உலக மகளிர் தினம்
உலக மகளிர் தினம்
மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம்.
வாழ்த்துகள் பரிமாறப்படும்.
கொண்டாட்டங்கள் ,போட்டிகள்
பட்டிமன்றங்கள் என்று
ஊடகங்கள் எங்கும்
பெண்கள் நிகழ்ச்சிகள்
களைகட்டும்.
நாளிதழ்கள், வார இதழ்கள்,மாத இதழ்கள்
அனைத்தும் சாதனைப் பெண்களின் கட்டுரைகளால் நிறைக்கப்பட்டிருக்கும்.
தன்னார்வ அமைப்புகளும் அரசும்
சாதனைப் பெண்களைக்
கண்டறிந்து விருதுகள்
கொடுத்து மரியாதை
செய்யும்.
இவற்றை எல்லாம் பார்க்கும் நாம்
அடேங்கப்பா...பெண்களுக்கு இவ்வளவு
அங்கீகாரமா என்று அண்ணாந்து
பார்த்து மலைத்து நிற்போம்.
நாமும் இப்படி ஒரு சாதனை புரிந்தால்
உலகம் நம்மைக் கொண்டாடும்
என்று கனவு காண வைக்கும்.
நாளைய சாதனையாளர் நான்தான்
என்று கனவில் மிதக்க வைக்கும்.
ஒருவகையில் இந்தக் கொண்டாட்டம்
நம்மை ஊக்குவிப்பதாகவே இருக்கும்.
இருக்க வேண்டும்.
அப்படி ஊக்குவிப்பதாக இருந்தால்தான்
இந்தக் கொண்டாட்டத்திற்கான
பலனைப் பெற்றதாகக் கொள்ள முடியும்.
ஆனால் உண்மையில் உலக மகளிர் நாள்
எதற்காகத் தொடங்கப்பட்டது?
உலகெங்கிலும் உள்ள சாதனையாளர்களைக்
கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காகவா
மகளிர் தினம் கொண்டாடப்பட்டது ?
இல்லை.
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால்
இந்த நாளுக்குப் பின்னால் இருக்கும்
வலிகள் புரியும்.
பெண்களைக் கொண்டாட வேண்டும்.
பெண்ணியச் சிந்தனைகள் வளர வேண்டும்
என்பதற்காகத் தொடங்கப்பட்டதல்ல
உலக மகளிர் தினம்.
தினக்கூலி, வாரக்கூலி,
மாதக்கூலி என்று கூலி வேலை செய்து
வந்தனர் பெண்கள்.
அவர்களுக்கு முறையான கூலி வழங்கப்படாமலும்
எத்தனை மணி நேரம் வேலை செய்ய
வேண்டும் ஒரு வரன்முறை இல்லாமல்
வேலை செய்து வந்த காலகட்டம்.
தங்களுக்கு ஏன் ஆண்களுக்கு நிகரான
கூலி கொடுக்கக் கூடாது என்று கேள்வி
கேட்க வைத்தது.
எங்களுக்கும் ஆண்களைப் போன்று
எட்டுமணி நேர வேலை வேண்டும் என்று
குரலெழுப்ப வைத்தது.
பணித்தளங்களில் மனரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியது. அதற்காக பல்வேறு போராட்டங்களை
முன்னெடுத்து வெற்றி கண்ட நாள்தான்
மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டது.
பெண்கள் என்றால் உடல் வலிமையற்றவர்கள்
என்ற நினைப்பு இருந்து
வந்த காலம் அது.
அதனால் அரசு வேலைகளைத் தவிர
வேறு வேலைகளில் ஆண்களுக்கு
இணையான வேலை செய்தால் கூட
கூலி என்னவோ ஆண்களுக்கு இணையாகக்
கொடுப்பதில்லை.
குறைந்தது பன்னிரண்டு மணி நேர வேலை
செய்ய வேண்டும்.
ஆனால் கூலி ஆண்களைவிடக்
குறைவு.
ஒரே வேலை. ஒரே நேரம்.
ஊதியத்தில் மட்டும் முரண்பாடு.
பொருளாதாரத் தேவைகளுக்காக
வெளியில் இறங்கி வேலை பார்க்க வரும்
பெண்களுக்கு உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை. பெண்கள் தானே
அவர்களால் ஆண்களுக்கு இணையாக
என்ன செய்துவிட முடியும் என்ற
அலட்சியப்போக்கு இருந்தது.
எவ்வளவு நாள்தான் பொறுத்துப் பார்ப்பது?
ஓங்கி குரல் கொடுக்காமல்
போராட்டங்களை முன்னெடுக்காமல்
நமக்கான உரிமையை நாம்
பெற்றுக்கொள்ள முடியாது
என்ற நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டனர்.
