கல்லானே ஆனாலும்....

கல்லானே ஆனாலும்....

ஔவையார் எழுதிய நல்வழி என்னும் நூல்

  நாற்பத்து ஒரு பாடல்கள் கொண்டது.

  வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் நூல்

  ஆதலால் நல்வழி என்ற பெயர் பெற்றது.

  எல்லா பாடல்களுமே அருமையான

  கருத்துகள் கொண்டவை.

  எனக்கு அதிகம் பிடித்த ஐந்து பாடல்களை உங்களோடு

 பகிர்ந்துள்ளேன்.

  

1.  ஆன முதலில் அதிகம் செலவானால் 

  மானம் அழிந்து மதிகெட்டுப் _ போனதிசை

  எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

  நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.



 வருவாயைவிட அதிகம் செலவு செய்யாதே.

அப்படி செலவு செய்தால் மானம் இழந்து பிறனிடம்

கடன்  வாங்க கைநீட்டி நிற்கும் நிலை ஏற்படும் .

அறிவு மழுங்கிப் போகும்.

 கையில் பணம் இல்லையென்றால் எங்கே பணம் கேட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் திருடனைக் கண்டு விலகி ஓடுவதுபோல

அனைவரும்  உன்னைக் கண்டு விலகி ஓடுவர்.

நீ  ஏழேழு பிறப்புக்கும் தீயவனாகவே

 நடத்தப்படுவாய்.

 நல்லவர்க்குகூட நாம் பொல்லாதவனாகத்தான்

 தெரியும்.

 ஆதலால் ஒரு போதும் வருவாய்க்கு

 அதிகமாகச் செய்து வறியவனாகிவிடாதே

என்று அறிவுரை  கூறியுள்ளார் ஔவை.


வரவுக்கு மிஞ்சி செலவு செய்து

வறியவனாகி விடாதே.

வறியவனைக் கண்டால் உறவுகள் 

விலகி ஓடிவிடும்.சமுதாயத்தில் மதிப்பு 

இருக்காது.

கவனமாக செலவு செய்யுங்கள்.

அருமையான கருத்து.

 

 

2. ஆற்றின் போக்கில் மேடும் மடுவும்போ லாம்செல்வம்

 மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் _ சோறிடும்

 தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக

 உண்ணீர்மை வீறும் உயர்ந்து 


 ஆறு வரும் வழி எங்கும் மேடும் பள்ளமும்

 நிறைந்திருக்கும்.

 அதுபோல்தான் செல்வமும் உயர்வும் தாழ்வும் 

 தந்துவிடும். செல்வம் இன்று ஒருவர் கையில் இருக்கும். நாளை இன்னொருவர்

கைக்குச் சென்றுவிடும். ஆகையினால் 

 வாழும் நாட்களில்  இந்த உண்மை அறிந்து 

 கவனமாக செயல்பட வேண்டும்.

   

  பசி என்று வருபவர்க்கு இல்லை என்னாது 

  அன்னம் இடுங்கள்.

  தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுத்து

 அவர்கள் தாகத்தைத் தணியுங்கள். ஒருவர் செய்யும் தர்மம்தான் அவரைக் காக்க வல்லது.

 அதுவே உங்கள் வாழ்நாள் நீடிக்க

 வழியாக  இருக்கும்.


நாம் செய்யும் தர்மம்தான் நம்மை

நலமுடன் நெடுநாள் வாழ்ந்து சுகம்

காண உதவும்.




3.   வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்

பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது _ நெட்டிருப்புப்

  பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

   வேருக்கு நெக்கு விடும்.


 பெரிய யானை மீது அம்பு பாய்ந்தால்  அது அந்த 

 யானையைக் கொன்றுவிடும்.

 அதே அம்பு ஒரு பஞ்சு மூட்டையின்மீது பாய்ந்தால்

 அது பஞ்சு மூட்டையைத் துளைத்துக் கொண்டு

 வெளியே வந்துவிடும்.

 பஞ்சுக்கு அம்பினால் எந்தச் சேதமும் 

 ஏற்படாது.

 கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பாறையானது

 சிறிய செடியின் வேர்   ஊடுருவிச் செல்வதால்கூட 

உடைந்து போக நேரிடலாம்.

ஆதலால் கடுமையான சொற்களால் ஒரு காரியத்தையும் 

 சாதிக்க முடியாது.

 மென்மையான சொற்கள் கடினமான இதயத்தையும் 

 கசிய வைக்கும் தன்மை கொண்டது

என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 இன்சொல்லால் கடினமான செயல்களையும் எளிதில் செய்து

 வெற்றி காண முடியும்.


 4. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்

கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் _ ஒண்டொடீ

பொதந் தனங் கல்வி பொன்றவருங் காலம்அயல்

மாதர்மேல் வைப்பார் மனம்.


நண்டு, முத்துச்சிப்பி மூங்கில், வாழை 

ஆகியவை தாம் அழியும் 

காலத்தில் கன்று ஈனுமாம்.

கன்று வந்ததுமே அது அழிவதற்கான

 காலம் நெருங்கி விட்டது என்பதை 

 நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதுபோல ஒருவனுக்கு தான் பெற்ற கல்வி , 

பதவி , பண்பு , பெயர், 

புகழ் , செல்வம் ஆகியவை அழிந்து

கேடுறும் காலம் வந்துவிட்டது 

என்பதை அவன் பிறன் மனையைப் 

பார்க்கத் தொடங்கியதும் நாம்

தெரிந்து கொள்ளலாம்.

 ஒருவன் அழியும் காலத்தில்

 அவன் மனம் தடுமாறும் .பிறன்மனை

நோக்கும் இழிச்செயலைச் செய்வான்.அதுவே அவனுக்கான அழிவு.


 5.கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் 

எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் _ இல்லானை 

இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்

செல்லாது அவன்வாயிற் சொல் "


கல்வி கல்லாதவனாகவே இருந்தாலும் ஒருவனிடம் 

மிகுதியாக செல்வம் இருக்குமானால் 

அவனை எல்லாரும் எதிர்கொண்டு சென்று

வரவேற்று உபசரிப்பர்.

கையில் பொருள் இல்லாது 

ஏழையாகிப் போனால்

அவன் மனைவிகூட அவனை மதிக்கமாட்டாள்.

அவன் பேச்சு எந்த இடத்திலும்

செல்லுபடி ஆகாது.அதாவது எளியவன் சொல்

அம்பலம் ஏறாது.


1. வரவுக்கு மீறி செலவு செய்யாதே.


2. நிலையில்லாத செல்வத்தை

நிலை என்று எண்ணாதே.



3. கடினமான உள்ளங்களையும்

    கனிய வைக்க இன்சொல் பேசுக.


4. பிறன்மனை நோக்கி

   அழிந்து போகாதே.


5. எளியவன் சொல் அம்பலம்

   ஏறாது. ஆதலால் பொருள் ஈட்டுக.



அருமையான அறிவுரை இல்லையா?

Comments