குறள் கூறும் கதை
குறள் கூறும் கதை
(குறளும் குயிலும்)
சேவற்கோழி ஒன்று வயல்வெளியில்
இரை பொறுக்கிக் கொண்டிருந்தது.
தொலைவில் பெட்டைகோழிகள்
இரை தேடிக் கொண்டிருந்தன சேவலின்
தோற்றம் பெட்டையைவிட சற்று
கம்பீரமாக தெரியும்.
நான் தான் அழகு என்று சேவல் கொண்டையைக்
கொண்டையை ஆட்டும் .
நாளும் ஒரு தடவையாயாவது தன் அழகைப்பற்றி
தம்பட்டம் அடிக்காவிட்டால் சேவலுக்கு
தலையே வெடித்துவிடும் போல் இருக்கும்.
இன்றும் அந்த பெருமையோடு
வயலைச் சுற்றி ச்சுற்றி வந்தது சேவல்.
அப்போது தொலைவில்...
"அங்கே...யாரது? ...
நம்பவே முடியவில்லையே.
எத்தனை அழகு? ....எத்தனை அழகு? ...
என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லையே?
யாராக இருக்கும்?"
மெதுவாக பக்கத்தில் போய் பார்த்து
யார் என்பதைக் கண்டுவரச்
சென்றது சேவல்.
"ஆஹா.. என்னைவிட கொள்ளை அழகுதான்."
தன்னை மறுபடியும் ஒருமுறைப்
பார்த்துக் கொண்டது சேவல்.
"உண்மையிலேயே என்னைவிட
அழகுதான்"
பொறாமை வந்து எட்டிப்பார்த்து
புலம்ப வைத்தது.
" என்னைவிட அழகான ஒருவர் நம்ம பகுதயில் இருப்பதா?
கூடாது...கூடவே கூடாது.
இது எனக்கு ஆபத்து...."மனதிற்குள் ஏதேதோ எண்ணம் வந்து
குமைத்துக் கொண்டிருந்தது.
" இந்த மயில் எப்படி இங்கு வந்தது?
இதுவரை இந்த மயில் நம்ம
இடத்திற்கு வந்ததில்லையே.
அம்மாடியோவ்...இந்த மயிலைப் பார்த்தால்
இந்த கோழிகள் என்னை திரும்பி
கூட பார்க்காதே
என்ன செய்யலாம்....என்ன செய்யலாம்
ஏதாவது செய்யணுமே"
மயிலைப் பார்க்க ....பார்க்க
சேவலுக்கு உடலெல்லாம் எரிய
ஆரம்பித்தது.
என்ன செய்வது?
"எனக்கு வில்லனாக இந்த மயில் வருவதா!
கூடாது கூடாது..... கூடவே கூடாது....
மறுபடியும் இந்த மயிலை என்
ஏரியாவில் நான் பார்க்கவே கூடாது."
மயிலின் அழகிற்கு முன்னால்
சேவல் தன் அழகை இழந்து
நிற்பது போன்ற உணர்வு.
"நாளை மற்ற நாள் இந்த ஏரியாவுக்கு
மயில் வரக்கூடாது.
என்ன செய்யலாம்? ....என்ன செய்யலாம்? ".
ம்.... அங்கேயும் இங்கேயும்
உலாத்தியது சேவல்.
" ம்...இப்படி செய்தால் என்ன?"
அதுதான் சரியான வழி.
இந்த பிரச்சினைக்கு இதுதான் நிரந்தர
தீர்வாக இருக்கும்."
ஒரு முடிவோடு களத்தில் இறங்கி வேலை
செய்ய ஆரம்பித்தது சேவல்.
இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.
மயில் தோகை விரித்து ஆடும் காட்சி
கண்முன்னே வந்து சேவையைப்
படாதபாடு படுத்தியது.
ஐயோ நினைக்க...
நினைக்க . தூக்கமே வரமாட்டேங்குதே!
தானாகத் தரையில் கிடந்து உருண்டது
சேவல்.
பொறாமைத் தீ ...தக தகவென்று பற்றி எரிய ...
சேவல் வெம்பிக் கொண்டிருந்தது.
.
"எனக்கு போட்டியாக இன்னொருவரா?
கூடவே கூடாது. தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்."
கங்கணம் கட்டி வேலையில் இறங்கியது சேவல்.
"தோகையை வெட்டி விட்டுற வேண்டியதுதான்.
அதுதான் சரியான வழி."
விடியும் முன்பாக சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக
வைத்திருந்த மாஞ்சா கயிற்றை எடுத்துக்கொண்டு
வயலுக்குப் புறப்பட்டது சேவல்.
மயில் நேற்று இங்கேதான் வந்து ஆடியது.
நாளையும் இங்கு வரும்.வரட்டும்...வரட்டும்.
மயில் வந்து ஆடிய இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக
மாஞ்சா கயிற்றை கட்டி வைத்து விடுகிறேன்.