இதற்காக அமெரிக்கா,ஜெர்மனி
போன்ற நாடுகளில் பெண்கள் அமைப்புகள்
முதன்முதலாக குரல் கொடுக்க ஆரம்பித்தன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில்
வேலை நேரத்தைக் குறைக்கவும்
கூலியை ஆண்களுக்கு இணையாக
உயர்த்தித்தரக்கோரியும் 15000 பெண்கள்
முதன் முதலாகப்
போராட்டக் களத்தில் குதித்தனர்.
இந்தக் குரல் உலகெங்கும் கேட்க ஆரம்பித்தது.
சோவியத் ரஷியாவில் அது தொழிலாளர்
போராட்டங்களோடு இணைந்து
முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
எல்லா நாடுகளிலும் பெண்கள் குரல்
ஒலிக்க ஆரம்பித்தது.
பெண்களின் நியாயமான கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதற்கான அங்கீகாரம் பெற்ற
அந்த நாளைத்தான்
மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
அது இன்று அடித்தட்டு மக்களைப்
புறந்தள்ளிவிட்டு மேல்தட்டு
மகளிர் கொண்டாடும் ஒரு நாளாக
மெல்ல மெல்ல மாறிக்கொண்டு
வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இன்றும் தொழிற்கூடங்களில் வேலை பார்க்கும்
பெண்கள் விவசாயக்கூலி வேலை
செய்யும் பெண்கள் வீட்டு வேலை செய்யும்
பெண்கள் இவர்களுக்கெல்லாம் ஆண்களுக்கு
நிகரான கூலி வழங்கப்படுவதில்லை.
இதனை யாரும் கண்டு கொள்வதில்லை.
குறைந்த பட்சம் இந்த நாளிலாவது
அவர்களது பிரச்சினைகள் வெளிச்சத்திற்குக்
கொண்டுவரப்பட வேண்டும் என்று எந்த அமைப்பும் முனைப்பு காட்டுவதுமில்லை.
அவர்களுக்கும் பணி இடங்களில்
பாதுகாப்பு உறுதி செய்யப்பட
வேண்டும்.
வேலைக்கு ஏற்ப கூலிக்கு
உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.
நேற்றைய வரலாற்றைப் பேசிப்பேசிக்
கொண்டாடுவதில் எந்தப் பயனுமில்லை.
நாளைய வரலாறும் நல்லதாக
எழுதப்பட வேண்டும்.
அதற்காக குரலில்லாதவர்களுக்குக்
குரலாக இருந்து ஊடகங்கள்
பெண்கள் அமைப்புகள் செயல்பட வேண்டும்.
முற்றிலும் வியாபார நோக்கில் செயல்படாமல்
சமூகக் கடமையாக எண்ணி
அவர்களுக்காகவும் குரல் கொடுக்கும்
நாளாக இந்த மகளிர் தினம்
அமையட்டும்.
அரசு தினக்கூலிகள் விவசாயக் கூலி
செய்யும் பெண்கள் பக்கம்
இந்த நாளிலாவது கவனத்தைத் திருப்பிப்
அவர்களையும் வெளிச்சத்திற்குக்
கொண்டு வாருங்கள்.
அவர்களும் மகிழ்ச்சியாக நம்மோடு
இணைந்து இந்த நாளைக் கொண்டிடட்டும்.
இனிய உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!
ஔவையார் எழுதிய நல்வழி என்னும் நூல்
நாற்பத்து ஒரு பாடல்கள் கொண்டது.
வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் நூல்
ஆதலால் நல்வழி என்ற பெயர் பெற்றது.
எல்லா பாடல்களுமே அருமையான
கருத்துகள் கொண்டவை.
எனக்கு அதிகம் பிடித்த ஐந்து பாடல்களை உங்களோடு
பகிர்ந்துள்ளேன்.
1. ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் _ போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
வருவாயைவிட அதிகம் செலவு செய்யாதே.
அப்படி செலவு செய்தால் மானம் இழந்து பிறனிடம்
கடன் வாங்க கைநீட்டி நிற்கும் நிலை ஏற்படும் .
அறிவு மழுங்கிப் போகும்.
கையில் பணம் இல்லையென்றால் எங்கே பணம் கேட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் திருடனைக் கண்டு விலகி ஓடுவதுபோல
அனைவரும் உன்னைக் கண்டு விலகி ஓடுவர்.
நீ ஏழேழு பிறப்புக்கும் தீயவனாகவே
நடத்தப்படுவாய்.
நல்லவர்க்குகூட நாம் பொல்லாதவனாகத்தான்
தெரியும்.
ஆதலால் ஒரு போதும் வருவாய்க்கு
அதிகமாகச் செய்து வறியவனாகிவிடாதே
என்று அறிவுரை கூறியுள்ளார் ஔவை.
