திருக்குறளில் காலம்
முன்னுரை :
மனிதகுல வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாத பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று காலம் அறிதல். ‘காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்று கூறுவர்.காலம் பற்றி திருக்குறள் கூறும் கருத்துக்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியரும் காலமும்:
தொல்காப்பியர் பொழுது என்பது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். ஓராண்டிற்குரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது ஆகும். ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளும் சிறுபொழுது எனப்படும் என்பார்.இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என்பவை பெரும் பொழுது எனவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்பவை சிறுபொழுது எனவும் தமிழ் இலக்கணம் காலத்தை வரையறை செய்கிறது.ஆனால் காலம் என்பது பொழுதினை மட்டும் குறிக்காமல் உரிய காலம் என்னும் பரந்துபட்டப் பொருளில் காலத்தின் அருமையை வள்ளுவர் நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
காலம் அறிந்து செயல்படு:
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”
காக்கையை விடக் கோட்டான் வலிமை மிக்கது என்பது அனைவருக்கும் தெரியும். கோட்டானுக்குப் பகற்பொழுதில் பார்வை தெரியாது என்பதால் அதனைக் காக்கை பகலில் வென்று விடும். அதுபோல வேந்தர்கள் பகையை வெல்ல வேண்டுமானால் தகுந்த காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் .வெற்றி பெற வேண்டுமாஏற்ற காலம் பார்த்து செயல்படுங்கள் .
இரண்டாம் உலகப் போரில் சர்வாதிகாரி ஹிட்லரின் தோல்விக்குக் காரணம் கடுமையான பனிக்காலத்தில் சோவியத் நாட்டின் மேல் படையெடுத்ததுதான் என்று சொல்வார்கள் . குளிரைத் தாங்கும்படியான உபகரணங்கள் இல்லாமையால் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் இறந்து போயினர். அதனால் ஹிட்லர் பெருந்தோல்வியை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று .எவ்வளவு படைபலமும் திறமையும் இருந்தாலும் காலமறிந்து செயல்படாவிட்டால் தோல்விதான்ஏற்படும். காலமறிந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
செல்வத்தைக் கட்டும் கயிறு:
செல்வத்தை நம்மைவிட்டு நீங்காமல் கட்டும் கயிறு ஒன்று உண்டென்றால் அதுவும் காலம்தான் என்கிறார் வள்ளுவர்.
“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு”
என்ற குறட்பாவில் அது வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை . ஆதலால் 'செய்க பொருளை 'என்று சொல்லித் தந்த வள்ளுவர் அத்தகைய செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாக இருப்பது காலம் என்று சொல்லித் தந்து,பொருள் சேர்க்கத் தெரிந்தது போல் அது கைவிட்டுச் போகாத படியும் பார்த்துக்கொள்க என்கிறார்.
கருவியும் காலமும்:
“அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்”
என்ற குறளில் காலத்தோடு கருவியையும் சேர்த்துக் கூறுகிறார். ‘ஒரு செயலை செய்து முடித்தற்கான கருவிகளுடனே செய்தற்கான காலமும் அறிந்து செய்வாராயின் செய்தற்கரிய செயல்களும் உளவோ?’ என்று நம்மைப் பார்த்து வினவுகிறார் வள்ளுவர். அப்படியானால் காலம் அறிந்தால் மட்டும் போதாது.காலத்தோடு
கருவியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது இதன்மூலம் அறியப்படுகிறது.
காலமும் இடமும்:
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்”
என்ற குறளில் காலத்தோடு இடத்தையும் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்யும் செயலை காலமறிந்து இடத்தோடு பொருந்தச் செய்தால் உலகத்தையே வெல்லக் கருதினும் கைகூடும் என்பது
வள்ளுவர் கருத்து.
." ஞாலம் கருதினும் கைகூடும்’ என்பது உலகமே கைகூடும் என்பதால் மற்றவற்றைப் பற்றியும் கூறவேண்டுமோ?’ என்பது இதனால் பெறப்படும் கருத்தாக உள்ளது.
அறிவியலாளர் ஆர்க்கிமிடிஸ் , “நான் நிற்பதற்கு ஓர் இடத்தைத் தாருங்கள். உலகமாகிய இந்தப் பூமிப்பந்தை நெம்புகோல் மூலம் புரட்டிக் காட்டுகிறேன்...” என்று அறைகூவல் விடுத்தார் .இதன்மூலம் காலமும், இடமும் வாய்க்கப் பெற்றால் இயலாத செயல் என்று ஏதுமில்லை என்பதை அறியலாம்.
ஞாலம் கைகூடும்:
“காலம் கருதி யிருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்”
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் காத்திருப்பவர்.
“பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்”
அதாவது அறிவுடையார் பகைவர் தீங்கு செய்த அப்போதே புறத்தில் சினம் கொள்ள மாட்டார். வெல்வதற்கு ஏற்ற காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர் . தகுந்த காலம் வரும் வரை சினத்தைக்கூட உள்ளுக்குள்ளேயே மறைத்து வைக்கவேண்டும் அறியாதவர் உடனே புறத்தில் சினத்தை வெளிப்படுத்தி விடுவர் . அறிவுடையார் புறத்தில் சினம் கொள்ள மாட்டார் என்பதால் ‘உள்வேர்ப்பர் ஒள்ளியவர்’ என்கிறார் திருவள்ளுவர்.காலம் நாம் எதிர்பாராத பல முடிவுகளைக் கொண்டுவரும் .
காலம் வரும் காத்திரு:
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”
கொக்கினைப் போல அமைதியாக இருக்க வேண்டும்.
ஆறு, ஏரி முதலிய நீர்நிலைகளில் அதன் மீன்கள் வரக் கண்டதும் இலக்குத் தவறாமல் விரைந்து தன் கூரிய அலகுகளால் குத்திப் பிடிக்கும்.அதுபோல காலம் வரும்வரை காத்திருங்கள் என்று சொல்லித் தருகிறார் வள்ளுவர்.
முடிவுரை:.
" உலகத்தைத் தன்வசப்படுத்த வேண்டுமா காலம் அறிந்து செயல்படுங்கள்" இதுதான் வள்ளுவர் நமக்குச் சொல்லித் தந்த பாடம்.
Comments
Post a Comment