" மயில் எப்படியாவது வயலுக்கு வரும்.
தோகையை விரித்து அங்கேயும்
இங்கேயும் ஆட்டும்.
இறகுகள் மாஞ்சாவில் மாட்டிக் கொள்ளும்.
அதிலிருந்து மீள்வதற்காக மயில் பறக்க முயற்சிக்கும்.
அப்போது இறகுகள் வெட்டுபட்டு கீழே விழும்.
இறகுகள் இல்லா மயில் எப்படி இருக்கும்?
மொட்டை மயில்..., மொட்டை மயில் ..
என்று பார்ப்பவர்கள் சிரிப்பர்."
ஹா...ஹா...ஹா
"இரவோடு இரவாக கட்டிவிடுகிறேன்.
விடியட்டும்.
நாளைய பொழுது மயிலுக்கு
மரண பொழுதுதான்..
ஹா...ஹா...ஹா.
துரிதமாக வேலை பார்த்தது சேவல்.
கயிறு கட்டியியிற்று.
மனசு படபடத்தது. நாளை காலை வரை
காத்திருக்க வேண்டுமே!
அன்றைய இரவு சேவலுக்கு
தூங்கா இரவாகவே முடிந்தது.
அதிகாலை.....
வயலில் போய் பார்த்து வருவோம்....
"மொட்டை மயிலு...மொட்டை மயிலு
உன் தோகை பார்த்தியா?
இரட்டை வாலு குருவிப் போல
குட்டை ஆக்கியது யாரு
கேட்டியா?"
பாடிய படியே வயலை நோக்கிச்
சென்றது சேவல்
இன்று நான் மகிழ்ச்சியாக
இருக்கிறேன்.
"
"இன்பநாள் இன்று எனக்கு இன்ப நாள்
என் எதிரி தொலைந்த நாள்."
என்று சொல்லியபடியே வயலில்
கயிறு கட்டி வைத்திருந்த இடத்திற்கு
அருகில் சென்றது.
"என்ன ஒரு அரவமும் இல்லை..
மயிலு வாலு வாலு வெட்டு
படுவதற்குப் பதிலாக
கழுத்தே வெட்டுபட்டு விட்டதா?
நம்ம எதிரி முழுவதுமாக தொலைந்து
போனதா?
பார்ப்போம்......"
அங்குமிங்கும் மயிலைத் தேடியது
"போச்சா போயே ...போச்சா...
பார்க்கணுமே இந்த மயில் செத்துக்
கிடப்பதை என்
கண்ணால் பார்க்கணுமே......
எங்கும் காணலியே....ஒருவேளை
செடிகளுக்குள் விழுந்து கிடக்குமோ?"
கிடக்கலாம்.....கிடக்கலாம்..."
வயலுக்குள் இறங்கி தேடியது.
" கயிறு இங்கே தானே கட்டினேன்."
காணலியே.....தலையை கீழே
போட்டு நன்றாக தேடியது.
"ஆ...ஆ..அம்மா.
யார் என் குரல்வளையை ...
ஆ...ஆ....."
அதற்குமேல் சேவலிடமிருந்து
எந்த சத்தமுமில்லை.
மாஞ்சா கயிறு சேவலின்
கழுத்தில் மாட்டிக்கொண்ட
சேவல் அங்குமிங்கும் துள்ளியது.
துள்ளிய வேகத்தில் தலை அறுபட்டு
ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
இருந்தாலும் வலியோடு மேலும்
பலம் கொண்ட
மட்டும் துள்ளிப் பார்த்தது.
அந்தோ....பரிதாபமாக தலை தனியாக
கீழே விழ...
தலையில்லா சேவல் சற்று நேரம் துடிதுடித்து...
அப்படியே அடங்கிப் போனது.
தலையில்லா சேவலைப் பார்க்கப்
பரிதாபமாக இருந்தது.
பாவம்...சேவல்.
பொறாமையால் தான் விரித்த வலையில்
தானே மாட்டிக் கொண்டு மாண்டு போனது.
பொறாமை இத்தனை கொடியதா?
இவற்றை எல்லாம் பார்த்துப்
பதைபதைத்துப் போன குயில் ஒன்று,
அந்தோ...பொறாமை கொண்ட
சேவல் தன் சாவுக்கு தானே காரணமாகிவிட்டதே!
பொறாமை கொள்ளாதங்கப்பா
பொறாமை உங்களையே அழிந்தேவிடும்.
"அழுக்காறு என ஒருபாவி திருச் செற்று
தீயுழி உய்த்து விடும்"
என்று அய்யன் வள்ளுவர்
இதைத்தான் சொல்லி வைத்தாரோ!
ஊருக்கெல்லாம் கேட்கட்டும் என்று
உரக்க பாடிக் கொண்டே பறந்து சென்றது குயில்.
Comments
Post a Comment