க்ளூ கொடுங்க ப்ளீஸ்
க்ளூ கொடுங்க ப்ளீஸ்....
"கரும்பைச் சுற்றி சுற்றி வந்து
குறும்பு செய்வேன் நான்-
நான் யார் தெரியுமா?"
விடுகதைக்கு விடை சொல்லு
பார்ப்போம்.
"அக்கா அக்கா ....
ஒரு க்ளூ கொடுங்கக்கா....ப்ளீஸ்
ஒரு க்ளு கொடுத்தால் உடனே
கண்டு பிடிச்சுடுவேன்"
" என்னால் க்ளூ
எல்லாம் கொடுக்க முடியாது.
தெரியாது என்றால் தெரியாது
என்று சொல்லேன். இதற்குபோய்
ஒரு க்ளூ கொடு...ஒன்பது க்ளூ கொடு
என்று ....?"
"கொஞ்சம் புரியும்படி இன்னும் ஒரே
ஒரு க்ளூ கொடுத்தால்
கொடுத்தால் சட்டென்று பதில்
சொல்லிவிடுவேன்."
"தெளிவாக சொல்லணும் என்றால்
விடுகதைக்கான விடையை
நேரடியாக நானே சொல்லி விடலாமே
இந்த எளிய விடுகதைக்கு போய் க்ளூவா?
க்ளூ கொடுங்கள் ..
க்ளூ கொடுங்கள்
என்று கேட்கிறியே.?
க்ளூ என்றால் என்ன?என்று
உனக்குத் தெரியுமா ?"
"க்ளூ என்றால் க்ளூ தான்"
"க்ளூ என்பதன் பொருள் என்ன?
அதைச் சொல்லு"
"க்ளூ என்றால் துப்பு கொடுத்தல்
என்று பொருள்.
வேண்டுமென்றால் கூகுளில் தேடிப்பார்த்து
நான் சொல்வது சரியா? தவறா? என்று
சரி பார்த்துக் கொள்ளுங்கள்."
" இதை மட்டும் சரியாக சொல்லு.
ஆனால் நான் சொன்ன விடுகதைக்கு மட்டும்
விடையைப் சரியாகச் சொல்லாதே...
உன்னிடம் போய் விடுகதை
சொன்னேன் பாரு....."
"இப்போதாவது க்ளூ கொடுப்பீங்களா
இல்லையா?"
"க்ளூ என்ன கையிலா இருக்கிறது
உடனடியாக கொடுப்பதற்கு?"
"ப்ளீஸ்....விளையாடாதீங்க....
என்ன சொல்றீங்க.....
எனக்கு ஒன்றுமே புரியவில்லை."
"உண்மையைத்தான் சொல்கிறேன்.
க்ளூவை எல்லாம் என்னால்
கையில் தூக்கிக் கொண்டு
அலைய முடியாது.
வேண்டுமென்றால் நீயே போய்
கடையில் வாங்கிக்கொள்."
"என்னது க்ளூவைக் கடையில்
வாங்கணுமா?
இது என்ன புதுக்கதையா இருக்கு!"
"தெரியாதவனுக்கு இது புதுக்கதை தான்.
முடியுமா முடியாதா என்பதைசசொல்லிட்டு
கிளம்பு...கிளம்பு..."
"அப்படியானால்
உங்களிடம் க்ளூ இல்லையா?
உங்களுக்கு
க்ளூ கொடுக்கத் தெரியாதா?"
"க்ளூ நன்றாகவே கொடுப்பேன்.
அதற்கு முன்னால் நான் இந்தக்
க்ளுவுக்கான கதையைக்
கூறுகிறேன் கேள்."
"க்ளூவுக்காக ஒரு கதையா?
கதை கேட்பதென்றால் எனக்கு
ரொம்ப பிடிக்கும்....இந்த விடுகதைதான்
கொஞ்சம் இடிக்கும்"
"கொஞ்சம் அல்ல....ரொம்பவே இடிக்குது."
"நீங்க என்னை ரொம்ப இடிக்குறீங்க....
போகட்டும்... போகட்டும்.
சரி கதையைச் சொல்லுங்கள் .அதிலிருந்தாவது
ஏதாவது க்ளூ கிடைக்கிறதா
என்று பார்ப்போம். "
"கிரேக்க நாட்டில் ஒரு மன்னர்
இருந்தார். அவர்
நல்லாட்சி செய்து வந்தார்.
அவருக்கு நெடுநாட்கள்
கழித்து ஒரு ஆண்மகன்
பிறந்தான். மகன் பிறந்த மகிழ்ச்சியில்
ஆசையோடு ஓடிப்போய்
மகனைப் பார்த்தார் மன்னர்.
பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போய்
நின்றுவிட்டார். "
"ஏன்? என்னாயிற்று?"
" பிள்ளை பிள்ளையாக இல்லை.
அவன் உடல்தான் மனித உடலாக இருந்தது.
தலை ஒரு காளையைப் போல இருந்தது."
"அட பாவமே.... அப்படியானால்
அரக்கனைப் போலல்லவா
இருக்கும் "
"ஆமாம். அப்படியேதான்.
பெற்ற பிள்ளையாயிற்றே..
விட்டுவிட முடியுமா?
அவனுக்கு வினோட்டா
என்று ஆசையாக பெயர்
சூட்டி மகிழ்ந்தார்."
"வினோதமாகப் பிறந்த பிள்ளைக்கு வினோட்டா...பெயர் சிறப்பு.
ம்...அப்புறம்..."
"அவன் உருவம்தான் அரக்கனைப்
போல் இருந்ததென்றால் வளர வளர
அவன் குணமும் அரக்கனைப் போலவே
மாறிக் கொண்டு வந்தது."
"இது என்ன கொடுமை?
ராஜா வீட்டில் அரக்கனா?"
"அரக்கன்தான்.முழு அரக்கனாகவே
மாறிவிட்டான்."
அவனால் நாட்டு மக்களுக்கு
நாளும் பெரிய தொல்லை .
"அரக்கன் என்றால் தொல்லை
கொடுக்காமல் இருப்பானா?
அப்புறம்...."
"அப்புறம் என்ன ?
நாட்டு மக்களுக்கு மன்னன்
மகனால் தொல்லை என்றால் மக்கள்
சும்மா இருப்பார்களா?
மக்கள் எல்லாம் மன்னனிடம் வந்து
முறையிட்டனர்."
"மன்னனுக்கு மகனால் தலைவலி
என்று சொல்லுங்கள்"
"உண்மை ...இவனை
இப்படியே விட்டு வைத்தால்
தன் ஆட்சிக்கு பெரிய சிக்கலாகி விடும் என்று
நினைத்தார் மன்னர்."
" மகனல்லவா?
மகனை மன்னனால் என்ன செய்துவிட முடியும்?"
"அதற்காக அப்படியே விட்டு
வைக்க முடியுமா?"
"அப்படியானால் அரக்கனை மன்னர் கொன்று
விட்டாரா?"
"அதெப்படி முடியும்?
ஆயிரம்தான் இருந்தாலும் பெற்ற
பிள்ளையாயிற்றே....."
"நினைத்தேன்....தன் பிள்ளையை
யாராவது கொல்வார்களா?
அப்புறம் அரக்கனை என்னதான்
செய்தார்?"
" அவனை வெளியில் வரமுடியாத
ஒரு பாதாள அறையில்
அடைத்து வைத்தார்.
அந்த அறைக்குள் போனவர்கள்
எவரும் திரும்பி வரமுடியாது. அவ்வளவு
சிக்கலான பாதை உள்ள அறை அது."
"அப்புறம் அவன் பட்டினியாகவே
செத்திருப்பானே?"
"அதுதான் இல்லை. அறைக்குள் அடைத்து
வைத்தாரே தவிர அவனை மன்னர்
முற்றிலுமாக வெறுக்கவில்லை.
அவன் சாப்பிடுவதற்காக ஏதேன் நகரத்திலிருந்து
நாளும் ஏழு ஆண்களையும் ஏழு பெண்களையும்
அனுப்பி வைத்தாராம் ."
"கொடும் பாவியாக அல்லவா
மன்னனும் இருந்திருக்கிறார்.
தன் மகன் சாப்பிட ஒரு நாளைக்கு ஏழு ஆண்களும் ஏழு பெண்களும்
பலியாக வேண்டுமா?இதெல்லாம் ரொம்ப அநியாயம்."
"அநியாயம் தான் .அதனால்
இந்த வினோட்டாவை அழிக்க
தீசஸ் என்ற ஓர் இளைஞன்
முன்வந்தான்."
"யார் இந்த பலசாலி?"
"இந்த தீசஸ் வேறு யாருமல்ல....
அந்த அரக்கனுடைய
சொந்த தங்கையின் காதலன்தான்
இந்த தீசஸ் "
"அட பாவமே....இதென்ன
புதுக்கதையாக இருக்கிறது?
தன் அண்ணனைக் கொல்ல
தன் காதலனே செல்ல ஒரு தங்கை
சம்மதித்தாளா?
இதென்ன கொடுமை?"
