உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க வீடும் இருந்தால் போதும்.
இந்த மூன்றும் மனிதனின் அத்தியாவசிய
தேவைகளாகும்.
இந்த மூன்று தேவைகளையும் நிறைவு
செய்வதற்குதான் மனிதன் ஓடி ஓடி
உழைக்கிறான்.
ஆனால் இந்த மூன்றும் கிடைத்தால்
போதும் என்று நாம் திருப்திப்பட்டுக்
கொள்கிறோமா?
ஆடம்பரங்களை நோக்கி நம்
கண்கள் அலை பாயும்.
முதலாவது ஏதோ இருப்பதற்குச்
சொந்தமாக ஒரு வீடு இருந்தால்
போதும் என்ற மனநிலையில்
இருப்போம்.
சொந்தவீடு கட்டியாயிற்று.
இப்போது கண்கள் அங்குமிங்கும்
தேடும்.அந்த வீட்டைப் போல் கட்டியிருக்கலாமோ?
இந்த வீட்டைப்போல் கட்டியிருக்கலாமோ?
இரண்டு மாடி எழுப்பி இருக்கலாமோ?
என்று எதிலும் ஒரு திருப்தி இல்லாத
மனநிலையிலேயே இருப்போம்.
உடை விசயத்திலும் இதே நிலைதான்.
ஆடம்பரங்களை நோக்கிய
பயணம்தான் நம்மை இருக்கவிடாமல்
துரத்திக் கொண்டிருக்கிறது
ஆனால் அந்த உடை ஆடம்பரமாக
இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.
எளிமையாக அதாவது நான்கு முழம்
இருந்தால் போதுமாம்.
ஒத்துக் கொள்ளும் மாதிரியாகவா
இருக்கிறது?
காலத்திற்கு ஏற்ற கோலம்
போட வேண்டாமா?
ஔவை உண்பதையும் உடுப்பதையும்பற்றி
என்ன சொல்லியிருக்கிறார்
என்று கேளுங்கள்.
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன
கண்புதைந்த மாந்தர்குடி வாழ்க்கை
மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே
நல்வழி. : 28
மனிதன் உண்பது ஒரு நாழி அளவு
சோறு மட்டுமே. உடுப்பது நான்கு முழ
அளவு உள்ள துணி..
ஆனால் அவன் எண்ணம் மட்டும்
எண்பது கோடியாக
இருக்கிறது.அதாவது அது வேண்டும்
இது வேண்டும் என்று எதிலும்
திருப்தி கொள்ளாத நிலையில்
இருக்கிறது.
பேராசை. அதன் விளைவு ஓயாச்
சஞ்சலம் . இதுதான் மானிட வாழ்க்கை
என்கிறார் ஔவை.
மனித வாழ்க்கை மண்கலம் போன்றது.
இன்று முடியுமோ? நாளை முடியுமோ?
யாருக்குத் தெரியும்?
இருப்பதைப் பேணி ஒப்பேற்றி
இருந்தால் இன்னும் கொஞ்சம் காலம்
வாழலாம்.
அல்லது மண்கலத்தை உடைத்துவிட்டு
மாய்ந்து போக வேண்டியதுதான்.
இதில் எதற்குப் பேராசை.?
இருக்கிறது என்று இரண்டு பக்கா
அரசியைப் பொங்கிச் சாப்பிடுவிட
முடியுமா?
நாலு முழத்துக்கு அதிகமாக
நாற்பது முழ சேலையைக் கட்டிக்கொண்டு
திரிய முடியுமா?
நமக்கு வேண்டியது ஆழாக்கு அரிசியில்
ஆக்கப்பட்ட சோறு.
உடுப்பதற்கு நான்கு முழ அளவில்
ஓர் ஆடை .இதைத்தவிர வேறு என்னங்க
வேண்டும்.இது ஔவை நம்மைப் பார்த்து
கேட்கும் கேள்வி.
புறநானூற்றில் இதே கருத்தை வேறு விதமாக
பதிவு செய்கிறார் ஒரு புலவர்.
"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் குமே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே , தப்புந பலவே."
மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரனார் பாடிய
புறநானூற்றுப் பாடல் இது.
உலகம் முழுவதும் ஒரு குடையில் ஆளும்
அரசனாக இருந்தாலும் சரி
இரவும் பகலும் தூங்காமல் ஒருசாண்
வயிற்றுக்காக உழைக்கும் வறியவனாக
இருந்தாலும் சரி உண்பதற்கு நாழி
அரிசி வேண்டும்.
உடுப்பதற்கு
இரண்டு முழ வேட்டி போதும்.
வேறு என்னங்க வேண்டும்.
இதுதான் மதுரை கணக்காயர் மகன்
கருத்தாகவும் உள்ளது.
ஆனால் இவர்கள் இருவருக்கும்
உடுப்பதிலும் உண்பதிலும் ஒற்றுமை இருந்தாலும்
கணக்காயர் மகன் ஔவையிலிருந்து
சற்று வேறுபடுகிறார்.
அதனால் நான் மட்டுமே
அத்தனையையும் உண்பேன்.
அவ்வளவையும் உடுப்பேன் என்றால்
அது தவறுங்க...
பிறருக்கு கொடுக்க முடியும்.
சாதாரண எளிய மனிதனால்
அது முடியாது.
அதனால் மிகுதியான செல்வம் படைத்தவர்கள்
பெற்ற செல்வத்தைப் பிறருக்குக்
கொடுத்து மகிழ்வதே நன்று.
தானே அனுபவிக்க வேண்டும் என்று
சுயநலவாதியாக இருந்தால்
ஒருநாள் அழிந்துபோக நேரிடும் என்று
எச்சரிக்கை விடுத்துவிட்டுத் தன் பாடலை
முடித்துக் கொள்கிறார் மதுரை கணக்காயர்
மகன் நக்கீரனார்.
அரசனாக இருந்தாலும் ஆண்டியாக
இருந்தாலும்
உணவும் உடையும் எல்லோர்க்கும்
ஒன்றுதான்.அளவுக்கு அதிகமாக
என்னிடம் இருக்கிறது என்று நிறைய
சாப்பிட முடியாது.
நான் பணக்காரன் என்று பத்து மீட்டர் துணியை
வாங்கி உடலில்
சுற்றிக் கொண்டு திரிய முடியாது.
உங்களிடம் அதிக பணம் இருக்கிறதா
இல்லாதவர்களுக்குக் கொடுத்து
உதவுங்கள் .
உதவுங்கள் என்பது ஏற்புடையதாக
இருக்கலாம்.
"உண்பது நாழி;
உடுப்பது இரண்டே "
என்பதுதான் சற்று நெருடலாக
இருக்கிறது.
ஆனாலும் சிக்கனமாக வாழுங்கள்
என்பதை உணர்த்தியது எல்லாக்
காலத்திற்கும் ஏற்புடையதுதான்.
Comments
Post a Comment