வரவுக்கு மிஞ்சி செலவு செய்து
வறியவனாகி விடாதே.
வறியவனைக் கண்டால் உறவுகள்
விலகி ஓடிவிடும்.சமுதாயத்தில் மதிப்பு
இருக்காது.
கவனமாக செலவு செய்யுங்கள்.
அருமையான கருத்து.
2. ஆற்றின் போக்கில் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் _ சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து
ஆறு வரும் வழி எங்கும் மேடும் பள்ளமும்
நிறைந்திருக்கும்.
அதுபோல்தான் செல்வமும் உயர்வும் தாழ்வும்
தந்துவிடும். செல்வம் இன்று ஒருவர் கையில் இருக்கும். நாளை இன்னொருவர்
கைக்குச் சென்றுவிடும். ஆகையினால்
வாழும் நாட்களில் இந்த உண்மை அறிந்து
கவனமாக செயல்பட வேண்டும்.
பசி என்று வருபவர்க்கு இல்லை என்னாது
அன்னம் இடுங்கள்.
தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுத்து
அவர்கள் தாகத்தைத் தணியுங்கள். ஒருவர் செய்யும் தர்மம்தான் அவரைக் காக்க வல்லது.
அதுவே உங்கள் வாழ்நாள் நீடிக்க
வழியாக இருக்கும்.
நாம் செய்யும் தர்மம்தான் நம்மை
நலமுடன் நெடுநாள் வாழ்ந்து சுகம்
காண உதவும்.
3. வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது _ நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
பெரிய யானை மீது அம்பு பாய்ந்தால் அது அந்த
யானையைக் கொன்றுவிடும்.
அதே அம்பு ஒரு பஞ்சு மூட்டையின்மீது பாய்ந்தால்
அது பஞ்சு மூட்டையைத் துளைத்துக் கொண்டு
வெளியே வந்துவிடும்.
பஞ்சுக்கு அம்பினால் எந்தச் சேதமும்
ஏற்படாது.
கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பாறையானது
சிறிய செடியின் வேர் ஊடுருவிச் செல்வதால்கூட
உடைந்து போக நேரிடலாம்.
ஆதலால் கடுமையான சொற்களால் ஒரு காரியத்தையும்
சாதிக்க முடியாது.
மென்மையான சொற்கள் கடினமான இதயத்தையும்
கசிய வைக்கும் தன்மை கொண்டது
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இன்சொல்லால் கடினமான செயல்களையும் எளிதில் செய்து
வெற்றி காண முடியும்.
4. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் _ ஒண்டொடீ
பொதந் தனங் கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
நண்டு, முத்துச்சிப்பி மூங்கில், வாழை
ஆகியவை தாம் அழியும்
காலத்தில் கன்று ஈனுமாம்.
கன்று வந்ததுமே அது அழிவதற்கான
காலம் நெருங்கி விட்டது என்பதை
நாம் தெரிந்து கொள்ளலாம்.
அதுபோல ஒருவனுக்கு தான் பெற்ற கல்வி ,
பதவி , பண்பு , பெயர்,
புகழ் , செல்வம் ஆகியவை அழிந்து
கேடுறும் காலம் வந்துவிட்டது
என்பதை அவன் பிறன் மனையைப்
பார்க்கத் தொடங்கியதும் நாம்
தெரிந்து கொள்ளலாம்.
ஒருவன் அழியும் காலத்தில்
அவன் மனம் தடுமாறும் .பிறன்மனை
நோக்கும் இழிச்செயலைச் செய்வான்.அதுவே அவனுக்கான அழிவு.
5.கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் _ இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல் "
கல்வி கல்லாதவனாகவே இருந்தாலும் ஒருவனிடம்
மிகுதியாக செல்வம் இருக்குமானால்
அவனை எல்லாரும் எதிர்கொண்டு சென்று
வரவேற்று உபசரிப்பர்.
கையில் பொருள் இல்லாது
ஏழையாகிப் போனால்
அவன் மனைவிகூட அவனை மதிக்கமாட்டாள்.
அவன் பேச்சு எந்த இடத்திலும்
செல்லுபடி ஆகாது.அதாவது எளியவன் சொல்
அம்பலம் ஏறாது.
1. வரவுக்கு மீறி செலவு செய்யாதே.
2. நிலையில்லாத செல்வத்தை
நிலை என்று எண்ணாதே.
3. கடினமான உள்ளங்களையும்
கனிய வைக்க இன்சொல் பேசுக.
4. பிறன்மனை நோக்கி
அழிந்து போகாதே.
5. எளியவன் சொல் அம்பலம்
ஏறாது. ஆதலால் பொருள் ஈட்டுக.
அருமையான அறிவுரை இல்லையா?
Comments
Post a Comment