"காதல் கண்ணை
மறைக்குமல்லவா?
இப்போது அவள் கண்ணில்
தெரிவதெல்லாம் அவள் காதலன்
மட்டுமே! அரக்கன் அண்ணனாக
இருந்தாலும் அவனைக் கொல்வதில்
தப்பே இல்லை.
அதனால் அரக்கனைக் கொன்றுவிட்டு
காதலன் பத்திரமாக வந்து
சேர வேண்டுமே என்ற கரிசனம்
மட்டுமே அவளுக்குள் இருந்தது."
"இருக்கும்... இருக்கும்....
காதல் வந்தால் காதலனைத்
தவிர வேறு யாரும் கண்ணுக்குத்
தெரிவதில்லை."
"போனவன் திரும்பி வரமுடியாது
என்றீர்கள். இப்போது காதலன்
திரும்பி வந்தானா
என்று சொல்லுங்க..."
"திரும்பி வருவதற்கு வழி
தெரிய வேண்டுமே. அதனால்
காதலன் கையில் ஒரு க்ளூ
கொடுத்துவிட நினைத்தாள் காதலி"
"க்ளூவைக் கையில் கொடுத்தாளா ?
என்னைக் குழப்புறீங்க....
எனக்குத் தலையே சுற்றுது.
என்ன க்ளூ?....என்ன க்ளூ?.
சுத்தி வளைக்காமல் உடனே
சொல்லுங்க"
"நூல்கண்டு கொடுத்தாள் ."
"க்ளூ என்ன கொடுத்தாள் என்றால்
நீங்கள் நூல்கண்டைக் கொடுத்தாள்
தேன் வண்டைக்கொடுத்தாள் என்று
என்னென்னமோ கதை விடுறீங்க"
"பொறு....பொறு....ஆத்திரப்படாதே!
கையில் ஒரு நூல்கண்டை
கொடுத்து போகும் வழியில் எல்லாம் அந்த
நூல்கண்டிருந்து நூலை விட்டுக்கொண்டே
செல்லும்படி கூறினாள்."
"ஓ....நல்ல ஐடியா ?
வரும்போது நூலைப் பிடித்துக்கொண்டே
வந்துவிடலாம் இல்லையா?"
"அப்படியேதான் நடந்தது.
சென்றான். அரக்கனை கொன்றான்.
நூலைப் பிடித்துக்கொண்டே
வெற்றியோடு திரும்பி வந்து சேர்ந்தான்."
"இங்கே நூல்கண்டு க்ளூவாகிப் போனது
இல்லையா? "
"சரியாக க்ளூவைக் கண்டுபிடித்துவிட்டாயே...
அப்படியானால் க்ளூ என்ற சொல்லுக்கான
பொருள் என்ன என்று
இப்போது சொல்லு பார்ப்போம்."
"அதுதான் முன்னமே சொன்னேனே...
க்ளூ என்றால் துப்பு கொடுத்தல் என்று..."
"ஆங்கிலத்தில் க்ளூ என்ற
சொல்லுக்கான பொருள் என்ன தெரியுமா?"
"ம்....ம்... தெரியலியே..."
"க்ளூ என்றால் நூல்கண்டு
என்று பொருள்.
காதலி நூல்கண்டை ஏன்
கையில் கொடுத்து அனுப்பினாள்
என்பது இப்போது புரிகிறதல்லவா!"
" என்ன...க்ளூ என்றால் நூல்கண்டா?
ஐயோ இது தெரியாமல் இவ்வளவு நாளும்
இருந்திருக்கிறேனே....
எனக்கும் ஒரு க்ளூ தருகிறீர்களா?"
"இப்போது விடுகதைக்கான
விடையைச் சொல்லு பார்ப்போம்"
"ஒரு நூல்கண்டு கொடுங்களேன்"
"உன்னை....."
"ஏன் கோபம் போடுறீங்க....
நீங்கதானே க்ளூ என்றால்
நூல்கண்டு என்று சொன்னீர்கள்..அதனால்தான்
நானும் விடுகதையை விடுவிக்க
ஒரு நூல்கண்டு கொடுங்கள் என்று
தமிழில் கேட்டேன்...அது தப்பா?"
"தப்பே இல்லை....
இனி க்ளூவுக்கான
பொருள் மறக்குமா ?
"காலத்துக்கும் மறக்காது.....
இப்பவே போய் என் தோழிகள்
எல்லாரிடமும் போய் நூல்
விடப் போறேன்."
" போ...போ....
கற்றுக் கொண்டதை நாலுபேரிடம்
சொல்வதில் தப்பில்லை"
ஜப்பான்
Comments
Post a Comment