான்
பறப்பட்டுக் கொண்டிருக்கிறாள் செல்லடுவு.
 
 இன்று செல்லடுவு இல்லாவிட்டால்  
 எந்த வீட்டிலும் திருவிழா திருவிழாவாக இருக்காது.
 
  திருவிழா நடைபெறும்வரை  செல்லடுவின்
  பயணமும் தொடர்ந்தது கொண்டுதான் இருக்கும்.
               
                                
                         
                          


    
         
         

Comments

Popular Posts